June

June

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்கள் !

காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்ட வண்ணமுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது வரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள பேராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று (26) சென்றிருந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

போராட்டத்தின் நோக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அந்த நோக்கங்களுடன் மாற்றமின்றி பயணிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காட்டுமிராண்டித்தனமான ராஜபக்ஸவாதம், மற்றும் அரச பயங்கரவாதம் என்ற இரண்டையும் நிராகரிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்ஸக்களின் பங்கேற்புள்ள எந்தவொரு அரசாங்கத்திலும் தாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேல்மாகாணத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்கள் – ஏனைய மாகாணங்களில் பாரிய உணவுப்பற்றாக்குறை !

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

எனவே நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து துறைமுகத்தில் உள்ள கொள்கலன் போர்ட்டர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி – அகதியாக சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு !

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகதிற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலையில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து இருந்த நிலையில் அங்கு வந்த கடலோர பொலிஸார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை இடமபெற்றுவரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிபொருள் நெருக்கடியின் விளைவு – வீடு தீப்பிடித்து கணவன் – மனைவி பலி !

கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாகம்மன பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் அடித்தளத்தில் தீ பரவியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது இரு மகள்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த அறையில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டு நால்வர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு வயது மகள் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் போது 47 வயதான கணவர் லசந்த புத்திக ரணசிங்க உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் மனைவி நளிகாதேவி 35 வயது நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இவர்களின் 19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களின் உயிரிழப்புக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் – சஜித் பிரேமதாச சவால் !

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்குமாறு உங்கள் அனைவருக்கும் நாங்கள் சவால் விடுகிறோம். வாக்கெடுப்புக்கு உடனடியாக வாய்ப்பு கொடுங்கள்.

அப்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த அணி எது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். புதிய ஆணையில் நாட்டை ஆளுமாறு மக்களைக் கேட்பதே எங்களின் பணி. நாட்டை பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் பாலியல்வன்புணர்வு சார்ந்த பிரச்சினைகள் – யாழ்.கற்ற சமூகம் என்ன செய்கிறது..?

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

…………………………….

மக்கள் மத்தியில் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் வாட்டிக்கொண்டிருந்தாலும் கூட மறுபக்கமாக உளவியல் நெருக்கடிகளும் அதிகரித்து்கொண்டு தான் இருக்கின்றன என்பதையே இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்துகின்றன. இதே யாழப்ப்பாண பகுதியில் தான் சில தினங்களுக்கு முன்பு 78 வயது மூதாட்டி ஒருவரும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை  தமிழரின் ஏனைய பகுதிகளை விட கற்ற சமூதாயம் ஒன்று அதிகமாக இருக்கிறது என்பதை ஏற்றாகத்தான் வேண்டும். அந்த பகுதியிலேயே பாலியல்துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பது ஆபத்தான ஒரு கட்டத்தில் நமது சமூக ஒழுக்க நிலை உள்ளது என்பதையே விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அங்குள்ள கற்ற சமூகம் தன்னுடைய சுயநல மனப்பாங்கை கைவிட்டுவிட்டு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு சமூக மாற்றத்துக்காக இயங்க வேண்டியுள்ளது. பாலியல் சாரந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள், மாணவர்கள் மத்தியில் பாலியல் புரிதல் தொடர்பான கல்வியை கொண்டு செல்ல முற்படல், சமூக ஏற்றத்தாழ்வுகளில்உள்ள சிக்கலான கட்டமைப்பை மாற்ற முயற்சித்து அனைவருக்கும் கற்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்ததுததல், போதைப்பொருள் – ஆயுத கலாச்சாரத்துக்கு எதிரான ஓர் அமைப்பை முன்னெடுத்தல் என இயங்குவதற்கு ஆயிரம் வழிமுறைகள் உள்ளன.

யாழில் உள்ள கற்ற சமூகம் தான் வாழ்ந்த சமூகம் பற்றி சிந்தித்து செயற்பட முன்வராதவரை சமூக சீர்கேடுகள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது.

தனியார் வகுப்பு – தனித்து வகுப்பு: கணக்கு ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்த போட்ட கணக்கு! முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரத்தில் கற்கின்ற 20 மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!!!

முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.

முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.

ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.

தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.

2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.

20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.

மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.? – கர்தினால் மெல்கம் ரஞ்சித் கேள்வி !

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார்.

றாகம பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது என்றும் மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.?

இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்து இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

கருக்கலைப்பு உரிமைச்சட்டத்தை நீக்கியது அமெரிக்கா !

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது’ என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கருக்கலைப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மாகாணங்களில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க எனது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவேன். கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு கோர்ட்டு மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பறித்துள்ளது’ என்றார்.

“என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.” – நாமல்

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு தான் முன்னர் வகித்த அமைச்சுக்களுக்கான அதிகாரிகளையும் அந்தக் குழுவே நியமித்ததாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.