18

18

இந்திய அரசு தமிழ் மக்களினதும் எதிரி! இன்னுமொரு உக்ரைனை திருமலையில் உருவாக்க அத்திவாரம்!! மசூதிகளையும் தேவாலயங்களையும் அழிக்க இலங்கையில் ராமாயண யாத்திரைக்கு முயற்சி!!!

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டனில் இயங்கும் வரலாற்று மையத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் சங்கீதன் இந்தியா தங்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் பயிற்சிகள் பயிற்சிகள் அளித்தது பற்றி அண்மைய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இனவாதத் தீயை இந்தியா எண்ணை ஊற்றி அணையவிடாமல் வளர்த்தது. பதிலுக்கு ஜே ஆர் ஜெயவர்த்தன அரசும் இஸ்ரேலிய மொசாட் பாஸிஸ்டுக்களுடன் இணைந்து தமிழர்களைக் கொன்றொழித்தார். தமிழ் இளைஞர்களை நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் கொன்றொழித்தால் அதில் புலிகளும் அழிக்கப்படுவார்கள் என்பது மேற்குநாடுகள் போற்றும் மொசாட்டின் கண்டுபிடிப்பு. ஒரு கட்டத்தில் மொசாட் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தது.இது பிரித்தானியாவில் வெளியாகும் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிரபாகரனை உருவாக்கியது இந்தியா. வளர்த்துவிட்டது இந்தியா. பிரபாகரனை முடித்ததும் இந்தியா தான்.

இப்போது இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு Tamil Co-ordinating Committee இல் இருந்து பிரிந்து சென்ற அப்துல்லா தலைமையிலான குழுவைத் தன்னோடு இணைந்ததுக் கொண்டுள்ளது. இவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்ற அறிவிப்பை பழ நெடுமாறன் மூலமாக, காசி ஆனந்தன் போன்றவர்கள் பக்கத்தில் இருக்க, பெப்ரவரி 13 அன்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இவ்வாறான ஒரு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டாம் என பிரபாகரனின் சகோதரர் கேட்டுக்கொண்டபோதும் ஏனைய பல்வேறு தரப்பினர் கேட்டுக்கொண்ட போதும் இவ்வறிவிப்பை பழ நெடுமாறன் மேற்கொண்டிருந்தார். இந்த அறிவிப்பில் இந்திய உளவுப் பிரிவினரால் உள்வாங்கப்பட்டதாகக் கருதப்படும் அப்துல்லா தலைமையிலான அந்த நால்வரைத் தவிர வேறு எந்த ஈழத்தமிழரும் இந்த அறிவிப்பை மிக வன்மையாகக் கண்டித்தனர். தமீழ விடுதலைப் போராட்டத்தை தற்போது பழ நெடுமாறனும் ரோவுமே நேரடியாகக் கையாள ஆரம்பித்துள்ளனர்.

பிரபாகரனின் நெருங்கிய நண்பர் வல்வை ஆனந்தன்இ வல்வை நாடான் என அழைக்கப்படும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்தராஜா அவருடைய நண்பர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும் போது “தேசியத் தலைவர் ஒரு போதும் மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் செல்லக்கூடியவரல்ல. அவர் தனக்கென்று ஒரு நிலம் கூட இல்லாதவர். தேசியத் தலைவரின் வீடு என்று சொல்லப்படும் இங்குள்ள வீடு கூ; அவருடைய சகோதரியினுடையது என அவர் தெரிவித்தார்.

“இந்திய அரசு தமிழ் மக்களினது எதிரி!” என்று பட்டவர்த்தனமாகக் குறிப்பிடுவது தமிழ் அரசியல் சூழலில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும். இந்தக் கசப்பான உண்மையை பல்வேறு அரசியல் சமன்பாடுகளினாலும் அரசியல் நகர்வுகளினாலும் தவறானது என்று நிரூபிக்க பலரும் முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்திய அரசு தமிழர்களின் நண்பன் என்று அறுதியிட்டு சொல்வதற்கு எவ்வித தடயங்களும் இருக்காது. அவர்களுடைய வாதங்கள் இந்திரா அம்மையார் இருந்திருந்தால்… எம்ஜிஆர் இருந்திருந்தால்… அல்லது இந்திய அரசைத் தவிர வேறு வழியில்லை … என்பதில் தான் போய் நிற்கும்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய அரசுக்குமான உறவு மிக நீண்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கையின் அமைவிடம் காரணமாக தென்னிந்திய அரசுகளின் படையெடுப்புகள் இல்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படையெடுப்புகள் இனரீதியானதாக கொள்ளப்படவில்லை. அவ்வாறான கறாரான இனவரையறுப்பு அன்று காணப்படவில்லை. யுத்தத்தில் தோற்றுப் போன எல்லாளனை பாதணியைக் கழற்றி வைத்து வணங்குகின்ற முறைமை சிங்கள மக்கள் இன்னமும் அனுராதபுரத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.

