13

13

“நீங்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களையே வீசுவோம்.”- சிங்கள பேரினவாதிகளுக்கு செயலால் அடி கொடுத்த வைத்தியர் ஷாபி !

ஏப்ரல்21 சஹ்ரான் குழுவினரின் தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று ஷாபி ஷிஹாப்தீன். சஹ்ரான் தாக்குதலை அடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லீம்கள் மீதான வன்முறைகளும் – அடக்குமுறைகளும் அரங்கேறின.

வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவாரா? வெளிவந்த  தகவல் - ஐபிசி தமிழ்

இந்த நாட்களில் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான திவயின பத்திரிகை “வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் சிங்கள தாய்மாரை இலக்கு வைத்து கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.சுமார் 4000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2019 23 திகதி ” என மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு காட்டுத்தீ போல இலங்கையில் – குறிப்பாக தென்னிலங்கையில் எரிந்து கொண்டிருந்த நிலையில் ஊடகங்களும் – தீவிர சிங்கள அரசியல் கட்சிகளும் இதனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொண்டன.

 

பௌத்த பிக்குகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரிதான விசாரணைகள் எதுவுமற்ற நிலையில் உடனடியாக வைத்தியர் ஷாபியை  கைது செய்ததது காவல்துறை. வெறும் வதந்திகளை வைத்து மட்டுமே அந்த ஷாபி  மீதான குற்றச்சாட்டுக்கள் அரங்கேறின. ஷாபி ஷிஹாப்தீன் தீவிரவாத கொள்கைகளை உடைய முஸ்லீம் குழுக்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கிடையில் ஷாபி ஷிஹாப்தீனின் வீட்டின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் அவருடைய குடும்பத்தினரும் மானபங்கப்படுத்தப்பட்டிருந்தனர். இதனை வைத்து மிகப்பெரிய அரசியல் அரங்கேறிக்ககொண்டிருந்ததது. 2019 – மே – 24 பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானார் ஷாபி. தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும் ஷாபியிடம் சிகிச்சை பெற்ற பல சிங்கள பெண்கள் கருத்தரித்ததுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஷாபி நிரபராதி எ்னபதை வெளிப்படுத்தின. தொடர்ந்து ஷாபி விடுதலையானார்.

கைது தவறானது என்ற முடிவுக்கு வந்ததுடன் பெருமளவிலான பெண்களுக்கு தெரியாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்தியர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் ஷாபி குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

அதன்படி, அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டது.

சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதன்படி, வைத்தியர் ஷாஃபிக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.

வைத்தியர் ஷாபி பணி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குரிய, நிலுவை வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளாக 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதத்தை (2,675,816.48) வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கான காசோலையை வைத்தியர் ஷாபி பெற்றுக்கொண்டதுடன், நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார்.

Dr-Shafi-Shihabdeen-Returns-His-Salary-Arreary-to-Purchase-Medicines

தற்போது நாட்டில் கடும் நெருக்கடியில் உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக தமது சம்பள நிலுவையை சேர்த்துக்கொள்ளுமாறு கோரி வழங்கியுள்ளார்.

 

உண்மையிலலேயே இன்று வரை ஷாபி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டைமுன்வைத்த திவயின பத்திரிகை நிறுவனமோ, அல்லது வதந்திகளை மட்டுமே வைத்து ஷாபியை கைது செய்த குருணாகல் பொலிஸ் பிரிவோ அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. வைத்தியர் ஷாபி மேற்கொண்ட மருத்துவப்பணி குருணாகல் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு அவப்பெயரை சந்தித்த ஷாபி மீதும் அவருடைய குடும்பத்தனர் மீதும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மீதும் மிக இலகுவாக குற்றஞ்சுமத்தி ஒரு மனிதரின் சமூக அந்தஸ்தை கிழித்தெறிந்ததது இந்த சிங்கள பேரினவாதம்.

 

ஆனால் இவை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வைத்தியர்ஷாபி எந்த வைத்தியசாலை நிர்வாகத்தால் குற்றவாளியாக்கப்பட்டாரோ – அவமானப்படுத்தப்பட்டாரோ அதற்கே தன்னுடைய ஊதியப்பணமான 2.6மில்லியன் ரூபாவை வழங்கி இனவாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

2ம் உலகப்போர் முடிந்ததை தொடர்ந்து ஜேர்மனி கிழக்கு ஜேர்மனி – மேற்கு ஜேர்மனி என இரண்டாக பிளவுபட்டது. அது வரை ஒற்றுமையுடள் வாழ்ந்த மக்கள் ரஷ்ய சார்பு – அமெரிக்க சார்பு என இருகூறாக்கப்பட்டனர். இதனை நினைவுபடுத்த பேர்ளினில் கிழக்கு – மேற்கு ஜேர்மனியை பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பப்பட்டது. ஒரு பகுதி மக்கள் இன்னொரு பகுதி மக்கள் மீது தமது வெறுப்பை காட்ட குப்பைகளை கொண்டு சென்று மதிலின் மறுபக்கமாக வீசிக்கொண்டேயிருந்தனர். எனினும் மற்ற பகுதி மக்கள் குப்பைகளை வீசாது பழங்களையும் – நறுமணபபொருட்களையும் கொண்டு போய் வீசினார்களாம்.

