21

21

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு !

இந்திய அமைதிப்படையினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேரை சுட்டுப் படுகொலை செய்தனர்.

அந்த கொடூர சம்பவத்தின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள்,நிர்வாக உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிகள் – அமைச்சர் டக்ளஸ் அறிக்கை!

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றுவதற்காக தாம் வெளிப்படையாக செயற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தில் பெரும் சர்ச்சை !

காலநிலை மாற்றம் உலகளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் படி நியூஸிலாந்து எடுக்கப்பட்டுள்ளது நடவடிக்கை பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஓசியானிய நாடுகளில் ஒன்றான நியூஸிலாந்தில் சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் அங்கு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. அங்கு சுமார் 1 கோடி மாடுகளும் இரண்டரை கோடி ஆடுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் மூலாதாரமாக இந்த கால்நடை வளர்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த கால்நடைகளில் இருந்து அதிக அளவில் மீத்தேன் வாயு வெளியேறி சுற்றுசூழலை பாதிப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாடுகள் ஏப்பம் விட்டாலோ (Burp) அல்லது வாயு வெளியேற்றினாலோ (Fart) அதற்கு வரி விதிக்க நியூஸிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதேநேரம் இந்த வரிவிதிப்புக்கு அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் இருக்கும் விவசாயிகள் இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவை 2030 வாக்கில் 10 சதவீதமாகவும், 2050 வாக்கில் அதை 47 சதவீதமாகவும் குறைக்க நியூஸிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

“ஆட்சியாளர்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற முயற்சி.” – எம்.ஏ.சுமந்திரன்

மறுசீரமைப்பு என்ற பெயரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை முக்கியமான மறுசீரமைப்பாக கருதப்படுகின்றது என்றும் ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திருத்தம் ஊடாக என்ன நடக்கப் போகின்றது என்றும் நாடாளுமன்றத்தில் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்தவர்களே 18 ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று அவர்கள் 19ஆவது திருத்தத்திற்கும் வாக்களித்ததுடன், பின்னர் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்துவிட்டு இப்போது 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கவும் தயாராகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் ஓரிடத்தில் அல்லாது அங்கும் இங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது என்ன விதமான நாடாளுமன்றம் என கேள்வியெழுப்பிய அவர், மக்கள் மாற்றமொன்றையே கோருகின்றனர் என்றும் ஆனால் இந்த சபையில் இருக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இதுவொரு மோசடியாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எங்களை தவறாக வழி நடத்தியுள்ளது என்று மக்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு மாற்றங்களுக்கு முதலாவது படியென்று கூறி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் எனவே, இந்த முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அரசியல்வாதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களும் பொறுப்புக்கூற வேண்டும்.” – மகிந்த தேசப்பிரி

அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்பதற்காக புதிய அரசியல்வாதிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் இழைக்கும் தவறுகளுக்கு மக்களும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் அறிந்த காலத்திலிருந்து, நாட்டிலிருக்கும் அரசியல் முறை தவறு. அரசியல்வாதிகள் தவறானவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயத்தில் தவறிழைக்கிறார்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள்.

ஆனால், தேர்தலினூடாக மக்களே அந்த அரசியல்வாதிகளை தெரிவுசெய்கிறார்கள். நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடமோ அல்லது நிர்வாகமுறையிலோ ஜனநாயக முறை இல்லை அல்லது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவில்லை என்றால் அதற்கு மக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு நுழைதல், தாக்குதல் மேற்கொள்ளுதல், வாக்கு மோசடிகள் இடம்பெற்ற யுகமொன்றும் எமது நாட்டில் இருந்தது. அவ்வாறான காலப்பகுதியிருந்தே நாங்கள் வந்தோம்.

வாக்களிக்கும் உரிமையின் பெறுமதி மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயரிடுவதன் பெறுமதி போன்றவற்றை மக்கள் அறிந்திருக்காததால், இதுதொடர்பில் மக்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் நிலப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைப்பாடும் இருந்தது.

 

இருந்தபோதும், நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் புதிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்னரே புரிந்துகொண்டோம். அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்றால் அதற்கு மாற்றீடாக புதிய மக்கள் உருவாக வேண்டும்.

இது எனது கருத்து அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்னர் பேர்டல் பிரிஸ் என்ற அறிஞரே இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

எனவே, நாம் புதிய நிலைப்பாடுகளை கொண்ட புதிய மக்களை உருவாக்க வேண்டும். அவ்வாறான புதிய மக்கள் பாடசாலைகளிலும், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிலுமே இருக்கிறார்கள். எனவே, இந்த தரப்பினரிடம் புதிய சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் மூத்த இலக்கியப் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் காலமானார்.

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 88.

இலங்கையின் மூத்த இலக்கியப் படைப்பாளியும் தமிழ் இலக்கிய ஆய்வாளருமான சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டம், ஹாலி எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934 பிப்ரவரி 16ல் பிறந்தார்.

கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்த இவர், பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெயருடன் ‘தெளிவத்தை’ என்பதையும் இணைத்துக்கொண்டார்.

காலங்கள் சாவதில்லை’ என்ற நாவலும் ‘நாமிருக்கும் நாடே’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இவரது முக்கியப் படைப்புகளாகும். இலங்கை மலையகம் குறித்து ‘மலையக சிறுகதை வரலாறு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதைப் பெற்றுள்ளார்.  இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. மேலும், 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக தெளிவத்தை ஜோசப் கொழும்பு வத்தளை இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் – 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது.

இதன் போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த 100 நாட்ள் செயல் முனைவின் 82ஆம் நாள் போராட்டத்தில் பாலாவி முகாமில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

“இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாக வாழ முடியும்.” – சரத்வீரசேகர

“இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.”என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று, அரசியலமைப்பின் 22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.

எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம். அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டம் எமக்கு இந்தியாவினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நிறுத்திவைத்து, பாதுகாப்பாக அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவந்து, அவர்களிடம் இராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டே 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றினர்.

ஆகவே இதன் சுயாதீனம், புனிதத்தன்மை குறித்து எம்மத்தியில் கேள்வியே எழுகின்றது. ஐக்கியத்திற்கும், ஒற்றையாட்சிக்கும் வித்தியாசம் தெரியாத பலர் இன்று அது குறித்து கதைத்துக்கொண்டுள்ளனர்.

பெரிய நாடுகளில் கையாள வேண்டிய பொறிமுறைகளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு திணிக்க முடியாது. நாம் சமஸ்டி நாடாக இருக்க முடியாது. 13 ஆம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தியைப்போன்றது.

எனவே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுப்பது நாட்டின் ஐக்கியத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

பலவீனமான மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதையே பிரிவினைவாதிகள் விரும்புகின்றனர். அதற்காகவே 13,17,19 ஆம் திருத்தங்களை கொண்டுவந்தனர்.

இதனாலேயே இந்த திருத்தங்களை நான் எதிர்த்தேன். ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பே இதற்கு தீர்வாகும்.

அதற்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. மேலும், 22ஆம் திருத்த சட்டத்துக்கு நான் இணங்க மாட்டேன், இது மக்களின் ஆணைக்குழு முரணானது என்றார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இரண்டாம் வாசிப்பின் போது 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்றாம் வாசிப்பின்பின் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இது தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.