26

26

இலங்கை அரசியல் வாதிகளை மிஞ்சும் ஒக்ஸ்போர்ட் பட்டதாரி பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!!!

உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.

உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.

அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.

அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.

“சிங்கள தேசிய வளர்ச்சிக்கு மணிவண்ணன் துணைபோகிறார்.”- தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு !

சிங்கள தேசிய வளர்ச்சிக்கு மணிவண்ணன் துணைபோகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்“.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் தீர்மானத்தையும் மதிக்காமல் மத்திய குழு தேவை இல்லையென இருந்துவிட்டு தங்கள் முகமூடிகள் எல்லாம் பறந்து போயுள்ள நிலையில், அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என்பதை அனைவருமே வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மாநகரசபையில் தமிழினப் படுகொலை செய்ய பங்காளிகளாக இருந்த ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பதவிக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு இணைந்து செயற்படுவதால் இவர்கள் யார் என்று தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தைப் புனரமைத்து சிங்கள தேசியவாத வளர்ச்சிக்கும் இவர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர். அவரது வெளிநாட்டுப் பயணமும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தமிழ் தேசிய முலாம் பூசி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு காலமும் மறந்து போய் அதை தூசு தட்டமுற்படுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர் உருவாக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்கள் சட்ட மாணவர்களாக இருந்த போது இந்த கட்சியை உருவாக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மறைந்த பேராசிரியர் கென்னடி ஆகிய நான்கு பேருமே ஆகும்.

கட்சியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. அந்த நேரத்தில் ஒரு வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் .“ எனத் தெரிவித்துள்ளார்.

……………………………………………………………………………………………………………………………

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் சார்ந்த முனைப்பான போராட்டங்களை தென்னிலங்கை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழர்களுடைய நிலைப்பாடு என்ன.? அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன..? என்ற வினாக்களை தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளன. இந்த அருமையான சந்தரப்பத்தை பயன்படுத்த வேண்டிய ஒரு சூழல் உ்ள்ளது. மேலும் தமிழ் தலைவர்களுடை்ய முக்கியமான ஒற்றுமையுடன் கூடிய அசைவு இன்றியமையாததாகியுள்ள நிலையில் இன்னமும் இந்த தமிழ்தேசிய கட்சிகள் ஒன்று பட தயாரில்லை என்ற நிலையே நீடிக்கின்றது. கூட்டமைப்பில் அடைக்லநாதன் – சுமந்திரன் இடையேயான மோதல் போக்கு ஒரு புறம், எந்த கோட்பாட்டில் உள்ளார் என்றே தெரியாத விக்கி ஒருபுறம், இவர்களுக்கிடையில் சொந்த கட்சிக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க முடியாது தமிழ்தேசியத்தை பெற்றுத்தருவதாக தமிழர்களை வைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேலுமொரு பக்கம் என தமிழ் தலைமைகள் ஒவ்வாரு திசையில் பயணிப்பது கையில் கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்டது போலாகும். ஒற்றுமையுடன் கூடி செயற்பட்டு தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில் கடந்த கால தலைவர்கள் விட்ட அதே தவறை இன்றைய தலைவர்களும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பொருத்திருந்து பார்ப்போம்.., இவர்கள் எங்களை இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள் என்று..!

 

மாலைதீவில் அடைக்கலம் கோரிய மகிந்த..?

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்திகதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்ச, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலைத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் மாலைத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலைத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலைத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது’ என்று கூறினார்.

இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலைத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு !

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று தானும் உறுதியாக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு, முறையான நடைமுறைகள் இன்மையே முக்கிய காரணம் ஆகும்.

கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி அதிகரிப்பு ஒன்றே தீர்வு என்கிறார் ரணில் !

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமே சமாளிக்க முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (26) காலை வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அதில் இலங்கை முன்னணியில் இருக்கிறது.  மேலும் சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் உள்ளது.

சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் காணப்படுகிற நிலையில் , இந்த நிலைமையை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எனவே, இந்த நேரத்தில் சரியான கொள்கைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வறுமையை சமாளிக்க கிழங்குப் பயிர்கள் நடும் திட்டம் ஆரம்பம் !

நாட்டில் ஏற்பட்டுவரும் வறுமையை சமாளிக்கும் முகமாக, பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ், உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அக்கரைப்பற்று சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.

 

தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மரவள்ளி மற்றும் வற்றாளை போன்ற கிழங்குப் பயிர்கள் நடுகை செய்யப்பட்டன. இத் திட்டம் கிராம மட்டத்தில் பொதுமக்களிடையே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

………………………………………………………………..

