June

June

“தமிழ்த்தலைவர்களே புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்.” – அமைச்சர் அலி சப்ரி !

“ தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள்.” என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண்பதற்கு தற்போது அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வீரகேசரியிடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  பொறுத்தவரையில் அவர் முற்போக்கான ஒரு தலைவர். அவருடைய காலத்தில் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை காண்பதற்கு மிகவும் அரிதான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த சக்திகளுக்கு மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. அவர்கள் இலங்கையில் நிரந்தரமானதொரு தீர்வினை எட்டுவதற்கு இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்பது பல செயற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் அவர்களது வகிபாகத்தினை தக்க வைத்துக்கொள்வதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளை எமது நாட்டிலும் தமிழ் தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தலைவர்கள் சிக்கிக்கொள்வதால் தமிழ் இளையோரின் எதிர்காலமே பாதிக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அத்தலைவர்களால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர்களுக்கு எதிராக இளைஞர்கள் மாறியதுடன், அவர்கள் தலைவர்களால் செய்ய முடியாததை தாம் ஆயுத வழியில் நிகழ்த்திக் காண்பிப்போம் என்று புறப்பட்டார்கள்.

இந்தத் தீர்மானம் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சிதைத்துவிட்டது. அதிலும், தமிழ் மக்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் மிகவும் மோசமாக பாதித்துவிட்டது.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தினை பொறுத்தவரையில்  பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, படிப்படியாக விடயங்கள் தீர்க்கப்படுவதற்கே நாமும் செயற்படுகின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,  அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. எஞ்சிய சொற்ப அளவிலானவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் உள்ளிட்டவை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையானது அனைத்து சமூகங்களுக்குமானதாக உள்ளது. ஆகவே, அந்த விடயமும் உரிய அணுகுமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

முன்னதாக, நான் நீதியமைச்சராக கடமையாற்றியபோது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனினும், அதற்கு சிறிய குழுவினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

அதேநேரம், மாற்றுத்திறனாளிகளாக உள்ள முன்னாள் போராளிகளுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவையாக உள்ளன. அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற பகுதியளவிலான உதவிகளை பெற்று, வாழ்க்கையை முன்னகர்த்துபவர்களும் உள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக நான்கு விண்ணப்பங்கள் !

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க, நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவரும், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்கின்ற – பதவிக்கால நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கின்ற பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் அதே பதவிக்காக விண்ணப்பித்துள்ளார்.

அவரை தவிர, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் இருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோரே ஆவர்.

அத்துடன், கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா விண்ணப்பித்துள்ளார்.

தற்போதைய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனால், புதிய துணைவேந்தரை நியமிக்கும் நோக்கில் பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்திருந்தது.

அறிவிக்கப்பட்டிருந்த இந்த கால இடைவெளியிலேயே இந்த நான்கு விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தின் முற்பகுதியில் நடத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையிலேயே தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்புள்ளிகளின் அடிப்படையில்  முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதனையடுத்து, பல்கலைக்கழக சட்டத்தின்படி, ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை தெரிவுசெய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக  துணைவேந்தராக ஜனாதிபதி நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களிடையே முரண்பாடு – 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் – கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.

இதனால் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் இன்று (04) இடம்பெற்றது. விசாரணைகளின் முடிவில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் முறையான விசாரணைகள் முடிவுறும் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மாணவர் வதிவிடம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிமுறைகளுக்கமைவாக இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

இதேநேரம், மோதல் சம்பவத்தையடுத்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இளம் பெண்ணுடன் இருந்த 55 வயது அருட் தந்தையை மடக்கிப்பிடித்த மக்கள் – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தங்கி இருந்தவர் ஆசிரியை அல்ல என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியமும் இளம்பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ளார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் அந்தப் பகுதி பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.. அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

மதகுருவையும் அவருடன் தங்கி இருந்து யுவதியையும் பிடித்த பொதுமக்கள் தெல்லிப்பழை பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிசார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

“தந்தையின் குடிப்பழக்கமே என் சாவுக்கு காரணம்.” – சிறுமி தற்கொலை !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மகள் விஷ்ணு பிரியா மன நிம்மதியின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று மாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை !

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறியவும் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கவும் நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிதைவடையும் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை – எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் மாணவர்கள் !

யாழில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருப்பதாகவும், இப்படியான மோசமான நிலை யாழில் காணப்பபடுவதாக பிரதேச செயலர்கள் கடந்த புதன்கிழமை (31-05-2023) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் பிரதேச செயலர்கள் சுட்டிக்காட்டும்போதே இவ்விடயத்தை தெரிவித்தனர்.

பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீளவும் தரம் 9 இல் சேர்க்கும்போது அவர்களுக்கு எழுத, வாசிக்கத் தெரிவதில்லை. அவர்கள் அந்த வகுப்பிலே பேசாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு பல வகுப்புக்களில் நடைபெறுகின்றன என்று பிரதேச செயலர்கள் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவ்வாறு இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டனர். ஆரம்பக் கல்வியை சரியாகப் பயிலாத மாணவர்களால் இந்த நிலைமை ஏற்படுவதாகக் குறிப்பிட்டனர்.

இதனைத் தீர்ப்பதற்கு பாடசாலைகளில் அவ்வாறான மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு ஆரம்பக் கல்வி போதிக்கப்படுகின்றது.

எனினும் இது நடைமுறையில் முழுமையான சாத்தியமான விடயமல்ல என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை, கொரோனா காரணமாக இவ்வாறு ஆரம்பக் கல்வியை முறையாகப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை அண்மையில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை குறித்து வெட்கமாக உள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கல்வியில் முதலிடத்திலிருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது. பிள்ளை தனது பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை. இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர். இது குறித்து பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த எங்களிடம் ஆளணி இல்லை – பொலிசார் முறைப்பாடு !

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் கடந்த புதன்கிழமை(31) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த பிரதேச செயலர்கள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் பல இடங்களில் காவல்துறை ஆளணிப் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல்துறை ஆளணியை அதிகரிப்பதற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எனக்கு கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்தால் தான் அதனை அதிபருடன் கலந்துரையாடி காவல்துறை ஆளணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், உதவிப் காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் பிரதேச செயலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளம் குடும்பப் பெண்னை கடுமையாக தாக்கிய கணவன்!

கிளிநொச்சி கோனாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது. இதனையடுத்தே இது பற்றி பலரும் ஆராய முயன்றுள்ளனர்.

மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வுகளையும் அல்லது வன்முறை வன்முறைகளை ஏற்படுத்துவர்களை தண்டிப்பதற்கு அரச உயர் அதிகாரிகள் முதல் பொலிஸாரோ முன் வருவதில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் பாதுகாக்கப்படுவதாகவே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டம் !

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் யாழ். மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.