12

12

பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை – தலிபான்கள் அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

6-ம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர்.

முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். அதேபோல் பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தடைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“வீட்டை காட்டி மோசம் செய்கின்றனர். புலி வாலை விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் திணறுகின்றனர்.”- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த நோக்கத்துக்கு முகங்கொடுக்க முடிந்த செயற்பாட்டு தைரியத்துடன், நாங்கள் இந்த அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை சார்ந்த புதிய ஒழுங்கு விதிகள் மூன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எமது மக்கள் தங்களது வாக்குகளை எமக்கு வழங்கி, தங்களது பிரச்சினைகளை தீர்க்குமாறு வழங்கிய ஆணையானது எங்களை நிர்ப்பந்தித்து இருக்கின்றது.  எனவே, எங்களால் எமது மக்களுக்கு கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பங்களை கை நழுவ விட முடியாது.

அதன் காரணமாகவே, அரசாங்கங்களுடன் இணைகின்றபோது, நாங்கள் விதிக்கின்ற நிபந்தனைகள் பொது நிபந்தனையாகவே இருக்கின்றது. அது, எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே ஆகும்.

அதற்காக, அரசாங்கங்கள் எமது மக்களின் பிரச்சினைகளை எல்லாம் உடனடியாக தீர்த்துவிடும் என்ற எதிர்பார்ப்பினை மட்டும் முன்வைத்து, நாங்கள் செயற்படுகின்றவர்களும் அல்லர். எமது நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள், செயற்பாடுகள் காரணமாக எமது மக்களின் பிரச்சினைகளை போதியளவில் தீர்த்துக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு தடையற்ற பாதைகளை நாங்கள் திறந்துவிடுகின்றோம்.

அரசு அதில் பயணிப்பதில் தாமதங்களையோ சிரமங்களையோ எதிர்கொள்வதில்லை என்பது எமது மக்களுக்கு சாதகமான நிலைப்பாடாகும். இதற்கு மாற்றமான நிலைப்பாட்டினை கொள்கையாக வகுத்துக்கொண்டவர்கள் எமது சக தமிழ் அரசியல்வாதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.

எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல், அவற்றை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டும் அவ்வப்போது கையிலெடுத்து, பின்னர் தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகளை, தீராப் பிரச்சினைகளாக்கி, அந்த பிரச்சினைகளை எமது மக்களின் வீடுகளிலேயே குடியமர்த்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

அவர்கள் இதன் மூலம் எமது மக்களது வாக்குகளை சூறையாடி வருவதே முதலீடு இல்லாத பண்டமாற்று அரசியல் என கொள்கை வகுத்துக்கொண்டவர்கள்.  இதனை இப்போது எமது மக்கள் ‘வீட்டை காட்டி மோசம் செய்கின்ற செயல்’ என பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.

இத்தகைய கொள்கையின் வரைவிலக்கணமாகவே இவர்கள் இன்னமும் புலி வாலை பிடித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் மனங்களில் வருகின்ற மாற்றங்களின் முன்பாக, புலி வாலை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடித்திருக்கவும் முடியாமல் திணறுகின்ற இவர்கள், புலி வாலுக்குப் பதிலாக பூனை வாலை பிடித்திருக்கலாமோ என நினைக்கவும் கூடும்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாட தேவைகளை தீர்க்கின்ற வகையில் நாங்கள் உற்பத்தித் துறைகள் சார்ந்த முன்னெடுப்புகளை பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றோம். இந்நிலையில், இவர்கள் எமது மக்களது பிரச்சினைகளை தீர்க்காமல், தீர்க்கவிடாமல், பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

அத்தோடு நிற்காமல், எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற எமது வழிமுறைகளை இடைமறித்து, அதனையும் சீர்குலைத்து, எமது மக்களை நடுத்தெருவில் விடுகின்ற இவர்களது நோக்கங்களை பூர்த்தி செய்துகொள்வதற்கும் செயற்பட்டு வருகின்றனர்.

