January

January

யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டு கலாச்சாரம் – குடும்பத்தலைவர் ஒருவர் மூவரால் வெட்டிப் படுகொலை!

போதைப்பொருள் மாத்திரைகளுடன் யாழில் 23 வயது இளைஞன் கைது!

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பலாலி விமானப்படை புலனாய் பிரிவுகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிசார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர் நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ரகசிய ஆவணங்களை பதுக்கிய அமெரிக்க ஜனாதிபதி – 13 மணி நேர தேடுதல் வேட்டையில் F.B.I !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதியாக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோ பைடன் வீட்டில் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100 !

பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல உள்ளூராட்சி சபை மற்றும் மஹியங்கனை உள்ளூராட்சி சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஹாலிஎல பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னாவ உள்ளூராட்சி சபைக்கு ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதுடன், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை, கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டம் சேருவில உள்ளூராட்சி சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 10 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேச்சைக் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கலவான உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னிலை சோசலிச கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 06 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்.” – அனுரகுமார

“திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் ரணிலுக்கு எதிரான வாக்குகள். அப்படியாயின் ரணிலால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்து வைத்திருப்பது போல் இங்கு திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தினால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவரும். அவர்கள் படுதோல்வியடைவார்கள் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத இந்த அரசால் ஆட்சி செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசு தோல்வியடைந்தால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைக் கேட்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும். அப்போது அதிலும் இந்த அரசு தோல்வியும். அப்போது ஆட்சி கலையும். ஜனாதிபதி இல்லாமல் போவார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை !

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்தத் தடை குறித்து அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்ட போதிலும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய அதிகாரிகள் சபையை ஏற்றுக்கொள்ளாததால், முன்னாள் பொதுச் செயலாளரின் பெயருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மூன்றாம் தரப்பாக தலையிட்டமை, விளையாட்டு அமைச்சினால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளாமை மற்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் முன்னர் இணங்கிய விதிகளுக்கு அமைய செயற்படாமை போன்ற காரணங்களினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது.

தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்தி கொலை செய்த மகன் !

இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்கிப்டன் நகரில் பெற்ற மகனே தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் யார்ஷியர் என்ற பகுதியில் 37 வயதுடைய டேவிட் என்ற நபர் தன் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார். இருப்பினும் மீண்டும் அவர் மன நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தன் வீட்டில் தாயை உடலில் கத்தியால் 90 இடங்களில் குத்தியும், தந்தையை 180 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். பின்னர், அவரே காவல்துறைக்கு அழைப்பை எடுத்து அவர்கள் வரும் வரை வீட்டில் காத்திருந்தார்.

காவல்துறையினர் வந்ததும் டேவிட்டை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாததால் இலங்கை மக்களிடையே அதிகரிக்கும் மனநோய் பிரச்சினை !

“இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக பலரும் மன நோயாளிகளாக மாறி வருகிறது. .

பொருளாதார நெருக்கடியின் பின்னர் மனநல சிகிச்சைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

மன நோய்க்கு உரிய சிகிச்சையினை பெற்று வந்தவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதன் காரணமாக அவர்களுக்கு மீண்டும் மனநோய் அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமக்கு எதிர்காலம் இருக்காது எனும் விரக்தியால் இளைஞர்,யுவதிகள் மத்தியிலும் மனநோய் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத அழுத்தங்கள் மற்றும் பணப்பற்றாக்குறை என்பன மேலும் இளைஞர்,யுவதிகள் மத்தியில் மனநல பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது என மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.

உரிய நேரங்களில் தமது கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியாமல் இருக்கின்ற பிள்ளைகளிடமும் மனநோய் அதிகரித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா காலப்பகுதியில் இணைய வழி கற்பித்தல் காரணமாக பெரும்பாலான பிள்ளைகள் தொலைபேசிக்கு அடிமையானதனால் மனநோய் விகிதம் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபென் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை !

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு அவரது தாயார் வழங்கிய சிறுநீரகம் பொருத்தப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணர் தம்பிலி தவசேந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமான சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“மாசுபட்ட நிலையில் இலங்கையில் காற்று – 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எச்சரிக்கை !

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையுடன் தூசி துகள்களின் பரவல் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஏனையோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் இந்நிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.