21

21

“இலங்கைக்குள் ரத்த ஆறு ஓடும் : ஐ.நாவின் அமைதிப்படை வரவழைக்கப்படும்.” எச்சரிக்கிறார் விமல் வீரவங்ச!

நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார்.

அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

மே 9 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று, ஜுலை 9 ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இன்று நேரடியாக ஜனாதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், அவர் பக்கத்தில் பல கட்சிகள் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த ஏனையக் கட்சிகள் என நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இணைந்து செயற்பட்டிருக்கும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளமையினால், அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமொன்று இதன் ஊடாக ஒருபோதும் அமையாது. இதனால் மக்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படும் நிலைமையே காணப்படுகிறது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்தின் பிரதிபலனாகவே இன்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகள் இனிமேல் ஏற்படாது என்று கருதியே 134 பேர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவர்களுக்கு நாடு குறித்து அக்கறையில்லை. தங்களின் பாதுகாப்பு மட்டுமே முக்கியமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமைந்தால் மட்டுமே இது இரண்டையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் இந்த நிலைமை இன்னமும் மோசமடையலாம். நாட்டில் இரத்த ஆறு ஒட வேண்டும் என்றுதான் சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அப்படி நடந்தால், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை இலங்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. அல்லாவிட்டால் இந்தியாவின் அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இறுதியில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை எதிர்ப்பவர்கள், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு வாக்களித்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

இதனுடன் இலங்கை இராஜ்ஜியத்தின் பயணமும் முடிவுறும். இந்த அச்சத்தினால்தான் நாம் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்குமாறு கோரினோம்.- என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து 5 வாக்குகள் – பகிரங்கப்படுத்தினார் ஹரின் பெர்ணான்டோ!

முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்காக பிரதான எதிர்க்கட்சிக்கு புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். அதனால் எதிர்க்கட்சி தலைவர் நாடு தொடர்பில் தீர்மானிப்பாரா..? அல்லது எதிர்கால தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பாரா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரசிங்கவின் தைரியத்தில் எழுதப்பட்டதே தற்போது இடம்பெற்றிருக்கின்றது. என்றாலும் இந்த விடயம் பெரும் சவாலுக்கு உரியதாகும். இலங்கை மக்களுக்கு இதன்மூலம் பெரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நினைக்கின்றோம். முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக முன்னெடுத்துச் செல்லவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்போது எங்களுக்கு பதவிகள் அவசியமில்லை. சரியாக இதனை செய்வார்கள் என்று நினைக்கின்றோம்.

இதற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டோரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம். தற்போது அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். அவர் ஊடாக தேவையானவற்றை செய்யலாம் என்று நம்புகின்றோம். சர்வகட்சி அரசாங்க அமைப்பதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். அதற்காகவே அவர் பிரதான எதிர்க்கட்சி உட்டபட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுததார்.

அதனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாடு தொடர்பில் சிந்தித்து செயற்பாடுவாரா அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல் தொடர்பில் செயற்படுவாரா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அத்துடன் இந்த தேரதலில் ஐக்கிய மக்கள் சக்தி 14உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் 4அல்லது5 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம் என தெரிவித்தார்.

…….

கடந்த காலங்களிலும் 21 ஆம் திருத்தம் தொடர்பான பிரேரணை, கொழும்பு ஃபோர்ட் சிட்டி தொடர்பான பிரேரணைகள் கொண்டு வரப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து ராஜபக்ஷ அரசின் முடிவுகளுக்கு ஏற்றாற் போல வாக்களித்தனர். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இம்முறையும் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனால் தமிழர் உரிமை , கோரிக்கை , ஜனநாயகம் என்றெல்லாம் இரவோடு இரவாக டலஸ் அழகப்பெரும குழுவினருடன் பேசிமுடித்துவிட்டு டலசுக்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு ஒரு முடிவை அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து 5 பேர் வரை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பதாக ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளதானது தமிழர் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டலஸ் அழகப்பெருமவுக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதில் எம்.ஏ. சுமந்திரனுடைய பங்களிப்பு அதிகமாக காணப்பட்ட நிலையில் கட்சிக்குள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இழுபறி காணப்பட்டதை நேற்றைய தினம் எம்.ஏ.சுமந்திரனின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த பதிவுகள் தெளிவாக காட்டின. “நான் முதுகெலும்பு உள்ளவன். ஒரு முடிவை சரியாக எடுப்பேன் . உறுதியான நிற்பேன்” என்பது போல அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வியை விட ஆக கவலையான உண்மையை இந்த ஜனாதிபதி தெரிவு க்கான தேர்தல் தெரியப்படுத்தியுள்ளது.

