11

11

தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்

‘தோற்றுத்தான் போவோமா….’ புகலிட தொகுப்பு மலரினை மீண்டுமொருமுறை மீள் வாசிப்புக்குட்படுத்தினேன். இது பிரான்சின் தலைநகர் பாரிசில் 1995 ம் ஆண்டு ஒரு மேதினத்திலன்று விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சபாலிங்கம் நினைவாக, சுமார் 5 வருடங்கள் கழித்து 1999 ம் ஆண்டு பிரான்சில் இருந்து சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளின் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாக ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் விளங்குகின்ற தோழர் சபாலிங்கத்தின் படுகொலை ஆனது அன்று புகலிட சமூகத்தில் பெரும் அதிர்ச்சியினையும் திகைப்பினையும் ஏற்படுத்தியிருந்த விடயம் நாம் அறிந்ததே. இந்த படுகொலையினால் அன்று இங்கு புகலிடத்தில் மனித உரிமைகளை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டு வந்த புலி எதிப்பாளர்களின் செயற்பாடுகளில் ஒரு தடுமாற்றமும் பயப்பிராந்தியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயலாக இம்மலர் வெளியீட்டினை நிகழ்த்திய ‘சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்’ அமைப்பினரின் இப்பணியினையும் இதன் பின் உள்ள அர்ப்பணிப்பையும் துணிச்சலினையும் நாம் மறுக்கமுடியாது.

அனைத்து அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு மலரில் ஈழம், புகலிடம், தமிழகம் என்ற பரப்பில் இருந்த பல்வேறு விதமான படைப்பாளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. இந்நூலின் முன்னுரையில் வெளியீட்டாளர்கள் ‘இது வெறும் புலிகளுக்கு எதிரான குரல் அல்ல. பல்வேறு விதமான அரச அடக்குமுறைகள், பெண்களின் மீதான வன்முறை, குழந்தைகளின் மீதான அடக்குமுறை, என அனைத்து மனித நேயமற்ற செயல்களுக்கு எதிராகவும் எமது குரல் ஒலிக்கின்றது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

‘காலம் தாழ்த்திய ஒரு அஞ்சலி’ என்று இதன் ஆரம்பப் பக்கங்களிலேயே சமுத்திரன் ஒரு பதிவினை எழுதுகிறார். உண்மைதான். இது ஒரு காலந்தாழ்த்திய அஞ்சலிதான். நாம் ஏற்கனவே மேலே கூறியபடி இம்மலரானது சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டிருகின்றது. ஆயினும் மிகவும் காத்திரமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அழகலிங்கம் எழுதிய ‘அராயகமும் மார்க்சியமும்’ தி. உமாகாந்தனின் ‘சரியும் சர்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள்’ போன்ற காத்திரமான கட்டுரைகள் இம்மலரை சிறப்பிக்கின்றன. ‘சிந்தனை: அக்கினிக்குஞ்சு’ என்ற தலைப்பில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிந்தனைக்கு அஞ்சும் மனிதர்கள் குறித்தும் அச்சமும் பீதியும் கொண்டு மாற்றுக் கருத்துக்களை கண்காணிக்கும் மனிதர்கள் குறித்தும் எழுதி ராஜினி திரணகமவின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி ஒரு சிறப்பான கட்டுரையினை எழுதுகிறார். ‘புலம் பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல, வன்முறைகளும்தான்…’ என்ற கட்டுரையில் அழகு குணசீலன் இதுவரை காலமும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்ற அராஜகங்கள், வன்முறைகள், படுகொலைகள், மாற்றுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மீதான தடைகள் பற்றியும் தேடகம் எரிப்பும் குறித்தும் ஒரு அட்டவணையுடன் கூடிய விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுகிறார். அசோக் யோகன் கண்னமுத்து ‘துடைப்பானின் குறிப்புக்கள்’ என்ற தனது பதிவில் தேசியவாத உணர்வுகள் எப்படி தேசியவெறியாக உருமாறி, அது எவ்வகையில் மற்றவர்களின் மீது மேலாண்மை செலுத்துகின்றது என்பதினை விளக்கி, எமது தேசிய இனப்பிரச்சினைகளின் தீர்வாக மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையினை ஆராய்கின்றார். ‘காலுடைந்த சிவில் சமூகமும் தமிழ் புத்திஜீவிகளும்’ என்ற கட்டுரையில் இன்றய தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் போலித்தனங்கள் குறித்து ஸ்பார்ட்டகஸ்தாசன் விரிவான கட்டுரை ஒன்றினை சேரன், சி.புஷ்பராஜா, சமுத்திரன், தமிழரசன், செ.கணேசலிங்கன், சுவிஸ் ரஞ்சி, ப.வி.சிறிரங்கன், ஜோர்ஜ் குருசேவ், முதலானோரின் அரசியல் கட்டுரைகளுடன் அருந்ததி, சேரன், இளைய அப்துல்லாஹ், நா.விச்வநாதன், தமயந்தி திருமாவளவன், சி.சிவசேகரம், சோலைக்கிளி, உமா, இளைய அப்துல்லாஹ், றஞ்சனி, அ.ஜ.கான், முத்துலிங்கம், செல்வம் அருளாந்தம், இந்திரன் போன்றவர்களது கவிதைகளும் தமயந்தி, உமா, தயாநிதி, ரவீந்திரன், நிருபா, சந்துஷ், நா.கண்ணன் ஆகியோர்களின் சிறுகதைகளும் இம்மலரில் இடம் பிடித்துள்ளன.

