28

28

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் !

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் , அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது.” – அமெரிக்கா !

“தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் 2009 இன் பின்னர் இலங்கையில்  முடக்கப்பட்டாலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது.” என நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பயங்கரவாதம் குறித்த 2021 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதிகளை திரட்டி தமது செயல்பாடுகளை சர்வதேச அளவில் முன்னெடுத்து வருவதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 இன் பின்னர் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இல்லாவிடினும், சர்வதேச அளவில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்தும் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்களும், அவர்களின் வலையமைப்பும், நிதி ஆதரவும் தொடர்வதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்ய சதித்திட்டம் – CID வெளியிட்ட அறிவிப்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுவது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தனியார் வானொலியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த குழுவொன்று இது தொடர்பில் வெளிநாடுகளில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக இன்று (28) வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார காலத்துக்குள் இந்த படுகொலை முயற்சியை மேற்கொள்வதற்கு குழு திட்டமிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் எந்தவொரு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

“கிழக்கில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.” – அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி.” என வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற அல்லது அழிக்க நினைக்கின்ற நாசமாக்க நினைக்கின்ற இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா வடகிழக்கு பிரச்சனை ஒரு தீர்வாக கொண்டு வந்தது. வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது இணைந்த வடகிழக்கு இருந்த போது அதன் பின் இந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது.

இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி கட்சியாகும். மக்கள் விடுதலை முன்னணி இன்று காலையில் ஒரு செய்தியை பார்த்தேன் .13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி  ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .

எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று  சம்பந்தன் தெரிவித்ததற்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்று சுனில் ஹந்துன் நெத்தி  தெரிவித்துள்ளார்.

கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நில வள பொருளாதார இருப்பை தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது. ஆகவே வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும் இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் .

இணையாத வடகிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகணம் ஓரளவு தப்பி பிழைக்கலாம் கிழக்கு தப்பி பிழைக்காது. காணி, பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில ஏக்கத்தகாத நடவடிக்கைகள் சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணை போகின்ற தன்மை சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இணைந்த வட-கிழக்கு இல்லாமல் தனியாக கிழக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நாங்கள் உறுதியாக சொல்லுகின்றோம் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் இணைந்த வடகிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சீர்திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இணைந்த வடகிழக்கில்தான் கிழக்கை பாதுகாக்க முடியும். கிழக்கை பாதுகாத்தால் தான் வட-கிழக்கை இணைக்க முடியும் என்று கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.