இவற்றுக்கு நாங்கள் அஞ்சியிருந்தால், இன்று எமது மக்கள் அனுபவிக்கின்ற எவ்விதமான வாய்ப்புகளும் மக்களுக்கு இதுவரையில் கிடைத்திருக்காது என்பதையும் மக்கள் அறிவர். நாங்கள் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கென்றே அரசியலில் காலடி எடுத்து வைத்தவர்கள். அதனையே நான் எனக்கு கிடைக்கின்ற அமைச்சுக்களின் மூலமும் நிறைவேற்றி வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு முதல் ஆறுவயதிலிருந்தே ஆங்கிலக்கல்வி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் இவ்வாறு சிங்கள மொழி மூலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார்.

சில பாடநெறிகளை ஆங்கிலத்தில் மட்டும் கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது கலைப் பீடங்களில் கூட ஆங்கிலத்தில் கற்கைகள் நடத்தப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேவை எனப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பு விஷாகா கல்லூரியின் அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதிபர் ஆட்சேர்ப்புக்கான நடைமுறை மற்றும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் விபரங்களை வழங்கினர்.

அத்துடன், சியனே கல்வியியல் பீடத்துக்குச் சொந்தமான காணியை மே.மா/கம்/வித்யாலோக மகா வித்தியாலயத்தின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக்கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க கல்வி அமைச்சர் சுரேன் ராகவன், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் ஹேமந்த யு. பிரேமதிலக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் அதிகாரிகள் பலரும் குழுவில் கலந்துகொண்டனர்.

தாயுடன் சண்டை – 4 வயது மகளை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தை !

4 வயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தையை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 வயதுச் சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியாகியது. தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இருந்துள்ளனர்.

அந்தப் பகுதியினால் பயணித்த குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் அந்த சிறுமியை இனங்கண்டு விசாரித்துள்ளார். தாம் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்புத் தேடுவதாக தாயார் கூறியதையடுத்து அவர்களை மீட்டு வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைகளத்திடம் குடும்பநல உத்தயோகத்தர் ஒப்படைத்திருந்தார்.

சிறுமி அவரது தந்தையினால் தாக்கப்படும் காணொளி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகியதை கண்டறிந்த வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.

ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் சிறுமியின் தந்தையை தேடிய போதும் அவர் தலைமறைவாகி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து சிறுமியைத் தாக்கிய தந்தை ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

“தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் மகளைத் தாக்கினேன். அதனை அலைபேசியில் காணொளி எடுத்தேன். அந்த காணொளி மனைவியின் அலைபேசியிலிருந்து அவரது நண்பிக்கு சென்றுவிட்டது. அதுவே வெளியாகிவிட்டது” என்று சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் !

தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகனச் சோதனையின் போது, ​​இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் மீட்கப்பட்டது தொடர்பாக வழக்கு என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பியதாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கைத் தமிழ் மக்களால் அனுசரிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் குறிக்கும் மே 18 அன்று வேலைநிறுத்தம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

15 வயதான சிறுமி பலி – வைத்தியசாலையில் அனுமதித்த இளைஞர்கள் தப்பியோட்டம் !

இரு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயதான சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த இரு இளைஞர்களும் சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியை இரு இளைஞர்கள் காரில் வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும் சிறுமியை உடனடியாக பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததை அவதானித்ததாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா

._._._._._.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
._._._._._.

