16

16

“இனப்பிரச்சினைக்கு தீர்வு 13ஆவது திருத்தம் அல்ல. 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டமே தீர்வு.”- விமல் வீரவன்ச

“வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)இடம்பெற்ற அரச பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்துக்கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி,பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் குறுகிய காலத்தில் நாடு இரண்டாக பிளவடையும்.13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத,சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்த்தும் இன அடிப்படையிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட ,நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம்  ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச காலநிலை  தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் 2002 ஆம் ஆண்டு முன்வைத்த கொள்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம்,வடக்கிழக்கு மாகாண சபையை தற்காலிக அரசாங்கமாக மாற்றியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக பதவி வகித்த நீங்கள் (ஜனாதிபதி)அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். அதற்கமைய ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’கைச்சாத்திடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்,சர்வதேச பிரிவினைவாத அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதுடன் ஒருசில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விடுதலை புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை விடுதலை செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல்,இராணுவ முகாம் மற்றும் அதனை அண்மித்த காணிகளை விடுவித்தல்,மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான ‘எல்’ வலய காணிகளை பிரதேச செயலகம் ஊடாக விடுவித்தல்,காணி கொள்கையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்கும் திட்டத்தை வகுத்தல்,ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனார் அலுவலகம் சட்டத்தின் ஊடாக இயற்றப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சர்வதேச தலையீடு தென்னாப்பிரிக்காவில் வெளிப்படையாக காணப்படுவதை அறிய முடிகிறது.

2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களை திசைத்திருப்பி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கீன்றீர்கள் என்பதை நன்கு அறிவோம். பிரிவினைவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்து வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 10 பிரதான யோசனைகளை முன்வைக்கிறோம்.

இராச்சியத்தின் நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரிவுப்படுத்தி அதற்கு இணையாக மக்கள் சபை என்பததொன்றை உருவாக்கி அரச செயற்பாடுகளில் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை வினைத்திறனான முறையில் செயற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளை உள்ளடக்கிய வகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் உள்ளூர் அதிகார சபைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தின் பிரதி அமைச்சரின் அதிகாரத்துடன் குறைந்தளவிலான அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்க கூடாது.

நாட்டின் சகல இனங்களின் தேசியத்துவம் மதிக்கப்படுவதுடன்,மதம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பாடுகள் காண்பிக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல்,ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

வடைக்குள் கரப்பான் பூச்சி – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் வடைக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உணவகத்திற்கு 60 ஆயிரம் ரூபாயும் , உணவகத்தின் சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

யாழில்.வடைக்குள் கரப்பான் பூச்சி – 80 ஆயிரம் அபராதம்!

 

அதேவேளை குறித்த உணவகத்தினை 42நாட்களின் பின்னர் மீள திறக்க நீதிமன்று அனுமதித்தது.கடந்த டிசம்பர் மாதம் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

 

அதனை அடுத்து குறித்த கடைக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்து கடையினையும் சோதனையிட்டார்.

அதன் போது கடை மற்றும் சமையல் கூடம் என்பவை பல்வேறு சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்டது. அதனால் குறித்த கடைக்கும் அதன் சமையல் கூடத்திற்கும் எதிராக தனித்தனியே யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதனை அடுத்து வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரையில் கடையையும் , சமையல் கூடதினையும் சீல் வைத்து மூடுமாறு நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உணவகத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் , சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்த மன்று கடையினை மீள திறக்கவும் அனுமதி வழங்கியது.

“வடக்கின் கல்வியை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப தாயக உறவுகள் ஒன்றிணைய வேண்டும்.”- EDFSL தலைவர் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தல் !

