22

22

புதிய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் உற்றத்திகளை விருத்தி செய்ய எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை! இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படவுள்ளனர்!! கிளிநொச்சி லிற்றில் எய்ட் இல் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார்

நாடு அடிப்படைத்தேவைகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற நிலையிலும் உள்ளுர் உற்பத்திகளைப் பெருக்க அரசு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை என்றும் அரசினுடைய இவ்வகையான தூரநோக்கற்ற செயற்பாடுகள் இளைஞர் யுவதிகளையே அதிகம் பாதிக்கும் என்றும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு சந்திரகுமார் தெரிவித்தார். நவம்பர் 20ம் திகதி கிளிநொச்சி லிற்றில் எய்ட் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அமரத்துவமடைந்த லிற்றில் எய்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சிவஜோதியின் ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மு சந்திரகுமார், அதிகரித்துள்ள அரச உத்தியோகத்தர்கள் இருப்பதற்கே அலுவலகங்களில் இருக்கைகள் இல்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் அரசு இனிமேல் அரச ஊழியர்களை விலத்துவது பற்றி தீவிரமாக சிந்திப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் குறிப்பி;ட்டதாக மு சந்திரகுமார் அங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் இயல், இசை, நாடகக் கலைஞர்கள் வள்ளிபுரம் ஏழுமலைப்பிள்ளை, கணேஸ் விஜயசேகரன், பார்வதி சிவபாதம், செல்லத்துரை விந்தன் ஆகியோர் அவர்களுடைய சேவைக்காக பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் பார்வதி சிவபாதம் அவர்கள் இவ்வாண்டுக்கான 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை வெற்றிகொண்டார். 2022 சிவஜோதி ஞாபகார்த்த விருதை கிழக்குமாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலாவும் சிவஜோதியுடைய தந்தையும் இணைந்து பார்வதி சிவபாதம் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். மற்றைய கலைஞர்களுக்கு ரூபாய் 5000 மும் அவர்களின் சேவையை கௌரவிக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

‘தனது குழந்தைப் பருவம் முதல் இயல் இசை நாடகத்துறையில் தடம் பதித்து பதின்ம வயதிலும் அதில் ஈடுபட்டு கலைத்துறையிலேயே வாழ்க்கைத் துணையையும் தேர்ந்து கலைத்துறையில் தன் அடுத்த தலைமுறையையும் தடம்பதிக்க வைத்தமைக்காக இயல் இசை நாடகத்துறையில் பார்வதி சிவபாதமும் அவருடைய குடும்பத்தினரும் ஆற்றிய பங்களிப்பை கௌரவிப்பதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக காணொலியூடான தன்னுடைய பகிர்வில் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவித்தார்.

மு சந்திரகுமார் தன்னுடைய உரையில் ‘இவ்வாண்டு இறுதியுடன் சில ஆயிரம் பேர் அறுபது வயதையெட்டுபவர்கள், ஓய்வுபெறப் போகின்றனர். அந்த வெற்றிடங்கள் எதுவுமே நிரப்பப்படாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ சேவைகளில் 15 ஆண்டுகள் சேவையாற்றியவர்கள் ஓய்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியிலேயே இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் மேற்கத்தைய சார்புடைய அரசு தற்போது இருப்பக்கரம் கொண்டு போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதைப் பற்றி சர்வதேசமும் தற்போது பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு இனிவரப் போகும் காலங்கள் மிகச்சவாலானதாக அமையும் எனத் தெரிவித்த மு சந்திரகுமார் ‘கிளிநொச்சி மண்ணில் லிற்றில் எய்ட் செய்யும் பணிகள் அளப்பெரியது. பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழில்நுட்ப கல்வியைக் கற்று வெளியேறுகின்றனர். லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் இளைஞர் – யுவதிகளின் எதிர்காலம் விருத்தி குறித்து மிகுந்த கவனம்கொண்டுள்ளார்’ எனக் குறிப்பிட்ட மு சந்திரகுமார், இன்னும் 15 வருடங்களுக்கு அரச உத்தியோகங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கிளிநொச்சியில் உள்ள இளைஞர் – யுவதிகளுக்கு லிற்றில் எய்ட் ஒரு சிறந்த வாய்ப்பு எனத் தெரிவித்தார்.

