September

September

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் – கட்சி தலைமையிலிருந்தும் இரா.சம்பந்தனை நீக்க முடிவு.? – சுமந்திரன் விளக்கம் !

இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் இரா.சம்பந்தனை விலக்குவதற்காக அவருடன் கலந்துரையாட மத்திய குழு கூட்டத்தில் குழு நியமிக்கப்பட்டதாக வௌியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது விடயங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிசைகளில் மக்கள் வாழும் இந்த நாட்டில் தாமரை கோபுரத்தை பார்த்து சந்தோச பட முடியாது !

நாடு பெரும் பொருளாதாரப் படுகுழியில் வீழ்ந்துள்ள இவ்வேளையில், மக்கள் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தாமரை கோபுரத்தைப் பார்த்து யாரும் மகிழ்ச்சியடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற்று நிர்மாணிக்கப்பட்டதுதான் தாமரைக் கோபுரம்.

இதன் அடிவாரத்தில் உள்ள குடிசைகளில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  இந்த கடனை வரி வடிவில் செலுத்த  வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது !

8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயாரின் இரண்டாவது திருமணம் செய்த கணவரை கைது செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவ, ராவத்தவத்தை, பொல்கொடுவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சமிந்த குமார (44) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி மாலை ஆங்கில வகுப்புக்கு சென்றபோது, ​​உடலில் கடுமையான வலி இருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

அதன்படி, ஆசிரியர் இது குறித்து தாயாரிடம் தெரிவித்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார். பின்னர், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தாய், நோய்க்கான காரணங்களை கேட்டறிந்த போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூட்டை சுமப்பவளுக்கு கூள் காறிக்கு எப்படி திருமணம் ஆகும் என்றெல்லாம் பேசப்பட்ட கிளி ‘அக்காச்சி’ பிராண்டின் தற்போதைய மதிப்பு ஒரு கோடியை ரூபாயை எட்டும்!