கடந்த 08.01. 2023 அன்று இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தை ஆரம்பிப்பது தொடர்பான அங்குரார்பண ஆலோசனைக் கூட்டம் இணுவில் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இலங்கைக்கான கல்வி மேம்பாட்டு மன்றம் (பிரித்தானியா ) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் வடக்கின் முக்கியமான கல்வித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்போர் – ஓய்வு பெற்றோர் – அரச சார்பற்ற நிறுவன அங்கத்தினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கான ஆசியுரையை வழங்கிய சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுகன் பேசிய போது “வடக்கின் கல்வி நிலை இன்று தனியார் டியூசன் சென்டர்களை மையப்படுத்தி நகர்வதாகவும் – மாணவர்களுக்கு ஆன்மீக கல்வியின் தேவை இல்லாது போய்விட்டது எனவும் விசனம் வெளியிட்டார். மேலும் போதைப்பொருள் கலாச்சாரத்தினுள் உள்நுழைய ஆரம்பித்துள்ள இளைஞர் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறியதுடன் யாழ்ப்பாண பல்ககைழகமானது முற்றாக சிங்கள- முஸ்லீம் வசமாவமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியழிருந்தார்.

இந்த கூட்டம் தொடர்பில் பேசியிருந்த EDFSL ன் தலைவர் திரு. சச்சிதானந்தம் அவர்கள்  “இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம்” ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருந்தார். இதன் போது மேலும்  கருத்துரையாற்றியிருந்த அவர்,

வடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பிலும் அதனை அதன் அடிக்கட்டுமானத்திலிருந்து வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் – இதற்கு கல்வி நிர்வாகத்தில்  செயற்படக்கூடிய அனைவருடைய ஒத்துழைப்பின் தேவை  தொடர்பிலும் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தி இருந்தார். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள உறவுகளிடம் இருந்து இன்னும் சில வருடங்களுக்கு பின்பு எந்த ஒரு உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய முதலாம் இரண்டாம் தலைமுறையினரே இன்று தாயக பகுதிக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை செய்பவோராக உள்ளனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள மூன்றாம்,  நான்காம் தலைமுறையினரிடமிருந்து இந்த உதவிகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் என்னைப்போல தாயகத்தில் பிறந்து – தாயக வாழ்வியலை அறிந்து கொண்டவர்கள் அல்ல. எனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து பெறக்கூடிய உதவிகளை விரைந்து பெறுவதும் அதனை ஆக்கப்பூர்வமான வகையில்  தாயக கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதும் இன்றியமையாதது என வலியுறுத்தி இருந்தார்.  மேலும் கல்விச் சுடர் வெளியீடு தொடர்பான முக்கியமான விடயங்கள் பற்றியும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து திருமதி செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்கள் முன்பள்ளி கல்வியின் தேவை தொடர்பிலும் அதனை வடக்கிலிருந்து வலுப்படுத்த வேண்டியதனுடைய தேவை தொடர்பாகவும் விழிப்புணர்வு கலந்துரையாடல்  ஒன்றை  மேற்கொண்டிருந்தார்.

தொடர்ந்து திரு . சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்களால் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பான தெளிவூட்டல் ஒன்று  இடம்பெற்றது. இதில் கருத்துரையாற்றியிருந்த சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம் உருவாக்கப்படுவதன் நோக்கத்தை பின்வரும்  தலைப்புக்களில் வலியுறுத்தியிருந்தார்.

01. முன்பள்ளிகள் தொடர்பான கரிசனையை அதிகரித்து முன் பள்ளிகளை தரமானதாகவும் – ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள கூடியதுமான  ஒரு களமாக மாற்றுவதற்காக செயற்படுதல். (முன் பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக நிதி வழங்குதல், மாணவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்)

02. ஆங்கில கல்வியை வழங்குதல். தொழில்துறையில் மிக முக்கியமான மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தை சிறுவயது முதலே வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். இதற்காக முன் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடர்பான வகுப்புக்களை மேற்கொள்ளுதல் – இதற்காக British Council  உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

03. கல்வி தொடர்பான செய்திகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒரு தளமாக கல்விச் சுடர் சஞ்சிகையை வளர்த்தெடுத்தல்.

