16

16

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரச வேலை வாய்ப்புகள் வீழ்ச்சியடையும்!! 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர்!!! – லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பா உ மு சந்திரகுமார்

அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதிலேயே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்நிலையில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் 10 April மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு ஆசியுரை வழங்கிய ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோயில் பிரதம குரு முத்துகமார குருக்கள் சிவஸ்ரீ மகேஷ்வரநாத சர்மா, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் ஆனால் லிற்றில் எய்ட் போன்ற அமைப்பு கீழேயுள்ள மக்களை கல்வியறிவூட்டி வளர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

கருணா நிலைய குரு எஸ் கே டானியல் தனது ஆசியுரையில் லிற்றில் எய்ட் இவ்வளவு தொகையான மாணவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு கல்வியும் சமூகப் பண்புமூட்டி அவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மாற்றங்களை யாரும் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் லிற்றில் எய்ட் தங்களிடம் வரும் மாணவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆளுமைகளாக விருத்தி செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார்.

வன்னி மண் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் பல்வேறு சமூகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றது என்பதைச் கூட்டிக்காட்டிய த ஜெயபாலன் இளைஞர் வன்முறை, போதைவஸ்து பழக்கம், இளவயதுத் திருமணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கமாக கல்வி வீழ்சி என்பன வன்னி மண் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இவற்றுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதைத் தவிர்த்து இதற்கான தீர்வைப் பற்றி தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி தர்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தொழில்நுட்ப அறிவு இல்லாமால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார். மாணவர்கள் நேரான (பொசிடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எமது பாரம்பரியமான ஆமையும் முயலும் கதை போல் அல்லாமல் ஆமையும் முயலும்; இணைந்து கூட்டாக தரையிலும் திண்ணீரிலும் செயற்படுவதன் மூலம் கூட்டு உழைப்பின் முக்கியத்துவதை;தை விளக்கினார் தர்மநாதன் விளக்கினார்.

லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய நெருக்கடியான சூழலைக் கண்டு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே மனித குலம் புதிய திருப்பு முனைகளை கண்டுகொண்டது வரலாறு என்றும். ஐரோப்பாவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணம் அம்மக்கள் எதிர்கொண்ட அசாதாரண காலநிலை. அதுபோல் எமது நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி எமது கல்வியலாளர்களையும், மாணவர்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களாகிய நீங்கள் இன்று கற்பது நாளை உருவாகப் போகின்ற பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகவே அல்லாமல் வெறும் பெறுபேறுகளுக்காக, சான்றிதழ்களுக்காக, பட்டங்களுக்காக என்று குறுக்கிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகளைப் பற்றி விதந்துரைத்த முனானாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் லிற்றில் எய்ட் எவ்வளவு சிரமங்களின் மத்தியில் இம்மண்ணில் செயற்பட்டு தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதற்கு காலம்சென்ற வி சிவஜோதியின் அர்ப்பணிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். மு சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் த ஜெயபாலன் கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை தனது சொந்த அனுபவத்தினூடாக மாணவர்களுக்குக் காட்டியவர் என்றும் எதிர்காலத்தில் அரச வேலைகளுக்காகக் காத்திராமல் தனியார் துறைகளிலும் சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் அரசதுறையில் 16 லட்சம் பேர் தேவைக்கதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த கால அரசுகளின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளே நாட்டினை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நாங்கள் விழுமியங்களை இழந்துவருகின்றோம் எனச் சுட்டிக்காட்டிய கிளி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன்; இலங்கையில் தமிழர்கள் மத்தியில் விழுமியங்களை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை எனத் தெரிவித்தார். தெற்கில் அனாகரிக தர்மபால சிங்கள மக்களின் விழுமியங்களை முன்வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் தமிழ் தரப்பில் ஆறுமுகநாவலர் அதனைச் செய்யத்தவறியதை பெருமாள் கணேசன் அங்கு சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் இவ்வளவு திரளான இளம் தலைமுறையினரை காண்பதும் அவர்களைக் கொண்டு லிற்றில் பேர்ட்ஸ் என்ற இந்த சஞ்சிகையை வெளியிட்டு இருப்பதும் ஒரு போற்றுதற்குரிய விடயம் எனவும் பெருமாள்கணேசன்; தனது நயவுரையில் குறிப்பிட்டார். லண்டன் மெயிலாக, த ஜெயபாலன் லிற்றில் மாமா என்ற என்ற பெயரில், “தமிழ் சமூகத்தில் கல்வியும் அறிவும் வெறுமனே பாடப் புத்தகங்களுக்குள்ளும் சான்றிதழ்களுக்குள்ளும் முடக்கப்பட்டு, உண்மையான கல்வி, அறிவு என்பன தொலைக்கப்பட்டு விட்டது” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் எழுதவும் வாசிக்கவும் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றோர். சஞ்சிகையில் வெளியான ஒவ்வொரு ஆக்கத்தையும் தனது ஆய்வுக்கு உட்படுத்திய பெருமாள்கணேசன் தனது மதிப்பீட்டை மிகக் காத்திரமாக முன்வைத்தார். கிளிநொச்சியின் ஆளுமைகளை இனம்கண்டு அவர்களது நேர்காணலை பதிவு செய்ததை விதந்துரைத்த அவர் சிறுவர் சஞ்சிகையில் சித்திரக் கதைகள், நாடகக் கதைகள், சித்திரங்கள் என்பனவும் எதிர்கால இதழ்களில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவன் சனோசன் பத்மசேனன தன்னுரையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எண்ணம் போல் வாழ்வதன் அவசியத்தையும் சிறந்த எண்ணங்களை உருவாக்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதுவொரு சம்பிரதாயபூர்வமான நன்றியுரையல்ல எனக்குறிப்பிட்ட லிற்றில் எய்ட் ஆசிரியை பவதாரணி அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றி இந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழவை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்தார். நன்றியுரைக்குப் பின் மாணவர்கள் தங்களுக்குள் பாடல்களைப் பாடியும் ஆடியும் தங்கள் தகமையடைவைக் கொண்டாடினர்.

