07

07

“போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கடலட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு இன்று (07)  விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கடற்தொழிக்கு  இடையூறாக அமைந்துள்ள அட்டைப்பண்ணைகளை அகற்றக் கோரி இன்று நுாறாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  தாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் தங்களுடைய வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அட்டைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டு  வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போர் எப்போது முடியும்..? – உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு !

ரஷ்யா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷ்ய படைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷ்யா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி ; இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷ்யா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது. புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷ்யா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷ்யா துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்” என்றார்.

 

150 பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 55 பேர் கைது !

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆசிரியருடன் வாக்குவாதம் – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6வயது சிறுவன் !

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டான். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

 

துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. இப்பள்ளியில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து மாணவன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

போலீஸ் காவலில் உள்ள மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

பிறந்த குழந்தையை கொலைசெய்து மலசலகூடத்தில் மறைத்து வைத்த 23வயது தாய் கைது !

பிறந்த உடனேயே குழந்தையைக் கொன்று சடலத்தை பையில் போட்டு வீட்டில் உள்ள கழிவறையின் பாத்திரம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த 23 வயதுடைய தாயை சந்தேகத்தின் பேரில் தெரிபஹ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தமக்கு கடுமையான வயிற்றுவலி உள்ளதாகக் கூறி, தெரிபஹ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு தப்பியோடியதில் டாக்டர் சந்தேகமடைந்து இது குறித்து அப்பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவித்து விசாரணை நடத்துமாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் அவரது வீட்டுக்குச் சென்றபோது, மலசலகூடத்தில் ஒரு பையில் வைத்து பாத்திரமொன்றில் மறைத்து பெண் சிசுவின் சடலம் இருப்பதைக் கண்டு வைத்தியசாலை வைத்தியர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்தே சந்தேகத்தின் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ல் 50 வீதத்தால் குறைவடைந்து மதுபான விற்பனை !

வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை கலால் திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான கலால் வருமானம் 140 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வருடம் கலால் வருமானம் 170 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஆபத்தான வேகத்தில் பரவும் எச்.ஐ.வி தொற்று !

அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து காலி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் தர்ஷனி விஜேவிக்கிரமவின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் 25 எச்ஐவி நோயாளிகளும் அதற்கு முந்தைய ஆண்டில் 36 பேரும் கண்டறியப்பட்டனர். இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலும் நோயாளிகள் இருப்பார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை நாட்டிலிருந்து 427 நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 4831 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எய்ட்ஸ் ஆபத்தான வேகத்தில் பரவி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் செய்தி ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக கடனாளிகளுடன் உறுதிமொழிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மேல் படிப்புக்காக 42,000 மாணவர்கள் பதிவு !

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 42,000க்கும் அதிகமான மாணவர்கள் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான பதிவுக் காலம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், அந்த முடிவுகள் வெளியானதும், மேலும் 5,000 பதிவுகளை எதிர்பார்க்கிறோம் என்றும் பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதியின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.