காலம் காலமாகத் ஈழத்தின் தமிழர் சமூகம் கல்வியை முன்நிலைப்படுத்தி வாழும் ஒரு சமூகமாகத் தம்மை இனம்காட்டி வந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின்கீழ் தொழில் வாய்ப்பைப்பெற்று அரச ஊழியனாகி “கோர்ணமெந்து” உத்தியோகத்தனாகிய தமிழன் சமூகத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அரச ஊழியம் படிப்படியாக அடிபட்டுப் போய்விட்டாலும் தமது பிள்ளைகளை டொக்டர், இஞ்சினியர், லோயர், எக்கவுண்டன்ட் என்ற நான்கு கட்டமைப்புகளுக்குள் ஏதாவதொன்றினுள் புகுத்திவிட்டு தான் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைப் பெற்றுவிடுவதில் தமிழன் உடல் பொருள் ஆவியையும் கொடுக்கத் தயாராகியிருந்தான். தப்பித்தவறி ஒரு குடும்பத்தில் இந்த நாலுக்குள் ஒன்று இல்லாது போனால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் முக்கித் தக்கி தனது குடும்பத்தில் ஏதாவதொரு தலைமுறையில் இருந்த ஒரு டொக்டரையோ இஞ்சினியரையோ தேடிப்பிடித்து தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டான்.

“அட காசுதான் இருக்கு- படிப்பில்லையே” என்ற கவலை கொண்ட இன்னொரு வகைக் காசுக்காரத் தமிழன், சீதனம் என்ற பெயரில் காசைக்கொட்டி இந்த நால்வகை மாப்பிள்ளைகளையும் தன் குடும்பத்துக்கள் விலைக்குவாங்கிச் சேர்த்துக்கொண்டு தன் சமூகத் தரத்தை உயர்த்திக்கொண்டான்.

இந்தக் கூத்துகள் தாயகத்தில் தான் நடந்து முடிந்ததென்றால் இப்போது புகலிடம் வரையும் தொடர்வது தான் வேதனையாக இருக்கின்றது. திறந்த கல்விவசதி, எவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற நிலை புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது. விதம்விதமான புதிய கல்வித்துறைகள் எம் இளஞ்சந்ததியினரின் முன்னே விரிகின்றன. இங்கும் இந்த நால்வகைத் துறைகளையும் மீறித் தன் பிள்ளைகளை சுயவிருப்பத்துடன் வேறு நல்ல துறைகளை நாடவிடாமல் சிறுபிராயம் முதலே மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் நம்மவர்கள். அதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தாலும், மனமொத்துத் தன் கல்வியைத் தொடரமுடியாமல் பல தமிழ் மாணவர்கள் தம் கல்வியைத் துறப்பதும், தாமதமாகத் தமது துறைகளை மாற்றிக்கொள்வதும் நிகழ்கின்றன.

அடையாளச் சிக்கல்

கல்வியே எமது புலம்பெயர் சமூகத்தின் அடையாளச் சிக்கலாகிவிட்ட நிலை இன்ற காணப்படுகின்றது. அரச பாடசாலைகளிலிருந்து தனியார் கல்வியை நாடுவதும், டியுஷன் படிப்புக்கு பிள்ளைகளைத் தூண்டிவிடுவதும் இந்த நால்வகைத்துறைகளில் ஒன்றுக்குள் குறிப்பாக டொக்டர் இஞ்சினியர் படிப்புக்குத் தம் பிள்ளைகளைத் தயார்செய்வதற்காகத்தான் என்ற நிலை இன்று பரவலாகிவிட்டது.

டொக்டர் என்ற சொல் சமூக அந்தஸ்தில் மிக உயர் ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு மாயை காலம்காலமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. அதை புலம்பெயர்ந்த வந்தவர்களும் தமது பொதிகளுடன் இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். மற்றவரைப் பெயர்சொல்லிக் கூப்பிடலாம் ஆனால் டொக்டரான ஒருவரைமட்டும் டொக்டர் இன்னார் என்று விழித்தால் தான் கூப்பிட்டவருக்கும் செமிக்கும் – கூப்பிடப்பட்டவருக்கும் செமிக்கும். புகலிடத்தில் டொக்டர்கள் படும் பாட்டை இவர்கள் அறியாதவர்களா என்ன?

