September

September

“உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும்.” – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய கல்வி முறைகளை உருவாக்கும் போது மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களை பெற தீர்மானம் !

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் பாராளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி சீவலி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 140 மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இந்தச் சந்திபப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இந்நாட்டு அரச நிர்வாக செயற்பாடுகளில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் இடம் என்ற வகையில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுமெனவும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் மாணவர்களிடத்தில் கருத்துகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கானவர்களைத் தெரிவுசெய்த பின்னர், அதன் முதல் கூட்டத்தை இந்நாட்டின் முதலாவது பாராளுமன்றம் கூடிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிநிதிகளான மாணவர் குழுவொன்றும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதோடு, தமக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை, தமது சகோதர மாணவர் குழுவுக்குப் பெற்றுத் தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் நீல் வதுகாரதவத்த, ஆசிரியர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கும் – ஜே.வி.பிக்கும் தொடர்பு உள்ளது.” – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ!

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

 

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் !

ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

 

விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவின் சரணடைந்த நிலையில் அதன் அதிகாரிகளால் இன்று (06) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

அதன் பின்னர், சசித்ர சேனாநாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எகிறும் தற்கொலைகள் – தற்கொலை செய்யும் 83 வீதமானோர் ஆண்களே..! நாளொன்றுக்கு 9 தற்கொலைகள்!

இலங்கையில் 4 மணித்தியாலத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 வீதமானோர் கல்வி கற்றவர்கள் எனவும் அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வோர் தொடர்பான செய்திகள் அண்மை நாட்களில் அதிகளவில் பதிவாகியுள்ளது.

 

தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில் இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் போது தற்கொலை செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருகின்றமை வெளிக்கொணரபட்டுள்ளது.

 

நாட்டில் தற்கொலை செய்துக்கொள்ளும் தரப்பினரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 10 வீதத்தால் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் வருடமொன்றுக்கு 3000 இற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

 

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள் கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன் உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

 

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழில் செய்வோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையை பொருத்தமட்டில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றார்.

 

இதேவேளை இது தொடர்பில் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில்,

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள்  கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன்  உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழில் செய்வோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையை பொருத்தமட்டில்  4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றார்.

இதேவேளை இது தொடர்பில் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே அதிகளவிலான தற்கொலை சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் தரப்பினரை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். இதன் மூலமாகவே இந்த மரணங்களை தடுக்க முடியும்.

ஒருவர் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மனநோயாளர் என அடையாளம் காணப்படாமையே இந்த நிலைக்கு மற்றுமொரு காரணமாகும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படாமையும் இதற்கு காரணமாக அமைய முடியும்.

ஒருவர் பொருளாதார ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறும் போது பலர் இதனை கருத்திக்கொள்வதில்லை. அவர்கள் கூறும் விடயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

தற்கொலை செய்ய போவதாக கூறும் ஒருவருக்கும் நாம் உதவிகளை செய்வதில்லை. பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது?  மன அழுத்தத்தை எவ்வாறு இல்லாமல் செய்வது போன்று நாம் கவனம் செலுத்தும் போது தற்கொலைகள் இடம்பெறுவதை குறைக்க முடியும்  என அவர் குறிப்பிட்டார்.

“புகலிடக் கோரிக்கைக்காக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல பொய்யான பிரசாரங்களில் என்னுடன் இணைந்து செயற்பட்ட அசாத் மௌலானா ஈடுபட்டுள்ளார்.” – நாடாளுமன்றத்தில் பிள்ளையான் !

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் சனல் – 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், என்னோடும் என்னுடைய அமைப்புடனும் சேர்ந்து பயணித்த அசாத் மௌலான என்பவர் புகலிடக் கோரிக்கைக்காக பல பொய்யான பிரசாரங்களில் இறங்கியிருக்கிறார்.

அவர் எமது அமைப்பிலே இருந்து உத்தியோகபூர்வமாக அனுமதி பெற்று குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஒரு வருட காலத்தை கடந்த சூழலில் இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி என்பது எங்களுடைய நாட்டுக்கும் எங்களுடைய மக்களுக்கும் கடந்த காலங்களில் எண்ணத்தை செய்துள்ளது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அந்த அடிப்படையில் அந்த ஊடகத்தில் வந்த செய்தியை பற்றி அச்சம் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. அதேவேளை ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் செய்தார்கள் என்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரே கூறியிருக்கிறார்.