அறிவு நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா:

‘அறிவு – திறன் – மனப்பாங்கு என்ற மூன்று அம்சங்கள் எங்களின் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பரீட்சைக்காக மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட கலாச்சார அலுவலர் வி குணபாலா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘கருத்துக்களை சிந்தனைகளை கொள்கைகளை உருவாக்கியவர்களே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதனை பின்பற்றுபவர்களே பின்நாட்களில் அதனை வளர்த்தெடுக்கின்றனர். சிவஜோதியின் எண்ணங்களும் அவ்வாறே, இன்று பலர் மத்தியிலும் விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘சிவஜோதியொரு பன்முக ஆளுமை நல்ல கலைஞர்’ எனத் தெரிவித்த வி குணபால ‘நாங்கள் கலைஞர்களை உருவாக்கத் தேவையில்லை, எங்கள் மத்தியில் நல்ல சுவைஞர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் உருவாக வேண்டும’; எனத் தெரிவித்தார். வி குணபாலா தனது உரையில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி ‘எல்லாவற்றையும் அனுபவித்து உணர்ந்துகொள்ள ஆயள் போதாது ஆனால் பல அனுபவங்களை வாசித்து அனுபவித்துக்கொள்ள புத்தகங்கள் நிச்சயம் உதவும்’ என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வி குணபாலாவின் தலைமையுரையைத் தொடர்ந்து பத்தி எழுத்தாளர், நூலாசிரியர், கலை இலக்கிய விமர்சகர் சி கருணாகரன் சிவஜோதி நினைவுச் சிறப்புரை நிகழ்த்தினார்.

அறிவு மட்டும் போதாது. நல்ல எண்ணங்களும் இளையோருக்கு ஊட்டப்பட வேண்டும் – எழுத்தாளர் சி கருணாகரன்:

இளையோரை விருத்தி செய்தல்: அறிவு – ஆற்றல் – ஆளுமை – பண்பு – செயல்திறன் என்ற தலைப்பில் சிவஜோதியின் இளையதலைமுறையினரை முன்நிறுத்தும் தன்மையை விதந்துரைத்தார். தற்போது போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகள் அதீதமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய கருணாகரன் சர்வதேச என்ஜிஓக்களின் புரஜகட் கலாச்சாரத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இது இளைஞர்களின் தவறல்ல அவர்களை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் ஆசிரியர்கள் என் போன்ற சமூகத்தினரதும் தவறு எனச்சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் மட்டும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் 20,000 இளைஞர்கள், யுவதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பொழுதை வீணடிப்பதாகக் குறிப்பிட்ட கருணாகரன், மண்ணின் மைந்தர் என்று மார்தட்டிக்கொள்ள ஆட்கள் இருக்கின்றனர் ஆனால் மண்ணுக்கு சேவை செய்ய ஆட்கள் இல்லை எனக் குறைப்பட்டார். ‘அரசோ வெளிநாட்டுக்கு போய் உழைத்து வரச்சொல்லி இலவசமாகக் கல்வியைக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் கொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புகின்றது. எங்கள் நாட்டில் உள்ள வளங்களை வைத்து உற்பத்திகளைப் பெருக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தன்னுரையில் கருணாகரன் கேட்டுக்கொண்டார்.

‘இன்று கிராமங்களிலும் கூட பட்டதாரிகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருந்தும் அறிவான சமூகத்தில் இவ்வாறான போதைப் பழக்கங்கள் தலைவிரித்தாடுவது எதனால்?’ என அவர் கேள்வி எழுப்பினார். அதனால் அறிவு மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், ‘நல்ல எண்ணங்கள் வளர்த்தெடுக்ப்பட வேண்டும் அதற்கு இயல், இசை, நாடகம், ஓவியம் என கலையம்சங்களும் அவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

‘கடந்த 12 ஆண்டுகள் லிற்றில் எய்ட் கிளிநொச்சி மண்ணில் கணணித் தொழில்நுட்பத்துடன் ஆளுமையையும் வளர்க்கின்றது. இங்கு புரஜக்ற் கலாச்சாரம் இல்லை. புரஜக்ற் எழுதி நிதிசேகரிப்பு நடைபெறுவதில்லை. மாணவர்களே சிரமதானம் செய்கின்றனர். மாணவர்களே பெயின்ற் அடிக்கின்றனர். அதுவொரு குடும்பமாகச் செயற்படுகின்றது’ என்றும் கருணாகரன் தனதுரையில் குறிப்பிட்டார்.