மேலும் பௌத்தத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள். பௌத்த வாழ்வியல் முறை வட இந்தியாவில் உருவானாலும் அது இலங்கைக்கு தென்னிந்தியாவில் இருந்தே கொண்டுவரப்பட்டது. ஒரு காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியது. அந்தக் காலகட்டத்திலேயே இலங்கைக்கும் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை சங்கமித்தை கொண்டு வந்தாரா மணிமேகலை கொண்டுவந்தாரா நயன்தாரா கொண்டு வந்தாரா என்பதை வரலாற்று ரீதியாக நிறுவமுடியுமா தெரியவில்லை. ஆனால் ஒரு தமிழர் கொண்டு வருவதற்கே வாய்ப்பு உள்ளது.

ராகுல தேரர் குறிப்பிடுவது போல் பௌத்தம் ஒரு மதமல்ல. அதுவொரு வாழ்வியல் முறை. எதிர்கால இலங்கை பற்றி ராகுல தேரர் காண்கின்ற கனவு நனவாக வேண்டும். தமிழர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பௌத்த இளம் துறவிகள் கேட்டறிந்து தென்பகுதிக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காண வேண்டும். வடக்கில் இருந்தும் இளம் துறவிகள் தெற்கில் உள்ளவர்களிள் குறைகளைக் கேட்டறிந்து வடக்குக்குச் சென்று தீர்வு காண வேண்டும். இனிமேல் இந்த இனவாத பருப்பெல்லாம் இம்மண்ணில் வேகாது என்கிறார் ராகுல தேரர்.

ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தான் பிரித்தாளும் தந்திரத்தோடு திட்டமிட்ட முறையில் இன முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக சுதந்திரத்தின் பின் இனக்கலவரங்கள் நிகழ்ந்தன.

உலகத்தில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா மீண்டும் இடதுசாரிகளின் துணையோடு எழுபதுகளில் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தியாவின் அணிசேராக் கொள்கை. இந்தியாவோடு நெருக்கமான உறவு. திறந்த பொருளாதாரத்தின் கதவுகள் மூடப்பட்டது. இறக்குமதிப் பொருளாதாரம் தடைசெய்யப்பட உள்ளூர் உற்பத்தி பெருகியது. விவசாயிகள் செல்வந்தராகினர்.

அன்று தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் மக்களின் செல்வாக்கை இழந்தன. இடதுசாரிச் சிந்தனை தலைதூக்கியது. இடதுசாரிச் சிந்தனையைத் தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி தெற்கிலும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கிலும் இனவாதத்தை நெய்யூற்றி வளர்த்தனர். 1977இல் வட்டுக்கோட்டையில் ‘தமிழீழம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கப்பட்டது. தங்கள் கைகளைக் கீறி தமிழ் இளைஞர்கள் இரத்தப் பொட்டு வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் வாக்கு வங்கி வடக்கு கிழக்கில் நிரம்பி வழிந்தது. தெற்கில் ஜே ஆர் ஜெயவர்த்தன பிரதமராகி பின் ஜனாதிபதியானார். அமேரிக்காவிற்கு இலங்கையைத் திறந்த ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் தமிழரசுக் கட்சியும் கூட்டுக்கலவியில் இறங்கியது. தமிழீழம் தள்ளாடியது.

ஆனால் உசுப்பேற்றப்பட்ட இளைஞர்களோ தமிழீழத்தை அடைந்துவிட வேண்டும் என்று வேட்கை கொண்டனர். யார் முதலில் அடைவது, யாருக்கு தமிழீழ சொந்தம் என்றெல்லாம் போட்டியிட்டு சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டனர். இவர்களையெல்லாம் இனம்கண்ட இந்தியா, தன்னை விட்டு விலகி அமெரிக்கா பக்கம் சாய்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு பாடம்புகட்ட எண்ணியது. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி பங்களாதேஸ் உருவாக வழிவகுத்த துணிச்சலும் இந்தியாவுக்கு இருந்தது. அதற்கு தமிழ் இளைஞர்கள் வாய்ப்பாக அமைந்தனர். பங்களாதேஷ் போல் தமிழீழம் அமைக்க இந்தியா வகை செய்யும் என தமிழ் இளைஞர்கள் நம்பினர். நம்ப வைக்கப்பட்டனர். தமிழர்கள் கேள்விக்கு இடமில்லாமல் இந்தியாவை நம்பினார். இந்தியாவே கதி என்று இருந்தனர்.

1996இல் ரெலோ தலைவர் சிறிசபாரட்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார். சென்னையில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தைக் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குழப்ப முயற்சித்தனர். அந்நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய காலஞ்சென்ற அ அமிர்தலிங்கம் இந்தியாவை எதிர்ப்பது, இந்தியாவுக்கு துரோகம் செய்வது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்வதற்கு ஒப்பானது எனத் தெரிவித்து இருந்தார். இந்தியா மீதான இவர்களின் விசுவாசம் அப்படி இருந்தது.

