13

13

இலங்கைக்கு பணம் அனுப்பும் தொழிலாளர்களின் விகிதம் 50% ஆக குறைவு !

2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால பகுதியை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு ஒட்டுமொத்த தொழிலாளர்களின் பணம் அனுப்பும் விகிதமானது 50% குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை தொழிலாளர்களின் ஒட்டுமொத்தப் பணம் 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், இவ்வாண்டு 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதேவேளை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜூலை 2022 இல் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 297.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், ஜூன் 2022 இல் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மே மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது.

மாநகர சபையின் அனுமதியின்றி வீட்டு மதிலை கட்டிக்கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ்.மாநகரசபை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் குறுக்கு வீதியில், புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்த வீட்டுக்கான மதில் கட்டுவதற்கான அனுமதியை யாழ் மாநகர சபையில் பெறவில்லையென என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ் மாநகரசபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடந்த போது, ‘உங்கள் கட்சியின் தலைவர் என்பதால் அவர் அனுமதியின்றி மதில் கட்டுவதை அனுமதித்துள்ளீர்களா?’ என கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த், முதல்வர் வி.மணிவண்ணனை பார்த்து கேள்வியெழுப்பினார்.

அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை உடனடியாக இடைநிறுத்துவதுடன், முறைப்படியான அனுமதி பெற்று கட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள் என உத்தியோகத்தர்களிற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

பட்டினி அபாயம் நிறைந்த ஆபிரிக்கா நோக்கி பயணமானது உக்ரைனின் தானியக்கப்பல் !

பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் புறப்பட்டுள்ளது.

உக்ரைன் போரால் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் அவதியுறும் அபாயம் இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் தானிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த எத்தியோப்பாவுக்கு உக்ரைனிலிருந்து கோதுமை எடுத்துச் செல்வதற்காக சரக்குக் கப்பல் ஒன்று முதல்முறையாக அந்த நாட்டை நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் கீழ் அந்தக் கப்பல் உக்ரைனை நோக்கி புறப்பட்டதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மிஷெல் தெரிவித்தார்.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் கண்ணாடி ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.

தமிழருக்கு பிரதமர் பதவியை வழங்கி இனவாதமற்ற நிலையிருப்பதாக சர்வதேசத்துக்கு காட்டுமாறு வலியுறுத்துகிறார் டிலான் பெரேரா !

“புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள்.” என ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவளித்தேன். அதற்கு காரணம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று பலரும் விடுத்த கோரிக்கையே ஆகும். சஜித் பிரேமதாசவே அவரின் பெயரை பரிந்துரைத்திருந்தார். அதற்கு முதல்நாள் வரையில் டலஸ் அழகப்பெருமவுக்கே பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்திருந்தனர். 90 வீதமானவர்கள் அந்தத் தீர்மானித்திலேயே இருந்தனர். இதன்படியே நான் வாக்களித்தேன்.

இதற்கு முன்னர் ஜனாதிபதிகள் பலரின் சிம்மாசன உரைகளை கேட்டுள்ளோம். அவர்கள் சட்டப்பூர்வமாக தெரிவாகிய ஜனாதிபதிகளாகும். ஆனால் அண்மையில் வேறு முறையில் அரசியலமைப்பு ரீதியில் வந்தததாக கூறப்படும் ஜனாதிபதியின் உரையை கேட்டோம். அவர் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்வதேசத்திற்கு சிறந்த செய்தியொன்றை கூற முடியும். அமைச்சரவையை வரையறுத்து பிரதான பதவிகளை மற்றைய இனத்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளலாம்.

சிங்களவர் ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் தமிழர் ஒருவரை பிரதமராக்கலாம். ஏன் முடியாது. அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக முடியுமென்றால் இங்கே தமிழ் பேசும் ஒருவர் பிரதமராகினால் என்ன? முஸ்லிம் ஒருவர் இங்கே சபாநாயராகினால் என்ன? இதன்மூலம் இனவாத மனநிலையில் இருந்து விடுபட்டுள்ளோம் என்று சர்வதேசத்திற்கு கூற முடியுமாக இருக்கும்.

புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள். இதனை செய்து சிறந்த செய்தியை சர்வதேசத்திற்கு காட்டுங்கள். அதனை தொடர்ந்து அனைத்து எம்.பிக்களையும் உள்ளடக்கி துறைசார் மேற்பார்வை குழுக்களை அமையுங்கள் என்றார்.

………………………..

இவருடைய இந்த கருத்தை சமூகவலைத்தளவாசிகள் பலரும் கூட வரவேற்றுவரும் போதும்கூட இனவாதமற்ற மனோநிலைமாற்றம் என்பது புரிதலூடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. ஐ.நா அமர்வு நெருங்கிவரும் நிலையில் சர்வதேசத்தை சமாதானப்படுத்துங்கள் என்ற தொனியில் டிலான் பெரேரா கூறியுள்ள இந்த கருத்து கூட ஒருவித சுயநல மனோநிலைசார்ந்தததே தவிர கொண்டாடக்கூடிய கருத்து அல்ல.

சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு – சர்வதேசத்தை திருப்திப்படுத்த புதிய முகமூடி !

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

இதன் படி, உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

……………………….

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில் இலங்கை மீதான கடுமையான சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என சர்வதேச தரப்பிலிருந்து  எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி நேற்றையதினம் தமிழரோ முஸ்லீமோ பிரதமரானால் பெரும்பான்மை மக்கள் ஏற்க பழக வேண்டும் என அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்ததது கூட ஐ.நாவை சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவினுடைய அடுத்த கட்ட நகர்வு என அரசியல்விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா “ பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை தமிழர், முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் சர்வதேசத்திற்கு சிறந்த செய்தியொன்றை கூற முடியும்.” என நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். மேலும் இதுவரையில் அரசியல்கைதிகள் என யாருமே  இல்லை என சாதித்து வந்த ஆளுந்தரப்பு சார்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக சர்வதேசத்தை திருப்பதிப்படுத்தவும் – மீண்டும் டொலர் வருவாயை கூட்டவும் திடீரென நல்ல சாமியார் வேடத்தை போட ஆரம்பித்துள்ளது ரணில் ராஜபக்ச அரசு. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன என்ன நாடகங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என !

கோட்டகோகாமா செயற்பாட்டாளருடைய வங்கி கணக்குக்கு 5 மில்லியன் ரூபா பணம் வைப்பு !

பிரபல யூடியூபரும், கோட்டகோகாமா செயற்பாட்டாளருமான ரதிந்து சேனாரத்ன என்ற ‘ரட்டா’, தனது கணக்கில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூலம் 5 மில்லியன் ரூபா பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த உரிமை கோரப்படாத பரிவர்த்தனை குறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் ஏற்கனவே முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ரட்டா முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தம்மையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்யும் முயற்சியாகக் கருதுவதால் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை காலத்திலேயே கர்ப்பம் தரிக்கும் மாணவிகள் – கிளிநொச்சியின் அண்மைக்கால போக்கு தொடர்பில் சுகாதார அமைச்சு !

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலைகள் மற்றும் சிறுவயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி மனநல நிபுணர்கள் மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

குறிப்பாக பாடசாலை படிப்பை முடிக்கும் முன், பெண் பிள்ளைகள் ஆண்களுடன் சேர்ந்து வாழும் போக்கு அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் கூறினார்.

இதனால் இம்மாவட்டத்தில் சிறுவயதில் பெண்பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கும் நிலை அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குறைபாடுகளை கண்டறிந்து அவற்றுக்கான விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட குழுவொன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளது.