August

August

அசுத்தமாக இருந்த இலங்கை கடற்கரையை தூய்மையாக்கிய வெளிநாட்டு இளைஞர்கள்!

இலங்கை மக்கள் பாரியளவில் அசுத்தப்படுத்தியிருந்த அம்பலாங்கொடை கடற்கரையை இன்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டது.

அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில உத்தியோகத்தர்களைத் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்தனர்.

அம்பலாங்கொட பொல்வத்த ஆஷிகா செனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டது.

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி ஆரம்பம் !

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும், நாளைய தினமும் யாழ்ப்பாணம், நல்லூர்,முத்திரைச்சந்தி அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதமாகவே இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

 

அத்துடன் ’மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் கமலகுமாரி கருணாநிதி, தொழிற்துறை திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் உள்ளிட்ட பலரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் !

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தில் ஒருசில பிரிவுகள் தொடர்பாக பலர் கவலைகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அனைவரது கருத்துக்களையும் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்களை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதேநேரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.

மாவா போதைப்பொருளுடன் பாடசாலை மாணவன் யாழ் தீவக பகுதியில் கைது!

யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

 

இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

கத்தியுடன் வர்த்தக நிலைய பணியாளர்களை அச்சுறுத்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கைது !

யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமைக்காகவே அம்மாணவன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் குறித்த மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஆங்கில பாடத்தை வெற்றிகரமாக முடித்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இது தொடர்பான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசியப்பட்டியல் எம்.பி, கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருணாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆகியோர் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஆவர்.

ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் இதில் ஈடுபட்டிருந்த போதிலும், அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

ஊசி போதைப்பொருள் பாவித்த இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி பலி – யாழில் சம்பவம் !

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ ஆடையை அணியத் தடை – பிரான்சில் புதிய கட்டுப்பாடு !

பிரான்ஸ் பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமுலுக்குக் கொண்டுவரப்படும்” என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. அதன்படி பெரிய அளவிலான சிலுவைகள், யூதர்களின் கிப்பாஸ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் தலையை மறைக்கும் முக்காடு என எதுவும் அனுமதிக்கப்படுவதுல்லை. இந்நிலையில், இஸ்லாமிய சிறுபான்மையினச் சிறுமியர் அணியும் அபயா எனப்படும் முழு அங்கியை அச்சமூக சிறுமிகள் அரசுப் பள்ளிக்கு அணிந்துவர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

முன்னதாக, கடந்த 2004-ல் பள்ளிகளில் தலைக்கு மட்டும் அணியப்படும் முக்காடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 2010-ல் முகத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸின் 50 லட்சம் முஸ்லிம்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இந்தச் சூழலில் அபயாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “அபயா எனப்படும் முழு அங்கியை இனிமேல் பள்ளிச் சிறுமிகள் அணிந்துவர அனுமதிக்கப் போவதில்லை. ஒரு குழந்தை பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்போது அதன் புறத்தோற்றத்தைக் கொண்டு குழந்தையின் மதத்தை கண்டுபிடிக்கும்படி அவர்கள் ஆடை, அணிகலன்கள் இருக்கக் கூடாது” என்றார். ஏற்கெனவே பிரான்ஸில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடையிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பிரான்ஸ் நாட்டின் முஸ்லிம் சிறுபான்மையின அமைப்புகளின் கூட்டமைப்பான தி பிரென்ச் கவுன்சில் ஆஃப் முஸ்லிம் ஃபெயித், ஆடை மட்டுமே மத அடையாளம் ஆகிவிடாது. ஆகையால் அபயா தடை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில் அந்நாட்டு கல்வி அமைச்சரின் இந்த புதிய கெடுபிடி பலதரப்பு மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் அதிருப்தியில் உள்ளனர்.

“இலங்கை அரசாங்கம் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ‘ஷி யான் 06’ என்ற சீன ஆய்வுக்கப்பல் நாட்டுக்கு வருகைதரவுள்ளது.

இவை இலங்கையில் இந்திய – சீன இராஜதந்திர மோதலுக்கு வழிவகுக்கும் எனவும், மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் இலங்கைக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்றும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் மற்றும் சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுவதனால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் நியாயமானவை என்று இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இவ்விவகாரத்திலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா வெளிப்படுத்தும் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முற்றிலும் நியாயமானவை என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்கு சார்பாக செயற்படவேண்டும் என்ற நோக்கில் இக்கருத்தை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ‘இந்தியா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் உள்ளது. இருப்பினும் சீனா இப்பிராந்தியத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே இந்தியாவின் நட்பு நாடு அல்லாத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்புசார் கரிசனைகளைத் தோற்றுவிப்பது நியாயமானதொன்றேயாகும்’ என்று தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுவதில் அர்த்தமில்லை என்றும், மாறாக இதில் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இல்லை – பொலிசார் !

குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குருந்தூர் மலையை அடிப்படையாகவைத்து உருவாகும் குழப்பநிலைக்கு காரணமான நபரை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர் எனதெரிவித்தார்.

இது குறித்து கேள்வி எழுப்பியவேளை இது தொடர்பில் எந்த முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முறைப்பாடுகள் அவசியம் முறைப்பாடுகள் இல்லாமல் விசாரணைகளை முன்னெடுக்கவே கைதுசெய்யவோ முடியாது எனினும் குருந்தூர் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற சிறிய சம்பவங்கள் குறித்து அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.