ஆனால் இந்தியா தன்னுடைய நலனில் மட்டும் நின்றது. இந்தியா ஒப்பிரேசன் பூமாலை என்ற பெயரில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு சுருக்குக் கயிறிட்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பணிய வைத்தது. இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றியது. அதில் தமிழர் தரப்பில் பெயரளவில் கூட கையொப்பமிடத் தேவையிருக்கவில்லை.

இந்த உறவில்,1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படையினரோடு தமிழீழ விடுதலைப் புலிகள் மோதியது, அடுத்து 1991 ராஜீவ்காந்தியின் படுகொலை ஆகிய நான்கு ஆண்டுகள் மிகக் குறுகிய காலம் தான் விடுதலைப் புலிகள் இந்தியாவை எதிரியாகக் கணித்தனர். அந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் இன்று வரையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்திய அரசுக்கு விசுவாசமாகவே இருந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்காத போதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கிடைத்த குறைந்தபட்ச உரிமையும் அதற்குப் பின் நடைபெற்ற போராட்டத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் பெறப்படவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் போராளிகள், பொதுமக்கள், இராணுவம் என்று மொத்தமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கும். அதற்குப் பிந்தைய இரண்டு தசாப்தங்களில் தமிழர்கள் தரப்பில் மட்டும் இழக்கப்பட்ட உயிர்கள் லட்சத்தை தாண்டி நிற்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமைக்கு பல்வேறு காரணங்கள் புனையப்பட்டாலும் வே.பிரபாகரன் அவமானப்படுத்தப்பட்டதே அப்படுகொலைக்கு இட்டுச்சென்றுள்ளது. ராஜீவ் காந்தியை சந்திப்பதற்காக யாழ் சுதுமலையில் இருந்து இந்திய விமானப்படையின் விமானத்தில் பிரபாகரன் ஏறுவதற்கு முன் தங்களுடைய கோரிக்கைகளை இந்தியா எற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடனேயே சென்றார். ஆனால் இந்தியாவில் தரையிறக்கப்பட்ட பிரபாகரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டதுடன் ராஜீவ் காந்தியுடனான சந்திப்புக்கு முன்னதாக ஆண்மையை மட்டும் மறைக்கும் உள்ளுடுப்போடு நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும் அப்போது தான் ராஜீகாந்தியை தீர்த்துக்கட்டுவது என்ற முடிவுக்கு பிரபாகரன் வந்ததாகவும் பிரபாகரனுக்கு நெருங்கிய ஒருவர் தெரிவிக்கின்றார்.

அந்த முடிவு தான் 28 ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரன் அதே உள்ளாடையோடு சாய்க்கப்படக் காரணமாக அமைந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு அரசியல் ரீதியான படுகொலையல்ல. தமிழ் மக்கள் இதனை ஒரு போதும் அங்கீகரித்தும் இருக்கவில்லை. அதுவொரு தனிப்பட்ட பழிவாங்கல். அது தமிழ் மக்களுக்கோ விடுதலைப் புலிகளுக்கோ எவ்வித நன்மையையும் பெற்றுத்தரவில்லை. இந்திய அரசு தமிழர்களது வாழ்நிலை குறித்து எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை.

வல்வை ஆனந்தன் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் வடக்கு கிழக்கில் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என்ற பெயரில் செயற்பட்ட இந்திய இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை: படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுவது, பாலல்வல்லுறவு மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்தவர். இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் இழைத்த அநீதிகள் மிக மோசமானவை. இவை தொடர்பில் எந்தவொரு இந்திய இராணுவ வீரரும் தண்டிக்கப்படவில்லை. அதற்கான எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவுமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தின் ஊடகப் பொறுப்பாளர் சங்கீதன்: தேசியத் தலைவர் பிரபாகரன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. ரூபனும் அவருடைய நண்பரும் கொழும்பு நோக்கிச் சென்றதை மாலைதீவுக்கு அனுப்பி மதிவதனி அக்காவையும் பிள்ளைகளையும் காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் தேசியத் தலைவர் குடும்பத்தோடு மக்களோடு மக்களாகவே நின்றார் என்கிறார்.

கலை இலக்கிய விமர்சகர் வஐச ஜெயபாலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் இந்தியா தமிழர்களின் முதுகெலும்பை நொருக்கியது இருந்தாலும் புலிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக சீனாவையோ வேறு எந்த நாட்டையுமோ தெரிவு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆய்வாளர் ரவி பிரபாகரனும் இதே கருத்தையே வெளியிட்டார்.