ஓகஸ்ட் 29 மற்றும் 20ம் திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியிலும் விற்பனையிலும் கலந்துகொண்ட ‘அக்காச்சி’ பிராண்டின் உரிமையாளர் அனுஜா ராஜ்மோகன், லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற கலந்துரையாடலில் “சின்னச் சின்ன தொழில்களை உருவாக்கும் சக்தியைப் பெறுங்கள், உங்களுக்கும் அயலவர்களுக்கும் தேவையான பொருட்களை செய்கின்ற சிறு உற்பத்தியார்களாக மாறுங்கள்” எனத் தெரிவித்தார். “நான் பட்ட வலிகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது” எனத் தெரிவித்த அவர் “பதின்மப் பருவத்தில் பத்தாம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு மூட்டைகளை சுமந்ததையும் கூழ் விற்றதையும் கிண்டல் பண்ணி எனக்கு திருமணமாகாது குடும்ப வாழ்வு அமையாது என்றெல்லாம் உறவுகள் ஒதுக்கி வைத்தனர்” என்றும் தன்னுடைய வலி மிகுந்த அனுபவங்களை அங்கு வந்திருந்த தொழில்முனைவோரோடு பகிர்ந்து கொண்டார். “அன்று அவர்களின் நையாண்டிகளைச் செவிமடுத்து இருந்திருந்தால் இன்று இந்த ‘அக்காச்சி’ என்ற பிராண்ட் உருவாகியிராது. நான் இந்த மேடையிலும் ஏறியிருக்க முடியாது. ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு இருப்பேன்” என்றும் அனுஜா ராஜ்மோகன் தன்னுடைய இன்றைய நிலையை இட்டு பெருமைப்பட்டுக் கொண்டார். அனைவரது பாராட்டுக்களையும் சபையில் இருந்து பெற்றார்.
ஓகஸ்ட் 29 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுகைத் தொழில் அபிவிருத்தி பிரிவு கச்சேரி மற்றும் மனிதவலு அபிவிருத்தி பிரிவு, கிரிசலிஸ் (Chrysalis) ஆகியன உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சசியும் விற்பனையும் மேற்கொண்டது.இக்கண்காட்சியில் லிற்றில் எய்ட் நிறுவனம் தனது மணவர்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து 15,000 ரூபாய் வரை லாபமீட்டியது. ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் நிறுவனத்திலும் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் அத்துடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இவ்விற்பனையின் மூலம் லிற்றில் எய்ட் 40,000 ரூபாவரை லாபமீட்டியதுடன் பல்வேறு தொழில்முனைவோருக்கும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்வதற்குமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இவ்விரு கண்காட்சியிலும் விற்பனையிலும் பல்வகைப்பட்ட உணவுப் பொருட்கள், தைத்த ஆடைகள், தையல் அலங்காரங்கள், ஆபரணங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் பயனுள்ள வகையில் எதிர்காலத்தில் தங்கள் சந்தை வாய்ப்புகளைத் தூண்டும் நோக்கோடு இக்கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. பல தொழில்முனைவோர் இந்நிகழ்வுகளின் மூலம் பொருட்களுக்கான கட்டளைகளை (ஓடர்) பெற்றதாக தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 20இல் லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற தொழில்முனைவோருக்கான கண்காட்சி கலந்துரையாடலை கிளிநொச்சியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற விவேகானந்தா கல்லூரியின் அதிபர் ஜெயா மாணிக்கவாசகர் திறந்து வைத்தார். லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதை இந்த தொழில்முனைவோருக்கான கண்காட்சி எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர் நாங்கள் கற்பித்து அனுப்புகின்ற மாணவர்களை லிற்றில் எய்ட் இப்பிரதேசத்தின் தொழில்முனைவோரோக்கி அவர்களாலும் முடியும் என்று காட்டியுள்ளது எனத் தெரிவித்தார். லிற்றில் எய்ட் இல் கல்வி பயிலும் மாணவர்கள் கிளிநொச்சி நகரத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோருக்கு உதவும் அலுவலராகவும் அதேசமயம் லிற்றில் எய்ட் நம்பக்கை சபை உறுப்பினராகவும் செயற்படும் எஸ் தேவதாஸ் அவர்கள் ‘தொழில்முனைவோருக்கான களம் கிளிநொச்சி’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். “மூலப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே விற்பனை செய்யப்படுகின்றது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக்கி அவற்றுக்கு வெவ்வேறு வழிகளில் பெறுமதியைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் அங்கு அழுத்தமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு ஏனைய பிரதேசங்களுக்கும் குறிப்பாக தமிழர்கள் பரந்து வாழுகின்ற மேற்கு நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக ஆகமுடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். உள்ளுரில் கிடைக்கின்ற சத்தான உணவுகள் பற்றி நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உரையாற்றுகையில் தொழில் முனைவோருக்கு உள்ள பல்வேறு உதவித் திட்டங்களைப் பற்றியும் சுட்டிக்காட்டி தொழில்முனைவோர் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் தங்கள் தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் மாணவியாக இருந்து அதன் உதவித் தையலாசிரியராக தையல் வீட்டுத் தோட்டம் என்று தொழில்முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் தமிழினி லிற்றில் எய்ட் இன் ஒரு முன்மாதிரியான தொழில்முனைவோர். தான் யாரிலும் எதற்காகவும் தங்கி இருப்பதில்லை என்று குறிப்பிடும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் வீட்டில் இருந்தவாறே தன்னால் தனது தேவைக்கதிகமாக பணத்தை ஈட்ட முடிகிறது என்றும் இதனை ஒவ்வொருவராலும் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார். தமிழினி வீட்டுத் தோட்டத்து ‘வோட்டர் மெலன்’ மிக அருமையான சுவையோடு இருந்ததாகக் குறிப்பிட்ட லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தமிழினி ‘சென்றவாரம் வோட்டர் மெலன்களை விற்று 30,000 சம்பாதித்து இருந்ததாகக் குறிப்பிட்டார். அவர் வீட்டிலேயே தையல் சேவையை வழங்குகிறார். கை வினைப் பொருட்களைத் தயாரிக்கின்றார். கம்பளி ஆடைகளை நெய்கின்றார். அவர் மிகவும் விவேகமான சுறுசுறுப்பான தொழில்முனைவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கண்காட்சியும் கலந்துரையாடலும் லிற்றில் எய்ட் ஆசிரியர்கள் மாணவர்கள் திறம்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
“வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வழங்கள் எதுவும் இல்லாமல் அந்நாடுகள் செல்வந்த நாடுகளாக உள்ளன. ஆனால் இந்நாட்டில் அளவுக்கு மிஞ்சிய வளங்கள் இருந்தும் கவனிப்பார் இல்லாமலே பூத்துக் காய்த்து கனி தரும் மரங்கள் இருந்தும் நாங்கள் வறிய நாடுகளாக இருப்பது வேதனையளிக்கின்றது” என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் குறிப்பிட்டார். ‘தொழில்முனைவோர் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். “பிரித்தானியாவில் ‘அப்பிள்’ உள்ளங்கையளவு பழம். அதிலிருந்து முடிவுப்பொருட்களாக குளிர் பானங்கள், ஏராளமான உணவு வகைகள் (அப்பிள் பை, அப்பிள் ரேன்ஓவர், அப்பிள் சோர்ஸ், அப்பிள் கேக், அப்பிள் ஸ்ரப்பிங்,..) குடிபானங்கள் உருவாக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் எம் நாட்டில் கனியும் அந்தப் பெரிய பிலாப்பழத்தில் நாங்கள் முடிவுப் பொருளாக குறிப்பிடப்படும் படியாக எதையும் செய்வதில்லை. இந்நிலை மாற்றப்பட்ட வேண்டும்” என த ஜெயபாலன் தன்னுரையில் குறிப்பிட்டார்.
“தொழில்முனைவோர் ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் முதகெலும்பானவர்கள். அவர்களே அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் வரவேற்கப்படக் கூடியது. ஏனெனில் இலங்கை மக்கள் மாற்று வழியில் சிந்திக்க வேண்டும். தொழில்முனைவோர் இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இப்போதுள்ள உற்பத்தி முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாடு சுயஉற்பத்தியில் ஈடுபட்டு இறக்குமதியைக் குறைத்து இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்கு தொழில்முனைவோருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி த ஜெயபாலன் தனனுரையை நிறைவு செய்தார்.
லிற்றில் எய்ட் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சில நூறுபேர் கலந்து சிறப்பித்தனர். தொழில்முனைவோரும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தியதோடு விற்பனையிலும் ஈடுபட்டு இருந்தனர்.

