August

August

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் அறிவிப்பு!

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன. நாளைய தினம் (18)குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

” நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன்.” – மனோ கணேசன்

” நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துக் கொண்ட கூட்டணி தலைவர் மனோ கணேசன், எம்பீக்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது,

மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன?நீர் கூறுவதை கேட்டுக் கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக் கொண்டு வாயை மூடிக் கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது.

அதைவிட 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உமது கட்சி, பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும். அதன் அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்பி தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்பி கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கூறியுள்ளார்.

நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வை தேடுகிறேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப்பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் கட்சியின் சார்பாக, 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை, பாராளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது, எம்.பிக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம். உலகமும் தெரிந்துக்கொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, சாளரம், கதவுகளை மூடி வைத்து இந்நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய் கிடக்கிறது.

ஆகவே இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் 13 மைனஸ் பற்றி பேசுகிறார். நீர் 13 மைனசும் கொடுக்க கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீரா? அது ஒருபோதும் நடக்காது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து மூடப்பட்ட பாடசாலைகள் – 85 வீதமான மாணவர்களிடம் குறைந்துள்ள எழுத்தறிவு திறன் !

கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.கல்வி அமைச்சின் தலைமையில் சுமார் 800 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பபெற்றதாகத் தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியையும், பாலர் பாடசாலைகளை இயக்குபவர்கள் தொடர்பில் கடுமையான அவதானங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.கொழும்பில் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “கல்வி அமைச்சின் தலைமையில் 800 அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட மதிப்பீட்டிற்கு அமைய தரம் 3 இல் கல்வி கற்கும் மாணவர்களில் 85 வீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை. இது அவர்களின் இடைநிலை பாடசாலையின் மாற்றத்துக்கும் அதற்கு அப்பாலான வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இன்றியமையாததாகும்” என்றார்.“ தேசிய வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டை குறிப்பாக ஆரம்பத் தரங்களுக்கு அதிகரிக்க வேண்டிய அவசர தேவை காணப்படுகின்றது.

சிறுவர்களின் அடிப்படைக் கற்றலை ஊக்குவிக்கும் அதேநேரம், கல்வியில் முக்கிய மறுசீரமைப்புக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய திறன் மிக்க மனித வளத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

“ கொவிட் பரவலால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஆசிரியர்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். இவ்வாறு கற்றல் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். “ கற்றல் முறைமை மற்றும் பாடசாலை தரங்களில் முதலில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. முக்கிய மாக ஆரம்பப் பிரிவில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.இதேவேளை, “ நாடளாவிய ரீதியில் பல பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வாறான பயிற்சிகளைப் பெற்று கற்பிக்கின்றார்கள் என்பதை ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது. உயர் தர பரீட்சையைவிட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமான தொன்றாக எமது சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. இதனை முற்றிலும் மாற்ற வேண்டும். ஏன் இந்த மாற்றங்களை செய்வதற்கு விடுகிறார்கள் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.இங்கு உரையாற்றிய யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டின் ஸ்கூக் கூறுகையில்,

“ எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் சமூகப் பொருளாதாரத் திறன்களே சிறுவர்கள் தமக்கான மற்றும் தமது குடும்பங்கள், சமூகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன என்று குறிப்பிட்டார்.“நாடு எதிர்கொண்டுள்ள தொடர்ச்சியான இன்னல்களால் கல்வியை இழப்பவர்கள், மெதுவாகக் கற்றுக்கொள்பவர்கள், கல்வியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின் கற்றல் சாதனையில் விரிவடைந்துவரும் ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சின் முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்” எனத் தெரிவித்தார்.இதேவேளை, கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்கள் மற்றும் அவ்வப்போது கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை மீட்பதற்கு உதவி செய்யும் தேசிய முயற்சிக்கு கல்வி அமைச்சும் யுனிசெப் நிறுவனமும் தலைமை தாங்குகின்றன. மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதத்திற்கும் குறைவான தொகையையே இலங்கை தற்போது கல்விக்காக ஒதுக்கியுள்ளது. இது கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 முதல் 6 வீதங்களாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச அளவுகோலுக்கு கீழ் காணப்படுவதுடன் தெற்காசியப் பிராந்தியத்தில் இதுவே மிகவும் குறைவாகவும் காணப்படுகின்றது.கற்றல் நெருக்கடியானது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்களையும் ஆரம்பத் தரங்களில் உள்ள சிறுவர்களையும் பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.”கற்றல் மீட்பு” தொடர்பில் அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் கல்வி அமைச்சு மற்றும் யுனிசெப் ஆகியன கடந்த ஜூலை மாதம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன் குறைபாடுகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கு 9 மாகாணங்களிலும் செயலமர்வுகளை நடத்தின.இதன் இறுதி நிகழ்வு 16 ஆம் திகதி புதன்கிழமை கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிரிஸ்டியன் ஸ்கூக் மற்றும் அரசாங்க அபிவிருத்திப் பங்காளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதிகரித்த வரட்சி – வவுனியா வடக்கில் குடிநீர் கூட இல்லாமல் திணறும் மக்கள் !

நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக, வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “ வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் அதிகமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.

மேலும், இம்மக்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுவதனால் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது” என்றார்.

பாடசாலை மாணவியை வீட்டிற்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது !

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார்இ ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார். அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார். அதன்போதே ஆசிரியர் அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனைக்காக மாணவிஇ பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிப்பு !

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 11,333 விவசாயிகளின் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, வறட்சியினால் நாடளாவிய ரீதியில் நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை இதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.சிறுபோகத்தில் 06 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிக காணியில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அழிவடைந்த நெற்பயிர்களுக்காக ஹெக்டேயருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதனிடையே, இழப்பீட்டை அதிகரிப்பதற்கான யோசனைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் இரண்டு நாட்கள் வரை சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை !

யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இந்நிலையில், எனது மகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததால் ஆட்டோ சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறுமியின் தாயார் பொலிசில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி ஒருவரை வழமையாக ஆட்டோவில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். இதனைப் பயன்ப டுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.இந் நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதே வேளை குறித்த சிறுமி துஸ்பிரயோகத்துக்குள்ளானது சட்டவைத்திய அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் இரண்டு நாட்கள் வரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடாவடித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் – மேடைகளில் இலவச வைத்தியத்தை காப்போம் என பேசிக்கொண்டிருக்கும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் !

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலை நீடித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் மக்கள் பலரும் இலவச மருத்துவத்தின் மீதான தங்களுடைய நம்பிக்கையை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மருந்துப்பற்றாக்குறையாலும் – மருந்துப்பொருட்களின் தீவிர விலையேற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களை இந்த வைத்தியசாலைகளின் நிர்வாகமும் – தாதியர்களுமாக சேர்ந்து “மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற் போல” கொடூரமாக வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகவே நேற்றையதினம் வவுனியா பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள துயரமாகும். வைத்தியசாலைக்கு தமது சிசுவுக்கான சிகிச்சைக்கு சென்ற தம்பதியினரிடம் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள் வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் (மருத்துவர்கள் உட்பட) இது தொடர்பில் பாதிக்கபட்ட நபர் தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“04.08.2023 அன்று மாலை எமக்கு குழந்தை கிடைத்தது.

வைத்தியசாலையில் சிங்கள மொழி பேசும் Malki அல்லது Dilshaani என அழைக்கப்படும் தாதியர் ஒருவருக்கும் எமக்கும் இடையில் கடந்த 10 நாட்களாக முறுகல் நிலை ஏற்பட்டு வந்தது. அது கடந்த சனிக்கிழமை மாலை அன்று வாக்குவாதமாக மாறியது. நான் அவருடைய பெயரைக் கேட்ட போது அவர் கூறிவிட்டு பின்னர் என்னை மீண்டும் அழைத்து கடும் உரத்த தொனியில் என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு எனக் கேட்க நான் உங்களைப் பற்றிய முறைப்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

அதற்கு அதிக கோபம் அடைந்த அந்த தாதியர் மருத்துவ சிட்டையை முடிவுறுத்தி எங்களை வைத்திய சாலையை விட்டு வெளியேறுமாறு கூற நான் அதற்கு இது அரச மருத்துவமனை உங்களுக்கு அதனை கூற உரிமை இல்லை. நாங்கள் இருவரும் அரச உத்தியோகத்தர்கள் தான் எங்களுக்கும் சட்டங்கள் தெரியும் எனக் கூறி விட்டு நான் வீடு திரும்பிகொண்டிருந்தேன். இதனை பெரிசுபடுத்தவில்லை. ஏனெனில் எனது குழந்தை அந்த தாதியரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதால்….