இங்குதான் வேறு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. டொக்டர் என்ற பதம் மருத்துவத்துறைக்கு மாத்திரமல்லாது அறிவியல்துறையில் முனைவர் பட்டத்தையும் குறிக்கப் பயன்படுவதால் இவர் எந்த டொக்டர் என்று தலையைப்போட்டு உடைத்துக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கவிஞர்கள், ஓவியக்காரர்கள், நடன ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என்று வந்த பிறகு ஐயர்மாருக்கும் கலாநிதிப் பட்டத்தில் ஆசை வந்தவிட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பாலைவன மாநிலமான அரிசோனாவில் பென்சன் மானிலத்தில் உலகப் பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகின்றது. Dr. Howard John Zitko வினால் 1946இல் ஏதோ ஒரு புனிதமான நோக்கத்துக்காக தாபிக்கப்பட்டது. இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிவிட்ட நிலை அதற்கு. இந்தியாவில் வாரனாசியிலும், மும்பாயிலும், நைஜீரியாவில் எனுகுவிலும் அதன் கிளைகள் இருப்பதாக அதன் இணையத்தளத்தில் காண முடிகின்றது.

காலக்கிரமத்தில் எம்மவர்களில் சிலர் மோப்பம் பிடித்து அந்தப் பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் வழங்கும் Cultural Doctorate பட்டத்தைப் பெற, இன்று சிவனே என்று இருந்தவரெல்லாம் திடீரென்று கலாநிதிப் பட்டத்தைச்சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்புலம் எதுவுமில்லாமல், திடீரென்று கலாநிதிப் பட்டத்தைத் தபாலில் வாங்கிச் செருகிக்கொண்டால் சமூக அந்தஸ்து கூடிவிடுமா என்ன? கலாநிதிப் பட்டம் என்றால் பொன்னாடையா என்ன?

முத்திரை பதிப்பித்தல்

இப்படித்தான் கனடாவின் தபால் திணைக்களம் கள்ளம் கபடமில்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கனேடிய தபால் தலைகளில் உங்கள் புகைப்படத்தைப் பதிந்து நல்ல நாள் பெருநாள்களில் அதை நண்பர்கள் உறவினர்களுக்கு தபாலில் அனுப்பிக் கொஞ்சம் முஸ்பாத்தி பண்ணலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. வீட்டில் புதிய குழந்தை பிறந்ததும், திருமணம் முடித்தால், பிறந்தநாள் கொண்டாடினால், என்று அந்தப் படத்தை கனேடிய உள்ளுர் முத்திரைகளில் பதித்து அதை உறவினர்களுக்கு அனுப்பும் தபால்களில் சட்டபூர்வமான தபால் தலைகளாகப் பயன்படுத்தக் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு அச்சடித்து வழங்கியது.

கொஞ்சக்காலம் எல்லாம் நன்றாக நடந்தது. எங்கள் தமிழரின் மூளை என்ன லேசுப்பட்டதா? அடித்தார்கள் முத்திரை குமார் பொன்னம்பலத்துக்கு. விழா நடத்தி அதை விற்று நிதியும் திரட்டிவிட்டார்கள். குமார் பொன்னம்பலத்துக்கு மட்டுமா முத்திரை அடித்தார்கள். பட்டியல் போடலாம் யார் யாருக்க அடித்தார்கள் என்று. கட்டுரை நீண்டுவிடும். இலங்கையில் வாழ்ந்து மறைந்த பலருக்கும் புகலிடத்தில் பிள்ளைகள் முத்திரை அடித்து இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ரேஞ்சுக்குத் தமது தந்தையரையும் கொண்டவர நினைத்தார்கள். நினைத்ததுடன் நிற்காமல் முத்திரையை இலங்கைக்கும் அனுப்பி அதை தமிழ் பேப்பரிலும் அல்லவா செய்தியாக்கி விட்டார்கள். எந்த மாதிரியாக விளம்பரம் இருக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? “ ஈழத்தமிழரான அமரர் இன்னாரின் சேவைநலம் பாராட்டி கனேடிய அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது என்றல்லவா போட்டுவிட்டார்கள். அதை இலங்கைப் பத்திரிகைகளும் சந்தோஷமாக ஏன் எப்படி என்று கேள்விகெட்காமல் மீள்பிரசுரம் செய்துவிட்டன.