“இலங்கை பெற்ற கடன்களை அடைக்க 25 ஆண்டுகள் வரை தேவை.”- புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் !

“நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம்.” என புலம்பெயர் இலங்கையர்களுடனான சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் பேசிய அவர்,

எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடவுள்ளோம். பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோன்று இங்கிலாந்திற்கு உள்ள பிரச்சினைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக் கொள்வார்கள்.

இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளை பேணி வருகிறோம். எங்கள் உறவு நீண்ட காலமாக தொடர்கிறது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணியென எதுவாக இருந்தாலும், நாங்கள் இங்கிலாந்துடனான எமது உறவை தொடர்ந்து பேணவே விரும்புகிறோம். எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும்.

நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம்.

அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இருக்க வேண்டும். வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுவதாகும். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களை கண்காணிப்புக் குழுக்களுக்கு முன்வைத்துள்ளோம்.

பாராளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கிறோம். வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது. கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம் நாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனை தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள்.

இங்கு வாழும் சுமார் 500,000 இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அதைச் செயல்படுத்தி வருகிறது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம்.அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

சானிட்டரி நப்கின்களின் அதிகரித்த விலை – அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவிகள் !

சுகாதாரத் துவாய்கள் (Sanitary napkins) ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்படுவதால், அவற்றுக்கு 42% வரி விதிக்கப்படுவதாகவும், வற் சேர்க்கப்படும் போது, ​​அது சுமார் 45% எனவும் பாராளுமன்ற உறுப்பினர்நாடாளுமன்றில் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் பெண்களின் சுகாதாரம் தொடர்பான அபாயகரமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் சுகாதார துவாய்களுக்கு 42% வரி விதிக்கப்பட்டது. அனைத்து வரிகளையும் சேர்த்தால், அது சுமார் 42% ஆகும். வற் இன்னும் கொஞ்சம் அதிகமாக 15% ஆகும்போது, ​​42உடன் 3ஐ சேர்த்து 45 ஆகிவிடும்.
பாடசாலைகளில் படிக்கும் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், பெண்களின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது ஓர் ஆடம்பரப் பொருளின் வகைக்குள் வந்துள்ளது. எனவே, இதை ஆடம்பர பொருட்கள் பிரிவில் இருந்து நீக்கி, அதன் மீதான வரியை நீக்க பரிந்துரைக்கிறேன். அப்படிச் செய்தால், எமது நாட்டில் உண்மையில் இரண்டு வகைகள்தான் உற்பத்தியாகின்றன. மற்றவை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது மிக முக்கியமானது.