நமக்கு அவர்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களை வீசுவோம் என பெரிய விடயத்தை சிங்கள பேரினவாதிகளுக்கு  தனது செயல் மூலம் ஷாபி வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

 

நான் நேசிக்கும் இலங்கைக்காக இந்த கண்டுபிடிப்பு – மின்சார பேட்டரி முச்சக்கர வண்டியை உருவாக்கிய ஜேர்மனிய சுற்றுலாபயணி !

ஜேர்மனியில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்த வெளிநாட்டவர் புதுவகையான முச்சக்கர வண்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். குறித்த நபர் மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளார்.

ஜேர்மன் வடிவமைப்பாளரான ரிக்கோ, கண்டியில் உள்ள குண்டசாலை பொலிஸ் குடியிருப்பு வளாகத்தில் வாடகை அடிப்படையில் தங்கியுள்ளார்.

அவர் கண்டுபிடித்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோ மீற்றர் தூரம் வரை முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியும். அதன் பின்னர் மின்சாரம் உள்ள இடத்தில் மீண்டும் சார்ஜ் செய்து பயணிக்க முடியும் என அதனை கண்டுபிடித்த ஜேர்மனி நாட்டவர் ரிகோ தெரிவித்துள்ளார்.

அவர் தனது 18வது வயதில் இயந்திர தொழில்நுட்ப வல்லுனராகவும், பந்தய கார் மெக்கானிக்காகவும், செயற்பட்டுள்ளார். அதன் பின்னர் ரேஸ் கார் பிரிவின் பொறியாளராகவும், formula மற்றும் GT கார்களில் தொழில்துறை பொறியாளராகவும் சுமார் 25 வருட அனுபவத்துடன் தொழில்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

இலங்கை மக்களுக்காக ஜேர்மனிய சுற்றுலா பயணிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்பதை தான் பார்த்ததாகவும், முச்சக்கர வண்டிகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், நச்சு வாயுக்கள் சுற்றுச்சூழலில் பரவுவதை தடுக்க முடியும் என ரிகோ தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே தான் நேசிக்கும் இலங்கைக்கு உதவ முடிந்ததமையானது தனது வாழ்க்கையில் தான் பெற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் இந்த புதிய கண்டுபிடிப்பை மேலும் மேம்பட்ட நிலையில் மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில் கப்பல் போக்குவரத்துக்கு சாதகமான பதில் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் இன்று(13) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மக்களுக்கு வழங்கிவிட்டோம்.”- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஜீ.எல்.பீரிஸ் !

எமது மக்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைகள் பேரவையுடனும் நெருங்கிய ஈடுபாட்டை இலங்கை தொடர்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்விலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

முழுமையான உரையில் அவர் தெரிவித்ததாவது,

எமது முன்னேற்றம் மற்றும் சவால்களை திறந்த பரிமாற்றத்தில் இலங்கை தொடர்ந்தும் இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய உறுப்புக்களுடன பகிர்ந்துகொண்டுள்ளது.

இந்த வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் திறந்த மனப்பான்மையிலேயே, தற்போதைய சபை அமர்வில் நான் இந்த உரையை ஆற்றுகிறேன்.

அண்மைய வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. தொற்றுநோய் உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளால் இந்த நிலைமை மோசமாகிவிட்டாலும், போராட்டங்களின் கவனம் பொருளாதார நிவாரணம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை உள்ளடக்கியது.

இந்தச் சவால்களை அங்கீகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய முறையில் முன்னோக்கிச் செல்வதில், நமது மக்களின் அனைத்துப் பிரிவுகளின், குறிப்பாக, இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.

எதிர்காலத்திற்கான நிலையான அடித்தளமாக, பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு ஒருமித்த அணுகுமுறையை ஜனாதிபதியும் பிரதமரும் கோரியுள்ளனர்.