அதேபோன்று இந்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் உரிமை கோரியிருந்தார்கள்.

இந்த தாக்குதலை எதற்காக செய்தார்கள் என நோக்கத்திற்காக செய்தார்கள் என்று அந்த தகவலை தெரிவித்து இருந்தார்கள்.

 

வெளிநாட்டிலே தஞ்சம் பெற சென்றிருக்கின்ற அசாத் மௌலானா இந்த விடயத்தை மறுபக்கம் திருப்ப நினைப்பதாக நான் நம்புகிறேன்.

எனக்குள்ள அச்சமும் கவலையும் என்னவென்றால் சாகுராமும் அவரிடம் சேர்ந்த ஒரு கூட்டமும் மதத்திற்காக மரணிப்போம் என்று சத்தியம் செய்தவர்கள் என்று சிறையிலும் வெளியிலும் இருக்கிறார்கள். இந்த தாக்குதலின் பின்னணியில் பல சர்வதேச சக்திகள் இருக்கின்றன இவற்றை காப்பாற்றும் முயற்சியாகவே அசாத் மௌலானாவின் நடவடிக்கை என எனக்கு சந்தேகம் இருந்திருக்கிறது

இந்த சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை ஏற்படுத்த இங்கு முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எங்களிடம் இருக்கிறது.” என்றார்.

 

“தமிழர்களுடனான உள்நாட்டு யுத்தகாலத்திலும் , நாட்டுக்கு ஆபத்து வரும் போதும் முஸ்லீம் சமூகம் கவசமாக நின்று இந்த நாட்டை பாதுகாத்துள்ளது.” – ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

“தமிழர்களுடனான உள்நாட்டு யுத்தகாலத்திலும் , நாட்டுக்கு ஆபத்து வரும் போதும் முஸ்லீம் சமூகம் கவசமாக நின்று இந்த நாட்டை பாதுகாத்துள்ளது.” என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையில், “இஸ்லாமிய மத சிந்தனையின்படி” தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற அறிக்கையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அமைதியான இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாக கொண்டு அல்ல மாறாக தீவிரவாத சித்தாந்தக் குழுக்களால் சிதைக்கப்பட்ட மதச் சிந்தனைகள் மூலம்தான் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

 

இஸ்லாத்தில் தற்கொலை தாக்குதல் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இஸ்லாம் இவ்வாறான செயல்களை நேரடியாகவே எதிர்க்கிறது என்பதை நான் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு வலியுறுத்துகிறேன்.

 

போலியான ஒப்பந்தச் சித்தாந்தத்தை கொண்ட தீவிரவாதி ஸஹ்ரான் உட்பட அவரின் குழு என்று சொல்லப்படுபவர்கள் உலகளாவிய புவிசார் அரசியல் சதிக்கு ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்க முடிகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது.

மேலும், ஷங்ரிலாவில் மட்டும் ஏன் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன? தாஜ் மீதான தற்கொலை குண்டுவெடிப்பு ஏன் மாற்றப்பட்டு தெஹிவளைக்கு கொண்டு செல்லப்பட்டது? அபு ஹிந்த் என்பவர் யார்? சாரா தப்பிக்க உதவிய ஒரு காவல்துறை அதிகாரி ஏன் கைது செய்யப்பட்டார்? இப்படிப் பல கேள்விகளுக்கு முஸ்லிம் சமூகம் பதில் தேடுவதுடன் இதுபற்றி சிந்தித்துப் பதில் தேடும் அளவுக்கு முஸ்லிம் சமூகம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சனல் 4 போன்ற இஸ்லாமிய விரோத ஊடகங்களின் பின்னால் நாம் சென்றிருக்க மாட்டோம் போலியான கடும்போக்கு மார்க்க சிந்தனைக்கு உட்பட்ட ஸஹ்ரான் போன்றவர்கள் பூகோள அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அதிலிருந்து முஸ்லிங்கள் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால் எதிர்கால சந்ததிகளை இவ்வாறான போலியான கடும்போக்கு சிந்தனைகளிலிருந்து பாதுகாப்பது தான்.

 

அத்தோடு பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் கொள்கைகள் பற்றி ஏனைய இன சகோதர்களுக்கு விளக்கவேண்டியது அவசியமாகிறது.

