20

20

தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை !

தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று  பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அக்டோபர்  2021 இலிருந்து டிசம்பர்  2022 வரை  25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

2021வரை பிறப்பு பதிவு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு சிறப்பு தூதரக முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும், பிரதி உயர்ஸ்தானிகர் ரீ. வெங்கடேஸ்வரனின் முயற்சியால் இலங்கை பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவை யாவும் இலங்கை அரசின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன.

மாநிலத்தில் உள்ள புனர்வாழ்வு முகாம்களைப் பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சரிடமும் தமிழ்நாடு மாநில அரசிடமும்  இணக்கப்பாட்டை கோரியுள்ளது. மேலும், அந்த புனர்வாழ்வு முகாமுக்குள் பிரவேசிப்பதற்கும் அத்தகைய முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14,000 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து ஆவணங்களும் சீராக இருந்தால் விண்ணப்பதை சமர்ப்பித்த அதே நாளில் தூதரக பிறப்புச் சான்றிழை எந்தவித தாமதமும் இன்றி பிரதி தூதரகம் வழங்குகிறது.

மேலும், குடியுரிமை விண்ணப்பமும்  ஏக காலத்தில்   இந்த பிரதி தூதரகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுயமாக முன்வந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,  பதிலளித்த அவர், ‘ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக சுமார் 500 இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பி முடிந்தது’ என்றார்.

போதைப்பொருள் பாவனைக்காக பிச்சை எடுக்க அனுப்பப்படும் சிறுவர்கள் !

போதைப்பொருள் பாவனைக்காக, சிலர் சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்

இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் சோதனைகளின் போது மாணவர்களின் புத்தகப்பைகளில் வெற்று உணவுப் பெட்டிகளே உள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் கவலை !

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில்,பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது,அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும்,பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலங்காலமாக, நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும், நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதி எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹிட்லரின் நாசி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கு – குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 97 வயது மூதாட்டி !

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் இராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூட்ங்களாக செயல்பட்டன. நாசி கான்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

நாஜி வதை முகாமில் ஆயிரக்கணக்கானோரை கொன்ற வழக்கில் 97 வயது மூதாட்டி  குற்றவாளி என அறிவிப்பு | 97-Year-Old Woman Convicted For Role In Murder Of  Thousands At Nazi Camp

இந்த நாசி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வதைக்கூடங்களில் பணியாற்றி கைதிகளின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், நாசி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாசி வதை முகாமில் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்னர் என்ற அந்த மூதாட்டி, 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இறுதி விசாரணையில் 10500 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை வழங்கி இட்ஸேஹோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றங்கள் நடந்தபோது அவரது வயது 18 வயது என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார். இந்த வதை முகாமில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர். அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிப்பு பிரச்சாரத்தில் சிக்கிய யூதர்களும் அடங்குவர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட 54 அரச நிறுவனங்கள் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தில் !

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட 54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டமீட்டி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த 54 நிறுவனங்களும் வருடாந்தம் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தில் இயங்குவதாகவும் கடந்த வருடத்தில் இந்த அனைத்து நிறுவனங்களும் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டமீட்டியுள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை 420 அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் அரசாங்க பராமரிப்பில் உள்ளதாகவும் அத்துடன் அரச நிறுவனங்களின் 32 நிறுவனங்கள் மோசடி நிறைந்ததாகக் காணப்படுவதாகவும் அதற்கான தரவுகளை ‘கோப்’ அண்மையில் வெளியிட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நட்டமீட்டும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாக முறையே பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை மின்சாரசபை ஆகியன இனங்காணப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் கடந்த 3 வருடங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாவை நட்டமீட்டியுள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை பெற்றோலியக கூட்டுத்தாபனமானது இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் 62 ஆயிரத்து 800 கோடி ரூபாவை நட்டமீட்டியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் 24 ஆயிரத்து 800 கோடியையும் மின்சார சபை 4700 கோடியையும் நட்டமீட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க நட்டமீட்டும் 39 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாக திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் கைது !

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.

இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பி வந்துள்ளார். இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் திகதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவு செய்தது.

இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் திகதி சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, கைப்பேசிகள், சிம் அட்டைகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், மடிக்கணினிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுஷ்க ரோஷான், வெள்ளே சுரங்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முகமது அஸ்மின் மட்டும் ராமநாதபுரம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் வேறு சில குற்றங்களுக்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

2021ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கொச்சிக்கு அருகில் உள்ள அங்கமாலியில் கைது செய்யப்பட்டார். ஹாஜி சலீமுடன் இருந்த தொடர்புக்காக கைது செய்யப்பட்ட அவரை விசாரித்ததில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் கொடுக்கல் – வாங்கள் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இந்தியாவைத் தளமாகப் பயன்படுத்தி, இலங்கைக்கு போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கடத்துவதில் முக்கியப் புள்ளியாக சுரேஷ் ராஜன் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இடை மறித்த பாதுகாப்புப் படையினர், அதனைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாகவே கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், இந்த ஒன்பது பேரையும் கைது செய்துள்ளனர்.

மூடப்படுகிறது அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் !

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும்.

இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.