இன்று தீவிரமான புலி எதிர்ப்பாளர்களாக இருந்து புலிகளிற்கு எதிராக தமது உரத்த குரல்களை படைப்புக்களாக பதிவு செய்து வருகின்ற பலரது படைப்புக்கள் எதுவும் இதில் இடம் பெறாதது, இவர்கள் புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அழிவிற்கு பின்பாகவே தீவிரமான புலி எதிப்பாளர்களாக மாறி புலிகளிற்கு எதிராக கம்பு சுத்தப் பழகி இருக்கின்றார்கள் என்ற உண்மையினையும் எமக்கு எடுத்துச் சொல்கின்றது. முக்கியமாக இன்று சிங்கள இனவாத அரசின் ஒத்தோடியாக மாறி, இலங்கை அரசின் அனைத்து அராஜகங்களுக்கும் செயல்களுக்கும் ஒத்து ஊதுகின்ற பாண்டி பஜார் போராளி அன்று சபாலிங்கம் இலண்டன் வந்து அவரைச் சந்திக்க விரும்பியபோது அவரைச் சந்திக்க மறுத்ததும் இதனை சபாலிங்கம் பாரிசில் தனது தோழர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டதும் எமது புகலிட வரலாற்றில் நாம் மறைக்க முடியாத உண்மைகள்.

இம்மலரானது உண்மையில் ஒரு இரண்டு தசாப்தகால ஈழ-புகலிட சமூக, பண்பாட்டு அரசியல் களங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை வெளிப்படையாகப் பேசி நிற்கின்றது என்றே நாம் கருதுகின்றோம். சேரன் ‘காற்றை எதிர்த்து ஒரு காலடி’ என்ற ஒரு விரிவான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் இங்கு புகலிடத்தில் வெளியாகி இருந்த சிறுசஞ்சிகைகள் தவிர்ந்த அன்றைய அனைத்துப் பத்திரிகைகளும் புலிகளின் எதேச்சதிகாரங்கள், அராஜகங்கள் போன்றவற்றை எப்படி ஆதரித்து நின்றன என்பதினை தெளிவாக விளக்குகிறார்.