உரைகளின் நடவே மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகள் எனபன இடம்பெற்றன. கல்வியியலாளர்கள் நைற்றா பரீட்சைப் பரிசோதகர் – அபிமன், ஐசிரி கற்கைகளுக்கான சோனல் டிரெக்டர் சந்திரமோகன், அதிபர் வட்டக்கட்சி ஆரம்பப் பாடசாலை பங்கயற்செல்வன், அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் பெருமாள்கணேசன், அதிபர் கிளிநொச்சி விவேகானந்த கல்லூரி திருமதி ஜெயா மாணிக்கவாசகர், முன்னாள் தையல் ஆசிரியர் ஹேமமாலினி உதயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கான சான்ஙிதழ்களை வழங்கினர். மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்துடன் தொழில்சார் ஆடைகளை அணிந்து வந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் முடிவில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கிய அழகியல் பொருட்கள் ஆடைகள் என்பன காட்சிப்படுத்தப்படட்டு விற்பனையும் இடம்பெற்றது. இப்பொருட்களை எதிர்காலத்தில் ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆசிரியை அனுஷியா ஜெயநேசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இரு மணிநேரம் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

 

கைவிசேஷம் தர மறுத்த வெளிநாட்டவரை தாக்கிய நபர் – யாழில் சம்பவம் !

தனக்கு கைவிசேஷம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார்.

மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு கோரினார்.

இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரியுள்ளார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதியிடம் பொன்சேகா முன்வைத்துள்ள கோரிக்கை !

நாட்டில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது முகநூல் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். குறித்த பதிவில்,

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைக்கு எனது உத்தரவின் கீழ் நீங்கள் படையணிகளிற்கு தலைமை தாங்கினீர்கள். ஆகவே நாட்டில் உருவாகியுள்ள பொதுமக்கள் போராட்டம் குறித்து ஊழல் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை நீங்கள் புறக்கணிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உயிர்வாழ்வதற்கான போராட்டத்திற்காக மாத்திரம் சிவில் சமூகத்தின் மீது அழுத்தம் திணிக்கப்பட்டுள்ளது இந்த நிலை ஊழல் மிகுந்த திறமையற்ற நிர்வாகத்தினாலேயே ஏற்பட்டுள்ளது. இதுவே அமைதியான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

தங்கள் அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக ராஜபக்ச அரசாங்கம் பொதுமக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை சர்வதேச சமூகம் கடுமையாக கண்டிக்கும். மனிதாபிமான நடவடிக்கைகக்கு தலைமைவகித்த யுத்தவீரர்கள் எவரும் அவமானப்படுவதை தான் விரும்பவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் பெறுமதியானவை அல்ல.”- கெஹெலிய ரம்புக்வெல விசனம் !

பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடியுள்ளனர் சிறந்த நோக்கங்களிற்காக இல்லை. ஆர்ப்பாட்டங்களிற்கா கூடியுள்ள இளைஞர்களின் நோக்கங்கள் குறித்து கேள்விகள் உள்ளது.  முக்கியமற்ற ஒன்றுகூடல்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என காண்பிப்பதே எதிர்கட்சியின் கடமை.  பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையேற்பட்டால் தாங்கள் எதிர்கட்சியை நோக்கி செல்லவும் தயார்.

ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சிபொறுப்பை யார் ஏற்பது போன்ற விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்த அரசியல்வாதியும் நாட்டை வேண்டுமென்றே வங்குரோத்து நிலைக்கு தள்ளப்போவதில்லை. தவறுகள் இடம்பெற்றுள்ளன அதனை திருத்துவதற்கு அரசாங்கம் முயல்கின்றது.

ஆட்சி கட்டமைப்பு இல்லாமல் நாட்டை பின்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது.காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் போல இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் அர்த்தபூர்வமானவையாக காணப்படவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுகிறோம்.”- தமிழர்களை போராட வருமாறு சிங்களக் கலைஞர்கள் அழைப்பு !

எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ள சிங்களக் கலைஞர்கள், இலங்கை தேசத்தின் 90 வீதமான தமிழர்களுக்குச் சிங்கள மொழியை சரளமாகப் பேச முடியும் என்பது பெருமைக்குரியது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிங்களக் கலைஞர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“பேரன்புமிக்க தமிழ்ச் சகோதரர்களே! இது உங்களுடைய தேசம். நாம் பிறந்த இந்தத் தேசத்தை நமது எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்போம். ஆகவே, கசப்புணர்வுகள் கடந்து அவற்றை மறந்து காலிமுகத்திடலுக்கு வாருங்கள்; எம்மோடு இணையுங்கள். அன்பான தமிழ்ச் சகோதரர்களே! உங்களை அன்போடு அழைக்கின்றோம். வந்து எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு சீராக அமையும் என்று நம்பி. இருந்தோம் ஆனாலும் அந்த நம்பிக்கை வீணாகி விட்டது. ஆகவேதான் கலைஞர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து இருக்கின்றோம். இன்றைய இந்த ஆட்சியானது நமக்குத் தேவையில்லை. நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்துக்கொண்டு நடத்துபவர்களே எமக்குத் தேவை. அதற்காக நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்” – என்றனர்.

காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக தனிப்பட்ட இராணுவப்பயிற்சி – அம்பலப்படுத்திய அரசியல்வாதி !

“காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” என  முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடவத்தையில் உள்ள இந்த இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில், தற்போது காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எழுப்பி வரும் கோஷத்தை கூறியவாறு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நபர்களுக்கு பயிற்சிகளை வழங்கி முடித்த பின்னர், காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இராணுவ முகாமில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர். அங்கு இராணுவத்தினர் அதில் தலையிட தயாராக இருக்கின்றனர்.

தாக்குதல் நடத்த கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இது கடவத்தை கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்பதை பொறுப்புடன் கூறுகிறோம். இந்த முகாமில் நடத்தப்படும் பயிற்சி என்ன என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

எதற்கு தயாராகின்றனர், எங்கு இந்த பயிற்சி நடக்கின்றது என்பதற்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும். அதேவேளை கோட்டாபய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய நபர், காலிமுகத் திடல் போராட்ட களத்திற்கு சென்றிருந்தார். வடை விற்பனை செய்யும் கடை ஒன்றில் அந்த நபர் காணப்பட்டார். அரசாங்கம் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்த போராட்ட களத்திற்குள் சிலரை அனுப்பியுள்ளது. இது குறித்து கவனமாக இருக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் அமைச்சரவையை மீண்டும் நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ஓரிரு நாட்களின் அமைச்சரவை பதவியேற்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஜனாதிபதிஅரச தலைவர், பிரதமர் ஆகியோரை தவிர ஏனைய ராஜபக்சவினர் இல்லாத அமைச்சரவையை நியமிக்க தயாராகி வருகின்றனர். போராட்டத்தின் தன்மையை பார்க்குமாறு நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சவினரை கேட்டுக்கொள்கிறோம்.

