17

17

புதிய பிரதமராகிறார் நாமல்..? – நாமல் வழங்கியுள்ள பதில் !

“பிரதமர் பதவிக்கு நான் நியமிக்கப்பட போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை.”  என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதமர் பதவிக்கு நான் நியமிக்கப்பட போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருட்கள் உள்ளிட்டவற்றை இலகுவாக பெற்றுக்கொள்வதில் அசௌகரியமான நிலைமைகள் உள்ளன.

இந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினை காண வேண்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை சுமூகமாகப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அந்த விடயத்திற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும்.

என்னைப்பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கு கிடையாது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உகண்டாவில் ராஜபக்ஷக்கள் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு – வெளியாகியுள்ள அறிக்கை !

இலங்கையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுதலித்து உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

Gallery

உகண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக பல முகநூல் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளியான முகநூல் பதிவுகளின் குற்றச்சாட்டுகளை செரினிட்டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முற்றாக மறுத்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் !

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்  பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

“காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஒரு நாள் போராட வாருங்கள்.”- சிங்கள இளைஞர்களுக்கு சிறீதரன் அழைப்பு !

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஒருநாள் போராடுமாறு சிங்கள இளைஞர்களுடன் இணைந்து போராட செல்லும் தமிழ் இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ சிங்கள இளைஞர்களுடன் போராட்டத்திற்கு செல்ல தயாராகும் இளைஞர்களிடம் நான் பகிரங்கமாக கேட்கிறேன். இத்தனை நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெருக்களில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு நாள் ஆயிரம் இளைஞர்கள் கிளிநொச்சியில் திரளுங்கள். அதற்கு எங்கள் இளைஞர்கள் தயாரில்லை.
கைகளால் ஒப்படைக்கப்பட்ட கணவன்மார், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் யாருமே இல்லை. எங்கு என்றும் தெரியாது. இவர்களை தேடியவாறு இருக்கும் தாய்மார்களுடன் ஆயிரம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடுங்கள் என உங்களைப் பகிரங்கமாக கேட்கிறேன்.
சிங்கள இளைஞர்களின் போராட்டத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தயாராகிக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் பற்றி பேசினால் அந்த இளைஞர்களின் பாதங்களுக்கு பூப்போட்டு வணங்கவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் போராடியது எங்களுடைய உரிமைகளுக்காக, இழந்துபோன இறைமைகளை மீட்டெடுப்பதற்காக, எங்களுடைய மண்ணில் சுயாட்சி முறையிலான உரிமையை வென்றெடுக்க நாங்கள் போராடுகிறோம். இது முற்றுமுழுதான உரிமைக்கான போராட்டம். உயிர் வாழ்தலுக்கான போராட்டம். அடுத்த பரம்பரைக்கான நிம்மதிக்கான போராட்டம்தான் நாம் இந்த மண்ணில் நடாத்துகிறோம்.
நாங்கள் எரிபொருளுக்காக போராடவில்லை. எரிவாயுவிற்காக போராடவில்லை. நாங்கள் மின்சாரத்திற்காக போராடவில்லை. உணவிற்காக நாங்கள் போராடவில்லை. இவை இல்லாமால் நாங்கள் வாழ்ந்தவர்கள். நாங்கள் யாருடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவில்லை. நீங்கள் போராடுவது ஒரு கொடுங்கோலனுக்கு எதிராக, இனப்படுகொலையாளிக்கு எதிராக, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ என்ற இருவரும் இந்த மண்ணில் தமிழ்த் தேசிய இனத்தை படுகொலை செய்தவர்கள். அவர்களுக்கெதிராக போராடுகிறீர்கள்.
நாம் உங்களுக்கு முதலே இவர்களுக்கு எதிராக 2019ஆம் ஆண்டிலேயே போராடியிருக்கிறோம்.

கடந்த காலங்களில் சிங்கள மக்கள் போராடியபோது தமிழர்கள் ஆதரவு நல்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினை தீர்ந்ததும் தமிழர்களுக்கு எதிராக மாறியிருக்கிற பல சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெற்றிருக்கிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

காலி போராட்ட களத்தில் தமிழில் தேசிய கீதம் – புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் இன்றையதினம் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.

முன்னதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் தேசிய கீதத்தை தமது மொழியில் பாடியதை அடுத்து பின்னர் தமிழ் மொழியில் கீதம் பாடப்பட்டது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது, ஆனால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் 2020 இல் இந்த நடைமுறையை நிறுத்தியது.

 

இதேவேளை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் சிங்கள மக்களால் டுவிட்ட பதிவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.