அதாவது;

இந்த தமிழ்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் இம்மியளவும் ஒற்றுமை இல்லை. கூட்டாக இணைந்து ஒரு முடிவை கூட இவர்களால் எடுக்க முடியவில்லை.

இங்கு பரிதாபத்துக்குறியவர்கள் தமிழ் மக்களே.

போலித்தேசியம் பேசி – கிடைக்காத தனிநாடு பற்றி பேசிக்கொண்டிருக்கும் – தங்குளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத  இந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகளினை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குள்ளானவர்கள் தான்.

“இன்று அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒரு திருடனை நியமித்துள்ளார்கள்.” – ரஞ்சித் மத்துமபண்டார காட்டம் !

புதிய ஜனாதிபதிக்கான நேற்றைய வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சிகளில் இருந்தோ ஒரு உறுப்பினர்கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று மக்களின் நிலைப்பாடு தானா வெளிப்பட்டது என கேட்க விரும்புகிறேன்? 2019 மற்றும் 2020 இல் இருந்த நிலைப்பாட்டிலிருந்து மக்கள் முற்றாக மாறிவிட்டார்கள். 2020 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, குறித்த உறுப்பினர்களினாலேயே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருடர்களை வெளியே விரட்ட வேண்டும் என கோரியே மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இன்று அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளார்கள். இவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கவே முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஜனாதிபதி தெரிவின்போது, எமது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
ஆனால், அப்படி ஒரு உறுப்பினர்கூட அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதை நான் இவ்வேளையில் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். மேலும், எதிர்க்கட்சியிலுள்ள எந்தவொரு கட்சியினரும் அவருக்கு வாக்களிக்கவில்லை.
நேற்றைய வாக்கெடுப்பின் ஊடாக எமது பலம் மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். 64 ஆக இருந்த எமது பலம் இன்று 82 ஆக உயர்வடைந்துள்ளது. 20 ஆவது திருத்தத்திற்கு ஆளும் தரப்பில் 156 வாக்குகள் வழங்கப்பட்டன. ஆனால், நேற்றைய வாக்கெடுப்பின்போது 134 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதிலிருந்து அவர்களின் வீழ்ச்சியும், எமக்கான ஆதரவும் அதிகரித்துள்ளமையை புரிந்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும், வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க நாம் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் செய்யத் தயாராகவே உள்ளோம். சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், அது எவ்வாறு பயணிக்கப்போகிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். எந்தத் தீர்மானமாக இருந்தாலும் கட்சியின் மத்தியக்குழுக் கூடியே முடிவுகளை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை அடுத்து ஐ.நா தொடங்கி பிரிட்டன் வரை இலங்கைக்கு உதவ முன்வருவதாக அறிவிப்பு !

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதை தொடர்ந்து அடுத்தடுத்து பல மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆதரவும் வாழ்த்துக்களும் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் இலங்கையின் புதிய ஜனாதிபதிபதியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என அறிவித்தார்.

 

இந்த நிலையில் அடுத்த அறிவிப்பாக ஐ.நா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவும் தன்னுடைய ஆதரவை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அத்துடன் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

…….

சில தினங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் முன்னாள் இராஜதந்திரி பீட்டர் ஹீப் ” 150 வருடங்கள் அடிமைப்படுத்திவிட்டு இன்று ஆபத்தில் உள்ள இலங்கைக்கு பிரித்தானியா உதவாமல் உள்ளது.”  என தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்த போது அமைதிகாத்த பிரித்தானியா ரணில் பதவியேற்றதும் தன்னுடைய மௌனத்தை கலைத்துள்ளது.

https://www.facebook.com/102306228271669/posts/pfbid0a1DdwpZcgeB4juBF5XAivdx1tct6RhvkYXSmvVeQQVy3BQc6gQKhqS93izmuPfFPl/?app=fbl

முன்னதாக நேற்றைய தினம் சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கான கடன் திட்டங்கள் குறித்து பேச தயார் என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் பழங்குடியின பெண் – யார் இந்த திரௌபதி முர்மு ..?

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யார் இவர்..?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் திரௌபதி முர்மு. கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு கோவிந்துக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றிய இவர், அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.

பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் திரௌபதி முர்மு பதவி வகித்து இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் திரௌபதி முர்மு. வரும் 25 ஆம் தேதி இவர் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நோ டீல் கமவை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு !

ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் தெரிவாகியிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கி வைத்திருந்தார்.