இதைப்பார்த்துவிட்டு தேசியத் தலைவருக்கு முத்திரை அடிக்கப்போன ஒருவர் பேராசையில் எக்கச்சக்கமான பிரதிகள் கேட்கப் போய் கனடா தபால் திணைக்களம் விழித்துக்கொண்டுவிட்டது.

பிரிட்டனிலும் ரோயல் மெயில் Smilers என்ற புதிய திட்டத்தை அமுலாக்கினார்கள். கனடாக்காரர் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கிலாந்தில் முன்எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். முத்திரையில் இடம்பெறுவதற்காக அனுப்பும் புகைப்படம் வேறாகவும், மகாராணியின் இலச்சினை பொறித்த ஒரிஜினல் முத்திரை வேறாகவும் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அச்சிட முடிவுசெய்தார்கள். யாரும் முத்திரை அடிக்கலாம். 20 தபால்தலைகளுக்குக் குறையாமல் அடிக்கவேண்டும். நல்லவேளை லண்டனில் பெரிதாக இதுவரை யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. குடும்பப் படங்கள் எடுத்துப் பதிந்து மகிழ்வதுடன் சரி.

இந்த விடயங்களை எவரும் இதுவரை சீரியசாக எடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவும், முத்திரையில் படம் பொறிக்கப்படவும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்தபடிதான் உள்ளது. தமிழகத்துக்கு மேடையேறப் போகும் இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் ஏதோவொரு பட்டத்துடன் தான் திரும்பி வந்துசேர்கிறார்கள். இந்தக்கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்கூட ஐரோப்பிய நாடொன்றில் அரிசோனா பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதிக்கு எழுத்தாளர் சங்கமொன்றினால் விழா எடுக்கப்படுகின்ற செய்தி கிடைக்கிறது. லண்டனில் சிலர் கிடைத்த பட்டத்தை எப்படிப் பேப்பரில் போட்டு சனத்துக்குத் தெரியப்படுத்துவது என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் அம்பலத்துக்கு வரத்தானே செய்யும்.

பட்டம் தான் ஒருவனை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குமா? பட்டம் பெற்றவர்கள் தான் சமூகத்தை நேர்வழிப்படுத்த அரகதையுள்ளவர்களா? பட்டம் பெறாதவர்கள் எல்லாம் என்ன செல்லாக்காசுகள் என்ற எண்ணமா? சுப்பிரமணிய பாரதியார் என்ன பட்டம் பெற்றுத்தான் பல்கலைக்கழகப் பாடப்பத்தகங்களில் இடம்பெற்றாரா? இன்றளவில் அமைதியாகச் சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் மனதில் நிலையான இடம்பெற்றிருப்பவர்களின் பட்டம் என்ன என்று பார்த்தா நாம் மதிக்கிறோம்.

அண்மையில் மலேசிய உள்ளுராட்சி அமைச்சு விடுத்த அறிவித்தல், பட்டங்களால் தடுமாறிநிற்கும் மலேசியர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முறையாகச் சேர்ந்து முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற கலாநிதிப்பட்டத்தைத் தவிர்ந்த பிற கௌரவப் பட்டங்களை தமது பெயரின் முன்னாலோ பின்னாலோ பொது நிகழ்ச்சிகளிலோ, அரசாங்க செயற்பாடுகளிலோ பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேடையில் மாலை, பொன்னாடைகள் போர்த்துவது கௌரவிப்பக்காக மட்டுமே. அமைப்புகளால் வழங்கப்படும் பட்டங்களும் அவ்வாறே. கூட்டம் முடிந்ததும் மாலையையும் பொன்னாடையையும் சுருட்டிப் பக்குவப்படுத்துவோமா அல்லது அதைப் போர்த்தபடியே ஜாம் ஜாமென்று ஊரெல்லாம் நடந்து திரிவோமா?

