09

09

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை! திடீர் திருப்புமுனை!!!

இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.

மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.

புற்றுநோயை 100சதவீதம் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் !

அமெரிக்காவின் மேன் ஹட்டானில் உள்ள நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 100 சதவீதம் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை கொடுத்து நோயாளிகளை 100% புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.

இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முற்றிலும் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் புற்றுநோயை கண்டறிவதற்கான அனைத்து சோதனைகளும் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளபட்டு புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த இலங்கை இளைஞர்களுக்கு நேர்ந்த கதி !

15 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இன்று (09) காலை அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சட்டவிரோதமான முறையில் அந்நாட்டிற்குள் பிரவேசிக்க முயன்ற 15 இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 19 நாட்களுக்கு முன்னர், அவர்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களின் மீன்பிடிக் கப்பல் அவுஸ்திரேலிய கடற்கரையை நெருங்கியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இந்தக் குழுவை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொறுட்பேற்கப்பட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விமானத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

வங்கிகளிலுள்ள மக்களின் பணத்தை கையகப்படுத்துகிறதா அரசாங்கம்..?

“பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.” என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அதற்கு வங்கி கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். வங்கி கட்டமைப்பு என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.

தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகளில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.

ஆகவே வங்கி கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம். இப்போது சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள்.

அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி விடுகின்றனர். நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும்.

மக்கள் வங்கி கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை. அவ்வாறு பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்

முகக்கவசங்களுக்கு bye bye சொல்கிறது இலங்கை !

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முக்கவசங்களை அணியலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு,,? – சாணக்கியன் காட்டம் !

மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு,,? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் 30 வருட யுத்தம் காரணமாக வீடுகளை இழந்து, வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம். அந்த வகையிலேயே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாரிய வீடமைப்பு வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அந்த வீடுகள் இதுவரை முடித்துக்கொடுக்கப்படாமல் உள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே வடக்கு கிழக்கில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்´ எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன்,

இந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதியமைச்சர், குறித்த வீடுகளுக்கு 6 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ளவர்கள் வீடமைப்பு சார்ந்த விடயங்களில் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைவடைய ஆரம்பித்துள்ள கொரோனா தொற்று – ஆனால் முடியவில்லை – உலக சுகாதார அமைப்பு !

உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 சதவீதம் குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் எதோனம் கெப்ரிசியஸ் கூறியதாவது:

கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.

வீட்டில் கஞ்சா வளர்க்கலாம் – கஞ்சா செடிகளையும் வழங்கி வைக்கிறது அரசாங்கம் !

தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு தாய்லாந்த , அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது.

‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்துறை மூலம் மக்கள் மற்றும் அரசாங்கம் வருமானம் ஈட்ட இது ஒரு வாய்ப்பு’ என்று துணைப் பிரதமரும் சுகாதார அமைச்சருமான அனுடின் சார்ன்விரகுல் கடந்த மாதம் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டார்.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள் கஞ்சா கலந்த உணவுகள் மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ளலாம்.முக்கியமாக உணவு தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) 0.2 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.

குடும்பங்கள் அதிகாரிகளிடம் பதிவுசெய்தால், ஆறு கஞ்சா பானை செடிகளை வீட்டில் வளர்க்க முடியும். மேலும் நிறுவனங்களும் அனுமதியுடன் ஆலையை தொடரலாம்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவை நிலையங்கள், கஞ்சாவை ஒரு சிகிச்சையாக மிகவும் சுதந்திரமாக வழங்க முடியும். 2018ஆம் ஆண்டில் மருத்துவ கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவிலேயே தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மருந்தைப் பயன்படுத்துவது இன்னும் சட்டவிரோதமானது. பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். இது பொதுத் தொல்லையாகக் கருதப்படுவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறினர்.

இத்திட்டத்தின் கீழ், கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சுமார் 4,000 கைதிகளை விடுதலை செய்வதையும் இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

மல்லாவியில் இளைஞர்களுக்கிடையில் கைகலப்பு – ஒருவர் பலி !

இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி 4ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஆறு பேர் காயமடைந்து மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் அதில் இருவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனைய நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கபுட்டாஸ் கா கா என்ற கோசமே எனது ரிங்டோன் – பசில் ராஜபக்ச

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு முன்னதாக வழங்கிய நேர்காணல் ஒன்றில், காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து இந்த கோஷம் உருவானது.

காலி முகத்திடலில்  அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கள வார்த்தையையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் பெயரையும் இணைத்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவிக்கும் வகையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, தற்போது பிரபலமாக உள்ள கோஷம் குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.

பசில் பசில் பசில் என்று கூறுவது தான் இப்போது எனது ரிங்க் டோன் என்றும் அதுதான் எனது பெயர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.