ஆனால் 1987இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு தமிழ் மக்களுக்கு – தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அல்ல, ஊடல் ஏற்பட்டு 1991 ராஜீவ்காந்தி படுகொலையோடு தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமான உறவு ஒரு நெருக்கடி நிலைக்கு வந்தது. ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்திய அரசோடு எப்போதும் ஒருதலைக் காதலிலேயே மூழ்கிக் கிடந்தனர். மூழ்ங்கிக் கிடக்கின்றனர். இனிமேலும் மூழ்கிக் கிடப்பர்.

இந்தியாவுடனான இந்தக் காதலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய விலையைக் கொடுத்தது. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ அமிர்தலிங்கமும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவை மட்டுமே நம்புகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்ற உண்மை சில மாதங்களுக்கு முன்னரேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பான தமிழ் தலைமைகளுக்கு இந்தியா தெரிந்திருந்தது என்று 2009 பெப்ரவரியில் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டாலேயே தாங்கள் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றும் எந்தவொரு முயற்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கவில்லை.

தமிழ் தலைமைகள் இந்திய அரசுக்கு தங்களுடைய கேள்விக்குட்படுத்தாத விசுவாசத்தைக் காட்டி வந்தபோதும் இந்தியா அவர்களையும் தமிழ் மக்களையும் ஒரு கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசை தன்பக்கம் இருந்து விலகிவிடாமல் தடுப்பதற்கே இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்திய உளவுப்பிரிவான ரோ வடக்கு கிழக்கை தன் வசப்படுத்தவே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஆய்வாளர் ரவி பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால் அதன் அரசியல், பொருளாதார, சமூக தாக்கங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக காலம் காலமாகவே இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளவில்லை. அவ்வளவு ஏன் தன்னுடைய உள்நாட்டிலும் கூட இந்தியா மனிதத் தன்மையோடு, மனிதப் பண்புகளோடு நடந்துகொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் அண்டை நாட்டு விடயங்களில் அதீத தலையீட்டை மேற்கொள்ளும் இந்தியா, தனது சொந்த மக்களின் வாழ்வியல் விடயங்களில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

அதற்கு பெரிய உதாரணம் எதுவும் தேவையில்லை. கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தபோது போது மோடி அரசு தன்னுடைய மத – கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, லட்சக் கணக்கான மக்களைக் கூடச்செய்து, மில்லியன் கணக்கான மக்களுக்கு கொரோனாவை பரவச் செய்து, ஐந்து மில்லியன் மக்களைப் படுகொலை செய்தது. உலக சனத்தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்து முதலாவது இடத்திற்கு நகரும் இந்தியா, தன் நாட்டில் 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது பற்றி எவ்வித வருத்தமும் கிடையாது. இது இன்றைய இந்திய அரசின் நிலைமட்டுமல்ல 1984இல் வட மாநிலமான போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவினால் ஆயிரக் கணக்கானோர் இறந்தனர். அதன் தாக்கத்தால் அங்கு இன்னமும் குழந்தைகள் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். ஆனால் இந்திய அரசு அம்மக்களுக்கு அந்த அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து சரியான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கத் தவறியது.

அன்றும் இன்றும் இது தான் இந்திய அரசு. இது அத்தானி போன்ற பண முதலைகளுக்கு தீணி போடும் அரசே அல்லாமல் மக்களுக்கான அரசு அல்ல. தன்னுடைய சொந்த மக்களின் நலனைப் பற்றியோ அவர்களின் உயிர்வாழ்வு பற்றியோ எவ்வித கரிசனையும் கொள்ளாத இந்திய அரசு தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்புவது அடி முட்டாள்தனமானது.

கடந்த காலப் பாடங்களில் இருந்து தமிழர்கள் இந்தியா பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகின்றார்கள். தற்போது கலாச்சார மையத்தைக் கட்டிக்கொடுத்தது என்பது எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. அங்கிருக்கின்ற ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களையே பயன்படுத்துவதற்கோ பராமரிப்பதற்கோ அங்குள்ளவர்கள் திணறிக்கொண்டுள்ளனர். இவ்வாறான ஆர்வக்கோளாறான கட்டமைப்புகள் சிறிது காலத்தில் கவனிப்பாரற்று போவதே இயல்பாக உள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய கலாச்சார மண்டபமும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இக்கலாச்சார மண்டபம் இந்துத்துவ பா.ஜா.காவுக்கு பெருமையடிப்பதற்கு மட்டுமே உதவும்.

இலங்கையின் இந்துத்துவ ஆதிக்கம் பற்றி கலை இலக்கிய ஆர்வலர் வ.ஐ.ச ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதுது போலவே இன்று வவுனியாவில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் ராமாயண யாத்திரை உரை அமைந்துள்ளது.

