08

08

10 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் தகவல் திருட்டு – டிக்டாக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்திது இங்கிலாந்து !

சிறார்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் டொலர் அபராதம் அபராதம் விதித்து இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ‘டிக்டாக்’ செயலியை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன. உளவு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் தகவல் ஆணையர் ஜான் எட்வர்ட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், ‘இங்கிலாந்தின் தகவல் சட்டங்களை டிக்டாக் கடைப்பிடிக்கவில்லை.

கடந்த 2018 மே முதல் 2020 ஜூலை வரை விதிமீறல்கள் நடந்துள்ளன. சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில், டிக்டாக் நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களின் தகவல்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எந்த வயதிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் டிக்டாக் செயலியை பார்க்க வேண்டும் என்பது குறித்த கட்டுபாடுகளை அந்த நிறுவனம் விதிக்கவில்லை. இதனால் சிறார்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீது கூட்டு வன்புணர்வு – போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நால்வர் கைது !

சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தியமை நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹெட்செட் பாவனை – குறைவடையும் கேட்கும் திறன் !

அதிக ஒலி எழுப்பும் ளைப் பயன்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் கேட்கும் திறன் குறைவடையும் அபாயம் உள்ளதாக தொண்டை, காது மற்றும் மூக்கு தொடர்பான விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது, கேட்டல் கருவிகளைப் பயன்படுத்தியவாறு பாடல்களைக் கேட்கின்றனர். குறிப்பாக, ஹெட்செட், ஹேண்ஸ்ப்றீ உள்ளிட்ட கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதன்போது, ஓசையின் அளவை 60 இற்கும் குறைந்த அளவில் வைத்துக்கொண்டு, ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த காலமே, செவிமடுக்க வேண்டும். இதனை விடவும் அதிக நேரம் செவிமடுத்தால், காதுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த செயற்பாடானது, முதியவர்களைப் போன்று, இளைஞர்களுக்கும், கேட்கும் திறன் குறைவடையச் செய்வதில் தாக்கம் செலுத்தும் என வைத்தியர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம்.? – இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜையொருவர் தான் இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, சங்கிரி லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தனது சகோதரங்களின் பெயரால் இலங்கை மக்களிற்கு ஏதாவது செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் உண்மையை அறிய விரும்புகின்றேன். அவ்வளவுதான் நான் அரசியல்வாதியோ நீதிபதியோ இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அதுவரை எதிர்வுகூறல்கள் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாயபூர்வமாக  யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் நூல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.ஹேரத், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பம் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தினர் இச்சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு ஆலோசனைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் வழங்கி வரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லத்து சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 80 வயது நபர் – யாழில் சம்பவம் !

இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சில சிறுமிகள் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமைப்போதகரை கைது செய்வதற்கு கோப்பாய் காவல்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவர் தப்பித்துச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி மாணவர் விடுதியிலிருந்து சிறுமிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் மாணவர் விடுதியாகப் பதிவு செய்து சட்டவிரோதமாக இயங்கியமை கண்டறியப்பட்டது.

அதனையடுத்து இல்லத்திலிருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மண் நிரப்பிய பைப்பால் அடித்து தண்டனை வழங்கப்படுவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அங்கு தங்கியுள்ள 80 வயது தலைமைப் போதகர் சிறுமிகளை தனியே அழைத்து அவர்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டுள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடுதியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் தாம் கற்கும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களிடம் தெரியப்படுத்தினால் அவர்கள் விடுதி நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்துவதால், தாம் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமிகள் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜெப ஆலயத்தின் மதபோதகர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமைப்போதகரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்தபோதும் அவர் தப்பிச்சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.