March

March

“ஜனாதிபதி ரணில் அரசாங்கம் இன – மத ரீதியான வன்முறைகளுக்கு இடமளிக்காது.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கிளிநொச்சி பேரூந்து மத்திய நிலையம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே மக்களுக்கு சிறந்த சேவையை பேருந்து நிலையத்தினூடாக வாழக்கூடியதாக இருக்கும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் மக்கள் சேவையை மனதில் கொள்ளாமல் இலாபமீட்டும் நோக்கில் செயற்படுவதாலேயே பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் பேருந்துகளில் பயணிப்போர் மாத்திரமல்ல வீதியில் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பாக யாழ். மாவட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது ஆராயவுள்ளதுடன், இது தொடர்பில் யாழ் உட்பட வடமாகாணத்தின் எனைய மாவட்ட தலைவர்களிடமும் காவல்துறை உயரதிகாரிகளுடனும் கேட்டுக்கொள்ள இருக்கின்றேன்.” என்றும் தெரிவித்தார்.

பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவேன் – ஜனாதிபதி ரணில்

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சூரிய சக்தி, காற்றாலை, உயிர் வாயு, கடல் அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறன் இலங்கைக்கு இருக்கிறது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“எழும்புத் துண்டுக்காக தமிழினத்தை விற்காதே.”- வட மாகாண ஆளுநருக்கு எதிராக யாழில் போராட்டம் !

நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

ஆளுநர் என்ற எழும்புத் துண்டுக்காக தமிழினத்தை விற்காதே, ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இன்று கையளிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் இந்த மகஜரை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம் !

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதாக சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது என்பதோடு மக்கள் அனுபவிக்கும் சிவில் உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இந்த சட்டமூலத்தினால் பாதுகாக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அழிக்கப்படும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – பின்னணியில் அரசாங்கம் என்கிறார் வி.மணிவண்ணன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கத்தின் பின்னணி இருப்பது தெளிவானது என்று யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த செயற்பாட்டின் மூலம், முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக சிலர் அரசியல் இலாபத்தை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.

மாணவர்களின் உணவுக்காக வழங்கப்பட்ட பணத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய அதிபர் !

மெதிரிகிரிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு காலை உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்காக உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பிராந்திய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்த உணவுத் திட்டத்தின் கீழ், இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 720 மாணவர்களின் தினசரி உணவுக்காக அரசு ஒரு நாளைக்கு 100 ரூபா வீதம் 72 000 ரூபா செலவிடுகிறது.

டிசம்பர் 05, 2022 அன்று அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்கு, உணவு வழங்குபவர் பால் சாதம், கொக்கிஸ் , கட்லெட் போன்றவற்றை சமைத்துள்ளார், மேலும் குழந்தைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

சம்பவத்தன்று, குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என்றும், அன்றைய தினம் குழந்தைகள் வீட்டில் இருந்து சாப்பிட ஏதாவது கொண்டு வருமாறும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அன்றைய தினம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக அந்த வவுச்சரில் கையெழுத்திடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் கணவரும் அப்பகுதியிலுள்ள வேறொரு பாடசாலையின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவது நமது நோக்கமல்ல – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

3 மாதங்களில் 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் – சோகத்தில் மைத்திரிபால!

நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வேண்டிய தண்டப்பணத்தை திரட்ட உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் உயர் நீதிமன்றம் 100 மில்லியன் ரூபாய் பணத்தை ஆறு மாதங்களில் செலுத்த எனக்கு அவகாசம் கொடுத்தது. அதில் மூன்று மாதங்கள் கடந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

“நான் கொள்ளையடிக்கவோ குண்டு வீசவோ இல்லை. ஆனாலும் எனது அரசாங்கத்தில் இருந்த சில அதிகாரிகள் தமது பொறுப்புகளை சரியாகக் கவனிக்காததால் நான் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

பணத்தை செலுத்த தவறினால் நான் சிறைக்குச் செல்ல நேரிடுமா இல்லையென்றால் வேறு ஏதேனும் தீர்ப்பு விதிக்கப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு!

கடந்த பல காலமாக தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்கள் வலுவடைந்து வருகின்றது.

