12

12

குடும்பத்தகராறு – தனது கர்ப்பிணி மனைவியை இடியன்துவக்கினால் சுட்ட கணவன் – கிளிநொச்சியில் சம்பவம்!

குடும்ப தகறாறு முற்றி கணவன் மனைவி மீது வெடி வைத்ததில் மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம் (11) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தறாறு காரணமாக கணவன் மனையி இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு முற்றியதில் கணவன், மனைவி மீது இடியன் துப்பாக்கி மூலம் வெடி வைத்துள்ளார்.

இதன் போது கால்பகுதியில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மனைவி நிறை மாத கர்ப்பிணி எனவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அக்கரையான் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள புளிவாழைகள் மூலம் இலங்கைக்கு வாராந்தம் 40,000 அமெரிக்க டொலர்கள் வருமானம் !

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்கள் முதல்
ஏற்றுமதி தொகுதியாக இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் 18 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதிப் பங்களிப்பின் கீழ் புளி வாழை ஏற்றுமதி வலயங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வருடம் எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதிகளில் புளி வாழை ஏற்றுமதி வலயமொன்றை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

செவனகல பிரதேசத்தில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையத்தை அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜாங்கனையில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பதப்படுத்தும் நிலையத்தின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ராஜாங்கனையில் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானமாக 20,000 அமெரிக்க டொலர்களும், யாழ்ப்பாணத்தில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் வாராந்தம் 40,000 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு கிடைக்கும் என அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

“சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியாது.”- மனோகணேசனின் அறிக்கைக்கு தமிழ் புலம்பெயர் அமைப்பு பதில் !

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தியும் அதில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்து இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஷ்வரன் ஆகியோருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மீட்சியுடன் நின்றுவிடாமல், தேசிய நெருக்கடிக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தேடலும் இதனுடன் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சந்தித்துள்ள தேசிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை தேட இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததது. இதே நேரம் குறித்த அந்த கடிதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மனோகணேசனின் குறித்த கோரிக்கையினை நிராகரிப்பதாக நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் தமிழ் புலம்பெயர் அமைப்பு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த விடயத்தை அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் புலம்பெயர் அமைப்பின் அறிக்கையில்,

“75 ஆண்டுகாலமாக இலங்கையில் இனப்படுகொலைகள் மற்றும் இன அழிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் வாழும் தமிழர்களின் அவலத்தை ஹோலோகாஸ்டின் போது யூதர்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டமைக்கு ஒப்பிடமுடியும்.

மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்ற நிலையில் இந்த விடயம் சாத்தியமற்றது. சிங்கள இனவாதம், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் பிற மதங்கள் மற்றும் மொழிகள் மீதான வெறுப்பு ஆகியவற்றால், இலங்கை மற்றும் தமிழ் இறையாண்மை கொண்ட தேசம் பிளவுபட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் சாத்தியமற்றது.” என தமிழ் புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் போது சில சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம்.

தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு எமக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை இதனைத் தவிர்க்க முடியாது என எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எல்லை நிர்ணய குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளமை அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பிரஜைகளுக்கு தமது பரிந்துரைகளையும் , யோசனைகளையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் ஆரம்ப வரைபு நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கொழும்பு 5இல் அமைந்துள்ள எல்லை நிர்ணய குழு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே எல்லை நிர்ணய பணிகளுக்காக எடுக்கப்பட்ட செயன்முறைகள் , அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் , பொது மக்களின் கருத்துக்கள் தொடர்பான தகவல்கள் , குழுவின் அவதானிப்புக்கள் , பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய அறிக்கைகளும் மே 2ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆர்வம் செலுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் , பிரஜைகளுக்கும் அவை தொடர்பான முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதிகளுக்கு முன்னர் எல்லை நிர்ணய தேசிய குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும்.

கொழும்பு -5, கிருள வீதி , நில அளவையாளர் அலுவலகக் கட்டடத்தில் எமது அலுவலகம் அமைந்துள்ளது. மீளாய்வுக்குழு மீண்டும் நியமிக்கப்பட்டால் , எம்மிடம் கையளிக்கப்படும் பரிந்துரைகளை அதில் சமர்ப்பிக்க முடியும்.

கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை இது குறித்து எவ்வித ஆர்வமும் செலுத்தப்படவில்லை. பின்னர் கட்சிகளை அழைத்து இது தொடர்பில் கலந்தாலோசித்த போதிலும் , சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.

மார்ச் 14ஆம் திகதி முதல் இது குறித்து அவதானம் செலுத்துமாறு நாம் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

எனினும் இது குறித்து சுமார் 15 பரிந்துரைகள் மாத்திரமே கிடைத்தன. தொகுதிகள் குறைக்கப்படும் போது சில சிறுபான்மை மக்கள் குழுக்களுக்கு பாதகம் ஏற்படும் என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

தொகுதிகள் குறைக்கப்படும் போது இவ்வாறு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். தொகுதிகளைக் குறைக்குமாறு கூறிய பின்னர் எம்மால் இதனைத் தவிர்க்க முடியாது என்றார்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தல் – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் சில பாராட்டத்தக்க விதிகள் இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக கோரும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தில் சில மாற்றங்களை வரவேற்றாலும், அந்த அமைப்பு இரண்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

முதலாவதாக, முன்மொழியப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீறுவதாக கூறியுள்ளது.

இரண்டாவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசியப் பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதிற் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் வினைத்திறன் முழுமையாக அதனை அமுல்படுத்துவதை பொறுத்தே அமையும் எனவும் இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கு மேலதிக மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 லட்சம் ரூபாவை காணவில்லையாம் ..!

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், நேற்று(11) பிற்பகல் கொழும்பு கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்கள் மேலும் ஒருமுறை பணம் காணாமல் போனது தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.