லிற்றில் எய்ட் மாணவர்களின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வுக்கு லிற்றில் எய்ட் மாணவி செல்வி குகப்பிரியா வரவேற்று உரைநிகழ்த்தினார். ஆசிரியர் பி தயாளன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கிளிநொச்சி ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதம குரு முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா சிவஜோதியின் நினைவுகளைக் குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து கிளிநொச்சி கருணா நிலைய வண பிதா எஸ் கே டானியல் சிவஜோதியுடைய நண்பரும் கூட ஆன்மீகத்துக்கூடாகவே ஒழுக்கத்தை கொண்டுவர முடியும் எனத் தெரிவித்தார். பொறுப்பற்ற கடமையுணர்வற்ற மனிதர்களைக் கண்டு சிவஜோதி தார்மீகக் கோபம் கொள்வதாகக் கூறிய அவர் ‘கடவுள் ஏன் இவ்வாறானவர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்குவதில்லை?’ எனத் தன்னிடம் கேட்டபார் என்றும் வண பிதா எஸ் கே டானியல் தன்னுடைய ஆசியுரையில் குறிப்பிட்டார். முன்னைய நிகழ்வு சிவஜோதி ஞாபகார்த்த அரங்காக நடைபெற்றது.

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசாது நாடாளுமன்றில் சிறுபிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் எம்பிக்கள் !

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது (நவ 21.2022) “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார்.”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில்; “கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.” எனவும்  இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

 

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தனின் காணி அபகரிப்பு மோசடி தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமிக்குமாறும் சபைக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாரந்தன் நேற்று (நவ. 21)நான் சபையில் இல்லாதபோது எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். காணி அபகரிப்பு தொடர்பில் ஒரு குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.

காணி அபகரிப்பு தொடர்பில் என்னிடம் உள்ள ஆவணங்களை தருகிறேன்,இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உள்ள ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கனடாவிற்கு  ஆட்களை கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆட்கடத்தல் தொடர்பில் சந்திரகாந்தனிடம் கேட்க வேண்டும்.

அவுஸ்ரேலியாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் ஏபிசி என்ற செய்தி நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியிட்ட செய்தியில் சந்திரகாந்தனின் சகோதரர் என குறிப்பிடப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் என்பவர் ஆட்கடத்தலில் ஈடுப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவை நியமியுங்கள்.

மோசடி தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயார். ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார்.

……….

உண்மையிலேயே இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த தமிழ் மக்கள் தொடர்பில் கிஞ்சித்தும் யோசிப்பதாக தெரியவில்லை. வடக்கில் ஈ.பி.டி.பி கட்சியினர் குறிப்பாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்தேசியக்கட்சிகளை குறிப்பாக கூட்டமைப்பினரை மலினப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டமைப்பினர் பதில் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது தவிர கிழக்கில் பிள்ளையான் , வியாழேந்திரன் ஆகியோர் ஒரு குழுவில் நிற்க அவர்களை இரா.சாணக்கியன், கலையரசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் தாக்கியும் – அதற்கு பதிலாக பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பினரையும் தாக்கி பேசி வருவது வழமையாகிவிட்டதே தவிர மக்கள் பிரச்சினைகளை இவர்கள் பேசுவதாக தெரியவில்லை.

நேற்றைய அமர்வில் மீனவர்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரியுங்கள் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி நேற்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இது தவிர கட்சி அரசியல் தொடர்பில் பல வாதங்களும் – முரண்களும் காணப்பட்டாலும் கூட மலையக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான ஆரோக்கியமான பல நடவடிக்கைகளை மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படியாக பல தென்னிலங்கை, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை நாடாளுமன்றம் தெரிவுசெய்த மக்களுக்காக ஏதாவது செய்துவிட வேண்டும் என செயற்பட்டுக்கொண்டிருக்க வடக்கு – கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களுடைய சொந்த – சுய விருப்பு –  வெறுப்பு அரசியலை செய்யும் சண்டைக்களமாக நாடாளுமன்றத்தை பாவித்துக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டிய – வலியுறுத்த வேண்டிய பல பிரச்சனைகள் வடக்கு- கிழக்கில் மலிந்து போய் காணப்பட நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழாயடி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் சுதாகரித்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. புலி ஆதரவு  அரசியல் பேசுவவோரையும் – தேர்தல் கால வீர வசனங்களை பேசுவதையும் கைவிட்டு உண்மையாகவே மக்கள் பிரச்சினைகளுக்காக செயற்படும் தலைவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்ப முன்வராத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

 

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – துர்நாற்றம் வீசுகிறது என்கிறார் புத்திக பத்திரன !