04. தாயகப் பகுதிகளில் வாழும் மக்களிடையே கல்விச்சிந்தனை தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்துதல்.

போன்ற விடயங்களை கல்வி அபிவிருத்தி குழுமம் தனது நோக்கங்களாக கொண்டுள்ளதாக திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கான அலுவலகம் தொடர்பிலும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் அவற்றுக்கான நிதி திரட்டுதல் போன்ற பல விடயங்களையும் அவர் முன் வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அகில இலங்கை கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி இ.  ஜெயராஜ் அவர்கள் ” வெளிநாட்டவர்களின் நிதியை பெறுவதற்கான ஒரு கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் – வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர் சொந்தங்களின் எண்ணிக்கை 15லட்சமாகும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பவுன்ஸ் வீதம் வழங்கினாலே வடக்கின் பின்தங்கிய நிலையை மாற்றி விடலாம். இதற்கு அரசியல்வாதிகள் முன் வந்து இந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் யாழ்ப்பாண தமிழர்கள் இன்று தன்மானம் இழந்து கையேந்தி வாழ்கின்ற வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டார்கள் எனவும் அவர் கருத்துரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வைத்தியகலாநிதி t.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றிய போது  “இன்றைய கல்விமுறையானது அகம் சார்ந்ததாக இல்லாது மிகப் பெரிய கட்டடங்களையும் – உபகரணங்களையும்  பதக்கச் சான்றிதழ்களையும் மையப்படுத்தி நகர்கின்றது. போட்டி பரீட்சைகளூடாக பல மாணவர்கள் கல்வி நிலையில் பின்தங்கியவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் ஒதுக்கப்படுகின்ற போக்கு நீடிக்கின்றது. இது இன்று நாம் எதிர் கொள்ளக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட மிகப்பெரிய சமூக சீர்கேடுகளுக்கு அடித்தளம் இட்டு விடுகிறது. இந்தக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையின் கல்வியும் சுகாதாரமும் மிகப்பெரிய சொத்து. ஆனால் இன்று இவை பொது நலனுக்காக பயன்படுவதை காட்டிலும் இன்று  தனி நபர் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்ற போக்கு மேலோங்குகின்றது. இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

 

இந்த நிகழ்வில் கருத்துரையாற்றியிருந்த Face அமைப்பின் பணிப்பாளர்  A.சத்தியமூர்த்தி அவர்கள் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பிலும் – கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் – அவர்களிடமிருந்து வடக்கு தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் விவரித்து இருந்தார். இதன் போது தேசம் நெட்  திரு.த. ஜெயபாலன் அவர்கள் எழுதியிருந்த “கிழக்கில் ஒரு கல்விச் சுனாமி” என்ற கட்டுரையின் விடயங்களை மேற்கோள் காட்டி “கிழக்கின் கல்வி,  ஜெயபாலன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் கண்டுள்ளது”  என  தன்னுடைய உரையை நிகழ்த்தியிருந்தார். 

May be an image of 19 people, people standing and indoorஇறுதியாக ஓய்வு பெற்ற பிரதி பரீட்சைகள் ஆணையாளர் செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்களுக்கும் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும் மனிதம்  மாணவர் அமைப்பின் அங்கத்தினர்களுக்குமிடையே முன்பள்ளி கல்வியை முன்னேற்றுவதற்கான நடைமுறைகள் தொடர்பான உரையாடலும் இடம்பெற்றதனை தொடர்ந்து கல்வி அபிவிருத்தி குழுமம் ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண ஆலோசனை கூட்டம் முடிவுக்கு வந்தது. 

அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாக – கல்வி நோக்கிய பெரும்பாய்ச்சலுக்கு அடிப்படையாக அமையும் என்பதில்  மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திரு. சச்சிதானந்தன் அவர்கள் குறிப்பிட்டது போல அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது என்ற கருத்து வரவேற்கத்தக்கது. இருந்த போதிலும் அடிப்படைக் கல்வி அதாவது மாணவர்களுக்கான முன்பள்ளி கல்வியானது நேரடியாக அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்க வேண்டும் என்ற கருத்துக்களும் வருகை தந்திருந்தோரால்  வலியுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்காக மேலதிகமான கொடுப்பனவை EDFSL வழங்குவதாக கூறியது தொடர்பில் இறுதியாக உரையாற்றிய இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இளைய தம்பி துரை சிங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன் அதற்கு மாற்று வழிகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 

 

 

முன்பள்ளிகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய திகதிக்கு மிக முக்கியமானது ஆக்கபூர்வமானதுமான ஒரு செயற்பாடாகும். எனவே இந்த மாற்றத்திற்கு கல்விச்சூழலில் இயங்கும் சகல தரப்பினரும் தங்களுடைய வலுவான ஆதரவை கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கு வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

“யாரும் கூட்டணி அமைக்கலாம். ஆனால் மக்கள் ஆதரவு எமக்குத்தான்.” – இரா.சம்பந்தன்

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.” என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ள நிலையிலும் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே செயற்படப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் 5 தமிழ்க் கட்சிகளைக் கொண்டு உருவான புதிய கூட்டணி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி எது என்பதைத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளால் நிரூபித்துக் காட்டுவார்கள்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

எவரும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கட்சிகள், கூட்டணிகள் கூட்டமைப்புக்கள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டால் அது மக்களைத்தான் தாக்கும் மக்களைப் பலவீனப்படுத்தும்.

தமிழ் மக்கள் இந்தக் கருமத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சி நீண்டகால வரலாற்றைக் கொண்ட கட்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சி, 1949 ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சி.

தமிழ் மக்களுக்காக அறவழியில் போராடி பல தியாகங்களைச் செய்த கட்சி. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி கொழும்பில் எனது இல்லத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளும் (ரெலோ, புளொட்) அந்தத் தீர்மானத்துக்கு எதிர்மறையாகச் செயற்படுகின்றன. இது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் நான் எதிர்ப்பு அரசியல் செய்ய விரும்பவில்லை.

இதுவரை காலமும் நடந்த விடயங்கள், நடக்கின்ற விடயங்கள் ஆகியவற்றைத் தமிழ் மக்கள் கவனமாகச் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

நீராட சென்ற சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி!

நீராடச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை புரிந்தார் எனக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஒகவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வலஸ்முல்ல ஒலுரா பிரதேசத்தை சேர்ந்த திருமணமான சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சார்ஜன்ட் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வருவதாகவும், வார விடுமுறைக்காக கிராமத்துக்கு வந்திருந்தபோது நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை மூன்று மணியளவில் வலஸ்முல்ல கல்வல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் மீது நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை, 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள்.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

உருவானது புதிய தமிழ்தேசிய கூட்டமைப்பு – விக்கி மற்றும் கஜேந்திரகுமாருக்கும் அழைப்பு !

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் இணைந்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பொன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

அத்துடன், இந்தக் கூட்டமைப்பானது தேர்தலுக்கு மட்டுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் விடுதலைப்பயணித்தினை முன்னெடுப்பதற்கான கூட்டு என்று கூட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தமிழ் மக்கள் பலம்பெறுவதற்காக தமது கூட்டில் ஒன்றிணையுமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு பகிரங்க அழைப்பினையும் விடுத்துள்ளனர்.

குறித்த ஐந்து கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணை தனியார் விடுதியில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி;யின்(புளொட்) தலைவர் சித்தார்த்தன் தெரவிக்கையில், தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றாகச் செயற்படுவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கூட்டாகச் செயற்படவுள்ளோம். தமிழ் மக்கள் சார்ந்து எம்முடன் இணைந்து செயற்படக் கூடிய ஏனைய கட்சிகளையும் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு வருமாறு நாம் அழைப்பு விடுகின்றோம்.

