24

24

மக்களிடையே அதிகரிக்கும் செல்வாக்கு – பொதுசன வாக்கெடுப்புக்கு தயாராகும் ரணில் தரப்பு !

ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லாது பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசீலித்து வருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பில் அரச தரப்புக்குள் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், மேலதிக ஆலோசனைக்காக 10 பேரடங்கிய நிபுணர் குழுவொன்று அமைக்கப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

செலவு கட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்களைக் கருத்தில்கொண்டே ஜனாதிபதி இவ்வாறு சிந்தித்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.

மக்கள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையிலேயே, தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கின்றார்.

எனினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமி துஷ்பிரயோக வழக்கில் கைதான நபர் தூக்கிட்டு தற்கொலை!

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

48 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் சகோதரருடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்கூடத்திற்குள் அடைக்கப்பட்ட சந்தேகநபர், இன்று (24) அதிகாலை தூக்கிட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

66 வயது தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை !

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்ட காலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது விடுதலைப்புகளின் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கிய குற்றசாட்டில் கைதாகினர்.

இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசபை தேவதாசன் தன்னை விடுவிக்குமாறு கோரியும், தனது வழக்கிற்கான ஆதாரங்களை திரட்ட தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியும் பல உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.

அதேவேளை, தனக்காக தானே சில வழக்கு தவணைகளில் வாதாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் !

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார்.

 

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

 

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் “காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்” தொடர்பிலும் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

 

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ,கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

 

அதேநேரம் “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி நேற்று(23) கலந்துகொண்டார்.

 

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் அவர்களின் தலைமையில் இரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பமாகியிருந்ததோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன பிரதமர் லீ கியாங், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ், உலக வங்கியின் பிரதானி அஜய் பெங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா, ஆகியோரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், வெளிநாடுகளின் அமைச்சர்கள் உள்ளடங்களான பிரதிநிதிகள், நிதிசார் பிரதானிகள் மற்றும் காலநிலை அலுவல்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

“ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் அதன் மீதான நம்பிக்கை போகிறது.” – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வரும் தமக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே ஐ.நா சபை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டடார்.

நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தை கொண்டுவந்து இழப்பீடு தருவதாக கூறப்பட்டுள்ளதே தவிர இதுவரை குறித்த அலுவலகத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை ஏறும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றாலும் அவர்கள் தம்மை திரும்பி பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு உள்ளமை வேதனையை தருவதாகவும் அவர் குறிப்பிட்டடார்.

4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற அதிகாரிகள் கைது !

4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (23) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பேருந்து நிலைய புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியில் வா்த்தகம் நிலையம் ஒன்றின் உாிமையை விரைவாக வழங்குவதற்காக இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

அவிசாவளை மாநகர சபையினுள் இலஞ்சம் பெறும் போதே குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இடம்பெறும் சிங்களமயமாக்கல் !

நிர்வாக மற்றும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் குறித்த அறிக்கையில், தமிழ் மக்களின் உரிமைசார் பயணத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புக்களை பாராட்டியுள்ளதுடன், சில விடயங்கள் தொடர்பிலான தெளிவுபடுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களின் கூட்டு உணர்வுகளுடன் தொடர்புடைய தினங்களில் களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களிற்கு ஒப்புதல் வழங்குவதனையும், அவற்றினை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்குமாறும், அன்றைய தினங்களில் பல்கலைக்கழக நாட்காட்டியில் நிகழ்வுகள் இடம்பெறாமையை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் மறைமுகமான சிங்களமயமாக்கல் முயற்சிகளினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

இப்படியாக தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் உரிமை மீறல்கள் தொடர்பிலான பல விடயங்களை தெளிவுபடுத்தி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.