அந்த வரிகள் தொடர்பாக ஏதாவது ஒரு முடிவு எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்றார்.

சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரேமநாத் டோலவத்த, ரோகினி கவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இலங்கையில் சமீபகாலமாக எழுந்துள்ள எரியும் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

“இலங்கையில் சுகாதார அணையாடைகளை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு நாங்கள் ‘PAD-MAN’ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது இலங்கையிலுள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் இது எங்கள் கலாசார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் விளைவாக இலங்கையில் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படவில்லை, ”என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டிய எம்.பி.தொலவத்த, பெண் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான இந்த சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியாததால் அவர்கள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்ப்பது கவலையளிக்கிறது. “இது நான் சமீபத்தில் டெய்லி மிரரில் படித்த ஒரு எரியும் பிரச்சினை” என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் மதச்சண்டை – இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் !

பிரித்தானிய நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே, லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார்.

இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர்.இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில்,

பிரித்தானிய அதிகாரிகளிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்து சென்று உள்ளோம். இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

லீசெஸ்டர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.மத வழிபாட்டு தலத்திற்கு வெளியே கொடி ஒன்றை இழுத்து அவமதிப்பு செய்தது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என லீசெஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை முழங்கியபடி இந்து குழுக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகளும், காணொளியாக வெளிவந்துள்ளன.

இந்த குழுக்கள், லெய்செஸ்டரில் உள்ள முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடி உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.லெய்செஸ்டரில் வன்முறை, ஒழுக்கக்கேடு அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்றவற்றை நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். அமைதி மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

“சக இயக்கங்களிலிருந்தவர்களை பிரபாகரன் கொன்றார் என்பதை புத்தியுள்ளோர் மறக்கமாட்டார்கள்.” – அமைச்சர் டக்லஸ் தேவானந்தா

புலிகள் இயக்கம் சார்ந்ததாக கூறப்படுகின்ற பல குழுக்கள் இருப்பினும் அவை அரசியல் கட்சிகளாக பதிவில் இல்லாத காரணத்தினால் ஏனைய சக இயக்கங்களினது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கொல்லப்பட்டமை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனினால் தான் என்பதை சுய புத்தியுள்ள எவரும் மறந்திருக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மரத்தில் இருந்து விழுந்தவனுக்கு அவசரமாக சிகிச்சை அளிப்பதையே எமது அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவியிருந்த மிக இறுக்கமான ஒரு காலகட்டம் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதன் சுவடுகள் இன்னமும் முழுமையாக விட்டு அகலாத நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தை ஏமாற்றவே ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவை – அனுரகுமார திஸாநாயக்க

“சர்வதேசத்தை ஏமாற்றவே ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவை.” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேசிய பேரவையை ஸ்தாபித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை. அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்காகவே இந்த தேசிய பேரவை கொண்டுவரப்பட்டது. அப்படிப்பட்ட பேரவையில் சேர்வதால் எந்தப் பலனும் இல்லை. அதனால் தாங்கள் அதில் தலையிட மாட்டோம்.

மேலும் எதிர்க்கட்சிகளை தேசிய பேரவையில் இணையுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஆனால் கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க அரசாங்கம் மறுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் மறுத்துள்ளது.

இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசாங்கத்தில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பல அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது கற்களை கொண்டு வீசி தாக்கிய இலங்கை கடற்படையினர் – அதிருப்தியில் மீனவர்கள் !

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அங்கிருந்து சென்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர்.

மேலும் விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளதுடன், படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதாபட்டிணம் மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.