புதிய பிரதமரின் நியமனம் மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையின் நியமனம் ஆகியவற்றுடன் அரசியல் மாற்றங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் தேவை, பாராளுமன்றம், சுயாதீன நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களின் மீதான சரிபார்ப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றில் உள்ள அடிப்படை ஜனநாயக விழுமியங்களை ஒருங்கிணைப்பதற்காக, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

இந்த சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியலமைப்புக் கட்டமைப்பிற்குள் மற்றும் உரிய நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுவதை நாம் கூட்டாக உறுதி செய்ய வேண்டும். மாற்றத்தின் செயன்முறையானது, வலுப்படுத்த விரும்பப்படும் ஜனநாயக அமைப்புக்களை அழிக்கக்கூடாது.

கருத்து வேறுபாடுகள் அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அண்மைய இடையூறுகளின் போது, சட்டம் மற்றும் பொது ஒழுங்கைப் பேணுதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகிக்க அனுமதிக்கும் ஒரே நோக்கத்திற்காக வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

மே 9ஆந் திகதி நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பாக முழு அளவிலான விசாரணைகள், சட்டமா அதிபரின் முன்மாதிரி மற்றும் நேரடியான நீதித்துறை மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.

நாடளாவிய ரீதியில், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலரின் மரணம் மற்றும் பெருமளவிலான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமையையும் நாங்கள் தடையின்றி கண்டிக்கின்றோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொருளாதாரத்தின் முக்கிய அம்சத்தில், நிலைமையை உறுதிப்படுத்தவும், மக்களுக்கு அத்தியாவசியமானவற்றை வழங்கவும், சர்வதேச நாணய நிதிய ஆதரவுத் திட்டத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்குகின்றோம்.

முன்னோக்கிச் செல்வதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் உரையாடுகின்றோம். நமது பொருளாதாரத்தை மீண்டும் நிலையான அபிவிருத்திப் பாதையில் வைப்பதற்கும், உணவு, உரம், எரிசக்தி மற்றும் மருந்துகள் போன்ற தேவைகளை வழங்குவதற்கும் ஒரு ஒத்திசைவான கட்டமைப்பை நாங்கள் ஒன்றிணைத்து வருகின்றோம்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்கால சீர்திருத்த நடவடிக்கைகள் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, இந்த விளைவுகளைத் தணிப்பதற்கான இலக்கு சார்ந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகள் பிரிக்க முடியாதவை, ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை என்பதை ஒரு முக்கிய நம்பிக்கையாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 49வது அமர்வு உட்பட, இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கடந்த ஆண்டுகளில் நாங்கள் சபையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

இன்று, நாம் ஒரு பரந்த சமூக சூழலில் குறைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க முற்படுகையில், உள்நாட்டு செயன்முறைகள் மூலம் மோதலுக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பில் மேலும் உறுதியான முன்னேற்றத்தை நிரூபிப்பது கட்டாயமானதும், சவாலானதுமாகும். இந்த சபையுடன் செயலில் ஈடுபடுவதன் மூலம் அதைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம்.

சமீபத்திய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், சில முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நான் முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன்.

கடந்த கூட்டத்தின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்படும் என மனித உரிமைப் பேரவையில் நான் உறுதியளித்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, அது நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவு, தற்போதுள்ள சட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தையும், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதோடு, இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரங்களுக்கான காரணத்தை மேலும் அதிகரிக்கும்.

இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு நடைமுறையில் தடை விதிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய நடைமுறையைப் பின்பற்றுமாறும், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறும் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சபையின் கடைசி அமர்வுக்குப் பின்னர், 2022 மார்ச் முதல் ஜூன் வரை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை இல. 1 இன் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் மீளாய்வு செய்யப்படுகின்றது. தற்போது, 318 தனிநபர்கள் மற்றும் 04 நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் பயிற்சியாகும்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அதன் ஆணையைத் தொடர்ந்தது.

நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஐ.நா. வின் நிலையான அபிவிருத்தி அறிக்கை 2021 இலங்கையை 87வது இடத்தில் வைத்துள்ளதுடன், (இலங்கையின் உலகளாவிய தரவரிசை 165 நாடுகளில் 7 இடங்களால் அதிகரித்துள்ளது) நாட்டிற்கான ஒட்டுமொத்த தரவரிசை 68.1 ஆக வழங்கப்பட்டுள்ளது, இது பிராந்திய சராசரியை விட அதிகமாகும்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், அதன் சரிபார்ப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட 83% க்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளது.

இழப்பீடுகளுக்கான அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆண்டுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்காக, அதன் ஆரம்ப ஒதுக்கீடான ரூபா. 759 மில்லியனுக்கும் மேலதிகமாக, ரூபா. 53 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92% க்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,090 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றங்களுக்கு பல குற்றப்பத்திரிகைகளை அனுப்பியுள்ளதோடு, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது.

மனித உரிமைகள் ஆணையத்தின் 46/1 தீர்மானத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்புற சாட்சியங்கள் சேகரிப்புப் பொறிமுறையை இலங்கை நிராகரிப்பதனை கடந்த காலத்தில் நான் தெளிவுபடுத்தினேன்.