சுமார் 15 நிமிடங்களின் பின்னர் நான் தாண்டிக்குளத்தை அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எனது மனைவியார் அழைப்பு எடுத்து 7th Ward இல் உள்ள தலைமைத் தாதியர் அங்கு வந்து நான் சொன்னால் தான் இங்கு உள்ள தாதியர்கள் உங்கள் பிள்ளைக்கு மருத்துவம் செய்வார்கள். உங்கள் கணவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் நாங்கள் செய்ய மாட்டோம் எனக் கூறினாராம்.

அத்துடன் அந்த நேரத்தில் குழந்தை பகுதி 7th Ward இல் கடமையில் இருந்த வைத்தியர் அஸ்ரா (Training period உள்ளவர்) மனைவியை அழைத்து உங்கள் கணவரை எங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் இல்லை எனில் நாங்கள் உங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் எனக் கூறினாராம்.

நான் உடனடியாக மீண்டும் மருத்துவமனை சென்று 7 ஆம் விடுதிக்கு பொறுப்பான VP Doctor இடம் முறையிட்ட போது அவர் உடனடியாக வைத்திய சாலையில் Director அவர்களுக்கு தெரியப்படுத்த அவரும் உடனடியாக அங்கு வந்து நடந்தைக் கேட்டார். எனக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் நான் உங்களால் எப்படி மருத்துவம் பார்க்க முடியாது இது அரச மருத்துவமனை நீங்கள் அப்படி கூற முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் எனது குழந்தைக்கு சேவை வழங்காத இந்த மருத்துவமனையிலும், உங்கள் தாதியர் இடத்திலும் எனது 10 நாட்களான பச்சிளம் குழந்தையை விட்டு செல்ல எனக்கு நம்பக தன்மை இல்லை.

நீங்கள் தானே சேவை வழங்க மாட்டீர்கள் எனக் கூறினீர்கள் ஆகவே எனக்கு லாமா முறை அடிப்படையில் எனது குழந்தையை விடுவித்து தருமாறு Director அவர்களை கேட்டுக் கொண்டேன்.

அதனை ஏற்றுக் கொண்ட அவர் தாதியர்களிடமும், வைத்தியர் அஸ்ரா அவர்களிடமும் உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு கூறினார். அதன் பின்னர் லாமா படிவத்தில் எனது மனைவியார் 12.08.2023 இரவு 10.28 மணிக்கு கையொப்பமிட்டார். அதன் பின்னர் குழந்தையின் மருத்துவ படிவங்களை கோரிய போது இந்த நேரத்தில் இந்த வேலை தங்களுக்கு செய்ய முடியாது அதற்கான நேரம் வரும் போது மாத்திரமே நாங்கள் அதை செய்வோம் என உரத்த தொனியில் மிகவும் கடுமையாக கூறினார்கள்.

மீண்டும் நான் Director அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற போது அது மூடப்பட்டு இருந்தது. பின்னர் அவருக்கு வேறு ஒரு வழியாக தொலைபேசி ஊடாக கதைத்தபோது தான் Off இல் சென்றுவிட்டேன் எனக் கூறினார். பின்னர் நான் மீண்டும் 7 ஆம் விடுதிக்கு வந்து தொலேபேசி ஊடாக வைத்தியர்களை தொடர்பு கொள்ள பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஏனெனில் நேரம் நள்ளிரவு 12 மணியை கடந்திருந்தது. தாதியர்களும் 10 நாட்களான பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் தங்களது அதிகாரத்தை கைவரிசையாக வைத்து எங்களை பழிவாங்கினார்கள். அவர்களது சேவை துஸ்பிரயோகமே இது.

வைத்தியசாலையின் தலமை அதிகாரி கூறியும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் தமது வைத்திய மற்றும் அரச சேவையை துஷ்பிரயோகம் செய்தனர். சற்று கூட இரக்கம் அற்ற பெண்கள் தாய்மையின் வலியை அறியாத ஓர் பிறப்புகளாக கூட இருக்கலாம்.

