18

18

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி – பிரான்சை பந்தாடி வெற்றி வாகை சூடியது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா !

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கட்டாரில் கடந்த மாதம் 20-ந்திகதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம்  தோற்று வெளியேறியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்துட ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார்.  போட்டி சமன் ஆனதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது. அர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), மற்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் ஆர்ஸென்டீனாவுக்காக இந்த சாதனையை  நிகழ்த்தியுள்ளார். இந்த இறுதி போட்டியில் வென்றதன் மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது.

. முன்னதாக தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போட்டது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.

பதவி விலகுகிறார் ரொனால்டோவை களமிறக்க மறுத்த போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் !

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் களமிறக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள்.

இதனால் போர்த்துக்கல்லின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பயிற்றுவிப்பாளர்,

“நான் ரொனால்டோவை வெளியில் அமர வைத்ததுக்கு வருத்தப்படவில்லை. அவர் அணியில் விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும். அதற்காக ரொனால்டோ திறமையான வீரர் இல்லை என கூறவில்லை. போர்த்துக்கல் அணி நன்றாக விளையாடியது, மொரோக்கோ அணி அதை விட நன்றாக விளையாடியது.”என கூறியுள்ளார்.

இவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கோவத்தை அதிகரித்தது. இந்நிலையில் அவர் தனது பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை 68 வயதுடைய போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ போர்த்துக்கல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

“வெளிநாட்டு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு இலங்கை பெண்களை அனுப்ப முடியாது.”- அமைச்சர் மனுஷ நாணயக்கார

“இலங்கையில் இருந்து வெளிநாட்டு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு பெண்களை அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு தொழில்வாய்ப்புகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும். அதேபோன்று போலி முகவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி செல்பவர்களும் இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேருடுகின்றனர்.

அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். அவ்வாறு பதிவு செய்து செல்பவர்கள், அங்கு ஏதாவது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதுதொடர்பில் எமக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன்  5வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் இருந்தது.  என்றாலும் வாழ்க்கைச்செலவு காரணமாக இவ்வாறான தாய்மார்கள் சட்ட விரோதமான முறையில் செல்கின்றனர்.

அதனால் இந்த சட்டத்தை தற்போது இலகுவாக்கி, 2வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலவதற்கு  தடைவித்திருக்கின்றோம். அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறு அனுப்புவதாக இருந்தால், அவர்கள் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச்செல்பவர்கள் அங்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான தொழில் பயிற்சி வழங்கியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பப்படுவார்கள்.  அத்துடன் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

என்றாலும் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்கின்றனர். நாட்டில் தற்போது நூற்றுக்கு 24வீதமான பெண்களே வெளிநாட்டு தொழிலுக்கு சென்றிருக்கின்றனர். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டமைப்பை முழுமையாக டிஜிடல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்த துறையில் ஏற்படுகின்ற மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

“எங்களிடமும் அணுகுண்டு உள்ளது. எப்படி பதிலளிக்க வேண்டும் என எங்களுக்கும் தெரியும்.”- பாகிஸ்தான்

“எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது.” என பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார்.

அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,

“ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்றார். இந்த கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் இந்திய – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகளின் கருத்துக்கள் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ,

“ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.  பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு’ என்று தெரிவித்திருந்ததது.

அதேவேளை, பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் கொடியை எரித்து பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எங்களிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி லாகூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைப்பாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. தாக்கப்படும்போது பாகிஸ்தான் அமர்ந்திருக்காது. சமபலத்துடன் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய மதத்தினரை பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புபடுத்துகிறது’ என்றார்.

குடிபோதையில் முதலாம் வருட மாணவனை தாக்கிய சிரேஷ்டமாணவன் – பேராதனை பல்கலைக்கழகத்தில் சம்பவம் !

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அதே பீடத்தின் முதலாம் வருட மாணவனை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காயமடைந்த முதலாம் வருட மாணவன் மருத்துவ சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பல்கலைக்கழகத்தின் Ivar Jennigs விடுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கலைப்பீட முதலாம் வருட மாணவன் எனவும், அவர் நோர்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த போது நான்கு மாணவர்கள் வந்ததாகவும் அவர்களில் ஒருவர் தன்னை தாக்கியதாகவும் மாணவர் தெரிவித்துள்ளார்.

“அரசுக்கு எதிரான போராட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் இருந்தனர்.”- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“அரசுக்கு எதிரான போராட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் இருந்தனர்.” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை ஓராண்டுக்கு ஒத்திவைக்கும் நிலை அரசுக்கு ஏற்பட்டது. தேர்தல் தள்ளிப்போகும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அப்படியொரு சித்தாந்தத்தை நாட்டில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.

கடந்த காலங்களிலே நடந்த விடயங்கள் திருத்தப்படுவது தாமதமானால் பழைய முறையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்.

ஐ.தே.க, ஸ்ரீலங்கா கட்சி, மொட்டுக் கட்சி ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒரே கொள்கைக்கு வந்திருப்பது இந்த தருணத்தில் மிகப்பெரிய சாதனையாகும். தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். ஜே.வி.பி உட்பட சில கட்சிகள் எப்போதும் பெருமையடிப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை.

