August

August

திருகோணமலையில் விகாரை அமைப்பதை இடைநிறுத்திய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக பிக்குகள் போராட்டம் !

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு கோரப்பட்ட அனுமதி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விகாரையை நிர்மாணிப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாருக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், விகாரை கட்டுவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

திருகோணமலை, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, ஏ-6 பிரதான விதியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பௌத்த பிக்குகளும், சிவில் சமூக உறுப்பிர்களும் கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழும் குறித்த பகுதிக்குள் விகாரை அமைத்தால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்று அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனது சகோதரர் அனுப்பிய 320 மில்லியன் டொலர்கள் செலவிலான ரொக்கெட் தொடர்பில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது – நாமல்ராஜபக்ச விசனம் !

இந்தியாவின் சந்திராயன் குறித்தும் தனது சகோரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் நாடாளுமன் உறுப்பினர் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கட்டுடன்  தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் – நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கட்டினை அனுப்பினார் அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சேற்றை வாரிவீசும்அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை இந்த கருத்துக்கள் இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Sri Lanka's takeoff to space age today! – DaillyFT | SupremeSAT

Our Lanka: Sri Lanka steps into space today with first satellite

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்சவினால்  2012 ஆம் ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சட் 1 (Supreme SAT-1) செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததது.

இந்தநிலையில், இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய போது “  “இந்தியா 2008, 2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்தது.

எனினும், இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 3 முறை முயற்சித்தும் செலவழித்த பணத்தை விட நம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கான செலவு அதிகம்.

இதற்காக செலவிடப்பட்ட 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிலவில் இறங்குவது எப்படி போனாலும் நாட்டை வங்குரோத்தாக்குவதற்கு இதுவும் காரணமே” என தெரிவித்திருந்த நிலையிலேயே இதற்கு நாமல் ராஜபக்ச மேற்குறித விளக்கம் கொடுத்துள்ளார்.

EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை !

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) இந்த போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

குறித்த போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு இன்று (28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

 

யாழ் மாவட்டத்தில் 70,408 பேர் வறட்சியால் பாதிப்பு !

யாழ் மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச்  சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்டச்  செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமென குறித்த பிரதேச செயலக,  பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது நெடுந்தீவு உட்பட தங்களால் நீர்வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கக் கூடிய வகையில் நீர்வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான
சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாக செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை
பொறியியலாளர் தெரிவித்தார்.

அதே வேளை எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு
நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

சிம்பாப்வேவின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் மங்கக்வா !

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

 

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

 

இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சரியான சரி பார்ப்பு இல்லாமல் அவசர மாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார். தேர்தல் 23-ந்திகதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜனாதிபதி தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு, இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

அதிகரித்த வரட்சி – கிளிநொச்சியில் இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் !

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

இதனால் மீன் இனங்கள் அழிந்து வரும் நிலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அதிக வெப்பத்தினால் வறட்சி ஏற்பட்டு, அதனால் பல இழப்புகள் இடம்பெறுவதோடு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது முக்கிய பதவியிலிருந்த சந்தோஷ் ஜா !

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில்  வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அமெரிக்க – இந்திய அணு ஆயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமைப்பிக்குவின் துர்நடத்தை – விகாரையிலிருந்து தப்பியோடிய சிறுவயது பிக்குணிகள் !

மினுவாங்கொடையில் உள்ள பௌத்த விகாரையிலிருந்து மூன்று இளம்பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

12, 15, 18 வயதுடைய பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

விகாரையின் தலைமை மதகுரு மோசமாக நடந்துகொண்டதாகவும், இதனை தொடர்ந்து அவர்கள் அந்த விகாரையில் இருந்த பெண்ணுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர், அவர்கள் நுவரெலியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் அவர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிடிக்குள் சிக்கியுள்ள இலங்கையில் காலனித்துவ ஆட்சியே நடக்கிறது.” – அனுரகுமார விசனம் !

இலங்கைக்கு அதன் வரிவிதிப்பு அல்லது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்க சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“வரிவிதிப்பு, நிதிக் கொள்கைகள் போன்றவற்றின் அனைத்து முடிவுகளும் அமெரிக்க தலையீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு பொது நிதி அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டாலும், இலங்கையில் வரிகளை சுமத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் நீக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் உள்ளது.

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, அது சாத்தியமில்லை, விவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய காலக்கெடுவை பாதிக்கும்.

இது, சட்டங்களைத் திணிப்பதும், பொது நிதி மீதான கட்டுப்பாடும் இனி நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்துடன் தற்போதைய ஆட்சி காலனித்துவ ஆட்சிக்கு ஒத்ததாக இல்லையா?  எனவே மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான புதிய போராட்டம் தற்போது தேவைப்படுகிறது.” என்றார்.

பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை !

குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில், இலங்கை மத்திய வங்கி பல்வேறு பெயர்களில் ஊக்குவிக்கப்படும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஏழு நிறுவனங்களின் பட்டியலையும் மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.