நீண்ட நேரமாக முயற்சிகள் செய்து ஏதும் பலன் அளிக்காமல் போய் அவ்விடத்தில் தந்தையாகவும், ஓர் அரச உத்தியோகத்தராகவும் தோற்றுபோய் நின்றிருந்தேன். அப்போது நேரம் 13.08.2023 அதிகாலை 2 மணி ஆகிவிட்டது. அப்போது மகப்பேறு விடுதியில் கடமையில் இருந்த சகோதர மொழி பேசும் வைத்தியர் (எனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்தவர்) எல்லா வழிகளிலும் தோற்று போய் நின்ற என்னைத் தேற்றி நீங்கள் நம்பிக்கையுடன் வீடு செல்லுங்கள் உங்கள் குழந்தைக்கு நான் பொறுப்பு என என்னிடம் சத்தியம் கூறினார். அவருடைய நம்பிக்கையில் மனைவிக்கும் ஆறுதல் கூறி விட்டு நான் வீடு திரும்பினேன். அந்த உயர்ந்த வைத்தியரிடம் உள்ள இரக்க குணம் கூட அந்த ஈனர் தாதியரிடம் இல்லை.

அதன் பின்னர் மீண்டும் காலை 6 மணிக்கு மீண்டும் வைத்தியசாலை வந்து மனைவியை பார்வையிட்ட பின்னர் 7 ஆம் விடுதிக்கு அந்த வேளையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் முறையிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் தாதியர்களிடம் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார். ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

சற்று நேரத்தின் பின்னர் அந்த விடுதிக்கு பொறுப்பான VOG Doctor Kunawardena Sir அவர்கள் அங்கு கடமைக்கு சமுகமளித்தார் நான் அவரிடம் இது பற்றி முறையிட்ட போது நான் அவர்களுக்கு கட்டளை இட்டிருக்கின்றேன் இப்போது உங்களுக்கு விடுவித்தல் பத்திரம் கிடைக்கும் நீங்கள் செல்லாம் என பணிவுடன் கூறினார். அப்போது நேரம் 9.30 மணி

மீண்டும் காத்து கொண்டு இருந்தேன். எந்த வித முடிவுகளும் இல்லை. மகப்பேறு விடுதி என்பதால் பார்வை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஆண்கள் உள்ளே செல்ல முடியாது.

ஆத்திரம் அடைந்த நான் வைத்திய சாலையின் Director இடம் சென்று எனது மனைவியார் கடந்த இரவு 10.28 pm இற்கு லாமாவில் கையொப்பம் இட்டார் ஆனால் தாதியர்கள் இன்னும் அவர்களை விடுவிக்கவில்லை எனக் கூறினேன். அதற்கு உடனடியாக அவர் அந்த விடுதிக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் எந்த விடுவிப்புகளும் இடம் பெறவில்லை.

இவ்வாறு வெளியில் மணிக்கணக்காக காத்திருந்த போது நேரம் 12 மணி ஆகி இருந்தது அடுத்த பார்வை நேரமும் வந்தது. அப்போது அங்கு கடமைக்காக பிரசன்னமாகி இருந்த குழந்தை பிரிவுக்கான VP Doctor Ranjith Sir அவர்களிடம் மீண்டும் முறையிட்ட போது நான் உங்களை நேற்று இரவு விடுவிக்குமாறு தாதியர்களுக்கு பணித்தேன் எனக் கூறினார். மீண்டும் அவர் அவர்கள் காலதாமதம் இன்றி உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார்.

ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் எந்த விடுவிப்புகளும் இடம் பெற வில்லை. மிகவும் ஆத்திரம் அடைந்த நான் மீண்டும் Director இடம் சென்றேன் அங்கு அவர் இல்லை. அங்கு கடமையில் இருந்த மற்றுமொரு பதவிநிலை உத்தியோகத்தர் இடம் சென்று விடையத்தை கூறி நான் Director ஐ சந்திக்க வேண்டும் என கூற அந்த உத்தியோகத்தர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டு விடையத்தை கூறினார். அதற்கு Director 10 நிமிடத்தில் உங்களை விடுவிக்கிறேன் என கூறினார். மீண்டும் நான் விடுதிக்கு வரும் போது குழந்தை பிரிவுக்கான VP அவர்களும் விரைவாக விடுதிக்கு வந்தார் அதன் பின்னரே மாலை 3 மணிக்கே எங்களை விடுவித்தார்கள்.

