14

14

சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நாவிடம் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோரே இந்த அறிக்கையை அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரிமைகளை கேட்டு போராடிய பெண்களை அடித்து விரட்டிய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.

இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கப்பட்டது எதற்காக..? – பிரதமர் தினேஷ் குணவர்த்தன விளக்கம் !

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 ‘பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்க முடியாது.
 இதைக் கருத்திற்கொண்டு முதற்கட்டமாகச் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவிற்கு துரோகமிழைத்துவிட்டது இலங்கை.”- ராமதாஸ் குற்றச்சாட்டு !

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அனுமதி அளித்து இந்தியாவிற்கு துரோகம் செய்துள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் .

சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை  துறைமுகத்தை அடைய இருக்கிறது.

இலங்கை துறைமுகத்தில் இக்கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும் இத்து  இந்தியாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என அவர் கூறியுள்ளார் .

இதேவேளை இலங்கை வரும் சீனக்கப்பல் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர , “கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

“மதஸ்தலங்களுக்கு சென்று வழிபடவேனும் அனுமதி தாருங்கள்.”- தாய்லாந்து அரசிடம் கோட்டாபாய கோரிக்கை !

மக்களின் எதிர்ப்பால் மாலைதீவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று தஞ்சம் புகுந்தார். தற்போது தாய்லாந்து சென்று தங்கியுள்ள அவருக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தாய்லாந்து அரசாங்கத்திடம் அங்குள்ள உள்ள மதஸ்தலங்களுக்கு சென்று வழிபட கோட்டாபய ராஜபக்ச அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவர், அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அரசின் அறிவித்தலின் அடிப்படையில் பொலிசார் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தாய்லாந்தில் சுமார் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், நாட்டுக்கு பிரச்சினையான நடத்தைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தாய் நாட்டுக்கு வாருங்கள்.”- கோட்டாபாயவுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு !

விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதிக்கு இலங்கையில் வாழ்வதற்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மகாநாயக்க தேரரைப் பார்க்கச் சென்ற போது, ​​கொட்டப்பிட்டிய ராகுல தேரர், முன்னாள் ஜனாதிபதி குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்து சுதந்திரமாக இருப்பதை சாத்தியமாக்குங்கள் என அவர் கோரிக்கை விடுத்த போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதுவும் கூறவில்லை.

செஞ்­சோலை படுகொலைகள் – 16ஆண்டு நினைவு இன்று !

2006 ஆம் ஆண்டு முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான விமானப்படை தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 16ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு இன்று! – Athavan News

இந்நிலையில்  படுகொலை செய்யப்பட்ட 61 மாண­வி­க­ளின் நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி தூவி அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்காக எமது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில் அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை – வஜிர அபேவர்தன புகழ்ச்சி !

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிராமம் கிராமமாக விநியோகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மீண்டும் வாசிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த வஜிர அபிவர்தன ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிகரான தலைவர் உலகில் இல்லை. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினால் நிச்சயமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடயங்களை ஒவ்வொன்றாக சரி செய்து வருவதாகவும் அதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை ஒவ்வொரு நொடியும் அதிகரித்து வருகின்றது. இன்று ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய பொக்கிஷமாக மாறியுள்ளதாகவும், ஆசியாவில் இலங்கையை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த தேசிய பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி தோல்வி ?

நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைய விரும்பாத நிலையில் சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் கட்சிகளிலிருந்து தனித்தனியாக அரசுடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.