27

27

“சிறுவர்கள் தொடர்பாக மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள்.”- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது – மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு !

இளைஞர் ஒருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த  மரண தண்டனையை, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையாக மாற்றி மேன் முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.  18 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று 2021 ஆம் ஆண்டு தண்டனை சட்டக் கோவைக்கு கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களை மையப்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும்  ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

‘குற்றஞ்சாட்டப்பட்டவர் 15 வயதுடைய நபராக இருந்த நிலையில், அவரை குற்றவாளியாக நீதிமன்றம் கண்டுள்ளது. எனினும்  18 வயதுக்கு கீழ் பட்ட குற்றவாளிக்கு  மரண தண்டனையை உறுதிப்படுத்துவது தண்டனை சட்டக் கோவையின்  53வது பிரிவின் விதிகளை மீறுவதாகும்.  எனவே குற்றவாளிக்கு   மேல் நீதிமன்றால்  விதிக்கப்பட்ட மரண தண்டனையை வலுவிழக்கச் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.   ஆகவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட  மரண  தண்டனை ரத்து செய்யப்படுகிறது.’ என நீதிபதிகள் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கிரிக்கெட் விக்கட்டினால்  தாக்கி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி உயர்நீதிமன்றத்தில் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். அதன்படி வழக்கு விசாரணைகளின் பின்னர்  கொலை குற்றவாளியாக பிரதிவாதியைக் கண்ட மேல் நீதிமன்றம்  அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனைக்கு எதிராக குற்றவாளி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

குற்றம் சாட்டப்படும் போது  குற்றவாளிக்கு 15 வயது மட்டுமே ஆனதாக வாதிட்ட அவர்,   அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 53வது பிரிவு 2021 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க  சட்டத்தால் திருத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி தர்ஷன குருப்பு,  குற்றவியல் சட்டத்தின் புதிய பிரிவு 53 இன் படி, குற்றம் இடம்பெறும் போது 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபருக்கும், அக்குற்றத்துக்காக  மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என குறிப்பிட்டார்.

அத்தகைய நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, சிறைக் காவலில் வைக்கும் விதமாக தண்டனையளிக்க முடியும் என  அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அந்த வாதத்தை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்றம்,  மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்துசெய்ததுடன், 2018 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையளித்து தீர்ப்பளித்தது.

இரட்டை குடியுரிமையுடைய எம்.பிக்கள் யார்..? – தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வகிக்கும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடிவரவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று கடந்த சில நாட்களாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணையில் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை உண்டு என்பதை குடிவரவுத் திணைக்களம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விசாரணையில் அந்தந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் கடவுச்சீட்டு பெறும் போது வழங்கிய தகவல்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் வேறு நாட்டின் குடியுரிமை உள்ளவரா என்ற தகவல்களை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இந்த நாட்டில் கடவுச்சீட்டு பெறும் போது அதனை மறைப்பதற்கு அடிக்கடி தூண்டப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இரட்டைக் குடியுரிமையை மறைத்து அல்லது அறிவிப்பதைத் தவிர்த்தால் அதை மீண்டும் விசாரிக்கும் அமைப்பு அமைப்பில் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை – கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர் !

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை , குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.

வவுனியாவில் பரவிவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு அறிவித்தல் வழங்க பின்வரும் விஷேட தொலைபேசி இலக்கங்களும் 0718592378, 0112580518 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“குருந்தூர் மலை விவகாரம்” – புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள் என்கிறார் அபேதிஸ்ஸ தேரர் !

“புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.” என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

பெபிலியான சுனேத்ரா தேவி  மஹா பிரிவெனா விகாரையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒருசில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தில் உண்மையை அறிந்துக் கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அமைதியாக செயற்படுகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.

100 -103 வரையான காலப்பகுதியில் குறுந்தூர் மலையின் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவான நிலப்பரப்பை குருந்தூர் மலை விகாரை கொண்டுள்ளது.இந்த விகாரைக்கு சொந்தமான காணியில் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்டுகிறார்கள்.

புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. குறுகிய நோக்கத்துக்காக புத்தசாசனத்தின் அடையாளங்களை இவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடர் – சிம்பாப்வே திரில் வெற்றி !

ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுங்கள் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் போதைப்பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச்சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றுக்கு வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கடிதங்களை தீயிட்டு கொளுத்திய உறவினர்கள் !

அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரையாக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக இன்று (வியாழக்கிழமை)   போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறகளுக்கு அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மேலதிக விபரங்கள் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அலுவலகத்தை தாம் நிராகரிப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தலையீட்டின் மூலமே காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்து குறித்த கடிதத்தை கிழித்து அதனை தீக்கிரையாக்கினர்.

இதன்போது தீக்கிரையாக்கிய தாய்மார் ‘இன்னும் காலம் தாழ்த்தாது கையில் ஒப்படைத்த தமது பிள்ளைகளே தமக்கு வேண்டும்’ எனக் கோரி கண்ணீர் விட்டழுதனர்.