11

11

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியவர்கள் கண்டறியப்பட்டால் …, – இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம் மக்களை திரட்டபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர், இது தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்

ரணில் – கோட்டாபய திடீர் சந்திப்பு – பிரதமராகிராறா ரணில்..?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழில அடுத்து இருவருக்கமிடையிலான திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னரே தமது அதிகாரத்தை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தென்னிலங்கை ஊடகங்கள் பல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், அவர் பதவி விலக வேண்டும்.”- எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், அவர் பதவி விலக வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

“ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை பதவி விலகுமாறு நாடு முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக, அவர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளார், மேலும் அவர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும்போது, ​​அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு மேல் இருந்தால், அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டி மற்றொரு பிரகடனத்தையும் செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் 155 (7) கூறுகிறது. , அவர் செய்யவில்லை.

ஜனாதிபதி அவ்வாறானதொரு பிரகடனத்தை மேற்கொள்ளாத காரணத்தினால் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில் பிரதமர் இல்லாமலும் நாடாளுமன்றத்தை கூட்ட முடியும். எனினும், இன்று பிரதமர் இராஜினாமா செய்ததன் பின்னர், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் தமது பதவிகளை விட்டுச் சென்றுள்ளனர், அதுவே அரசியலமைப்பு நிலைப்பாடு.

எனவே, ஜனாதிபதி உடனடியாக ஒருவரை பிரதமராக நியமித்து அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அனைத்து ஆட்சி அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் இருக்காது.

ஜனாதிபதி சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், அவர் பதவி விலக வேண்டும்.

எனவே, ஜனாதிபதி உடனடியாக பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து, அதன் பின்னர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.”- பல்கலைகழக மாணவர்களிடம் சாணக்கியன் கோரிக்கை !

“வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை வெளியிடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) இடம்பெற்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு  பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்திடம் வலியுறுத்தினார் சாணக்கியன் ...

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்றைய நாளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நாங்கள் வரவேற்கின்றோம். விசேடமாக இந்த முன்மொழிவுகளுக்குள்ளே மேலும் ஒன்றிரண்டு விடயங்களையும் உள்ளடக்குமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

விசேடமாக இந்த 13 கோரிக்கைகளுக்குள்ளே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான எந்தவொரு விடயங்களும் இல்லாத காரணத்தினால், அந்த விடயங்களையும் முன்வைக்குமாறு அன்பான வேண்டுகோளினை இந்த நேரத்திலே முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை என்ற விடயத்தினையும் சொல்லி இருக்கின்றேன்.

இன்று சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக இருக்கட்டும், அதற்கு பின்னர் நடந்ததாக இருக்கட்டும், இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த நாட்டிற்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதிலளிக்காமல் விட்டாலும் எங்கள் நாட்டிற்கு ஒரு எதிர்காலம் இல்லை என்பதனையும் இந்த இடத்திலே நான் விசேடமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனியார் மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியம் குறித்த முன்மொழிவுகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறும் இரா.சாணக்கியன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

மகிந்த ராஜபக்ஸ எங்கே..? – கடற்படை தளபதி வெளியிட்டுள்ள தகவல் !

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக இருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (11) தெரிவித்தார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் தலைமையக மைதானத்திலிருந்து இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஒப்புக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுவதாகவும், அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உறுதியானதும் அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வார் எனவும் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தலைநகரில் குவிக்கப்படும் படையினர் – இலங்கையில் இராணுவ ஆட்சி ?

நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

நேற்றையதினம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

பாராளுமன்றம் எப்போது கூடும்…? – சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் – ஜெனரல் சவேந்திர சில்வா

பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அத்துடன், பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எரிக்கப்பட்டது அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்புள்ள பதாகை !

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் (10) இரவு கூடிய சிலர் பதாகைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நாடு பூராக அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்படும் நிலையில், இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு வரும் சூழலில், வடக்கு, கிழக்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாம் என முற்கூட்டியே பாதுகாப்பு அரண்கள் போடப்பட்ட நிலையில், போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர்.