13

13

உலக நாடுகளின் பொருளாதார தடைகளையும் தாண்டி ரஷ்யாவுடன் நட்பு பாராட்டும் சீனா !

ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்தமாக 11.67 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளதாக சீன சுங்கத் திணைக்கள தரவு காட்டுகிறது. சீனாவிற்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா உள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளை பலமுறை தொடர்ந்தும் சீனா விமர்சித்து வருகின்றது.

மேலும் குறித்த படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், சீனாவும் ரஷ்யாவும் வரம்பற்ற நட்பு ரீதியிலான இருநாட்டு உறவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவை நம்பியிருப்பதை குறைக்க இலங்கைக்கு இந்தியா மேலும் நிதிஉதவி !

கடும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சீனாவை நம்பியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பதற்காக இந்தியா மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

எரிபொருள் உணவு உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகின்றது. இவ்வாறான நிலையிலேயே இந்தியா மேலதிக உதவியை வழங்க முன்வந்துள்ளது. இதற்கு முன்னர் 1.9 பில்லியன் டொலர்களை கடனாகவும், 500 மில்லியன் டொலர்களை எரிபொருள் இறக்குமதிக்கான கடனாகவும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் டொலர் நெருக்கடிக்கு காரணம் என்ன..?

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

முறையான வழிகளில் மாத்திரம் அந்நியச் செலாவணியை அனுப்புமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ அறிவுறுத்தியுள்ளார்.

வங்கிகளின் ஊடாக மாத்திரம் டொலர்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“மக்கள் போராட்டத்தை திசைமாற்ற இனவாதத்தை பயன்படுத்த ராஜபக்ச அரசு முயற்சி.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“எங்கள் கட்சியில் யாரும் விற்பனைக்கு இல்லை.”- பசில் ராஜபக்ஷவுக்கு சஜித் ட்வீட் !

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர்,

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பசில்ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதை கைவிடுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை. ஏனையவர்களை விலைக்கு வாங்க முயன்றால் சேதமடைந்த பழுதடைந்த பொருட்கள் குறித்து அவதானமாகயிருங்கள் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது”- ஐக்கிய மக்கள் சக்தி

“மஹிந்த ராஜபக்ஷ போராட்டக்காரர்களை  கலந்துரையாடலுக்கு அழைத்தமை நகைச்சுவையானது” என தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது.

இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுகிறது.  எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் தற்போது கற்பிக்கும் முக்கியமான அரசியல் பாடத்தை அரசாங்கம் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டார்.

தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமிக்ரோன் வைரஸ் வகைகள் !

தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமிக்ரோன் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது பல்வேறு நாடுகளில் ஒமிக்ரோன் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமிக்ரோன் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறுகையில் “தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.

புதிய வைரஸ்கள் தென்ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், அவை பல நாடுகளின் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்றார்.

‘உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை’ – பைடன் சாடல்!

உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய அரசு சிறைகளில் அடைத்து உள்ளது என தெரிவித்தார்.
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று. எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை இனப்படுகொலை என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை என தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனியர் என்ற எண்ணத்தைக்கூட அழிக்க முயற்சிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“பாரிய புரட்சிக்காக களமிறங்கியுள்ள இளைஞர்கள்.” – ரணில் விக்கிரமசிங்க

“அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.” என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார்.

5ஆவது நாளாக கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“மிகவும் அமைதியான முறையில், நேர்த்தியாக அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் அவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இவர்களில் எவருமே பேருந்துகளிலோ அல்லது பாரவூர்திகளிலோ கொழும்பிற்கு வரவில்லை. சுயமாக ஒன்றிணைந்துள்ளனர்.

ஜனாதிபதியையும் , நாடாளுமன்றத்தையும் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், அவர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்பதாகத் தெரியவில்லை.

பாரியதொரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இளைஞர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அது நிச்சயம் வெற்றி பெறும்

உங்களால் முடியாவிட்டால் எம்மிடம் கையளித்துச் செல்லுங்கள்’ என்பதே அவர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறும் செய்தியாகும்” என்றார்.

பிரித்தானிய பிரதமருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் – மன்னிப்பு கேட்ட ஜோன்சன் !

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜோன்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதற்கிடையே, கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி பிரதமர் போரிஸ் ஜோன்சன், நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகியோருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், மது விருந்தில் பங்கேற்றதற்காக போலிசார் விதித்த அபராதத்தைச் செலுத்திவிட்டேன். விதிகளை மீறி மதுவிருந்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.