இது போன்றதான செயற்றிட்டங்களை எல்லா மாகாணங்களிலும்  கிராமமட்டத்தில் இயங்கும்அமைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதமளவில் இலங்கை கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டையும் – வறுமையையும் எதிர்காள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வறுமையை தாக்குப்பிடிக்க இருக்க கூடிய சில வழிமுறைகளில் ஒன்று தான் சிறு பயிர் செய்கையை மேற்கொள்வது. கிழங்கு , கீரை விதைப்பு , வாழை மர நடுகை என முடியுமானவரை சிறிது சிறிதாக தற்சார்புக்கு திரும்புவது நம்மையும் நம்மை சூழ உள்ளோரையும் பாதுகாக்க மேற்கொள்கின்ற அறிய முயற்சியாகும்.

இலங்கையின் பிரச்சினைகளுக்கு காரணமான – கடமைகளை சரி வர செய்ய தவறியோர் மீது விசாரணை !

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார்.

பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கி நேற்று (25) கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்த போதே அதன் தலைவர் இந்தப் பரிந்துரையை வழங்கினார்.

இந்த நெருக்கடி நிலை ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்ன என வினவப்பட்டபோது பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2020 மார்ச் – ஏப்ரல் மாதத்தில் கடன் உதவியைப் பெறச் சென்ற போது, இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் இல்லை என்பது அவர்களினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். எனவே கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதாயின் கடன் மறுசீரமைப்புக்குச் செல்லவேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநருக்கு நாணய சபை எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நிதிச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலந்துரையாடல்களின் பின்னர் மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஊடாக நிதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு குறித்த தொழில்நுட்ப பரிந்துரையை அனுப்பியிருந்ததாகவும், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சரவையின் ஊடாகவே அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அப்போதிருந்த நிதி அமைச்சர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்தைத் தெரிவித்திருக்கவில்லை என்றும், பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அஜித் நிவாட் கப்ரால் இதன் உண்மையான நிலையைத் தெரிவித்திருக்கவில்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.டி சில்வா இங்கு தெரிவித்தார். அத்துடன், 2019 நவம்பர் சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் காணப்பட்டதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சில மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறானது அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வரி வருமானம் குறைக்கப்படக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியிருந்த நிலையில் அப்போதிருந்த ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டின் ஊடாக 600 பில்லியன் ரூபா வரியைக் குறைப்பதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

புதிய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர இங்கு சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் நாணய மாற்று விகிதத்தை மிதக்கவிடாது தக்கவைத்துக் கொண்டமையால் பாரிய தொகை இழக்கப்பட்டிருப்பதாக சமூகத்தில் நிலவும் கருத்துத் தொடர்பிலும் குழு வினவியது. இது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நாணயச் சபைக்கே இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். மத்திய வங்கியின் கையிருப்பைப் பயன்படுத்தி நாணய மாற்று விகிதத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு எடுத்த தீர்மானத்தை தானும், நாணயச் சபையின் உறுப்பினராக இருந்த சஞ்ஜீவ ஜயவர்த்தனவும் கடுமையாக எதிர்த்ததாக நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி ராணி ஜயமஹா தெரிவித்தார். இருந்தபோதும் நாணயச்சபையின் உறுப்பினர்கள் மூவருடைய தீர்மானத்துக்கு அமைய நாணயமாற்று விகிதத்தை ஒரே தொகையில் தக்கவைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் நியமிக்கப்பட்ட நாணயச் சபை உறுப்பினராக சமந்த குமாரசிங்க ஆகியோரின் விருப்பத்துக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதாகவும் இங்கு புலப்பட்டது. வெளி தரப்பினரின் செல்வாக்கு இன்றி துல்லியமான தொழிநுட்ப காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியது.

அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் வரையான பணயத்தில் எதிர்வரும் 3-4 மாத காலத்துக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வது சிக்கலானதாக இருந்தாலும் இந்தச் சவாலை வெற்றிக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்க சேவையில் உள்ளவர்களைக் குறைந்தளவு பயன்படுத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, எதிர்வரும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உடனடியாகத் தயாரிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவிடம் பரிந்துரைத்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்காக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரையும் கோப் குழுவின் தலைவர் பாராட்டினார்.

தொடரும் கைதுகள் – இதுவரை 1800 பேர் வரை கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை ஆயிரத்து 878 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 831 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 854 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேபோன்று குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே காரணம் – IMF

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே காரணம் எனவும் இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார்.

இந்தியாவின் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கையில் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை தாம் மதிப்பதாகவும், கடினமான காலங்களில் இந்தியாவின் ஆதரவானது நல்ல நட்பை வெளிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விரும்பினால் மீண்டும் மகிந்த வருவார் !

மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.

எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார். எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார் என டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.