24

24

சமல் ராஜபக்ஷவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான யூரியா உர மூடைகள் – விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

அரசியல்வாதிகளின் வீடுகளில் காணப்பட்ட யூரியா உர மூடைகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய உர செயலகத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு இரசாயன உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சில அரசியல்வாதிகள் தமது வீடுகளில் உரங்களை சேமித்து வைத்திருந்தமை தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட உள்ளதா அல்லது உரிய அரசியல்வாதிகளால் தனியார் வர்த்தகர்களிடம் நிலவும் விலைக்கு உரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை கிடைத்த பின்னர், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்த போது அவர்களின் பல வீடுகளில் நூற்றுக்கணக்கான உர மூடைகள் காணப்பட்டதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரின் வீடுகளில் இந்த உர மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஜூன் மாதம் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி உருவாகும்.” – எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க !

எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் .

 

“ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.

இதனால் கடந்த 9 ஆம் தேதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.

நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

பகிடிவதை மோதல் – 35 மாணவர்கள் கைது !

பல்கலைகழக மாணவர்களிடையே பகிடிவதை தொடர்பான விடயங்களை கட்டுப்படுத்த பல்கலைகழகங்கள் ஆணைக்குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும் கூட அரச பல்கலைகழகங்களில் பகிடிவதை தொடர்கதையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 35 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையை விட்டு கடல் வழியாக தப்பி செல்ல முற்பட்ட 67 பேர் கைது !

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 30 முதல் 40 வயதுடைய 12 ஆண்களுடன் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் மற்றும் ஒரு வேன் கைப்பற்றப்பட்டுள்ளது

இதனை அடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பல நாட்களாக இருந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 45 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் உட்பட 03 முதல் 53 வயதுக்குட்பட்ட 55 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டது ‘திரிபோஷா’ தொழிற்சாலை !

தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவே திரிபோஷா ஆகும்.

சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில் திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் சோளம் அறுவடை செய்யப்பட்டவுடன் புதிய இருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு மிக சிக்கலான பிரச்சினையாக எதிர்காலத்தில் மாறும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்கிறது என வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்குள்ளும், பாராளுமன்றத்துக்கு வெளியேயும் மக்கள் சார்பில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கான அந்நியச் செலாவணியை இராணுவ வீரர்கள் கொண்டு வருவார்கள்.”- சவேந்திர சில்வா

மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய முதற்கட்ட குழுவினர் நேற்று (23) மாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேற்படி குழுவினரை வழியனுப்பி வைக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு சென்று அக்குழுவினருடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் நாட்டு மக்களுக்கு அவசியமான பாதுகாப்பை வழங்கும் இலங்கை இராணுவம் நாட்டிற்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

“மாலியில் உள்ள எமது படையினர், களநிலவரத்தை பொருட்படுத்தாமல், கடினமான பணியைச் செய்கிறார்கள். இவ்வாறு எங்கள் படையினரின் தொழில்முறை தரம் மற்றும் அவர்களின் சிறந்த பணிகளின் மூலம் ஈர்க்கப்பட்ட ஐ.நா அமைதி காக்கும் பிராந்திய தளபதிகள் தங்களது பாராட்டுகளை எமது படையினருக்கு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து எக்காரணம் கொண்டும் நாங்கள் விலக மாட்டோம். மே 9 ஆம் திகதி 24 மணி நேரத்துக்குள் வெடித்த அமைதியின்மையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதற்காக பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது எனத் தெரிவித்த அவர் இவ்வாறான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.