18

18

விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு – இலங்கை சர்வதேச ரக்பி அணியிலிருந்து இடைநிறுத்தம் !

இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியுள்ளது.

உலக ரக்பி பேரவை மற்றும் ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.

நிர்வாக சிக்கல்களை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.

எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.

உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாக செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.

இதே நேரம் இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஐ.சி.சி அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக 2023. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா – 20 பேர் பலி !

கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணம், அந்த மாதம் 23 ஆம் திகதி ஒரு மரணம், மே 01 ஆம் திகதி ஒரு இறப்பு மற்றும் மே 5 ஆம் திகதி மேலும் மூன்று கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஒரு மரணமும், 11ஆம் திகதி மேலும் இரண்டு மரணங்களும், 12ஆம் திகதி இரண்டு மரணங்களும், 14ஆம் திகதி ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நான்கு சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைமார் இருவர் கைது !

நான்கு சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைமார் இருவரை காவல்துறையினர் நேற்று (17) கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளில் 4, 6, 9 மற்றும் 11 வயதுடைய நான்கு சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களான இரண்டு தந்தைகளுக்கும் தலா இரண்டு பெண் பிள்ளைகள் இருந்துள்ளதுடன், அவர்கள் நால்வரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான தந்தைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நாளாந்தம் சுமார் 44 மில்லியன் ஷொப்பிங் பேக்குகள் பயன்பாட்டில் !

இலங்கையில் நாளாந்தம் சுமார் 44 மில்லியன் ஷொப்பிங் பேக்குகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஷொப்பிங் பேக்குகளின் பாவனை சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சராசரியாக ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு நான்கு ஷொப்பிங் பேக்குகளைப் பயன்படுத்துவதாக பல்பொருள் அங்காடிகளின் சங்கிலித் தொடரில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.

நாட்டின் சனத்தொகையில் ஏறத்தாழ 11 மில்லியன் மக்கள் தினசரி சந்தைக்குச் செல்வதாகவும், ஒருவர் மூன்று அல்லது நான்கு ஷொப்பிங் பேக்குகளைப் பயன்படுத்துவதாகவும் இயக்குனர் குறிப்பிட்டார்.

இந்த ஷொப்பிங் பேக்குகளை சுற்றுச்சூழலில் அப்புறப்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றார். ஷொப்பிங் பேக்குகளின் அதிகப்படியான பாவனை தொடருமானால் அவற்றைக் கட்டுப்படுத்த பொலித்தீன் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், அப்படியானால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஷொப்பிங் பேக்குகளை பயன்படுத்த முடியாது எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேவையில்லாமல் ஷொப்பிங் பேக்குகளை பயன்படுத்தாமல், கடைக்குச் செல்லும் போது துணி பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

இறக்குமதி மீதான தடையை நீக்க இலங்கை விருப்பம் !

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு (EU) அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 நடைபெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வின் போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் விளைவாக 2020 இன் பிற்பகுதியில் இறக்குமதிக்கு தடையை விதித்த இலங்கை பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக தடையை நீடித்தது.

இலங்கையின் இரண்டாவது பாரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியம், இந்தத் தீர்மானத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தனது வர்த்தகப் பங்காளிகளுக்கு நியாயமற்றதாகக் கருதப்படும் பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லுமாறு இலங்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வெளிப்படுத்தியது.

வேன் ஒன்று தன்னை கடத்தியதாக பொய்கூறி பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் கைது !

காவத்தையிலிருந்து இனந்தெரியாதவர்கள் தன்னை வேன் ஒன்றில் கடத்தி வந்ததாக பொலிஸாரிடம் பொய் கூறிய  சிறுவனை புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகனை ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பணத்தை எடுத்து தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயந்து அங்கிருந்து  மட்டக்களப்பிற்கு சென்றுள்ளான்.

அங்கு காவத்தையில் இருந்து வேன் ஒன்றில் கடத்திவரப்பட்ட நிலையில் தான் வேனில் இருந்து தப்பி ஓடிவந்ததாக பொய்யை கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.

இதனையடுத்து  உடனடியாக செயற்பட்ட மட்டு. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த பண்டார காவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி அவன் தொடர்பாக விசாரித்தார்.

இதன்போது, காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சிறுவன் கடத்தப்பட்டதாக எந்தவித முறைப்பாடும் இல்லை எனவும், இவன் இவ்வாறு 3 தடவை வீட்டில் இருந்து பணத்தை எடுத்து தப்பி ஓடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவனை கைதுசெய்த பொலிஸார் சிறுவனின் குடும்பத்தவர்களை வரவழைத்து சிறுவனை எச்சரித்து அவர்களிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

துபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 164 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்!

கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினரால் கண்டுபிடித்துள்ளனர்.

8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164 மில்லியன் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) காலை ஒருகொடவத்த, கிரே லைன் 01 கொள்கலன் முனையத்தில் கொள்கலன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (சமூக பாதுகாப்பு பிரிவு) யூ.கே.அசோக ரஞ்சித் தெரிவிக்கையில்,

“இலங்கை வர்த்தக நிறுவனம் ஒன்றின் பொய்யான பெயரைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 0.5 அளவில் நிகொடின் உள்ளடங்கியுள்ளது. அதன்படி, இதன் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கொள்கலன்கள் மற்றும் அகற்றுவதில் தாமதப்படுத்தும் கொள்கலன்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.

தீய சக்திகளை விரட்டுவதாக கூறி சிறுவனின் கையை நெருப்பால் சுட்ட விகாராதிபதி கைது !

வீரவில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தீய சக்திகளை விரட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் கையில் தீக்காயங்களுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விகாரையில் பூஜை செய்த விகாராதிபதி, தோஷம் விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிறுவனின் வலது கையில் பலத்த தீக்காயத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத், தீக்காயங்களுடன் சிறுவன் வீரவில வைத்தியசாலையிலும் பின்னர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விகாராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.