இந்தநிலையில், நேற்றையதினம் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகம் மீதான அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

“அவள் தேசத்தின் பெருமை ” – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அவள் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 26.03.2023 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் – பெண் விடுதலை பற்றிய கருத்துக்களும் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு மகாசக்தி மகளிர் சம்மேளன தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி தலைமை ஏற்று நடத்தி இருந்தார்.
தலைமை உரையில் கருத்து தெரிவித்திருந்த லலிதகுமாரி அவர்கள் ” வழமையாக அரசு நிறுவனங்களோ – அல்லது அதன் துணை நிறுவனங்களோ மட்டுமே இந்த மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இப்படியான ஒரு நிகழ்வு பல மாணவிகள் கல்வி கற்கக்கூடிய ஒரு திறன் விருத்தி மையத்தில் நடைபெறுவதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன். பெண்கள் சார்ந்த மாற்றம் என்பது பெரிய அளவிலான இடங்களில் இருந்து இடம்பெறுவதை காட்டிலும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய ஆண்பிள்ளைகள் ஆக குறைந்தது வீட்டில் உங்களுடைய வேலைகளை அம்மாவுக்கு பொறுப்பு கொடுக்காது நீங்களே செய்வது மாற்றத்திற்கான முதலாவது அடியாகும். கடந்த காலங்களைப் போல் அல்லாது இன்றைய நாட்களில் பெண்கள் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். சில சமூக தடைகள் அவர்களுக்கு இருந்தாலும் கூட அதனையும் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்து பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்கள் முழுவதும் சென்றடைய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்று வன்னி மண்ணின் பெருமையை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி அகிலத்திரு நாயகி ஸ்ரீசெயானந்தபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் தயார்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமும் – கலாச்சாரமும் பெண்களை பாதுகாக்கின்றதா ..? அல்லது அடிமைப்படுத்துகின்றதா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் பலருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
நிகழ்வுகளின் இறுதியில் தேசிய அரங்கிலும் – சர்வதேச அரங்கிலும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்புக்கான நிதி அன்பளிப்பை ஹட்டன் நேசனல் வங்கி வழங்கியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து மகளிர் அணியின் தலைவி நடராசா வினுசா பேசிய போது ” கிளிநொச்சி மாவட்ட மகளிர் இன்று பல்வேறு பட்ட துறைகளிலும் மிளிர ஆரம்பித்துள்ளனர். இருந்த போதும் பெண்கள் என்பதாலோ என்னமோ அவர்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும் அதனை நமது சமூகத்தினர் கண்டு கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RollBall அதாவது உருள்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகிய நாம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன் – நமது அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கிலும் கால் பதித்துள்ளனர். ஆனால் இந்த விளையாட்டு பற்றி கூட எம்மில் பலருக்கு இன்னும் தெரியாது உள்ளது. நாம் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாது சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். விளையாட வருகின்ற அனைத்து வீராங்கனைகளுமே கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உடையவர்களே. மற்றைய பகுதிகளில் விளையாட்டு வீராங்கனைகள் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்ட அவர்களுக்கான உதவிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட எமக்கு கிடைக்கக்கூடிய சமூக மட்டத்திலான ஆதரவு என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. பயிற்றுவிப்பாளரும் – சில அதிகாரிகளும் மட்டுமே எங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துகிறார்கள். எங்களுடைய பல வீராங்கனைகளுக்கு விளையாடுவதற்கான சப்பாத்து கூட இல்லாத ஒரு துர்பாக்கிய சூழலே நிலவுகின்றது. விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு தளம் கிடையாது. விளையாடுவதற்கான பயிற்சிகளை கூட நாம் பாடசாலையின் பிரதான மண்டபத்திலேயே மேற்கொள்ள வேண்டிய சூழலே காணப்படுகின்றது. எனவே இந்த இடத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் போல எங்களை ஆதரிக்க கூடிய பலரை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்குமா இன்னும் பல மாணவிகளை சர்வதேச அரங்குக்கு எங்களால் கொண்டு செல்ல முடியும்.” என அவர்  குறிப்பிட்டிருந்தார்.