அமைதியான போராட்டத்தை சிலர் அபகரித்தனர். போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா வியாபாரிகளும், விபச்சாரிகளும் அதில் இருந்தார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துதல், வீடுகளை எரித்தல் போன்றவை போராட்டத்தில் இருந்தே ஆரம்பித்தது.

நாட்டில் நிம்மதியாக வாழ்வது, தாம் பெறும் சம்பளத்திற்கு ஏற்ற பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவது போன்ற விடயங்களைத் தவிர மற்றுமொரு போராட்டத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரும்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கிறது. பின்னர் போராட்டம் தொடங்குகிறது.

இந்த நெருக்கடியை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். தனித்தனியாக செயற்படுவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது . இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத் தவிர உண்மையான தேர்தலின் தேவை ஒன்று அல்ல.நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

“சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி ரணிலுடன் பேசத்தயாராகியுள்ளோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

திருக்கோவிலில்  நேற்று (17) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே இதை தெரிவித்தார் .

தொடர்ந்து பேசுகையில்,

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம்

இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது.

அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி தெளிவாக எடுத்துரைப்போம்.

அதாவது  வடக்கு கிழக்கிலுள்ள   தமிழ் மக்கள் சரித்திரமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அதி உச்ச அதிகார பகிர்வு தரப்பட வேண்டும்.

இதுவே எமது தெளிவான தீர்க்கமாக முடிவாக இருக்கின்றது. இதனை நாங்கள் ஜாதிபதியிடம் நிச்சயம் தெளிவுபடுத்த இருக்கின்றோம். ரணிலை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதெல்லாம் இப்பொழுது பிரச்சனை அல்ல.

எமது தீர்வை அங்கு சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் இப்பொழுது பிரச்சனை. கடும் சிங்கள தேசியவாதம் உருவாகின்ற பௌத்த சம்மேளனம் போன்ற அரங்குகளில் நாங்கள் சமஷ்டி பற்றி பேசி இருக்கின்றோம். அவர்கள் அதனை மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள் .

இந்த நாட்டிலே தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றம்  இடம் பெற்றது. தேர்தல் இன்றி எந்த ஆட்சி மாற்றமும் இதுவரை இடம் பெறவில்லை . ஆனால் அண்மையில் காலிமுகத்திடலில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆம் அசைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மேல் இருந்த கோட்டா முதல் மொட்டு அரசாங்கம் வரை கவிழ்த்து விட்டது.

1960 களில் இராணுவ புரட்சி இடம்பெற்றது. அது கைவிடவில்லை. 1971களில் ஜே.வி.பி. புரட்சி ஏற்பட்டது. அதுவும் கைகூடவில்லை.1988 களில் ஆயுதம் தூக்கி போராடினார்கள். அதுவும் கைகூடவில்லை. இடையிலே எமது இளைஞர்கள் பெருநிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் சில தசாப்தங்கள் வைத்திருந்து போராடினார்கள். அதுவும் கைகூட வில்லை .

ஆனால் இந்த வருட நடுப்பகுதியில் கொழும்பிலே இடம்பெற்ற போராட்டம் என்பது பல வெற்றிகளை தந்து இருக்கின்றது .

2009 நவம்பரில் 69 லட்சம் வாக்குகளை பெற்று வந்த ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார் .அதன் பின்பு அந்த பொதுத் தேர்தலிலே 68 லட்சம் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை அரசை அமைத்த அந்த அரசும் கவிழ்ந்தது .ஆகவே அந்தப் போராட்டத்தை நாங்கள் சாதாரணமாக நோக்கக்கூடாது .

இது ஒரு பாடம். இலங்கைக்கு தேர்தல் மூலமாக இல்லாமல் ஒரு போராட்டம் மூலமாக ஆட்சி அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

நான் பாராளுமன்றத்தில் இப்பொழுது  சமஸ்டி பற்றி பேசுகின்றேன். யாரும் வாய்திறப்பதில்லை. அன்று சமஸ்டி என்றால் கூக்குரலிடுவார்கள்.

ஆனால் இன்று அதனை கூறுகின்ற பொழுது அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ ஒரு மௌனத்தோடு கவனிக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் அந்த மாற்றம் தென்படுகின்றது.

எனவே நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையை நாங்கள் எதிர்கொள்வோம். என்றார்.

யாழ்ப்பாண கடற்கரையில் 130 அகதிகளுடன் வந்து ஒதுங்கிய மியன்மார் நாட்டு கப்பல் !

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கட்டைக்காட்டு கடற்பரப்பிலிந்து 5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு கரை ஒதுங்கி வந்த நிலையில் பிரதேச கடற்தொழிலாளர்களினால் இது தொடர்பில் சிறிலங்கா கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த படகிலிருந்தவர்களை மீட்கும் பணிகளுக்காக 4 கடற்படைக் கப்பல்கள் அனுப்பி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,

குறித்த படகில் அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

 

சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி !

புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை முன்னெடுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் அதிகப்படியான அரிசி கையிருப்பு, அரிசியின் விலை வீழ்ச்சி, மற்றும் விவசாயிகளின் வருமானம் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி அரிசி இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உல்லாச விடுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்கள் கைது !

பெந்தோட்டை – போதிமலுவ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உல்லாச விடுதியில் சிலர் போதைப்பொருள் பாவனையுடன் விருந்துபசாரம் ஒன்றை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் வத்தளை, கொழும்பு – புதுக்கடை, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளி, வலஸ்முல்ல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.