16

16

போதிய போசாக்கின்மையால் யாழ்ப்பாணத்தில் 50 நாட்களேயான கைக்குழந்தை உயிரிழப்பு !

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்ததன் விளைவாக மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் அவஸ்தை படுகின்ற அதே நேரம் போசாக்கின்மை என்கின்ற ஒரு பிரச்சனையும் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. மேலும் முன்பு போல இலங்கையின் சுகாதாரத் துறையினால் தாய் – சேய் நலன்கள் தொடர்பான போசாக்கு உணவு வழங்கும் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்களிடையே குறிப்பாக பிறந்த கைக்குழந்தைகள் இடையேயும் –  கர்ப்பிணி தாய்மார்கள் இடையேயும் – சிறு வயது குழந்தைகளிடையேயும் மந்த போசனை பிரச்சனை அதிகரித்து வருகிறது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் இடி அமீன் ஆட்சி நிலவுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.” – சுகாதார ஊழியர்கள் சம்ளேனம்

நாட்டில் இடி அமீன் ஆட்சி நிலவுவது போன்ற உணர்வு தோன்றுவதாக சுகாதார ஊழியர்கள் சம்ளேனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாங்கள் இன்று காலை அனைத்து மருத்துவமனை பணியாளர்கள், அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் மத்திய நிலையத்திற்கு உரித்தான தொழிற்சங்கங்கள் அனைத்தையும் சேவைக்கு அழைத்துள்ளோம். குறிப்பாக நாங்கள் அரசாங்கத்திற்கு ஒரு சமிஞ்ஞையை வழங்குவதற்கே முயற்சி செய்தோம். 24 மணித்தியால போராட்டமாகவே நாங்கள் அதைனை முன்னெடுத்தோம். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கும் முகமாக இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் ஓய்வு பெற்ற சில தொழிற்சங்க தலைவர்களின் பிழையான கருத்து வெளியீடுகளை சரிப்படுத்தும் நோக்கில் நாங்கள் எங்களின் விளக்கத்தை வழங்கியுள்ளோம். இந்தநிலையில் இன்றைய தினத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. நாட்டில் பணிபுரியும் வர்த்தகத்தினரை அடக்க முயற்சிக்கும் தரப்பினருக்கு எங்களின் எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் விடுக்கும் முகமாக மாத்திரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அன்றி பொதுமக்களை இன்னலுக்கு உட்படுத்தும் நோக்கம் இல்லை.

அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களின் பேச்சில் அதனை உறுதிப்படுத்த முனைகிறார்கள். அதுமட்டுமன்றி ஒரு சிலர் மிகைப்படுத்திக் கூறுகிறார்கள். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இயங்கும் விதம் உண்மையில் வெட்கக் கேடாக இருக்கின்றது.

ஆனால் பொதுமக்கள் உண்மை நிலைமையை தற்போது உணர்ந்து விட்டார்கள். இடி அமீனின் ஆட்சியில் இடம்பெற்றது போன்ற அடக்கும் முறைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த 54 ஆயிரம் சுற்றுலா பயணிகள்!

மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள நிலையில் 12,762 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர் .

இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,937 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

“சிறுவர் இல்லத்தில் வசிக்க விருப்பமில்லை.” – காணாமல் போன யாழ்ப்பாணத்து சிறுமிகள் வாக்குமூலம் !

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த சிறுமிகள் பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவரும் சிறுவர் இல்லத்தில் மீளவும் சேர்க்கப்பட்டனர்.

“அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் செயல்முறை பற்றி அறிந்திருக்கவேண்டும்.” – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

1978ம் அரசியலமைப்பின் 12.1 பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தினால் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை கருத்தில் கொள்வதுடன் பொலிஸ் அதிகாரிகள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் அடையாளம் மற்றும் செயல்முறையை அங்கீகரிக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெவ்வேறு துறைகளில் உள்ள சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் செயல்முறை பற்றி அறிந்திருக்கவேண்டுமென்பதுடன் யோக்யார்கட்டா கோட்பாடுகளில் பொதிந்துள்ள அவர்களின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாலின அடையாளத்தின் அடிப்படையில் பால்நிலை மாற்றம் கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரபட்சம் காட்டலாகாது என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அது அரசியலமைப்பின் 12.2 உறுப்புரையை மீறுவதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது.

பாலின அடையாளத்தின் காரணமாக பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் உடல்ரீதியான தாக்குதல்கள் வாய்மொழி துஸ்பிரயோகம் மிரட்டல் மற்றும் அல்லது பிறவடிவங்களிலான வன்முறைகளை பொலிஸ் நிலையங்களில் சந்திக்கின்றனர் என இலங்கையின் மனித உரிமை  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பால்நிலை மாற்றம் கொண்டவர்களிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தால் அது அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அல்லது மனோரீதியாக சித்திரவதை செய்வதாக அல்லது இழிவாக நடத்துவதாக கருதப்படவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இது அரசமைப்பின் உறுப்புரை 11 மற்றும் அமுலில் உள்ள பிறசட்டங்களையும் மீறுவதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் உடலை பரிசோதனை செய்யும்போது அவர்களின் பாலினத்தை அடையாளம் கண்டு அதன்படி செயற்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை ஆணைக்குழு சந்தேகத்திற்கான நியாயமான காரணங்கள் இருந்தால் அந்த நபரை சோதனையிடுவதற்கு முன்னர் அவரது அடையாள அட்டையை அல்லது பிற செல்லுபடியாகும் ஆவணங்களை சரிபார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் பொது இடங்களில் களங்கம் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அந்த நபர்களை மீறுபவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு !

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சமூகமளிக்காமையால், இந்த விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

விரைவாக தலையீடு செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, காலதாமதமின்றி மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் மூலமே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.” – அநுரகுமார திஸாநாயக்க

“அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் மூலமே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்குமா? என கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

“தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் கூறியுள்ளார்.

ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.” என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம்; இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கை!

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயல்பட்டு வருவதாகவும், சட்டக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 90 லட்சம் ரூபா நட்டம் !

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, 90 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக, மக்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே செல்லாமையே இந்த வருமான இழப்புக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகளின் வருமானம், 15 முதல் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

“திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் I.M.F இன் மாயாஜாலத்தால் ஒன்றும் ஆகப்போதில்லை.” – ஜே.வி.பி

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹாவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பதினைந்து நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது, ரூபாவின் பெறுமதி குறைப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட 15 நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னரே பணம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற்றிருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வலுவாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருட்டு, ஊழல், வீண் விரயத்தை ஒழிக்காமல் சர்வதேச நாணய நிதியத்தின் மாயாஜாலத்தைக் காட்டினாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உற்பத்திப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும், அரசியல் கலாசாரத்தை மாற்றி குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.