பழ நெடுமாறனின் பிரபாகரன் இருக்கின்றார் என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் இலங்கையில் இந்தியத் தலையீடுகள் பற்றியும் யாழ் சிவில் சமூகத்தின் பேச்சாளரான அருண் சித்தார்த் மிகக் கடுமையான விமர்சனத்தை இந்திய தலைவர்கள் மீதும் இந்திய அரசு மீதும் வைக்கின்றார். அருண் சித்தார் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களைப் போன்ற சிறுபான்மையான வெள்ளாள ஆண்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியல்ல. இவர் வடக்கில் பெரும்பான்மையாகவுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மறுக்கப்பட்ட குரலாக ஒலித்துவருபவர்.

இந்திய உளவுத்துறையும் அதனோடு சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளர்களாகக் தம்மைக் காட்டிக்கொள்ளும் பழ நெடுமாறன் போன்றவர்களும் காசி ஆனந்தன் போன்ற இந்தியாவில் வாழ்கின்ற புலிகளின் அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர்களும் இணைந்து இந்தியா அரசின் தேவைக்காக வெளியிட்ட “பிரபாகரன் இருக்கின்றார். மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிவிப்பு பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தவிடுபொடியாக்கி உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் அமைப்பின் தலைவர் பீற்றர் ஹெய்ன்ஸ் தலைமையில் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சட்ட முன்னெடுப்புகள் கனியும் தருவாயில், “பிரபாகரன் இருக்கின்றார். மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிவிப்பு சில ஆண்டுகளாக பல்லாயிரம் பவுண்கள் நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் அனைத்தையும் வீணடித்துள்ளதாக, இந்த நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வழக்குரைஞர் தேசம்நெற் க்கு தெரிவித்து இருந்தார். சர்வதேச குற்றவியல் நீதித்துறையில் 30 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட பீற்றர் ஹெய்ன்ஸ் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவது தொடர்பான குழுக்களுடனும் செயற்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் ஏனைய நாடுகளிலும் அவர்கள் பயங்கரவாதப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் அவ்வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவோடு செயற்படுபவர்களில் அப்துல்லா, சிறி, குலம் (மிசைல் இன்ஜினியர்) மற்றும் பிரபாகரனின் செல் பக்ரிக்கு பொறுப்பான மணி ஆகியோரும் செயற்படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு மில்லியன் பவுண்கள் வரை நிதி சேகரிப்பில் ஈடுபடும் இக்குழுவினர் பிரபாகரன் போன்ற ஒருவரை கொண்டுவந்து நிறுத்தப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தின் ஊடகப் பேச்சாளர் சங்கீதன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறானவர்களையும் இவர்களால் சேகரிக்கப்பட்ட பணத்தையும் கொண்டு இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிலருக்கு பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே இந்தியா ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அளித்து மிகக் கோரவிளைவை ஏற்படுத்தியது. அதன் வடுவே ஆறுவதற்கு முன் மீண்டும் ஒரு ஆயுதப் பயிற்சி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனப் பல்கலைக்கழகம் புலமைப் பரிசில் வழங்கி அம்மாணவர்கள் சீனாவில் கற்கை நெறியைத் தொடர ஏற்பாடு செய்தது. இந்தியா யாழில் உள்ள தனது முகவர்களுடாக – தமிழ் ஊடகங்கள் இந்தியாவின் ஏஜென்டுகளாகவே செயற்படுகின்றன. காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அதனை எள்ளிநகையாடினார். ஆனால் பேராசிரியர் சந்திரசேகரம் இவ்விவகாரத்தை நிதானம் தவறி கையாண்டு மொக்கையீனப்பட்ட ஒலிப்பதிவு தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது.

இந்தியா தற்போது பலாலி விமானப் போக்குவரத்து ராமேஸ்வரம் – மன்னார் கப்பல் போக்குவரத்து என வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் மும்முரமாகி உள்ளது. மோடியின் கோமயத்தில் இருந்து அனைத்துக் கழிவுகளும் வடக்கு கிழக்கில் கொட்டப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வடக்கு கிழக்கில் மதவாதம் மிக மோசமடைந்து கொண்டு வருகின்றது. மேலும் சினிமாவின் தாக்கமும் வாள்வெட்டுக்களும், போதைப்பொருள் கடத்தல்கள், கடற்கரையோர ஆக்கிரமிப்புகள் என ஏற்கனவே இந்திய அரச செயற்பாடுகள் எதுவுமே தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக அமையவில்லை.

ஈழத் தமிழர்கள் என்றும் இந்திய மக்களின் நண்பர்கள். ஆனால் இந்திய அரசு தமிழர்களினதும் இலங்கையர்களினதும் எதிரியாகவே இப்போது வரை செயற்படுகின்றது.