இதே வேளை இங்கு வெளியாகியிருந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அனைத்துமே புலி எதிர்ப்பாளர்களினாலேயே வெளி வந்திருந்தன என்பதுவும் நாம் மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமது இராணுவ வெற்றிகள் மூலமும் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் மூலமும் கட்டிக் காத்து வந்த பிம்பங்களை கட்டவிழ்ப்பதில் இவர்கள் மிக வெற்றிகரமாகச் செயற்பட்டார்கள் என்பதும் அதனை இவர்கள் இறுதிவரை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கு எதிராக குரல் கொடுத்த இவர்களது பல்வகை அமைப்புக்களிலும் கூட ஜனநாயக விரோதப் பண்புகளே கோலோச்சி இருந்தது என்பதுவும் வரலாறு இன்று எமக்குக் காட்டி நிற்கும் உண்மைகள். இவர்கள் புலிகளின் பிம்பங்களை சிதைப்பதற்காக அவர்களிக்கு எதிராக பல்வேறு பிம்பங்களை சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த பிம்பங்களின் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான முகத்திலறையும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து இன்று அந்த பிம்பங்களும் ஒவ்வொன்றாகச் சிதைவடையும் போது எமது அறிவு ஜீவிகளின் ஒரு 3௦ வருட கால ஏமாற்று வேலைகளும் பித்தலாட்டங்களும் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தோழர் சபாலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்படுள்ள இந்த அஞ்சலி மலரில் சபாலிங்கம் குறித்ததான எந்த விபரங்களோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறுகளோ இதில் இணைக்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிப்பதினை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்மலர் வெளிவந்து இன்று 20 வருடங்களாகின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் சோகமும்தான் எஞ்சுகின்றது. இந்த தொகுப்பில் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்த தி.உமா காந்தன், திருமாவளவன், சி.புஷ்பராஜா, செ.கணேசலிங்கன் போன்றோர் இன்று உயிருடன் இல்லை. தோழர் அ.ஜ.கான் மிக அண்மையில்தான் தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்து, எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தார். இதில் எம்மை அதிக துயரத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தும் விடயம், அன்று இந்த இதழில் தமது படைப்புக்கள் மூலம் அதிகாரத்திற்கு எதிராகவும், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றிட்கெதிராகவும் தமது உரத்த குரல்களை பதிவு செய்த பலரும், இன்று இலங்கை பேரினவாத சிங்கள அரசின் ஆதரவாளர்களாக மாறி இலங்கை அரசின் அராஜகங்களையும் படுகொலைகளை நியாயப்படுத்தும் மனிதர்களாக மாறியுள்ளமைதான். இவர்கள் இன்றும் சிங்கள பேரினவாத அரசு ஈழப்போரின் இறுதியில் நிகழ்த்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை இல்லை என்று மறுதலிப்பவர்களாகவும், அந்த அரசின் அனைத்து வகை செயற்பாடுகளிற்கும் ஆதரவளிப்பவர்களாகவும் மாறியுள்ளமை உண்மையில் எம்மை திகைப்பில் ஆழ்த்தும் விடயங்களாகும்.

இதற்குமப்பால் இவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிதேனும் மதிப்பளிக்காதவர்களாக, ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் குறித்து எந்தவித அக்கறையுமற்றவர்களாக, தம் மீதான சிறு அளவு விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களாக, மற்றவர்களின் மீது வசை பாடுபவர்களாக, அந்த வசைகளை பாடுவதற்காக எந்த எல்லைகளையும் மீறுபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருவது எமக்கு தொடர்ந்தும் வேதனையளிக்கும் விடயங்களாகும். இவர்களது இன்றைய இத்தகைய செயல்கள் இவர்களது அன்றைய செயற்பாடுகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. இவையாவும் இன்று எம்மை இவர்களது அன்றைய எழுத்தக்களை மீண்டும் ஒரு மறுவாசிப்பிற்கு உட்படுத்தப் பட வேண்டிய அவசியத்தினை எம்மிடம் வலியுறுதி நிற்கின்றது. இதற்குமப்பால் இவர்களில் சிலர் இன்று புலி ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக மாறியிருப்பதுவும் கூட வரலாற்றின் ஒரு முரண்நகையே.

முடிவாக, ‘தோற்றுத்தான் போவோமா…’ என்று அறைகூவல் இட்டு பல தசாப்த காலங்களாக அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த இவர்கள், இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம்மளவில் தாமே தோற்றுப் போயிருந்தது எமது வரலாற்றின் ஒரு துயர சம்பவமே.

