19

19

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை !

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோட்டாபயவுக்கு எதிரான மனுவை இன்று விசாரித்த காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச சார்பாக சட்டத்தரணி எவரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதன்படி, கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு அறிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க 2019 செப்டெம்பர் 27ஆம் திகதி முன்னிலையாகுமாறு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.

 

இதனையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும் எனவே, யாழ்.நீதவானின் தீர்ப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கோட்டபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது முடிவை அறிவித்த போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்ததால் சாட்சியமளிக்க அழைக்க முடியாது என தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியில் இல்லாத நிலையில், தற்போது அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.” – சரத் பொன்சேகா விசனம் !

“இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. அவரது பெயர் நினைவுக்கு வரும் போதெல்லாம் குமட்டல் வருகிறது.

கராத்தே பயிற்சியில் கறுப்பு பட்டியை பெற்றவர், ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார். அந்த கறுப்புப்பட்டி பெற்றவர் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்.அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள். நாடாளுமன்றத்தில் எம்மை காணும் போது புன்னகை செய்வார்கள்.

நாங்களும் கைக்காட்டி விட்டு செல்வோம். எனினும் அருவருப்பு, இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும். போராட்டம் அதிகரித்து வந்த நேரத்தில் மோசடியான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அச்சத்தில் நாடாளுமன்றத்திற்கும் செல்லவில்லை. வீ.8, பீ.எம்.டப்ளியூ போன்ற வாகனங்களை காண முடியாமல் போனது.

மலர் மாலைகளை அணிந்துகொள்ள எங்கும் செல்லவுமில்லை. எங்கும் பட்டாசும் வெடிக்கப்படவில்லை. பெயர் பலகைகளில் பெயர்களையும் காட்சிப்படுத்தவில்லை. போராட்டம் இவர்களுக்கு செய்தி ஒன்றை வழங்கியதே இதற்கு காரணம். இந்த மோசடியான கலாசாரத்தை மாற்ற வேண்டுமாயின் அந்த செய்தி சென்றே ஆக வேண்டும்.

மோசடியாளர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருக்க வேண்டுமாயின் போராட்டத்தின் சமிக்ஞை நாட்டுக்கு செல்ல வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி !

சட்டவிரோதமான மற்றும் ஆரோக்கியமற்ற முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி செய்யப்படுவதாக நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நாளாந்த கள்ளு நுகர்வு 160,000 லீற்றர்கள் ஆகும். ஆனால் தினசரி கள்ளு உற்பத்தி 45,000 லீற்றராகக் காணப்படுகிறது. இவ்வாறு மேலதிகமாக தயாரிக்க ஆரோக்கியமற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், மதுபான உற்பத்தியாளர்களே விற்பனை நிலையங்களை நடத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு வரியை இழப்பை ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கலந்துரையாடலின் போது பணிப்புரை விடுத்துள்ளார்.

காலி முகத்திடலில் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய பொலிஸார் – விசாரணை ஆரம்பம்!

கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​பொலிஸார் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் மற்றும் குறித்த சிறுவனின் பெற்றோருக்கு எதிராக பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் உதய குமார அமரசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கோட்டை பொலிஸாரிடம் மேலதிக விளக்கத்தை கோரியுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

“போதைப்பொருள் பாவிக்கும் மகனை திருத்தித்தாருங்கள்“ – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தாய் முறைப்பாடு !

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தாய் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாய் தனது மகனை இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் திருத்தி தருமாறு ஒப்படைத்துள்ளார்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கென தனியான சிறை அறைகள் வேண்டும் – பாராளுமன்றில் தலதா அத்துக்கோரள

பெண்களுக்கென தனியான சிறை அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரள இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

ஐந்து நீதிச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே திருமதி அத்துக்கோரள இவ்வாறு தெரிவித்தார்.
சிறைச்சாலைகளுக்கான மருத்துவ சபைகளை நியமிக்கும் போது சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலையீட்டுடன் செயற்பாடுகள் இடம்பெறுவது முக்கியமானது எனவும் திருமதி அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.

“யாரும் ஏற்க மறுத்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு 700 பில்லியன் ரூபாயை இழந்துள்ளது. மேலும் கடந்த இரண்டரை வருடங்களில் 2300 பில்லியன் ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 70% ஆல் அதிகரித்துள்ளது.

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம். நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதனால் அவர்கள் அறிவித்தபடி ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பித்தது. ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்புக்கு அமைய புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது.

“2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை. விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.” என கூறியுள்ளார்.

இலங்கையை வந்தடைந்தார் டொனால்ட் லூ – பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சிவில் சமூக அமைப்புக்களுடன் சந்திப்பு !

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்திறங்கிய டொனால்ட் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார். இதனை அமெரிக்கத் தூதுவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதே நேரம் டொனால்ட் லூ இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் வலுவான சிவில் சமூகம் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

“எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. இலங்கை தேசத்திற்கானது.” – எரிக்சொல்ஹெய்ம்

எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக பல வருட சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமாக நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக உறவை வளர்த்துக்கொண்டேன் ஆனால் பலர் கருதுவதற்கு மாறாக ஏனைய இலங்கை அரசியல்வாதிகள் பலருடன் எனக்கு சிறந்த உறவுஉள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவை சந்தித்தேன் பரஸ்பரம் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம்.

சம்பந்தன்,சுமந்திரன் போன்ற பல தமிழ்தலைவர்களை எனக்கு தெரியும், ஆகவே எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என அவர்  தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் பாடநூல்களை திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்க நடவடிக்கை – நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் !

இஸ்லாம் பாடநூல்கள் அனைத்தையும் திருத்தங்களுடன் 2023 இல் மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று (18) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்ட, பாடசாலை இஸ்லாம் கல்விக்கான பாடப் புத்தகங்கள் தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு 2021 மற்றும் 2022 இல் விநியோகிக்கப்பட்டன.

ஆனால் இன, மத, குல வாதம் காரணமாக தன்னுடைய மார்க்கத்தைக் கற்பதற்குக் கூட தரம் 6 இலிருந்து தரம் 11இற்கு இஸ்லாம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு மீள பெறப்பட்டுள்ள இப்படி மோசமான நிலை இந்நாட்டில் காணப்பட்டது. நீங்கள் அப்படியான அமைச்சர் அல்ல. இன, மத, குல வாதம் அல்லாத நேர்மையான கல்வி அமைச்சர் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, ´தன்னிடமும் இது தொடர்பாக சமூக அமைப்பொன்று தபாலில் வினவியுள்ளது. தரம் 6, 10, 11 ஆகியவற்றின் இஸ்லாம் பாடநூல் வழங்கப்பட்டு மீள்பரிசீலனைக்காக மீளப்பெறப்பட்டுள்ளது. அதனால் அம்மாணவர்களுக்கு இன்னும் புத்தகம் கிடைக்கப்பெறவில்லை. கடந்த வாரம் தான் எனது அவதானத்திற்கு இத்தகவல் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தின் அவதானத்திற்குக் கொண்டுவந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்றார்.