இலங்கை மக்கள்: சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீகள் எல்லோருமே என்றுமில்லாதவாறு இந்தியாவின் ஆக்கிரமிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆக்கிரமிப்பில் முதலில் அழிந்து போவது ஈழத்தமிழரின் அடையாளமாகவே இருக்கும். 1970க்களில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட போது தமிழ் இலக்கியம் வளர்ந்தது, தமிழ் சினிமா உருவானது, தமிழர்கள் தன்னிறைவாகவும் வசதி படைத்தவர்களாகவும் மாறினர். ஆனால் இந்தியா எங்களை நோக்கி வர வர எங்களுக்கு கிடைப்பதெல்லாம் மூன்றாம்தர கலாச்சாரம், மூன்றாம் தர எழுத்துக்கள், ஆயுதங்கள், போதைவஸ்து, மற்றும் கழிவுகள் தான். இந்த ஆக்கிரமிப்பின் முதற்கட்டத்திலேயே குஜராத்தில், ஆயோத்தியில் நிகழ்ந்ததன் இரத்தவாடை அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அதனால் எங்களுக்கு வேண்டாம் உங்கள் மோடியின் கோமயம்.

இலங்கையில் முதன்முறையாக உக்கும் கழிவுகளிலிருந்து மின்சார உற்பத்தி !

இலங்கையில் முதன்முறையாக அரச நிறுவனமொன்று உக்கும் கழிவுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் மூலமாக நாளாந்தம் நாட்டின் தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்கு 35 கிலோ வொட் மின்சாரம் சேர்க்கப்படவுள்ளது.

இந்த செயற்பாட்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் தலைமையில் கடுவெலையிலுள்ள ‘ரன்பலஸ்ஸ’ கழிவு முகாமைத்துவ நிலையத்தில் நடைபெறவுள்ளது.

கடுவெல மாநகர சபையின் மேயர் புத்திக ஜயவிலாலின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்தில், சுமார் 10 டொன் உக்கும் குப்பைகளிலிருந்து உயிரியல் வாயு தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய பணியாகும்.

கடுவெலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து தினமும் சுமார் 100 டொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதிலிருந்து சுமார் 45 டொன் உக்கும் குப்பைகள் பிரிக்கப்படுகின்றன.

தற்போது நாங்கள் நடத்தும் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவ செயல் முறைக்கு மேலதிகமாக, உக்கும் கழிவுகளிலிருந்து உயிர் வாயுவை தயாரித்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே எமது திட்டமாகும் என கடுவெலை மாநகர சபையின் மேயர் புத்திக ஜயவிலால் குறிப்பிட்டார்.

“சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவி.” – சர்வதேச நாணய நிதியம்

சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருகின்றது.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால் சீனாவின் நிதி உத்தரவாதமின்றி  இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதியை வழங்கலாம் என தெரிவித்துள்ள புளும்பேர்க் சர்வதேச அமைப்பு இலங்கை விடயத்தில் தான் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய  கொள்கையை பின்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை தங்களின் கடன்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் தங்களிற்கு கடன்வழங்கிய நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தில் சர்வதேச நாணயநிதியம் பின்பற்றக்கூடிய கொள்கைகள் குறித்து தற்போதைக்கு  கருத்து தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள பேச்சாளர் கொள்கை நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுவது தொடர்பில் சர்வதேச நாணயநிதிய அதிகாரிகள் இலங்கையுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம் !

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு – கிழக்கு – தெற்கு ஊடக அமைப்புக்களின் ஒத்தழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இ.பிரசன்னா மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லையென தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேவேளை படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு – கிழக்கு – தெற்கு ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளன.

2000ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதோடு அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டுகொண்டே சென்றிருந்தது.

தமிழர் தாயகப் பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்பது அனைவரும் அறிந்ததொரு உண்மையாகும்.

வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண நாம் தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டுமென மீண்டும் நாம்  கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை நல்லாட்சி காலத்தில் தாங்கள் பிரதமராக இருந்த காலப் பகுதியினில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடொன்றை வழங்க முன்வந்து விசாரணை குழுவொன்றையும் அமைத்திருந்தீர்கள்.

குழுவும் விசாரணைகளை முன்னெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னராக அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லை என வாதிடப்பட்டிருந்தது.

எனினும், தற்போது தாங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைகளின் பிரகாரம், கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள்.” – பின்லாந்தும் இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும் !

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து பின்லாந்து அரசாங்கமும் இலங்கையின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

இலங்கையின் மீது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பின்லாந்து அரசும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் அதில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த எழுத்து மூல அறிக்கையில்,

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மந்தகதியிலே உள்ளது, எனவே பின்லாந்து அரசும் அமெரிக்கா மற்றும் கனடாவைப் போன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைகிறார்.” – எஸ்.சிறிதரன்

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைகிறார்.” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் விளக்க கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. தேர்தல் எப்போதும் நடக்கலாம். நிச்சயம் நடக்கும். தற்போது தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் காலம் குறிப்பிடவில்லை. இது ரணில் அரசின் நிகழ்ச்சியாகும். இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப முனைவதன் ஊடாக தமது அரசியல் நகர்வினை செய்கின்றனர்.

