April

April

“புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி’ – கிளிநொச்சியில் சிவில் அமைப்புக்கள் போராட்டம்!

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், அவர்கள் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும், ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் போன்ற விடயங்களை வலியுறுத்தி, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி, பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட நாட்டை ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளாதீர், நல்லாட்சிக்கே சட்டத்தை உருவாக்குங்கள் அடக்கி ஒடுக்க உருவாக்காதீர்கள்.” போன்ற பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

11 வயது பிக்கு மீது பாலியல் துஷ்பிரயோகம் – தப்பியோடிய விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் !

11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி தேரர் மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

“இனப்பிரச்சினைக்கு தீர்வு தந்தால் தமிழ் பேசும் முதலீட்டாளர்கள் இலங்கை வருவார்கள்.” – நாடாளுமன்றத்தில் சாணக்கியன்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தினது ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் பெருமையாக கூறிக்கொள்வதைப்போல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது.

மிக நீண்டகாலமாக எமது நாட்டில் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவேண்டும். அதன்மூலமே சர்வதேசம் மற்றும் பெருமளவான முதலீட்டாளர்களின் கவனத்தினைப் பெறமுடியும்.

குறிப்பாக புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார்கள். ஆனால் முதலில் எமது இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் பட்சத்தில் எமது வடக்கு கிழக்கு மாகாணங்களை நாம் பொருளாதார கேந்திர மையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் இன்னமும் கடனைப் பெற்றுக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றது.

அதிலும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே பாராளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு இடம்பெற்றிருந்தால் குறித்த ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகளை மறுசீரமைத்திருக்கலாம். மக்கள் தற்போது அனுபவிக்கின்ற வரிச்சுமைகள் உள்ளிட்ட பாதிப்புக்களைத் தவிர்த்து இருக்கலாம்.

அதனைவிடுத்து தற்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முதல் தவணைக் கடiபை; பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டமை பயனற்றது. அது தொடர்பாக விவாதங்களை நடத்துவதும் வீண்விரயமான செயலாகவே நாம் காண்கின்றோம்.

அதுவும் மக்கள் பணத்தினை வீணடித்து இவ்வாறு செயற்படுவது தவறான செயலாகும். இந்த விவாதத்திற்காக மூன்று நாள் எடுத்துக் கொள்வது பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைவாக முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்ட பல நாடுகள் 46 நாட்கள் முதல் 100 நாட்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளன.

எனினும் நாம் ஏழு மாத காலம் தாமதித்தே சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.

அனைத்துச் சந்தர்ப்பத்திலும் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை, மற்றும் கடந்த செப்டெம்டபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாடு குறித்த அறிக்கை ஆகியவற்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தி இருந்தோம்.

எனினும் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை. மக்களை மேலும் பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு பெருமை கொள்கின்றது இந்த அரசாங்கம்.

புதிய சட்டங்களைக் கொண்டுவரும் அரசாங்கம் எதனையும் நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை. நடைமுறைப்படுத்தவும் இல்லை.

உதாரணமாக வரிக்  கொள்கைகளில் திருத்தம் தொடர்பாக நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் விரைவாகவும் அவசரமாகவும் அமுல்படுத்தியிருந்தது.

ஆனால் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்களில் மறுசீரமைப்பு ஏற்படுத்துவலது தொடர்பாக அனைத்தையும் அரசாங்கம் மறந்துவிட்டது.

அத்துடன் ஊழல் ஒழிப்புத் தொடர்பில் நடைமுறைக்கு பொருத்தமான மற்றும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் கடனையும் மட்டும் வைத்துக் கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு முதலில் தீர்வினைப் பெற்றுத் தாருங்கள் நாம் வடக்கு கிழக்கு மாகாணங்களை நாட்டினது பொருளாதார கேந்திர நிலையங்களாக மாற்றிக் காட்டுகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்குத் தயாராகவே இருக்கின்றது.

மேலும் இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் தரப்புக்கள் என்றும் தயாராகவே இருக்கின்றன. ஆனால் அதற்கு முன்னர் மிக நீண்டகாலமாகவே தொடரும் எமது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் முதலீடு செய்யுங்கள் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு அரசாங்கம் அழைப்பு!

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின்  பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதாக ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள் இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளினை கழித்து விட்டு மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க  தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

அவர்களுடைய விருப்பத்தின்படி அது மக்களுக்கு வழங்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதாவது கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது. அதேபோல பொதுமக்களால்  மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

அதேபோல பொருட்களைக் கொள்ளவும் செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அது வடக்கு கிழக்கு அல்ல தெற்கு மக்கள் என்றல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.

அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி  விக்கிரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஐனாதிபதி பதவியினை பொறுப்பேற்றிருந்தார்.

மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் ரணில்  விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

நாங்கள் முன்னோக்க நகர்கின்றோம் ஒரு அடி ஏனும் பின்னோக்கி செல்ல மாட்டோம் என்ற அடிப்படையில் தற்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்  திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இந்த வேலை திட்டத்தில் முழு இலங்கையும் உள்ளடங்கப்பட்டுள்ளது.

வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்றி அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்து  இ வர்த்தகத்தை ஏற்படுத்திவடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்.

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 25 வீதமானோர் விற்றமின் D குறைபாடு !

நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விற்றமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

விற்றமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

சூரிய ஒளியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விற்றமின் D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளியில் இருந்து அதிக அளவில் விற்றமின் D ஊட்டச்சத்தினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரணமாக நாளொன்றுக்கு 15 நிமிடங்களேனும் சூரிய ஒளி உடலுக்குக் கிடைப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்பதால் குத்தகைக் காலத்துக்கான புதிய அடித்தளம் ஒன்றை கட்டமைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் புதிய குத்தகை கட்டமைப்பை உருவாக்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை புதுபிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தல் விடுத்தார்.

காணிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் அனுமதியின்றி தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்தோடு, குறித்த இடங்களில் மாணிக்ககல் அகழ்வது பாரிய பிரச்சினை என்பதால் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்து அவதானம் இங்கு செலுத்தப்பட்டதோடு, காணி மீட்பு ஆணைக்குழுவின் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாதம் ஒன்றுக்கான செலுவுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாய் செலவிடப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் இந்த செலவு செய்யப்படுவதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்திற்கு அமைவாக இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது.

செய்தி நிறுவனத்தால் ஜனாதிபதி செயலகத்திடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலுக்கு அமைய, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை தகவல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9,91,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏனைய செலவுகளுக்கு 3,38,387.60 ரூபாய் செலவிட்டுள்ளது.

கோட்டாபாய ராஜபக்ச தற்போது பயன்படுத்துகின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு FactSeeker கோரிக்கை விடுந்திருந்தநிலையில், அதற்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம், தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதேவேளை, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர கொடுப்பனவுகளை தனித்தனியாக வழங்க முடியாது எனவும், இந்த செலவுகள் முன்னாள் அதிபரின் ஏனைய தொடர் செலவுகளை உள்ளடக்கிய செலவின அறிக்கையில் ஒரே செலவினத்தின் கீழ் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

16 வயதுடைய பௌத்த பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 58 வயது தேரர் !

அரநாயக்க பிரதேசததில் உள்ள விஹாரை ஒன்றைச் சேர்ந்த 16 வயதுடைய  தேரர் ஒருவரை அதே விகாரையில் வசிக்கும் 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய புதிய பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் விகாரையைச் சேர்ந்த  மற்றுமொரு பிக்குவை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த புதிய பிக்குவை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை – 23 வயது இளைஞன் கைது !

மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பட்டபகலில் மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்ட மிகப்பெரிய விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்படுகிறது.