சுதந்திர போராட்டத்திலும் சரி, உள்நாட்டு யுத்தகாலத்திலும் சரி நாட்டுக்கு ஆபத்து வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாட்டை பாதுகாக்கும் பணியில் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் கவசமாக நின்று பாதுகாத்திருக்கிறது.

 

இனியும் அப்படி பாதுகாக்க முன்நிற்கும் என்பதில் ஐயமில்லை ஸஹ்ரான் போன்றவர்களின் சதிவலையில் முஸ்லிம் சமூகத்தை வீழ்த்தி சர்வதேச நிகழ்ச்சிநிரல்களில் இலங்கை முஸ்லிங்களை அகப்படுத்த முடியாது. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக வாழ்பவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

“கிழக்கு மாகாண மக்களின் முடிவுகளை யாழ்ப்பாண தலைவர்கள் எடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை.” – தேசம் நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் !

கிழக்கு மாகாண மக்களின் அரசியல், பொருளாதார, கல்வி முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் யாழ்ப்பாண தலைவர்கள் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தேசம் திரை நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Clickசெய்யுங்கள்.

 

“என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது.“ – அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ள சனல் – 4 வீடியோவில் TMVP முன்னாள் ஊடகப்பேச்சாளர் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் -4 காணொளி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதற்கான தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து சனல் 4 என்ற ஊடகம் காணொளியை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பல அதிர்ச்சித் தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவிடயங்கள்.,

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்களே ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்டமை ஆட்சியை கைப்பற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியலில் மிகவும் விசுவாசமாக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் ஆசாத் மௌலானா அரசியலில் ஈடுபட்டுவந்தவர்.

என்னிடம் ஆபத்தான கைதிகள் உள்ளனர், அவர்கள் கடும்போக்கானவர்கள். அவர்களில் ஒருவரை சந்திக்குமாறு பிள்ளையான் தன்னிடம் தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த செய்னி மௌலவியை தான் சந்தித்ததாக ஆசாத் மௌலானா கூறுகின்றார். இதையடுத்து இதுவொரு நல்ல சந்தர்ப்பம். நாம் அவர்களை பயன்படுத்துவோம் என பிள்ளையான் எனக்கு கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிள்ளையான் எனக்கு கூறுகிறார் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு .

இதையடுத்து தான் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்தவர்களுக்கும் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் இடையிலான சந்திப்பை கிழக்கில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்ததாக ஆசாத் மௌலானா கூறுகிறார்.

இதன்போதே செய்னி மௌலவி தனது சகோதரனான சஹ்ரானை எனக்கு அறிமுகப்படுத்தினார் எனக் கூறுகிறார் ஆசாத் மௌலானா. அதன் பின் நான் உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலேயை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

குறித்த சந்திப்பு நிறைவடையும் வரை நான் வெளியில் காத்து நின்றேன். சந்திப்பு நிறைவடைந்து வெளியில் வந்த சுரேஷ் சாலே “ ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் ஒரு குழப்பமான நிலை தேவையாக உள்ளது. அதுவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒருயொரு வழி” என்று கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் யாரெல்லாம் சந்திப்பில் கலந்துகொண்டார்களோ அவர்களின் முகங்களை நான் அடையாளப்படுத்தி படங்களை வெளியிட்டேன் என்கிறார் ஆசாத் மௌலானா.

முதலாவது படம் சஹ்ரான், அவர் தான் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமாவார். இதன் பின்னர் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். அப்போது அவர் “ நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்” என்றார்.

அவர்களது மக்களையே ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் கொலைசெய்தார்கள். இதுவொரு கசப்பான உண்மை என்கிறார் ஆசாத் மௌலானா.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட சனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

இதன் முழுமையான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று மாலை முதல் மீண்டும் !

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர்(05) மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31) தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் செவ்வாய்கிழமை (5) 03.00 மணியளவில் குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அகழ்வுப்பணி தொடர்பான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் செவ்வாய்கிழமை (5) காலை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று மாலை 03.00மணிக்கு இந்தவழக்கு தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டவர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து, அங்கு ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது – என்றார்.

மேலும் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில், அகழ்வாய்வுகளுக்கான பாதுகாப்பு நிலையங்கள் மற்றும், மலசலகூடம் என்பன அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.