தேர்தலுக்கு காசு இல்லை என்கின்றனர். இவ்வாறான நிலையில் தேர்தல் செலவுக்காக திரும்ப செலுத்தாத தொகையை வழங்கும் நடைமுறை உள்ளது. அதனை திரும்ப செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறான நிலையில் 500 மில்லியனை IMF கொடுக்கும். இது வழமை.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 341 வட்டாரத்துக்கும் 340 விதமான வாக்குச் சீட்டுக்கள் தயாரிக்க வேண்டும். அது ஒன்றுதான் பெரிய வேலையாகும். இதேவேளை, 2 தேர்தலுக்கு அச்சடிக்கக் கூடிய பேப்பர் இருப்பதாகவும் அரச அச்சகம் கூறுகின்றது. அதற்கான கடன் விண்ணப்பத்தை எழுத்து மூலமாக கேட்கிறது.

எனவே இதில் பாரிய அரசியல் நிலவுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்பு ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடிய நிலை உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார்.

இந்த சூழலில் தான் மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. இதேவேளை மஹிந்த குடும்பத்துக்கு ரணில் போன்ற ஒருவர் தேவை. அதே போன்று ரணிலுக்கும் அவர்கள் தேவையாக உள்ளது. சகோதரரை ஜனாதிபதி ஆக்குவதை தவிர்த்து இவ்வாறான ஒருவரை ஜனாதியாக வைத்திருந்தால்தான் தனது மகனை ஜனாதிபதி ஆக்கலாம் என மஹிந்த எண்ணுகின்றார்.

இதே நேரம் பசில் அமெரிக்க பிரஜா உரிமையை நீக்கிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, பங்குனிக்கு பின் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். மஹிந்த தரப்பு ரணிலுக்கு பிரச்சினை கொடுத்தால் இவ்வாறான நிலையும் உருவாகும். வரும் பங்குனியுடன் 2 அரை வருடங்கள் முடிகிறது.

தேர்தலை நடத்த அரசால் முடியும். ஆனாலும் ரணிலுக்கு விருப்பமில்லை. அப்படி நடந்தால் ரணில் தோற்பார். அதனாலேயே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகிறது. மின்கட்டண அதிகரிப்பினால் தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகள் ஆட்களை குறைக்க முயற்சிக்கிறது. பல நிறுவனங்கள் ஆட்களை குறைக்கிறது. உணவு மற்றும் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. ஏன் இந்த விலையேற்றத்தை செய்கின்றனர். இதனால் சிங்கள மக்களுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.

இப்போது தேர்தல் வேண்டாம் என மக்களை திருப்புவதற்காகவே இந்த விலையேற்றங்கள். ஆனால் சுதந்திர தினதுக்கு பல கோடி செலவழிக்கின்றனர். யாழிலும் கொண்டாடுகின்றனர். தேசிய கீதம் இசைப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கில் செலவு செய்தனர்.

தேங்காயெண்ணை, சீனியில் கோட்டா பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டார். அதனை வேறு இடங்களில் முதலீடாக்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து !

பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை இருப்பதாக இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து விட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரொட்டரி கழகத்தின் , மாவட்ட இலக்கம் 3220 ஏற்பாடு செய்த 32 ஆவது ரொட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஜனநாயகம் தளராமல் செயற்படும் சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து விட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான சகல தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.

தான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்றும், ஆனால் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை என்றும், அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது எனவும், ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே தவிர ஜனநாயகம் இல்லை எனவும், நாட்டை அராஜக பாதைக்கு செல்ல ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க , அராஜகத்தின் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

போலியோ தடுப்புப் பிரச்சாரம், சுனாமி மற்றும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு காலத்தில் முகங்கொடுக்க நேரிட்டது. இந்த நெருக்கடிகளின் போது ரொட்டரி கழகம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஜனாதிபதி பாராட்டினார்.

இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில்வாய்ப்பு !

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கான புலம்பெயர் தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதன்மையான பங்களிப்பு சுற்றுலாத் துறை எனவும், அது இத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் எனவும் இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கே நெல் வழங்கும் நிலமாக வடக்கை மாற்றுவேன் என கூறிய ஜனாதிபதி ரணில்” – நெல் உலர வைக்க கூட தளம் இல்லாமல் திணறும் கிளிநொச்சி விவசாயிகள்!

இலங்கையின் நெல் விவசாய உற்பத்தியை பொருத்தவரையில் கனிசமானளவான உற்பத்தியை வழங்குகின்ற பகுதியாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. இரணைமடு குளமும் அதனோடு இணைந்த மண்வளமும் இப்பகுதியில் அதிகப்படியான நெல் உற்பத்திக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

முப்பது வருட போர்க்காலத்தில் கூட விவசாயம் நல்ல நிலையில் நடைபெற்ற நிலமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.

