03

03

“தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.” – செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை ! 

” புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி அரசியலமைப்பாக, தமிழர்களுடைய வடகிழக்கு இணைந்த தாயகத்தை அங்கீகரிக்கின்ற, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசம் இறமையை அங்கீகரிக்கின்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பாக, கொண்டுவரப்படுவதற்கான அழுத்தத்தை தமிழர்கள் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.இத்தகைய நேரத்திலே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு ஒரு சமஷ்டி அரசியலமைப்பாக, தமிழர்களுடைய வடகிழக்கு இணைந்த தாயகத்தை அங்கீகரிக்கின்ற, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசம் இறமையை அங்கீகரிக்கின்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பாக, கொண்டுவரப்படுவதற்கான அழுத்தத்தை தமிழர்கள் தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

இம்முறை மனித உரிமைகள் பேரவையினுடைய ஆணையாளருடைய அறிக்கையில் கூட புதிய அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனை பார்க்கின்ற போது அரசாங்கம் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முனைப்பில் இருப்பதனை தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே மக்கள் கவனயீனமாக இருக்கக் கூடாது.

தற்போது கோட்டாபய அரசாங்கம் வந்த பின்னர் புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்காக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அந்த நிபுணர் குழு தங்களுடைய தயாரிப்புகளை நிறைவு செய்திருக்கின்ற ஒரு இடத்திலே அது விரைவிலே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலே விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

இத்தகைய சூழலிலே தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்ய வேண்டிய நேரத்திலே துரதிஷ்டவசமாக தமிழ் தலைவர்கள் என்று சொல்லுகின்றவர்கள் தமிழ் தேசிய வாதத்தை போர்வையாக போர்த்தி கொண்டிருக்கின்ற தலைவர்கள் இந்தியாவினுடைய பிராந்திய நலன்களை கருத்தில் கொண்டு இந்தியாவினுடைய தேவைக்காக தமிழ் மக்களுடைய நலன்களை ஒற்றை ஆட்சிக்குள் பலியிட்டு பதிமூன்றாம் திருத்த சட்டத்தை ஏற்று கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கின்ற ஒரு கடிதம் ஒன்றை மோடிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

 

அதாவது பதிமூன்றாம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், என்று கோருகின்ற கடிதம். பதிமூன்றாம் திருத்த சட்டத்தை ஏற்று கொண்டு அவர்கள் வழங்கிய ஒரு கடிதமாகத்தான் அந்த கடிதம் அமைந்திருக்கின்றது.

நாங்கள் கடந்த தை மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே ஒரு மாபெரும் பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பதிமூன்றாம் திருத்த சட்டம் மாகாணசபை தீர்வு காண தொடக்க புள்ளியும் அல்ல. தீர்வும் அல்ல என்பதனையும் புதிய அரசியலமைப்பானது ஒரு அரசியல் அமைப்பாக வருகிற போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தே வாக்களிக்க வேண்டும் என்பதனையும் மாறாக புதிய அரசியல் அமைப்பானது தமிழ் தேசம்இ இறைமை, உரிமையை, அங்கீகரிக்கின்ற ஒரு சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்பாக கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதனையும் நாங்கள் கடந்த பேரணியிலே வலியுறுத்தி இருக்கின்றோம்.

அதே போன்றதொரு பேரணியை நாங்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே வவுனியா மாவட்டத்திலே பரப்புரைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். மக்கள் மட்டத்திலே பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆறு கட்சிகளினுடைய தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவருமாக ஏழு பேர் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு இந்த பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியதனுடைய அந்த சதி அதனுடைய உள்நோக்கங்களை நாங்கள் தெளிவுபடுத்துகின்ற வேலை திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

பதிமூன்றாவது திருத்த சட்டம் இருப்பதைத்தான் நடைமுறைப்படுத்த சொல்லி கேட்டிருக்கிறோம் என்ற ஏமாற்று வார்த்தைகளை மக்கள் நம்பி அமைதியாக இருந்துவிட வேண்டாம். என்பதனையும் பதின்மூன்றை நிராகரிக்க வேண்டும் ஒற்றையாட்சியை நிராகரிக்க வேண்டும் தமிழ் தேச இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி கேட்டு கொள்வதோடு அந்த பயணத்திலே மக்கள் எங்களோடு கரம் கோர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் தொடர்பில் முதன்முதலில் தகவல் வெளியிட்டுள்ள ரஷ்யா !

உக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, உக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும், 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870 க்கும் மேற்பட்ட  உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 3,700 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தகவலை ரஷ்யா  வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இருப்பினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் யுக்ரைனில் இருந்து இது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 நாட்களில் 6,000 ரஷ்ய துருப்பினர் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி  வொளோடிமிர் செலன்ஸ்கி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தினமும் 16 மணிநேர மின்வெட்டு – வெளியாகியுள்ள புதிய  தகவல் !

பருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்து வதே தற்போதைய மின் நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்றும் கூறுகின்றனர்.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வாங்குவது பெரும் சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க எந்த வழியில் சென்றாலும் செலவு ஏற்படும் என பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, அலுவலகங்களில் உள்ள குளிரூட்டிகள், தெரு விளக்குகளை அணைத்தால் மட்டுமே மின்வெட்டை மிகக் குறுகிய நேரத்துக்கு கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு – பறிக்கப்பட்டது ஆளுந்தரப்பின் முக்கியமான உறுப்பினர்களின் அமைச்சுப் பதவிகள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.