09

09

பாராளுமன்ற ஜனாதிபதி அலுவலகத்துக்கு ஏன் கட்டில் , மெத்தை..? – ஜனாதிபதி தரப்பிடம் எதிர்க்கட்சி கேள்வி !

பாராளுமன்றில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.

குறித்த பொருட்கள் தனியார் நிறுவனம் ஒன்றினால் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் புத்திக பத்திரண பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பான ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த அவர், இருவர் தூங்கக்கூடிய கட்டில் – மெத்தை மற்றும் கதிரைகள் ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

தனியார் நிறுவனத்தினால் இந்த பொருட்கள் எதற்காக வழங்கப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழில் மாண்டஸ் சூறாவளி மற்றும் குளிர் தாக்கம் – 450க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி !

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன.

நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.

மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி தெரிவித்துக் கொண்டார்

குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தவும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை!

இந்நாட்டுக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் நெற்செய்கை தோல்வியடைந்த நிலையில் இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற கணிப்பு காரணமாக இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய நுகர்வோர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இவ்வருடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 675,288 மெற்றிக் தொன்களாகும். அதற்கு செலவிடப்பட்ட தொகை 73,627 மில்லியன் ரூபாய்களாகும்.

எவ்வாறாயினும், கடந்த சிறு போகத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளமை மற்றும் இவ்வருட பெரும் போகத்தில் 675,600 ஹெக்டேரில் நெற்பயிற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு 2023ஆம் ஆண்டு எமது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்த நிலையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரி உள்ளிட்ட இரண்டு சட்டமூலங்கள் பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம் !

பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலங்கள் பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (09) பகல் முழுவதும் இடம்பெற்றதாகவும், பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும் பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டமூலத்துக்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்காக எதிர்க்கட்சியினால் ஒரு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிர்க்கட்சியினால் ஒரு பிரிவு கோரப்பட்டது. இதன்படி, சட்டமூலத்துக்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்காக எதிர்க்கட்சியினால் ஒரு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, இரண்டு சட்டமூலங்களும் பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதன் மூலம், திருத்தப்பட்ட உள்நாட்டு வருமான வரி சட்டம் 2023 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அரசியலமைப்பு பேரவை தெரிவில் தர்மலிங்கம் சித்தார்த்தன் பெயர் நிராகரிக்கப்பட்டது இனவாதத்தாலா..?

அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் சார்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது அது, தவிர்க்கப்பட்டமையானது, இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர், எதிர்க்கட்சி, தரப்பில் தவிர்க்கப்பட்டமை இனப்புறக்கணிப்பு என்ற அடிப்படையிலும் சிங்களவர்களின் பெரும்பான்மைவாதம் என்ற அடிப்படையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, நேற்று கருத்து வெளியிட்டதாக தெரிவித்தே, உதய கம்மன்பில தமது கருத்தை வெளியிட்டார்.

அதிகாரப்பரவலாக்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாதீட்டுக்கான வாக்கெடுப்பின்போது, அதனை தவிர்த்தது.

இது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். இந்தநிலையில் அவர்களின் பெயர் அரசியல் அமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்கப்பட்டால், அவர்கள் அந்த பேரவையையும் அதிகாரப்பரவலாக்கல் விடயத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதற்காகவே, சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதற்கு எதிராக தமது பெயரை பரிந்துரைத்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் 152 மாடுகள் பலி !

சீரற்ற வானிலையால் 155 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வரை கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக 157 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 162 மாடுகள் உயிருக்காக போராடும் நிலையில் சிகிச்சையுடன் கூடிய பாராமரிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவி – அமெரிக்காவே போரை தூண்டுகிறது என குற்றஞ்சுமத்தும் ரஷ்யா !

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டொலர் மதிப்பிலான அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் “உக்ரைன் மீதான போர் தொடரந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு அமெரிக்கா போரில் தலையிட்டுள்ளமையும் – அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதுமே” காரணம் என ரஷ்யா சாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாச பெற்றுள்ளார் – அமைச்சர் டயானா கமகே மனுத்தாக்கல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை மற்றும் பதவிகளை வகித்து வருவது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா ஊடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததுடன், சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களாக நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஆதாரமாக டயானா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரிடமிருந்து சத்தியக் கடதாசியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை சவால் செய்ய ரஞ்சித் மத்தும பண்டார மேற்கொண்ட நீதித்துறை நடவடிக்கையையும் தனது மனுவில் ஆதாரமாக முன்வைத்துள்ளார்.

, ஒரு கட்சி உறுப்பினர் மற்றொரு கட்சியின் உறுப்பினராக இருந்தால், அவர் அல்லது அவள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் அத்தியாயம் 3 இன் பிரிவு 3 (3) குறிப்பிடுகிறது

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவருமே ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை வைத்திருப்பதும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிப்பதும் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை வழங்குமாறு டயானா கமகே நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மனுவை பரிசீலித்ததன் மூலம் மேற்படி பதவிகளில் இருப்பவர்களை இடைநிறுத்த உத்தரவிடுமாறும் டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

கைதிகளான ரஷ்யாவின் ஆயுதக்கடத்தல்காரனையும் – அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையையும் மாற்றிக்கொள்ளும் ரஷ்யாவும் அமெரிக்காவும் !

12 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதக் கடத்தல்காரன் விக்டர் பௌட்டை மீட்டு, ரஷ்யக் காவலில் இருந்த அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை விடுவிப்பதில் அமெரிக்க அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது .

முப்பத்திரண்டு வயதான பிரிட்னி கிரைனர் அமெரிக்க தேசிய கூடைப்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான வீராங்கனை . அவர் ஒரு ஒலிம்பிக் சாம்பியனும் கூட.

கடந்த பெப்ரவரியில், க்ரைனர் தனிப்பட்ட பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றபோது ‘கஞ்சா எண்ணெய்’ வைத்திருந்த குற்றச்சாட்டில் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா எண்ணெய் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக இருந்தாலும், ரஷ்யாவில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய நீதிமன்றத்தால் கிரைனருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கிரைனரை விடுவிக்கும் முயற்சியில் பைடன் நிர்வாகம் தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கூடைப்பந்து வீரர் கிரைனர் சார்பாக, அமெரிக்க சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் போட்டை வழங்க வேண்டும் என ரஷ்யா வழக்கு தொடர்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்த கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

அமெரிக்க ஏஜெண்டுகள் விக்டர் பௌட்டை தனி விமானத்தில் அழைத்து வந்து ரஷ்ய முகவர்களிடம் ஒப்படைத்தனர், ரஷ்ய முகவர்கள் கிரைனரை அழைத்து வந்து அமெரிக்க ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்தனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் பௌட், உலகின் மிகவும் பிரபலமான துப்பாக்கி கடத்தல்காரர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு,பௌட் ஆயுதக் கடத்தலுக்குத் திரும்பினார்.

2008 ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பெங்கொக்கில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​​பாதுகாப்புப் படையினரால் பௌட் கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

சீனாவை வெளியேற சொன்ன இரா.சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் !

பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.