அண்மைய நாட்களில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளதால் கிளிநொச்சி மாவட்டத்தின் தெருக்களிலும் – புதிய பேருந்து நிலையத்திலும் (இயங்காது உள்ளது) நெல் காயப்போடுவதை அவதானிக்க முடிகின்றது.

இது இலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்கின்ற அவஸ்தை தான்.

உற்பத்தி செலவு , உரம் தொடர்பான செலவு, அறுவடை நேரம் பெய்த மழை அழித்த செலவு என விவசாயிகள் வாழ்க்கை மிக நட்டமான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இவை போக நெல் உலர வைப்பதற்கான தளம் இல்லாமல் தமது அறுவடை நெல்லை மூட்டைகளாக்கி கட்டிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பிரதான பாதைகளுக்கு கொண்டு செல்வதற்குள் விவசாயிகளுக்கு இன்னும் பெரிதான செலவுகள் ஏற்படுகின்றன.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பாதை தளத்தில் நெல்லை காயவைத்து விட்டு அமர்ந்திருக்கும் விவசாயிகள் சிலரிடம் நிலையை விசாரித்தால் அழாத குறையாக சுமையை இறக்கி வைக்கிறார்கள். ” உள்ளதே நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்குள் இயற்கையும் வாட்டி விடுகிறது. அறுவடை செய்த நெல்லை எனது கிராமத்தில் காய வைக்க நெல் தளம் வசதியாக – பெரிதாக இல்லை. ஊரில் இருக்கிற தளத்திலும் ஒருவர் காயவைக்கவே போதுமானது. வேறு வழியில்லாமல் இங்கு வரவேண்டியுள்ளது. இதற்கு பிரிதான செலவு. டிரக்டருக்கு தனியான காசு – உதவிக்கு வர்ர கூலிக்கு தனியான காசு – ஒரு நாள் முழுசா உழைப்பு இல்லாம இங்க காத்துக்கிடக்கனும். இப்படி நிறைய பிரச்சனைகள். மரத்தால விழுந்தவன மாடு மிதிச்சது போலத்தான் நம்ம நிலமை. இவ்வளவு கஷ்டத்துக்குள்ள நெல்லை விதைச்சு அறுவடை செய்து முடிஞ்சா காய வைக்குறதுக்காக படும் பாடு பெரும்பாடா இருக்குது. காய வைக்க கொண்டு வர்ர நெல் குறிப்பிட்டளவு சேதமாகிடுது. ரோட்டில காயப்போடுறதால நிறைய நெல் வீணாகுது. வேகமா ஒரு தளம் எல்லாருக்குமானதா அமைச்சு தந்தா நல்லம்”  என கூறி முடித்தார் அங்குள்ள பெரியவர்.

அண்மையில் கிளிநொச்சி வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாயிகளை சந்தித்து விட்டு இலங்கைக்கே நெல் வழங்கும் நிலமாக கிளிநொச்சியை மீண்டும் மாற்றுவேன் என கூறிவிட்டு சென்றுள்ள நிலையில் கிளிநொச்சி விவசாயிகள் படும் அவஸ்தை மிக மோசமானதாக மாறியுள்ளது.

முக்கியமாக கிளிநொச்சி; யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துடன் இணைந்துள்ளதால் பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்தே பாராளுமன்றம் செல்வோர் தொகை அதிகம் என்பதால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளை பேச யாருமே இல்லை. கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெயர் குறிப்பிடப்படும் சிலரும் புலி அரசியல் பேசவே நேரம் சரியாக உள்ளது. பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினைகளை கொண்டு செல்வதாக தெரியவில்லை.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரோ – விவசாய திணைக்களமோ இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரிவதில்லை.

இலங்கை வரலாற்று காலத்தில் கீழைத்தேய தானியகளஞ்சியம் என குறிப்பிடப்பட்டதாக பாடப்புத்தகங்களில் தடித்த எழுத்துக்களில் மேற்கோள் காட்டுவதால் இலங்கையின் விவசாயம் வளரப்போவதில்லை.

ஒரு காலத்தில் அயல் நாடுகளுக்கு எல்லாம் நெல் வழங்கிய நாம் இன்று சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் நெல் கடன் வாங்கி கொண்டிருக்கின்றோம். இந்த நிலையை மாற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனித்தனியான கவனிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்.

வடக்கின் பல இடங்களிலும் இதே பிரச்சினை நீடிக்கின்றது. விரைந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப்படுகின்ற தன்னிறைவே நாட்டின் பொருளாதார அடித்தளம் என்பதை உணர்ந்து இலங்கையின் அரசாங்கமும் – மாவட்ட செயலகங்களும் செயற்பட வேண்டும்.