குழந்தைக்கு infection இருந்ததால் Antibiotics ஊசி தினமும் மூன்று முறை வழங்கப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தாதியர்கள் 2 மணிக்கு வழங்க வேண்டிய ஊசி வழங்கவில்லை. மாறாக நான் வைத்தியரை வேண்டிநின்ற போது 2.50 மணிக்கே ஊசி வழங்கினர்.

அத்துடன் அங்கு மதிய நேர மருந்து வில்லைகள் மனைவிக்கு வழங்காமல் புறக்கணித்தனர். இது ஒரு மிகவும் கேவலமான சேவை துஸ்பிரயோகம் அவர்களது சேவை சத்திய பிரமாணம் எங்கே போனது இதுவா உங்கள் உயிரைக் காப்பாற்றும் மருத்துவ சேவை?10. நாளான பச்சிளம் குழந்தைக்கு செய்யும் வேலையா இது நீங்கள் எல்லாம் ஓர் பெண்களா? உங்களுக்கு தாய்மை உணர்வு இல்லையா? ஈனப்பிறவிகளா நீங்கள்? உங்களை என்ன வார்த்தைகளை கொண்டு அழைப்பது என எனக்கு தெரியவில்லை…..

விடுதிக்கு பொறுப்பான வைத்தியர்,

VOG

VP

Director என பல வைத்திய அதிகாரிகள் கட்டளை இட்டும் கொஞ்சம் கூட செவி சாய்காத தாதியர்கள்.

உங்கள் மருத்துவமனையின் நிர்வாக கட்டமைப்புகள் தான் என்ன? உங்கள் பணிப்புக்கு கட்டுப்படாதவர்களுக்கு என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தீர்கள்?

தாதியர்கள் என்ன வைத்தியர்களை விட பெரியவர்களா? எவ்வளவு படித்த வைத்தியர் இவ்வாறு கண்ணியமாக எவ்வளவு பணிவுடன் பொறுப்பாக கதைக்கிறார்கள். இந்த அரைவேக்காடு சில்லறைகள் போடும் கூத்துக்கள் தான் இங்கு பெரியதாக இருக்கிறது.

உங்கள் மருத்துவமனையின் Quality Management System தொடர்பான ஆய்வுகள் யாவும் பொய்த்து தான் போகும்.

உங்கள் Vision and Mission களை எப்படி நீங்கள் அடைய முடியும்?

அந்த இலக்குகளை நோக்கி இந்த தாதியர்களைக் கொண்டு எவ்வாறு பயணிக்க முடியும்?

ஒன்றுக்கும் விடைகள் கிடையாது….

சக மனிதர்களை மனிதர்களாக மதிக்காத ஒர் நாடு நம் நாடு தான்……

இன்னும் பல சகிக்க முடியாத கசப்பான சம்பவங்கள் பல இருக்கின்றன. அதை எல்லாம் ஏழுத பல நாட்கள் எடுக்கும்.” என.

குறித்த பதிவின் முகநூல் இணைப்பு https://www.facebook.com/balasubramaniampavithan

மேற்குறித்த பதிவை எழுதியவர் ஒரு அசர அதிகாரியாவார் . ஒரு அரச அதிகாரியே இலங்கையின் இலவச சேவையை நுகர்வதில் இவ்வளவு தடை இருக்குமாயின் இலங்கையில் வைத்தியசாலைகளில் மருத்துவத்திற்காக செல்லும் பாமரமக்களின் நிலை இன்னமும் மோசமானதாகவே இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. மேலும் வவுனியா வைத்திஜயசாலையில் நடைபெறும் அடாவடிதட்தனம் தொடர்பில் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது அனுபவங்களையும் எழுத ஆரம்பித்துள்ளனர் .

அண்மையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் ஒரே வாரத்தில் பிறந்த ஐந்து சிசுக்கள் வைத்திய பராமரிப்பு இன்றி இறந்த சம்பவமும் நாம் அறிந்தததே. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தந்தை ஒருவர் நீதிக்காக போராடிய போதும் கிளிநொச்சி வைத்தியசாலை அவரை அட்டையை தூக்கி வீசுவது போல கவனத்தில் எடுக்காது விட்டுவிட்டது.