வீதியில் மக்கள் உங்களை தூஷண வார்த்தைகளால் திட்டுகின்றனர். அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல வாக்குகளை பெற்றால் மாத்திரம் போதாது. வாக்குகளை பெற்று ஆயுதங்களை காட்டி அதிகாரத்தை தக்கவைக்கவும் பார்த்தனர். எனினும் சமூகத்தில் சிறிதளவேனும் அங்கீகாரம் இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் ராஜபக்சவினர் மோசமான அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அப்படியால், ராஜபக்சவினர் யாருக்கு தலைமையேற்க போகின்றனர். எப்படி ராஜபக்சவினர் அரச தலைவராகவும் பிரதமராகவும் பதவி வகிக்க முடியும்.

எரிபொருள், மின்சாரம் போன்றவற்றை வழங்கியதும் காலிமுகத் திடல் போராட்டம் கலைந்து விடும் என அரசாங்கம் எண்ணுகிறது. அதன் பின்னர் அமைச்சரவையை நியமிக்கலாம், அதுவரை பதவியில் இருந்து விலகி இருக்கலாம் என ராஜபக்சவினர் கருதுகின்றனர்.

பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய ராஜபக்சவினர் தற்போதைக்கு அமைச்சு பதவியை ஏற்பதில்லை என்றே தீர்மானித்துள்ளனர். அரசாங்கம் இந்த முடிவை எடுத்து அறிவித்தால், போராட்டம் மேலும் பல மடங்காக அதிகரிகும் என நாங்கள் அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம் எனவும் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் உட்பட பல அரசியல் பிரமுகர்களுக்கு தடை – ரஷ்யா அதிரடி !

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் இங்கிலாந்து அரசு செய்து வருகிறது. ரஷியாவிற்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடையும் விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ரஷியாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட, போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,

பிரித்தானிய ஆட்சியாளர்கள் உக்ரைனிய நிலவரங்களை திட்டமிட்டு வேண்டுமென்றே மோசமாக்கி உக்ரைனுக்கு கொடிய ஆயுதங்களை வழங்குவதால் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள  ரஷ்யா, பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், முன்னாள் பிரதமர் திரேசா மே, வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் உட்பட்ட பிரித்தானிய அரசாங்க உறுப்பினர்கள் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை !

“திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப ஆட்சியே காரணம். வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு நாடுகளில் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது .

நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணையை நிறைவேற்றி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சி செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை ஸ்தாபிப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

 

“சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

“சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

“ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர். 2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்றுதான் சிங்கள மக்கள் அதைச் சொல்கின்றனர். இது எமக்குச் சிரிப்பாக இருக்கின்றது.

யார் இந்தப் போராட்டக்காரர்கள் என்று பார்த்தால் இளைஞர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் இங்கே இடம்பெற்ற போரைக் காட்டி கடன் வாங்கினார்கள். இப்போதும் நாட்டைக் காட்டி கடன் வாங்கி இருக்கிறார்கள். நாம் அன்று அல்லல்பட்டோம். எங்களுக்காக ஒருவர் கூட அன்று பேசவில்லை. ஆனால், இப்போது போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் இதை உணர்வார்கள்.

இதே காலிமுகத்திடலில் 66 வருடங்களுக்கு முன்னர் சாத்வீகப் போராட்டத்தை அன்று மேற்கொண்டோம். இதைத் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்றும் நாம் சமத்துவத்துக்காகப் போராடினோம். ஆகவே, உங்களின் போராட்டத்தின் நோக்கத்தை அறிவதற்கு நாம் இப்போது ஆவலாக உள்ளோம் என்றார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.