அதேநேரம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பது எம்முடன் தொடர்புடையதொரு கூட்டமைப்பாகும். அது தனிநபருக்குச் சொந்தமானது அல்ல. அதற்கு 2008ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்தக் கூட்டணியில் தான் நாம் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அந்தக் கூட்டணியின் தேசிய செயற்குழுவில் புதிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளினதும் உறுப்பினர்கள் அங்கத்துவத்தினைக் கொண்டிருப்பார்கள்.

அதேநேரம், அனுபவம் வாய்ந்த விக்னேஸ்வரனுக்கு, அரசியல் கட்சியொன்று தனிநபரின் பெயரில் பதிவு செய்ய முடியாது என்பது நன்கறிந்த விடயமாகும். ஆகவே அக்கட்சியின் செயலாளர் பதவி தான் அவருக்கு பிரச்சினையென்றால் அதனை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

ஐந்து அரசியல் கட்சிகளுடைய புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து தொடர்ச்சியாக பணியாற்றுவதற்கானதாகும்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் தமிழ் அரசுக்கட்சியும் பங்கேற்று வந்திருந்தது. இருப்பினும் தமிழரசுக்கட்சியானது உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஆசனங்களைப் பெறுவதை நோக்காக் கொண்டு தனித்து போட்டியிடுவதாக கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.

இந்நிலையில், தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் ரெலோ,புளொட் ஆகிய தரப்புக்களுடன் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிந்த நாமும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சி, போராளிகள் கட்சி ஆகியனவும் ஒன்றிணைந்துள்ளோம்.

மேலும், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சகல கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. அவர்கள் கடந்த காலங்களில் அதற்கான பகிரங்க வெளிப்பாடுகளையும் செய்துள்ளார்கள். அதற்கமைவாகவே விடுதலை இயக்கங்களாக இருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம்.

புதிய கூட்டணியானது. தனிக்கட்சி ஆதிக்கமற்றவகையில் ஜனநாயகத் தன்மை நிறைந்த கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் இக்கூட்டமைப்புக்கு யாப்பொன்று உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயங்களை ஏற்றுக்கொள்கின்ற மனமாற்றம் முதலில் தமிழரசுக்கட்சிக்கு அவசியமாகின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுகின்றபோது அக்கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும் என்றார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியான தமிழரசுக்கட்சியானது தேர்தல் நலனை அடிப்படையாக வைத்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது. அது எமக்கு மனவருத்தினை அளிக்கும் செயற்படாக உள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் பலமான நிலையில் ஐக்கியத்துடன் பயணிக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. அதுவொரு பதிவுசெய்யப்பட்ட தரப்பாக, ஜனநாயக கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது.

ஆனால், தமிழரசுக்கட்சி அந்த விடயங்களை கருத்தில்கொள்ளாது வெளியேறிவிட்டது. இதனால் கூட்டமைப்பில் எஞ்சியிருந்த நாம் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம்.

மேலும், கூட்டமைப்பில் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம் பயன்படுத்தப்பட்ட நிலையில் அத்தரப்புவெளியேறியது. தற்போது தமிழரசுக்கட்சி சின்னத்துடன் வெளியேறிவிட்டது. ஆகவே எதிர்வரும் காலத்தில் தனியொரு கட்சியினை நம்பி அதன் சின்னத்தில் எம்மால் இணைந்து செயற்பட முடியாது.

ஆகவே தான் நாம், பொதுவான கட்சியொன்றையும், சின்னத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முகங்கொடுத்த நெருக்கடிகளின் பல அனுபங்களின் அடிப்படையில் தான் அந்தக் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே, தான் விக்னேஸ்வரனின் சின்னத்திலும், அவருடைய கட்சியிலும் போட்டியிட முடியாத நிலைமை எமக்குள்ளது. இந்நிலையில், அவருடன் நாம் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றோம். அவரும் எமது அணியுடன் எமது நிலைப்பாடுகளை புரிந்து இணைந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம்.