வரவு செலவுத் திட்டம் விஷம் ஊட்டப்பட்ட கேக் துண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கேக்கின் ஐசிங்கில் இரண்டு அல்லது மூன்று மலர்கள் தூவப்பட்டிருந்தாலும், உள்ளே துர்நாற்றம் வீசுவதாகவும் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே புத்திக பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த பெண் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத பலரும் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி பயணப்பட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் மத்திய தர வர்க்கத்தினர் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அதிகம் பயணப்படுவோராக காணப்படும் நிலையில் இந்த இக்கட்டான நிலையை நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல மோசடியாளர்கள் ஏஜென்சி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடுகின்றனர். அண்மையில் வியட்னாம் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தமிழர்களின் விவகாரம்,  ஓமானில் வேலைக்கு என அழைத்துச்செல்லப்பட்டு விபச்சாரத்துக்கு பெண்களை அனுப்ப முயற்சித்த விவகாரம் போன்றவற்றின் பின்னணியில் இந்த மோசடியாளர்களே உள்ளனர். இது தவிர ருமேனியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக போலிப் பிரச்சாரம் செய்த இரு நபர்கள் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலை எல்லா பகுதிகளிலும் தொடர்கிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக இன்றையதினம் (22) மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பொறப்பட்ட 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சித்திரை மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அரச அலுவலக பெண்களின் ஆடைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை – ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்கிறது பொது நிர்வாக அமைச்சு!

அரச அலுவலகங்கள் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

சுற்றறிக்கை குறித்து பல தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், பாடசாலைக்கு வசதியான ஆடைகளை அணிவது தொடர்பில் கல்வி அமைச்சு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

எனவே, பொது நிர்வாக சுற்றறிக்கைகளை எந்த பாடசாலைகளுக்கும் சட்டப்பூர்வமாக உரிமை இல்லை.

இந்த சுற்றறிக்கையில் அலுவலக ஊழியர்களுக்கு மாத்திரமே ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் இப்போது எங்கே..?

உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல்   இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி – 2023 முதல் பதிப்பை அறிவிக்கும் நிகழ்வின் பின்னர், கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் 2023 ஜனவரி 7 முதல் 9 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட 503.2 கிலோ எடையுள்ள நீலக்கல்  கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த, உலகின் மிகப்பெரிய நீலக்கல்   கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி, சுவிட்சர்லாந்தில் உள்ள Gubelin இரத்தினக்கல் ஆய்வகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

குறித்த கல்லுக்கான கொள்வனவாளர் ஒருவரை நாம் இதுவரை கண்டறியவில்லை. எனவே, வாடிக்கையாளர் குறித்த கல்லை துபாய்க்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். துபாயில் குறித்த கல்  தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

“தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் தேவை” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேசத்தையும், தமிழ் தலைமைகளையும் ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது என்றும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்று குறிப்பிடும் போது அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுவோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குங்கள் – பாராளுமன்ற தரையில் அமர்ந்து திலிப் வெதராச்சி போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப் வெதராச்சி இன்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரியே அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தனது உரையை நிகழ்த்திய பின், சட்டசபை அரங்கின் நடுவே வந்து தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

பல நாள் படகுகள் பல நாட்களாக கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகவும், நியாயமான விலை கிடைக்காமல் மீனவர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவதற்கு நடவடிக்கை!

பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்பதை நீக்குவது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பிறப்பு சான்றிதழில் தற்போது காணப்படும் சிங்களவர் தமிழர் பேகர் முஸ்லீம் இந்திய வம்சாவளியினர் போன்ற பதங்கள் நீக்கப்படும் என பதிவாளர் நாயகம்; பிரசாத் அபேய்விக்கிரம தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தற்போது காணப்படும் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அளவில் காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் அதேவேளை தேசிய இனம் என்பதை அகற்றுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரத்திற்கு ஏற்ப பிறப்பு சான்றிதழில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் பிறப்பு சான்றிதழை ஒருவர் தனது தாய்மொழியிலேயே பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் இலங்கையில் சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் வெளிநாட்டிற்கு செல்லும்போது பிறப்பு சான்றிதழை மொழிபெயர்க்கவேண்டிய தேவையில்லை,என தெரிவித்துள்ள பதிவாளர் நாயகம் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 தேசிய அடையாள அட்டையை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். விரும்பினால் தேசிய இனம் என்பதை இணைத்துக்கொள்ள முடியும், எனினும் தந்தை தாயின் திருமண நிலை காணப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றுவந்த கணிதபாட ஆசிரியர் கைது !

களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் 1,299 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.