இதனைப்போலவே முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இலங்கை மருத்துவ சங்கமோ – இலங்கை சுகாதார அமைச்சோ நேரடியாக தலையிட்டு இந்த மருத்துவத்துறையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துர்பாக்கியமான மருத்துவ சூழல் பற்றி பேசவவேண்டிய நாடாளுமன்ற அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்தில் இராவணன் தமிழனா..? சிங்களவனா ..? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி தீவிர கவனம் செலுத்த வேண்டிய வடமாகாண சுகாதார பணிப்பாளர் கலாநிதி த. சத்தியமூர்த்தி இன்னமும் செயற்படவே ஆரம்பிக்கவில்லை. பாவம் அவரும் யாழ்ப்பாணம் மட்டுமே தனது பகுதி என ஓய்வெடுத்துவிட்டார் போல. யாழப்பாணத்து முருத்துவத்தை கண்காணிப்பதிலுள்ள அதே அக்கறை அவரிடம் ஏனைய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை கவனிப்பதிலும் இருக்கவேண்டும். ஆனால் அவர் கூட்டங்களில் கலந்து கொண்டு “வைத்தியர்கள் நம்நாட்டின் கண்கள். இலவச மருத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” என பேசுவதுடன் சரி. அந்த இலவச மருத்துவத்தை தூக்கி நிறுத்த – நியாயமானதாக மக்களுக்கு வழங்க அவர் எதுவித நடவடிக்கைகளையுமே எடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்திலும் அதுதான் நீடிக்கும் என தோன்றுகிறது.

இலங்கையில் இன்னமும் மக்கள் தன்னம்பிக்கையுடன் நகர்வதற்கு இலவசமாக கிடைக்கும் கல்வியும் – இலவசமாக கிடைக்கும் மருதா்துவமுமே காரணமாகும். அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் உண்டு. மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக படித்துவிட்டு – மக்களின் வரிப்பணத்தில் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலை நிர்வாகிகளும் – ஊழியர்களும் மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும் ஏன் இத்தனை அவதானமின்மையுடனும் – அடாவடித்தனத்துடனும் நடக்கிறார்கள் எனத்தெரியவில்லை.

அண்மைய நாட்களில் இலங்கையின் இலவச மருத்துவம் தொடர்பிலும் அது தரங்கெட்டு போய்க்கொண்டிருப்பது தொடர்பிலும் தேசம் இணையதளம் தொடர்ச்சியான பல தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் இலவச மருத்துவ கல்வியை முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பணத்துக்காக மருத்துவ சேவை செய்யப் பறக்கும் இலங்கை மருத்துவர்கள் !

கரவனெல்ல, தெஹியத்தகண்டிய, மஹாஓயா மற்றும் கல்முனை பிரதேசத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் மயக்க மருந்து நிபுணர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12 மாத காலப் பகுதியில் 842 சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளும் 274 விசேட வைத்தியர்களும் 23 அவசர சிகிச்சை நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் திரு. சமில் விஜேசிங்க  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய தீர்வைக் காணப்பட்டால் சுகாதாரத் துறையே கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் நாளுக்கு நாள் இலவச மருத்துவமும் தனது தர்தை இழந்து கொண்டு செல்வதையும் – மக்கள் இலவச மருத்துவத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் இழப்பதையும் காண முடிகின்றது. மருத்துவர்களின் முறையான கவனிப்பு இன்றி பல மரணங்கள் வைத்தியசாலைகளில் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியர்கயோ இலங்கை மருத்து சங்கமோ அல்லது சுகாதார அமைச்சோ இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக இல்லை. இலங்கையின் இலவச கல்வியூடாக படிக்கும் இந்த வைத்தியர்களும் – தாதிமார்களும் தம் நாட்டுக்கான சேவையை வழங்காது பணத்தின் பின்னால் ஓடக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பலரும் விசனம் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

“மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வருடம் மடுமாதா  திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும். திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. வருடாந்த மடுமாத திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மடு மாதாவுக்கு  மகுடம் சூட்டப்பட்டு 2024ஆம் ஆண்டுடன்  நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை நினைவுகூரும் நிகழ்வுகளை வருடம் முழுவதும் நடத்த ஆலய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில்  கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி பிரையன் உடைக்வே ஆண்டகை Rev. Dr.Brian Udaigwe) தெரிவித்தார்.

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று  சுட்டிக்காட்டிய பிரையன் அவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இந்தத் திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான  ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது. அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும்  அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின்  ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும்  இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு  புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும்  வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப்  பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை  அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்