09

09

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் கல்வி அமைச்சரும் ஆசிரியர்களும் !

இலங்கையில்  போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான  முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக  விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம்  எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது

“பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும்  இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும்   கூறியிருந்தார்.  இதனை  தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது.

 

ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில்  மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து  இளைஞர்கள் வரையில்  உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

இலங்கையின் குறிப்பாக வட-கிழக்கு நகர்ப்புற இளைஞர்களிடையேயும் – மாணவர்கள் மத்தியிலும் தூள், ஊசிபோதை, ஐஸ் போதை பொருள் என இந்த போதைப்பொருள் சர்வசாதாரணமான விடயமாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இதனை தடுப்பதற்கான அடிப்படை  நடவடிக்கைகளில் கூட கல்வி அமைச்சோ – அரசாங்கமோ இறங்கவில்லை என்பதே ஆகக்கவலையான உண்மை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளில் போதைப்பொருள் உள்ளனவா என சோதிப்பதை விட முக்கியமானது போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். இதற்கான எந்த  நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு முன்னெடுக்க முனைவதாக தெரியவில்லை. மாணவர்கள தனதுகட்டுப்பாட்டிலுள்ள பாடசாலை நேரங்களில் எந்த பிழையும் நடந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே கல்வி அமைச்சர் கவலைப்படுவதாகவே அமைச்சரின் மேற்சொன்ன  கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது.

பாடசாலைகளில் போதைப்பொருள் கிடைக்காவிட்டால் என்ன மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு வெளியில் கிடைக்க தான் போகிறது. இதற்கான தீர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கையினுள் வருவதை தடுப்பது மட்டுமேயாகும் .

போதைப்பொருள் பாவனை கல்வி அமைச்சு மட்டுமே கவனம் செலுத்தி கட்டுப்படுத்துகின்ற விடயமல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு துறையினர் மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தென்னிலங்கை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடுத்தடுத்து கைது என்ற தகவல்கள் வெளியாகும். ஆனால் வட – கிழக்கில் அவ்வாறான செய்திகளை பார்ப்பதே அபூர்வம். போதைப்பொருள் மிதந்து வந்ததது – போதைப்பொருள் மீட்பு போன்ற செய்திகள் கிடைக்குமே தவிர கடத்தலில் ஈடுபட்டவர்கள்- விற்பனையாளர்கள் கைது என்ற செய்திகளை பார்ப்பதே அபூர்வமானது. திட்டமிட்ட வகையில் நமது பகுதி இளைஞர்களின் கவனம் வேறு திசைக்கு மாற்றப்படுகிறதா என்ற அச்சத்தையும் – சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் மாபியாவுக்கு வாலாட்டுவோராக வட – கிழக்கு காவல்துறை அதிகாரிகள் செயற்படாது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

இது தவிர பெற்றோர்களிடமும் – கிராமத்து இளைஞர்களிடமும் சமூக அமைப்புக்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இயக்கங்களை – கருத்துக்களை பரப்ப முன்வர வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படியாக போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க கல்வி அமைச்சு மட்டுமே நினைத்து முடியாது ஒட்டுமொத்த சமூகமுமே பாடுபடவேண்டிய தேவையுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த மாற்றத்துக்கான அழுத்தத்தையே கல்வி அமைச்சர் கொடுக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட. ஒவ்வொரு பாடசாலைகளும் – ஒவ்வொரு ஆசிரியர்களும் – ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் இதன் தேவையை உணர்ந்து போதைப்பொருள் அற்ற எதிர்காலத்தை உருவாக்க முன்வரவேண்டும்.

கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்கியுள்ள ரணில் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம்  37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்று கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், லொஹான் ரத்வத்தே, சனத் நிஷாந்த ஆகியோர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மோசமான அமைச்சு நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தீவிரமடையும் வறுமை – ரணில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்கிறார் எரான் விக்ரமரத்ன !

“இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 2500 ரூபாவை வழங்குவதாக கூறுவதற்கு இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனாவுடனான நீண்டகால நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள எரான் விக்ரமரத்ன,

அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் மோசடிகள் முடிவின்றி நடைபெறுவதாகவும், இறக்குமதி என்ற போர்வையின் கீழ் அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலர்களை இழந்துள்ளது.

இலங்கையில் வாழும் மக்கள் வறுமையில் இருந்து வெளிவர ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவை . இலங்கையில் தொழில் புரிவோரில் 70 வீதமானோர் 62 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

இலங்கையின் போசாக்கு குறைபாட்டை சர்வதேச சமூகத்தினரின் அறிக்கையை நிராகரிக்கிறதே தவிர மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையின்படி நாட்டில் வறுமை தீவிரமடைந்துள்ளது என்பதை கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 30 வீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதும் நினைவில்கொள்ள வேண்டும். தற்போது சர்வதேச ஆதரவுடன் இலங்கைக்கு உணவு வழங்கும் திட்டத்தை உலக உணவுத் திட்டம் ஆரம்பித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் போசாக்கு பொதியை நிறுத்திவிட்டு, தற்போது இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 2500 ரூபாவை வழங்குவதாக கூறுவதற்கு இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

குடிபோதையில் தாயை தாக்கிய தந்தையை கொலை செய்த 17 வயது மகன் !

குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) இரவு அவர்களது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கொலை தொடர்பில் 17 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமராகிறார் கோட்டாபய ராஜபக்ச..? – பிரதமர் தினேஷ் குணவர்த்தன விளக்கம் !

“பிரதமர் பதவி நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவியே என்னைத் தேடியே வந்தது.” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.

அதிபரின் விருப்பத்துடனும் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்துடனும் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். இது நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவி என்னைத் தேடியே வந்தது. பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கத் திரைமறைவில் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. எவரினதும் அழுத்தமும் எனக்கு வரவும் இல்லை. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த ஆதரவுடன் தான் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன்.

நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் எனவும், பிரதமராகப் போகின்றார் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.”- மாவைக்கு டெலோ கடிதம் !

உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதுன் அவசியம் குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணாகரம் வல்வெட்டித்துறை நகரசபை சம்பந்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்ற தலைப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் மயூரன், தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்கத் தவறிமை தொடர்பாக எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த முறை நகர சபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரின் மரணத்தினாலே ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டது. அந்த இடத்தை நிரப்புகின்ற தார்மீக உரிமை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கே இருந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

மேற்படி வெற்றிடத்திற்கு தங்கள் கட்சியால் தொடர்ச்சியான கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில் தங்கள்கட்சி உறுப்பினர் மயூரன் அவர்களுக்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்து நகரசபை தவிசாளர் பதவி ரெலோவுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது.

ரெலோவின் தவிசாளராக இருந்த கருணானந்தராஜா மரணித்த பின்புதவிசாளர் தெரிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டது.
23-08-2022 அன்று நடந்து முடிந்த வல்வெட்டித் துறை நகர சபைத் தவிசாளர் தெரிவிலே, தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தினால் பிரேரிக்கப்பட்டவருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்த நிலையில் தங்களால் நியமிக்கப்பட்டமேற்குறிப்பிட்ட நபர் தவிசாளர் தெரிவில் வாக்களிப்பிற்கு சமூகம் கொடுக்காதலால் எமது கட்சி ஒரு வாக்கினாலேவெற்றி வாய்ப்பை தவறவிட்டமை மிகவும் வேதனையான விடயம்.

ஆகையால், தங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு எமது கட்சி சார்பில் பதவி வழங்கப்பட்டதுஎன்பதை நினைவுறுத்தி உடனடியாக நடைமுறைக்கு வரும் வண்ணம், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவருடைய பதவி நிலையை வறிதாக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றும் எமது கட்சியால் கோரிக்கை முன் வைக்கிறோம்.

எதிர்காலத்தில் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதற்கு இந்தநடவடிக்கை மிகவும் அவசியமானது என்று எமது கட்சி வழமைபோல கருதுகின்றது.

ஏனைய பல உள்ளுராட்சி மன்றங்களிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்புமுடிவுகளுக்கு கட்டுப்பட்டே எமது கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சியோடு ஒன்றிணைந்து இன்றுவரை செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கடந்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை நினைவுபடுத்தவிரும்புகிறோம்.

எதிர்காலங்களில் இந்த ஒழுங்குமுறை சீர்குலையாமல் இருப்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை நீங்கள்முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

விரைவில் தங்கள் பதிலையும் நடவடிக்கையும் எதிர்பார்க்கிறோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMF ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா  லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அவரின் கருத்துக்கு பதில் வழங்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கை குறித்து நான் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிரானவர் அல்ல. அதில் வரி தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தாங்கள் விரைவில் தேசிய சபையை ஸ்தாபித்து, குறித்த ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை முன்வைத்து கட்சித் தலைவர்களின் கருத்தைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் உள்ள முக்கியத் தகவல்களை விட்டுவிட்டு ஏனைய விபரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான ஆதரவு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

கலைப்பீட கட்டிடத் தொகுதியின் கீழ்த்தளத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு இந்த ஆதரவு நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. கலைப்பீடத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த நிலையம் திறக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு – வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாபெரும் போராட்டம் !

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் மாபெரும் தொடர் போராட்டமும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும்  காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய  ஊர்தி வழிப்போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன், தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், தொழிற்சங்க மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 1979ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலிலுள்ள கொடூரமான பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் பிரச்சார  நடவடிக்கையொன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம். அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான  அதிருப்தியை நசுக்குவதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம்.

இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே நாளையும் தொடர்கின்றது. குறிப்பாக தற்போது  காலி முகத்திடல் அகிம்சைவழி போராட்டக்காரர்களை கைதுசெய்யவும் இச்சட்டமே  பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே அச்சட்டத்தினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரப்படுவதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுமாறும் வேண்டப்படுகின்றர் என்றுள்ளது.

ஆலய திருவிழாவிலும் அடிதடி மற்றும் வாள்வெட்டு – வடக்கில் தொடர்ந்து அதிகரிக்கும் வன்முறைக்கலாச்சாரம் !

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது. நேற்று (08 ) மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (09.09) ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன. இச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து பொலிசாரால் வாள்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலய தலைவரை விடுவித்த பின்னரே ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன் திரண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.