தோல்விகளின் வரலாறுகளையே தொடர்ந்தும் எழுதுவதுதான் எமது தலையெழுத்தா என்ன ???

ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் – கனடா புதிய திட்டம் !

கனடா நாட்டில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் கூறும்போது,

புகையிலை பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.

சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்க செல்லும் இளைஞர், சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளி விட்டு செல்கிறார். இது தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த எச்சரிக்கை பற்றிய புதிய மாற்றத்திற்கான ஆலோசனை காலம் இன்றில் இருந்து தொடங்க இருக்கிறது. வருகிற 2023ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இருந்து புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது.

அந்த சிகரெட்டுகளின் மீது பதிக்கப்படும் சரியான வாசகம் மாற்றப்படலாம் என கூறியுள்ள பென்னட் தற்போது, ஒவ்வொரு முறை இழுக்கும்போதும் விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகம் ஒப்புதலுக்காக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதனால் உலக அளவில், ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்கிறது மலேசிய அரசாங்கம் !

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது.

2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது.

அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

மரண தண்டனைக்கு பதிலாக என்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும் என கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முன்னுரிமையைக் காட்டுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை கட்டாயமாக இருக்கும் குற்றங்களுக்கு, நீதிபதியின் விருப்பப்படி மரண தண்டனை வழங்கக்கூடிய பல குற்றங்களும் உள்ளன.

மாற்றங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும், மேலும் வான் ஜுனைடி ஒரு காலக்கெடுவை வழங்காமல் சிறிது நேரம் எடுக்கும் என கூறினார். இந்த செயல்முறை மக்கள் கற்பனை செய்வது போல் எளிதானது அல்ல என்று அவர் மேலும் கூறினார்.

அறிவிப்பை வரவேற்கும் அதே வேளையில், பிரச்சாரகர்களும் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். ‘கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதாக மலேசியாவின் பொது அறிவிப்பு ஒரு முக்கியமான முன்னோக்கிய படியாகும்’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் பில் ராபர்ட்சன் கூறினார்.

ஆனால் அனைவரும் உற்சாகப்படுத்தத் தொடங்கும் முன், இந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த மலேசியா உண்மையான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றுவதை நாம் பார்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து வந்த மலேசிய அரசாங்கங்கள் மனித உரிமைகள் குறித்து அதிகம் வாக்குறுதி அளித்தாலும் இறுதியில் மிகக் குறைவாகவே வழங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவில் மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது. இந்நிலையில், கட்டாய மரண தண்டனை அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையிடம் ரஷ்யா விதித்துள்ள முக்கிய நிபந்தனை !

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய அரச தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான Tass செய்தி நிறுவனம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபாய

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கொண்டிருக்கும் நாட்டைப் பற்றிய தவறான தகவல்களை திருத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை, மீட்சியடைந்தாலும் நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரம் மற்றும் பெருமளவிலான வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒரு முக்கியமான துறையாக இருப்பதால், அதை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என கூறினார்.

அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கொண்டிருக்கும் நாட்டைப் பற்றிய தவறான தகவல்களை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 22 வயது பெண்ணின் தந்தை – தொடர் கதையாகும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் !

திருகோணமலை மாவட்டத்தில் நாமல் வத்த பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் குறித்த நபரை முன்னிறுத்திய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் குடும்ப தகராறு காரணமாக மது போதையில் மனைவியை தாக்கிய நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பக்கத்து வீட்டு 17 வயதுடைய சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் மேற்கொண்டார் என  ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணின் தந்தை எனவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

மனைவியை கொலை செய்துவிட்டு 11 வயது பிள்ளையையும் கொலை செய்ய முயன்ற தந்தை !

தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது.
இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸர், சந்தேகநபர் தனது 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்த 13 வயது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.
சந்தேக நபர் பின்னர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்த தந்தையும் பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் திரிபோஷா உற்பத்தி – உதவிக்கரம் நீட்டும் WFP !

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரப்பியாக திரிபோஷா வழங்கப்படுகிறது.

யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு ஆதரவாக நடைபயண பேரணி !

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது.

ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணம்! - GTN

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.