ராஜபக்ஷ அரசை பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றார் என கூறி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் நோ டீல் கம எனும் தொனியில் அலரி மாளிகையின் முன்னால் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை காலமும் நடாத்தி வந்த நோ டீல் கம போராட்டம் முனைப்படையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி அலரிமாளிகைக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருந்த ´நோ டீல் கம´ வை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு அங்குள்ள ஆர்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான இந்த போராட்டங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார வெற்றிக்காக  திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை தொடர்ந்து நோ டீல் கம குழுவினர் மௌனித்துள்ளமையானது ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க உள்ளாரா என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

யாழில் அதிகரிக்கும் ஹெரோயின் ஊசிக்கலாச்சாரம் – அடுத்தடுத்து உயிரிழக்கும் இளைஞர்கள் !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள உயர்தரம் பயிலும் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் பலரிடமும் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதை அண்மைய கால செய்திகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

ஐஸ் போதைப்பொருள்ள பாவித்த இளைஞன் மரணம் என்ற தகவல்கள் இலங்கையின் வேறு எங்கோ நடைபெறுவதாக கேள்விப்பட்ட நிலை மாறி  இப்போது அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பல இளைஞர்கள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

30வருட யுத்தத்தை முடித்தோம் என மார்தட்டும் இந்த இராணுவத்தினதும் – கடற்படையினதும்  கட்டுக்காவல்களையெல்லாம் மீறி ஏதொவொருவகையில் வடக்கு இலங்கையினுள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட வண்ணமே உள்ளன. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் யாழ். பொலிஸார் பெரிதாக சிரத்தை காட்டுவதாக தெரியவில்லை. பாடசாலைகளிலும் மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை சார்ந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பறுவதாக தெரியவில்லை. இந்த நிலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர் சமூகம் வடக்கில் சுயநல மனப்பாங்குடன் செயற்பட ஆரம்பித்து விட்டது போலவே தோன்றுகிறது. அண்மையில் கூட முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண்  மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்படுத்தி பின்பு அவர்களை  பயன்படுத்தி மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார். இது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடு. இந்த நிலையில் இது தொடர்பாக பெரிதாக வடக்கு மாகாண ஆசிரியர் சங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் எங்கே இந்த பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடை செய்ய முயற்சிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியே மீதமாகவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான நகர்ப்புற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவனிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படட்தாக தகவல்கள் வெளியான போது யாழ். சமூக கல்விமான்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து விட்டு  அடங்கிவிட்டனர்.

போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அவர்கள் ஏதேனும் களச்செயற்பாடுகளை மேற்கொண்டதாக எந்த பதிவும் இல்லை. இது யாழ்ப்பாண சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். ஆனால் இன்னமும் எந்த செயற்பாடும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவில்லை என்பதே கவலையான உண்மை.

இந்த நிலையில் கடந்த வாரம் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் நமது தமிழர் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை இன்னுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்புத்துறையில் கடந்த  20ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது இங்கு இன்னமும் வேதனையான விடயம். இளைஞர்கள் குழுவாக இருந்து ஹெரோயின் எடுத்துக்கொள்ளுமளவிற்கு தைரியமான ஒரு சூழல் நமது பகுதிகளில்  உருவாகியுள்ளது இன்னமும் வேதனையளிக்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பாடசாலை ஆசிரியர்களும் தங்களுடைய மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை தொடர்பான முறையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பெற்றோர் தங்களுடைய வீட்டு இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை அவர்களின் காட்டுக்கூச்சலுக்கு அஞ்சாது கண்டிக்க வேண்டியதுடன் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமையான பக்கங்களை புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியில் மட்டுமே கவனம் வந்த யாழ் சமூகமானது இன்று வெளிநாட்டு மோகத்திலும் – சுயநல மனோநிலையிலும்  சிக்குண்டு தனது கல்வி அடைவு மட்டத்தை தொலைந்துவிட்டது. கல்வியின் மீதான யாழ் சமூக மாணவர்களின் – இளைஞர்களின் நாட்டம் குறைவடைந்தது இன்று ஆவா வாள்வெட்டு  போன்ற குழுக்களின் தோற்றத்தையும் – போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பையும் தூண்டியுள்ளது.

யாழ் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் விரைந்து போதைப்பொருள் பாவனையிலிருந்து நமது சமூகத்தை மீட்க – நமது இளைஞர்களை மீட்க இயங்க வேண்டும். நாம் சுதாகரித்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஆரோக்கியமற்ற இளைஞர் தலைமுறை ஒன்று உருவாவதற்கு நாமும் காரணமாகிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நாம் சமூகத்தை திருத்த கூட களமிறங்க  தேவையில்லை. அவரவர் தத்தமது வீடுகளில் உள்ள இளைஞர்களிடம் இது தொடர்பில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது. சிறுதுளி பெருவெள்ளம் போல ஆகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்..!

பாராளுமன்றம் இன்னமும் ராஜபக்ஷக்களின் பிடியிலே உள்ளது – சுமந்திரன் விசனம் !

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது. அதனைக் கலைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம்
வெளிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கின்றேன்.

டலஸுக்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகம் அவர்களுக்கு என்ன நடந்தது
என வே.வி.பியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.