08

08

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகமை என்ன..? – கல்வி நிலையில் பின்தங்கி இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் !

நாடாளுமன்றத்தில் உள்ள 208 உறுப்பினர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனினும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/?cletter=A

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், நோகராதலிங்கம் ஆகியோர், உயர்தரம் வரை பயின்றுள்ளதுடன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஐ.சி.எம்.ஏ இல் நான்காம் தரத்தை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெநெரம். தவராசா கலையரசன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை பயிற்றுள்ளதாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை தலிபான்கள் வழங்கவேண்டும் – ஐ.நா வலியுறுத்தல் !

தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.

என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார். ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

“இலங்கைக்கு வழங்கப்படும் நிதிகள் நட்டங்களை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதே நிதி வழங்குபவர்களின் முக்கிய கரிசனை.“- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கை மின்சாரசபையின் நிலைமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட மோசமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்துவதே ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

தனியார் மயப்படுத்துவதற்கு அல்லது மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் பல நிறுவங்களை அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மயப்படுத்தப்படவுள்ள மறுசீரமைக்கப்படவுள்ள அரசநிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதற்காக இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் புதிய நிறுவனமொன்று ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிதிகள் நட்டங்களை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதே நிதி வழங்குபவர்களின் முக்கிய கரிசனை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நிதி வழங்கும் சமூகத்தினர் தாங்கள் வழங்கும் நிதியை சுகாதார உற்பத்தி துறைகளில் பயன்படுத்தவேண்டும் என விரும்புகின்றனர் இதன் காரணமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டுசெல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அரசதுறையைஅரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பான உத்தேச திட்டம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது தனியார் மயப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் எதிர்கொண்டுள்ள நஷ்டங்கள் காரணமாக அதனை தனியார் மயப்படுத்துவதே ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இழப்புகளை சரிசெய்வதற்கு வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அதன் நஷ்டத்தினை சரிசெய்வதற்கு செலவு பிரதிபலிப்பு விலைப்பொறிமுறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை பொறுத்தவரை கடனே அதன் பிரச்சினை கடனை திருப்பி செலுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஐந்துவருடங்களை கோரியுள்ளது எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மின்சாரசபையின் நிலைமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட மோசமாக உள்ளது 200 பில்லியனிற்கும் மேல் நஷ்டம் என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட்டை அதிகரிப்பதா அல்லது மின்கட்டணத்தை அதிகரிப்பதா என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டியுள்ளது. மின் உற்பத்திக்காக நுரைச்சோலை மின் நிலையத்திற்கு நிலக்கரியை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இலங்கை மின்சார சபைக்கான திட்டங்கள் குறித்து பதிலளித்துள்ள ஜனாதிபதி அதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு நாட்டிற்கான ஒரே வழி மறுசீரமைப்பே எனவும் தெரிவித்துள்ளார்.தனியார் மயப்படுத்தவேண்டிய மறுசீரமைக்கவேண்டிய நிறுவனங்களாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இலங்கை மின்சாரசபை லங்கா ஹொஸ்பிட்டல் ஹில்டன் கொழும்பு ஸ்ரீலங்கா டெலிகோம் வோட்டர் எட்ஜ் ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம – கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி !

போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது.

பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பாரதிபுரம் மத்திய வீதி ஊடக பாடசாலை முன்றலை அடைந்ததும் நிறைவடைந்தது.

குறித்த பேரணியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இடம்பெறும் போதைப்பொருள் விற்பனையை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை இந்த பேரணியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்.” – சி.வி.விக்னேஸ்வரன்

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலிட முன் வரும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவாளர்கள், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், சேவைத்துறை சார்ந்தவர்களுடன் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்தியாவுடன் இலகுவில் இணைக்கப்படக் கூடிய மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தனிநபர் மீது நான்கு பேர் கொண்ட குழு வாள்வெட்டு !

நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இரு உந்துருளியில் வந்த இனந்தெரியாத 04 நபர்களால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வாள்களால் வெட்டப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஒரே வருடத்தில் 400 யானைகள் பலி !

மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 395ஆக உள்ளது.

இது ஒரு வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட யானைகளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

யானையின்-மனித மோதல் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 2019ஆம் ஆண்டில் 207 யானைகள், 2020இல் 318 யானைகள் மற்றும் 2021இல் 375 யானைகள் இறந்துள்ளன.

இதேவேளை சுற்றாடல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான நிலைய அறிக்கையின்படி, இலங்கையில் தினமும் ஒரு யானை இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை – ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம்

ஐக்கிய இராச்சியத்தின் iNews இணையத்தளம் அதிகப் பணம் செலவழிக்காமல் பெப்ரவரி விடுமுறையைக் கழிக்க உலகிலேயே சிறந்த நாடு இலங்கை என்று தெரிவித்துள்ளது.

இவ்வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு நாட்டிற்குச் சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிருப்பதால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெப்ரவரியில் விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்த அளவிலேயே இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 145 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளதாகவும் ஐ நியூஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என iNews இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்தளமாக மாற்றப்படுகிறது இலங்கை ஜனாதிபதி மாளிகை – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு !

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கோட்டே பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகையை நிறுவவும், தற்போது கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.