தயவுசெய்து காசுக்கு வாங்கும் பட்டங்களால் சமூகத்தில் மற்றொரு பிரிவினை உருவாக்காதீர்கள். நீங்கள் செய்யும் பணி மக்கள் மனதில் நீங்கள் இல்லாத போதும் உறைக்க வேண்டும். நீங்கள் விட்டுச்செல்லும் வெறுமை, மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். அது தான் உண்மையான கௌரவம். அதைவிடுத்து போலித்தனமான கடின உழைப்போ, ஆய்வுத்திறனோ அற்றதும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் சமூகத்தின் நோய்க்கிருமிகள். தயவுசெய்து கிட்ட நெருங்கவிடாதீர்கள்.

நன்றி:

நூல்தேட்டம் 7777
தேடலே வாழ்க்கையாய்: ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள். என்.செல்வராஜா. டென்மார்க்: வி.ஜீவகுமாரன், விஸ்வசேது இலக்கியப் பாலம், Hojvangsparken 7, 4300 Holbaek, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதி அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் நந்தி, கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், எஸ்.எம்.கோபாலரத்தினம், கிருஷ்ணா வைகுந்தவாசன், கோபன் மகாதேவா, நயீமா சித்தீக், ச.வே.பஞ்சாட்சரம், அரங்க முருகையன், அமுதுப் புலவர், அகஸ்தியர் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம், புலத்திலும் புகலிடத்திலும் மலரும் வெளியீடுகளை சர்வதேச நூலகங்களில் பாதுகாத்தல், மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா, புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும், தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு (சர்வோதயம்), நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: ஒரு பிராந்திய இலக்கிய வரலாற்று மூலநூல் ஆகிய சமூக, இலக்கிய கட்டுரைகளும் இதில் அடங்குகின்றன.

இக்கட்டுரை தேசம் சஞ்சிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தது. காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

மோசடிக் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90646  
தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை !

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் ரெமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும், தற்போது ஒரு பகுதியினருக்கு மதிய உணவை வழங்குவதாகவும், நிதியொன்றை அமைத்து அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இ.போ.ச சாரதி கைது !

மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தினை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். அதன்போது சாரதி மதுபோதையில் இருந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

பேருந்தை புளியங்குளம் காவல் நிலையத்திலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தலைமுடியை இழுத்து தடியால் தாக்கிய ஆசிரியை கைது !

மில்லெனியவில் உள்ள பாடசாலையொன்றில் 5ஆம் வகுப்பு மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் சூடுதணியும் முன்னரே, இதேபோன்ற மற்றொரு சோகச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமி மீது இவ்வாறு மற்றுமொரு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (10) அம்பலாந்தோட்டை லுனம துடுகெமுனு மகா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தமது மகளை ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் சிறுமியின் முதுகில் கம்பினால் கொடூரமாக தாக்கியதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முதலில், சிறுமி தனது தாயிடம் உண்மைகளை மறைக்க முயன்றுள்ள போதும் சிறுமியின் முதுகில் காயங்களைக் கண்ட தாய் விசாரித்ததில் சிறுமி நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் சிறுமி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில், ஆசிரியர் சிறுமியின் தலைமுடியை இழுத்து தாக்கியுள்ள காரணத்தால் சிறுமியின் தாய் சிறுமியின் தலை முடியை வெட்டி பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து ஹுங்கம பொலிஸாரால் நேற்று பிற்பகல் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) அக்குனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பாவிடம் “அத தெரண” வினவியது.

சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், திங்கட்கிழமை இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் ஆசிரியர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சிறுவர் வன்முறை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மாதிவெல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக மௌன போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது