18

18

மன்னாரில் 25வயது குடும்பஸ்தர் வெட்டிப்படுகொலை – வெளியாகியுள்ள காரணம்!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உடைய 23 வயதுடைய சகோதரர் அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைஞனை யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன் போது காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான இளைஞன் யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன் போது யுவதியின் உறவினர்களுக்கும்,தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியது.

இதன் போது இளம் குடும்பஸ்தரான குறித்த சகோதரர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். படு காயமடைந்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“ குருந்தூர் மலை விவகாரத்தில் நாம் பலவந்தமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்காதீர்கள்.” – சரத்வீரசேகர எச்சரிக்கை !

“ குருந்தூர் மலை விவகாரத்தில் நாம் பலவந்தமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்காதீர்கள்.”  என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மஹகர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தலைமையில் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது அதிபர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெளிவுபடுத்தவில்லை.

குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள்,அடையாளப்படுத்தப்பட்ட நடுகை தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை.

குருந்தூர் மலை விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண தயாராக உள்ளோம். அதனை விடுத்து பலவந்தமான முறையில் செயற்பட்டால் நாங்களும் அந்த வழியில் செல்ல நேரிடும் என தெரிவித்தார்.

இலங்கையில் தனிநபர் மாதாந்த அப்படைத்தேவைக்கு எவ்வளவு தேவை..? – மத்தியவங்கி வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில் பணவீக்க நிலைமைகளின் வளர்ச்சி பாரிய அதிகரிப்பை காட்டியது.

இதனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் 14.3 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

“நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவம் கூட்டமைப்பிடம் சமர்ப்பிக்கப்படும்.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் சமர்ப்பித்த பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளதுடன் நகல்வடிவு அடுத்தமாத இறுதிக்குள் தயாராகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் அனுமதியளித்ததும் ஆணைக்குழு டிசம்பர் மாதம் முதல் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 53 வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன,.

“பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.” – மேதானந்த தேரர் விசனம் !

விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

புராதன பௌத்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் மக்களை குடியேற்றுவதற்காக அவர்கள் தவறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு இணக்கம் வெளியிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும் பாவத்தை செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குருந்தூர், திரியாய ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை மற்றும் திரியாய ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை தொல்பொருளியல் திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருப்பதை தவிர்த்து அதற்கு உரித்துடைய தமிழ் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி கடந்த 8ஆம் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்க, பதவி விலகியுள்ள நிலையில், எல்லாவல மேதானந்த தேரர் குறித்த விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறித்த காணிகளை வழங்கப்போவதில்லை என்றும் காணிகள் பற்றிய விடயத்தினை முழுமையாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மறுக்கடிதம் அனுப்பியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கிராமவாசிகள் போராட்டத்தில் !

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம வாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வரோதய நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோத மது பான தயாரிப்புக்கள் அதிகரித்தமையால் இரவு நேரங்களில் அவற்றினை கொள்வனவு செய்ய வருபவர்களது அச்சுருத்தல் அதிகரித்துள்ளதாகவும் குறித்த பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராமத்தினை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் பலர் போதைப்பொருள்களை உபயோகித்து விட்டு தகாத வார்த்தைகளால் அச்சுருத்துவதுடன் குறித்த பகுதி கிராமத்தினை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்கின்ற போதிலும் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதால் குற்றவாளிகள் தொடர்ந்தும் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எனவே இவர்களுக்கு எதிதாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் பிறக்கும் 3000 குழந்தைகள் !

எமது நாட்டில் வருடம் ஒன்றிற்கு 3000 குழந்தைகள் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் பிறக்கின்றன. இவர்களில் 1500 குழந்தைகளுக்கு மட்டுமே ஒரு வருடத்திற்குள் சிகிச்சை அளிக்க எம்மால் முடிகிறது.

எஞ்சிய 1500 குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கின்றது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை இருதய நோய் நிபுணரும் ஆலோசகருமான வைத்தியர் துமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு லங்கா வைத்தியசாலையின் டொக்டர் பிரதாப் சி ரெட்டி அரங்கில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை திட்டத்தில் ‘Don’t Skip A Beat’ என்ற வாசகத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பினை கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் வைத்தியர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிறவியிலேயே இதய பிரச்சினைகளைக் கொண்ட பிள்ளைகளின் உயிர் காக்கும் பணியில் ரோட்டரி கழகமும் இந்தியாவும் பெரும் உதவிகளை வழங்கியுள்ளன.

அந்த வகையில் இதய பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு எம்மால் சிகிச்சை அளிக்கவும் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் முடியுமானதாக உள்ளது என தெரிவித்தார்.

கொழும்பு லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களுடன் இணைந்து கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 80 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உதவியுள்ளன.

இது தவிர லங்கா வைத்தியசாலை, உள்நாட்டு வைத்திய நிபுணர்கள் மற்றும் கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் 3220 மற்றும் ரோட்டரி கழகம் ஒஃப் கொழும்பு மெட்ரோபொலிட்டன் ஆகியன இணைந்து பிறவியிலேயே இதய பிரச்சினை கொண்ட 50 சிறார்களுக்கான இதயம் தொடர்பான மருத்துவ சிகிச்சைகளுக்காக இவ்வாண்டில் உதவியுள்ளன.

அத்துடன் 65 சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் இந்தியாவின் கொச்சின் அம்ரிதா வைத்தியசாலையில் மேற்கொள்ள அனுமதித்துள்ளதுடன் 5 உள்நாட்டு வைத்தியர்களுக்கும் 30 தாதியர்களுக்கும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் பற்றிய பயிற்சிகளையும் வழங்குகின்றது.