August

August

37 ஆண்டுகளுக்கு பின்பு 1,800 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படுகிறது தலைமன்னார் துறைமுகம்!

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த துறைமுகம் அழிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், கப்பலை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.முதலீட்டின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,800 மில்லியன். துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு இணையாக, துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்படும்.இந்த புதிய அபிவிருத்திகளின் கீழ், நவீன பயணிகள் முனையம் மற்றும் கிடங்கு வசதிகள் கட்டப்படும். தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கை யாத்ரீகர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கும் குறைந்த கட்டணத்தில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வசதியாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையிலான சரக்கு பரிமாற்றத்தை எளிதாக்குவதுடன், வட இலங்கை மக்களின் உற்பத்திகளை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமண நிகழ்வின் மின்சார கட்டணம் 2.6மில்லியன் ரூபாவை செலுத்தாத நாமல் ராஜபக்ச !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் மின்கட்டணம் செலுத்தாதது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு  இலங்கை மின்சாரசபையை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது குறித்து துல்லியமான விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர் அந்த தகவல்கள் தான் பதிலளிப்பதற்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நாமல்ராஜபக்சவின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் 2.6மில்லியன்  என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் நளின்ஹேவகே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கே  இலங்கை மின்சாரசபை இதனை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மின்சாரபாவனைக்கான கட்டணம் இன்னமும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ச இன்னமும் குறிப்பிட்ட மின்கட்டணத்தை செலுத்தவில்லை என அறிந்த பின்னர் உண்மையை அறிய முயன்றதாக நளின்ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாமல் குறிப்பிட்ட மின்கட்டணத்தை செலுத்தவில்லை என நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சிலமாதங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தேன் – அதற்கு நாமல் அவ்வாறான மின்கட்டணம் குறித்து தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்திருந்தார் என நளின்ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை அளித்துள்ள பதிலில் வீரகெட்டிய வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு விளக்குகள் மின்பிறப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியமைக்காக 2.6 மில்லியன் செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்துமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அதனை உரிய நபர்கள் செலுத்தவில்லை என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இருந்து 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்பு திருட்டு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சீமெந்து தொழிற்சாலைக்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்டு இருந்த குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய அண்மையில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் வீதிவிபத்துக்களில் 05 பேர் பலி !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரை, திக்வெல்ல மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எம்பிலிபிட்டிய மித்தெனிய வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பெண் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், கலகெதர கந்தகும்புர பிரதேசத்தில் கப் ரக வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகரை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அக்கராயமன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கப் ரக வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, திக்வெல்ல நகருக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 84 வயதுடைய பெண் ஒருவர் காரில் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் கடத்தியதற்காக குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு !

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக குவைத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையரின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹல்மில்லேவ, அதிராணிகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வயது 43 நபருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் தனது பெற்றோருடன் 14 வருடங்களுக்கு முன்னர் பிரியங்கரகம என்ற கிராமத்தில் குடியேறி தனது முதல் மனைவியைப் பிரிந்து மறுமணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், அவர் களுத்துறைக்கு இடம்பெயர்ந்ததாகவும் ஆனால் அவரது முகவரி அவரது உறவினர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, குற்றவாளியின் தாயாரின் கோரிக்கைக்கு அமைய சடலம் கையளிக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனுராதபுரத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் அவர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என குவைத்தில் உள்ள இலங்கை தூதுவருக்கு அறிவித்துள்ளார்.

29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் !

2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் எஸ்.அன்வர் இன்று (31) உத்தரவிட்டார்.

தற்போது ஓய்வு பெற்ற 61 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, ​​அவருக்காக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.

இதற்கு முன்னர், நான்கு மாணவிகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர், மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் போது, ​​அவர் 29 மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் பேசவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்  அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை  ரணில் விக்ரமசிங்க விளக்குவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் தடையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.