September

September

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – வெளிப்படை விசாரணையை வலியுறுத்தி ஜெனீவாவில் அறிக்கை !

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை அறிதல் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிவதில் போதிய அளவில் முன்னேற்றம் ஏற்படாதிருக்கும் விடயம் தொடர்பாகக் கரிசனை தெரிவிக்கும் இந்த அறிக்கை, விசாரணைகளை மேலும் முன்னெடுப்பதற்கென சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் ஆகியோரின் முழுமையான பங்கேற்புடனும் இது தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலியை சந்திக்க பேருந்தை கடத்திய 15வயது சிறுவன் !

பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பல பேருந்துகளின் சாரதிகள் சேர்ந்து ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண தமது பேருந்துகளில் நேற்று (11) இரவு பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​அப்போது பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அங்கு பொலிஸார் உடனடியாக தலையிட்டு இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்தனர். பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளை அவதானிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இன்று (12) நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்து மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, ​​கடத்தப்பட்ட பேருந்துதான் சம்பந்தப்பட்ட பேருந்து என்பதை பொலிஸார் உறுதி செய்தனர். விரைந்து செயல்பட்ட பொலிஸார், பேருந்தை நிறுத்தி, தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர்.

பின்னர், அவர் தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது. அப்போது நடந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான். அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் ஆனால் அப்போது பேருந்துகள் இல்லாததால், பல பேருந்துகளில் ஏறி சோதனை செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான். சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் ஹோமாகம பகுதியில் பேருந்து ஒன்றை கடத்திச் சென்ற சந்தேகநபர் மொரகஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலியை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியோர் இவர்கள் தான் – பெயர்களை வெளியிட்ட பேராசிரியர் சரிது ஹேரத் !

நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக திட்டமிட்டு பொருளாதார குற்றங்களை இழைத்த குழுவை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொதுஜன முன்னணியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அணியை சேர்ந்த சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரிது ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கு வேண்டுமென்றே குற்றம் செய்ததால்தான் இவ்வளவு கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட கூறுகிறது. இந்த நெருக்கடியை உருவாக்கியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

குறித்த அறிக்கையில், ஐவரின் பெயர்கள் தெளிவாக எழுப்பப்பட்டுள்ளன. டாக்டர் பி.பி. ஜெயசுந்தர, பேராசிரியர் லக்ஷ்மன், எஸ்.ஆர். ஆட்டிகல, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்த பெயர்கள் அனைத்தும் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை, பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம் என தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கு அமைச்சுப்பதவி !

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார்.

2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லை – பிரித்தனியா, கனடா கவலை !

தற்போது நிலவும் நெருக்கடியானது இலங்கையில் மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு உட்பட, போராட்டக்கார்கள் மீதான சமீபத்திய நடவடிக்கை குறித்து நியூசிலாந்து கவலை வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் நியூசிலாந்து மீண்டும் வலியுறுத்தியது.

அத்தோடு இலங்கையின் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அமுல்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இதேவேளை 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறைகள் நடைபெறாதமை காரணமாக இலங்கையில் சாட்சியங்களை சேகரிக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணி தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் முழுமையாக ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

2-ம் எலிசபெத் ராணியின் மரணத்தை மதுபாட்டிலுடன் கொண்டாடிய பெண் மீது தாக்குதல் !

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

2-ம் எலிசபெத்தின் மரணத்தையடுத்து உலகின் பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இங்கிலாந்தில் 10 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் 2-ம் எலிசபெத்தின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகிறனர். இதனிடையே, இங்கிலாந்திற்கு அருகே உள்ள நாடு ஸ்காட்லாந்து. அந்நாட்டின், ஈஸ்டர் ரோஸ் பகுதியில் மீர் ஆப் ஆர்ட் என்ற பகுதி உள்ளது. இங்கு ஜகி பிக்கெட் என்ற பெண் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், 2-ம் எலிசபெத் உயிரிழந்ததை ஜகி பிக்கெட் கொண்டாடினார். தனது கையில் ஒரு மதுபாட்டிலுடன் எலிசபெத் உயிரிழந்ததை ஜகி பிக்கெட் கொண்டாடினார். கொண்டாட்ட வீடியோவை ஜகி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், ஜகிக்கு கண்டனமும் வலுத்தது. இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருத்தி ஓட்டலை மூடும்படி ஜகியிடம் போலீசார் அறிவுறுத்தினர். ஓட்டல் மூடப்பட்ட பின் போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஜகி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஜகியின் கார் மீது சிலர் கற்கலை வீசியும், ஜகிக்கி எதிராக கோஷங்களையும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஜகி பிக்கெட்டின் ஓட்டல் பகுதிக்கு சென்ற சிலர் ஓட்டல் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலக வங்கி வழங்கிய நிதியிலிருந்தும் 130 கோடி ரூபா மோசடி – சரித ஹேரத் குற்றச்சாட்டு !

நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய எரிவாயு பற்றாக்குறையைப் போக்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் 130 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கோப் குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ‘சுதந்திர ஜனதா சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

36 டொலருக்கு கொள்வனவு செய்யவிருந்த ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவை 129 டொலருக்கு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப் பட்டமையால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கஷ்டத்தில் இருக்கும் போது உலக வங்கி வழங்கிய உதவித் தொகையை கொள்ளையடிக்கும் நிலைக்கு இந்தக் கும்பல் வந்துவிட்ட தாகக் கூறிய அவர், அந்தப் பணத்தை யார் எடுத்து யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது அப்பாவி மக்களுக்குத் தெரியாது என்றார்.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் – ஜெனீவாவில் அமைச்சர் அலி சப்ரி !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் தேசிய நேரத்திற்கு அமைய 12.30 அளவில் அமர்வு ஆரம்பமாகியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷீப் இலங்கை தொடர்பான அறிக்கையை அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது சபையில் கருத்துரைக்கையிலேயே 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளதென அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

உலககிண்ணமே எனது அடுத்த இலக்கு – தசுன் ஷானக

எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே தனது அடுத்த இலக்கு என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி 8 வருடங்களின் பின்னர் ஆறாவது தடவையாக ஆசிய கிண்ண கிரிக்கட் சாம்பியன் பட்டத்தை நேற்று (11) கைப்பற்றியது.

டுபாய் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கிண்ண கிரிக்கட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் !

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.