இந்த பொறிமுறையானது துருவப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மட்டுமே உதவும் அதே வேளை, இந்த சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் வளங்களில் பயனற்ற மற்றும் உதவியற்ற வீண் நிலையை ஏற்படுத்தும் என்ற எமது நம்பிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

முடிவில், இலங்கையின் சவாலான சமூக மற்றும் பொருளாதார நிலைமை குறித்து இந்த சபையின் புரிதலை நாங்கள் நாடுகின்றோம். எமக்கு முன்னால் உள்ள பல பணிகளில் ஈடுபடவும், சட்டபூர்வமான கடமைகளை மதிக்கவும் நாங்கள் உறுதியளிக்கின்றோம்.

இலங்கையானது பலதரப்புக் கட்டமைப்பில் பங்குபற்றுவதுடன், எமது மக்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைகள் பேரவையுடனும் நெருங்கிய ஈடுபாட்டை இலங்கை தொடர்கின்றது.

இன்று நாம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையும், நமது இளைஞர்களின் குரல்களும், இந்த சவால்களை நாம் பணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உடனடியாக எமக்கு நினைவூட்டுகின்றன.

சவால்களை அதிகமாகவோ அல்லது ஒடுக்கப்படாமலோ அங்கீகரிப்பதே எமது அணுகுமுறையாகும். ஒரு தெளிவான நோக்கத்துடன், அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த தெளிவு மற்றும், கடந்த காலத்தில் இந்த தேசத்திற்கு சிறப்பாக சேவையாற்றிய எமது மக்களின் மீள்தன்மையின் மீதான நம்பிக்கையுடன், படிப்படியாக, ஒரு சிக்கலான பயணத்தைத் தொடங்குகின்றோம்.

ஏராளமான அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சமூகத்தின் நீடித்த நல்லெண்ணம் மற்றும் ஆதரவால் நாங்கள் பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதுடன், தொடர்ந்தும் வெளிப்படையான ஈடுபாட்டை எதிர்பார்க்கின்றோம்“ என்று தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு பின்வந்த வியட்னாம், பங்களாதேஷ் கூட உலகத்துடன் இணைந்து விட்டன. ஆனால் நாம் ..? – ஹர்ஷ டி சில்வா விசனம் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவது எளிதான விடயம் அல்ல”  என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாளை அல்லது நாளை மறுதினம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகின்றார்கள். ஆனால் ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும்.

கடன் பெறுவதென்றால் சர்வதேச நாணய சபை அனுமதி வழங்க வேண்டும். அதைச் செய்ய நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. நிதி நிர்வாகத்தை மாற்ற வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடன் மறுசீரமைப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது எளிதானது அல்ல.

முன்னைய அரச தலைவர்களின் நடவடிக்கைகள் காரணமாகவும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அவர்கள் தவறான முடிவுகளை எடுத்தார்கள் அதுவே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு காரணம்.

எங்களுக்குப் பின் வந்த பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் உலகத்துடன் இணைந்து ஏற்றுமதி செய்து முன்னேறிய போது நாம் என்ன செய்தோம் ?

மத்திய கிழக்கு நாடுகள் கூட இலங்கைக்கு உதவ தயாரில்லை. தற்போதைய சூழ்நிலையில் கூட சவுதிஅரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கைக்கு உதவிவழங்க தயாரில்லை.

நாம் நம் நாட்டைச் சுற்றிச் சுவர்களைக் கட்டினோம், வரிகளை நிறைய உயர்த்தினோம், உலகில் சேர வேண்டிய சில வாய்ப்புகளை இழந்து உலகை விட்டு வெளியேறினோம். அனைத்து நாடுகளுடனும் மோதிக் கொண்டிருக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் பணம் பெற முடியாது.

கடன் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அநேகமாக அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற முடியாது. பணத்தைப் பெறுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் தேவை. அதைச் செய்ய நிறைய வேலைகள் தேவைப்படும்.

அதாவது நிதி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எளிமையாகச் சொன்னால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் கடன்களை மறுசீரமைக்கும் ஒரு நேர்மறையான திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அது எளிதானது அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி – மூடப்பட்ட 80வீதமான சிற்றூண்டிச்சாலைகள் !

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி தொடர்பில் சர்ச்சை கருத்து வெளியிட்ட இ.மி.சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இவர் முன்னதாக கூறியிருந்தார்.

இருப்பினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் நேற்றைய தினம் தான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெர்டினான்டே மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் இன்று இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் சைவ மாநாடு ஒரு பார்வை

ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.

தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.

இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.

இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.

ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.

இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.

இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.

இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.

பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.