21

21

மூன்று கோடி ரூபாவுக்கு கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் இரா.சாணக்கியன் – நாடாளுமன்றில் பிள்ளையான் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

“கலாசாரம், பாரம்பரியம் என பேசிக்கொண்டிருக்காது கஞ்சாவை பயிரிட்டு இலாபமீட்ட முயற்சிக்க வேண்டும்.” – பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே

“தாய்லாந்து தேரவாத பௌத்த நாடு. ஆனால், அவர்கள் கஞ்சாவை பயிர்ச்செய்கை செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாம் புதையலுக்கு மேல் இருந்துகொண்டு பிற நாடுகளிடம் கையேந்தி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம்.” என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு போராடினேன். எனது போராட்டம் குறித்து அவதானம் செலுத்தி, கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தில் பரிந்துரைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கி ஏற்றுமதி செய்து, அதனூடாக முதலீடுகளை பெற்றுக்கொள்ள முன்வைத்த யோசனைக்கு எதிராக எதிர்தரப்பின் உறுப்பினர்களும் ஆளுந்தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் எதிராக கருத்துரைப்பது கவலைக்குரியது.

உலக நடப்புக்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். கஞ்சா பயிர்ச்செய்கையினால் கிடைக்கும் வருமானம் பற்றி சிந்தியுங்கள். தாய்லாந்து கடந்த ஜூன் மாதம் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கியது. இதற்கான யோசனையை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் முன்வைத்தார்.

நிறைவடைந்த ஐந்து மாத காலத்துக்குள் கஞ்சா பயிர்ச்செய்கை ஊடாக தாய்லாந்து 280 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் 450 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளார்கள்.

நாடு என்ற ரீதியில் மோசமான நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின், இவ்வாறான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே ஜனாதிபதி எனது திட்டத்துக்கு கவனம் செலுத்தியுள்ளார்.

கஞ்சா தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட கருத்தை வரவேற்கிறேன். கஞ்சா பயிர்ச்செய்கையினால் கிடைக்கும் வருமானம் மற்றும் ஆயர்வேத நலன் தொடர்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட வகுப்பு நடத்த வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கலாசாரம், பாரம்பரியம் என்ற காரணிகளை காலங்காலமாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றது மாத்திரம் மிகுதியாகியுள்ளது. ஏனைய நாடுகளுக்கு கஞ்சா சிறந்ததாயின், ஏன் நாம் அங்கீகாரம் வழங்கக்கூடாது. தாய்லாந்து தேரவாத பௌத்த நாடு. ஆனால், அவர்கள் கஞ்சாவை பயிர்ச்செய்கை செய்து முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாம் புதையலுக்கு மேல் இருந்துகொண்டு பிற நாடுகளிடம் கையேந்தி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம். இனியாவது இதனை திருத்திக்கொள்ள வேண்டும்.

தாமரை கோபுரத்தை வெள்ளை யானை என விமர்சித்தார்கள். தாமரை கோபுர நிர்மாணிப்புக்கு 114 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 87 மில்லியனை சீனா வழங்கியுள்ளது. சீனாவுக்கு 67 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் சீனாவுக்கு அந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். தாமரை கோபுரத்தை ஒன்றிணைத்த ஒரு பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

நான் முதலீட்டை கொண்டு வந்தேன். சுற்றுலாத்துறைக்கு தேவையான முதலீடுகளை நாட்டுக்காக கொண்டு வருவேன். ஊழல் மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரினால் கலாசார நிதியம் மோசடி செய்யப்பட்டமை பற்றி பேசுங்கள்.

3000 இலட்சம் மோசடி செய்யப்பட்டதை மறைக்கக்கூடாது. அரச அதிகாரிகளினால் இடம்பெற்ற மோசடிகளை எதிர்வரும் காலங்களில் பகிரங்கப்படுத்துவோம். எனக்கு எதிராக திட்டமிட்ட வகையில் சேறுபூசல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. போலியான குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் புண்ணியத்தால் நான் பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுகிறார். என் புண்ணியத்தில் அவர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை அவர் அறியவில்லை. ஆகவே, விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என தெரிவித்தார்.

நோர்வே பிரஜையிடம் 120 மில்லியன் ரூபா மோசடி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது!

நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி 120 மில்லியன் ரூபாவை ஏமாற்றிய இரண்டு பெண்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் இருவரையும் நேற்று (18) கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அவர்கள் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக தனது கட்சியை வளர்க்க ரணில் முயற்சி.” – வாசுதேவ குற்றச்சாட்டு !

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்க  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு / செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு / செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது. எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

அரச செலவினங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்றார்.

“ஜனாதிபதி ரணில் மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும்.” – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.