அதேநேரம், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக கோரிக்கை விடுகின்றோம். மக்கள் எமக்கு பலமான ஆணை வழங்குகின்றபோதுஅவர்கள் அதனை உணர்ந்து கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக இணைவார்கள் என்றார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா தெரிவிக்கையில், இளம்தலைமுறையினர் தமிழ்த் தேசிய அரசியலை கையேற்பதற்கான அவசியமும், அவசரமும், ஜனநாயக அரசியலில் முன் எப்பொழுதுமில்லாத அளவிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இளந்தலைமுறையினர், அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் நீங்கள், எதிர்காலம் உங்களுக்குரியது.

எனவே, பார்வையாளர்களாக இருக்காது, தமிழ் மக்களுடைய தேசிய விடுதலையை கையேற்பதற்கு இளந்தலைமுறையினர் முன்வரவேண்டுமென பகிரங்க வேண்டுகோளாக விடுகின்றேன். அத்துடன் தனியொரு தலைவரால் இனமொன்றின் விடயங்களை கையாள முடியாது. அவ்வாறான மாபெரும் தலைவர்கள் என்று யாருமில்லை. ஆகவே கூட்டுத்தலைமைத்துவமே தற்போது அவசியமாகின்றது என்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்) தெரிவிக்கையில்,

தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கின்றபோது அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்திருந்தார். கூட்டமைப்பினை ஒரு அரசியல் தேசிய கட்டமைப்பாகவே உருவாக்கியிருந்தார். ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்லை அடிப்படையாக வைத்து தமிழரசுக்கட்சி வெளியேறியமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுத்தெருவில் விடப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பை அவ்வாறு பலவீனமாகச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. போராளிகளாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அதனைப் பலப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து பணியாற்றும் முகமாகவே இணைந்துள்ளோம் என்றார்.

2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடம் !

2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

சுற்றுலா இணையத்தளமான ட்ரவல் ட்ரை ஏங்குள் (TravelTriangle) இணையத்தளத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாட்டின் இயற்கை வளங்களின் வனப்பு காரணமாக இலங்கை பயணத்திற்கு ஏற்ற முதல் நாடாக மாறியுள்ளது.

கடற்கரைகள் வனவிலங்குகளால் நிறைந்த வன கட்டமைப்புகள் ரம்மியம் நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைத்தொடர்கள் என பல சுற்றுலா இடங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையத்தளமாக ட்ரவல் ட்ரை ஏங்குள் டிரவல் ரைஏங்குள் (Travel Triangle ) இணையத்தளம் காணப்படுகின்றது.

இலங்கையின் செழிப்பு மற்றும் பௌதீக பன்முகத்தன்மையை கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைவதாக குறித்த இணையதளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நான்காவது உயரமான மலையான சிவோனொளிபாத மலையுச்சியில் இருந்து பார்க்கும் காட்சி ரம்மியமாக இருப்பதாகவும் ஒவ்வொருவரின் உடல் தகுதியைப் பொறுத்து 5 முதல் 6 மணித்தியாலங்களுக்குள் இந்த உலக பாரம்பரிய தளத்தில் ஏறலாம் எனவும் இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

வாழ்வில் புத்துயிர் பெற வேண்டுமானால் இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் நிழலான இடத்தில் அமர்ந்து விட்டமின் டி யை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கை தொடர்பில் இந்த இணையத்தளம் தகவல்களை பதிவு செய்துள்ளது.

“தமிழ் தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதை முடிந்துவிட்டது.” – என் கனவு யாழ் அங்கஜன் கவலை !

தமிழ் தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டால் நேற்றுடன்(14) இல்லாமல் போயுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக கட்சி பிளவுபட்டு பிரிந்து போட்டிவுள்ளமை சுயலாப அரசியல் தந்திரமாகும்.

அவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கமுடியாது என அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.