05

05

“கிழக்கு மாகாண மக்களின் முடிவுகளை யாழ்ப்பாண தலைவர்கள் எடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை.” – தேசம் நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் !

கிழக்கு மாகாண மக்களின் அரசியல், பொருளாதார, கல்வி முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் யாழ்ப்பாண தலைவர்கள் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தேசம் திரை நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Clickசெய்யுங்கள்.

 

“என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது.“ – அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ள சனல் – 4 வீடியோவில் TMVP முன்னாள் ஊடகப்பேச்சாளர் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் -4 காணொளி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதற்கான தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து சனல் 4 என்ற ஊடகம் காணொளியை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பல அதிர்ச்சித் தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவிடயங்கள்.,

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்களே ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்டமை ஆட்சியை கைப்பற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியலில் மிகவும் விசுவாசமாக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் ஆசாத் மௌலானா அரசியலில் ஈடுபட்டுவந்தவர்.

என்னிடம் ஆபத்தான கைதிகள் உள்ளனர், அவர்கள் கடும்போக்கானவர்கள். அவர்களில் ஒருவரை சந்திக்குமாறு பிள்ளையான் தன்னிடம் தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த செய்னி மௌலவியை தான் சந்தித்ததாக ஆசாத் மௌலானா கூறுகின்றார். இதையடுத்து இதுவொரு நல்ல சந்தர்ப்பம். நாம் அவர்களை பயன்படுத்துவோம் என பிள்ளையான் எனக்கு கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிள்ளையான் எனக்கு கூறுகிறார் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு .

இதையடுத்து தான் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்தவர்களுக்கும் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் இடையிலான சந்திப்பை கிழக்கில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்ததாக ஆசாத் மௌலானா கூறுகிறார்.

இதன்போதே செய்னி மௌலவி தனது சகோதரனான சஹ்ரானை எனக்கு அறிமுகப்படுத்தினார் எனக் கூறுகிறார் ஆசாத் மௌலானா. அதன் பின் நான் உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலேயை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

குறித்த சந்திப்பு நிறைவடையும் வரை நான் வெளியில் காத்து நின்றேன். சந்திப்பு நிறைவடைந்து வெளியில் வந்த சுரேஷ் சாலே “ ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் ஒரு குழப்பமான நிலை தேவையாக உள்ளது. அதுவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒருயொரு வழி” என்று கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் யாரெல்லாம் சந்திப்பில் கலந்துகொண்டார்களோ அவர்களின் முகங்களை நான் அடையாளப்படுத்தி படங்களை வெளியிட்டேன் என்கிறார் ஆசாத் மௌலானா.

முதலாவது படம் சஹ்ரான், அவர் தான் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமாவார். இதன் பின்னர் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். அப்போது அவர் “ நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்” என்றார்.

அவர்களது மக்களையே ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் கொலைசெய்தார்கள். இதுவொரு கசப்பான உண்மை என்கிறார் ஆசாத் மௌலானா.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட சனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

இதன் முழுமையான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று மாலை முதல் மீண்டும் !

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர்(05) மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31) தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் செவ்வாய்கிழமை (5) 03.00 மணியளவில் குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அகழ்வுப்பணி தொடர்பான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் செவ்வாய்கிழமை (5) காலை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று மாலை 03.00மணிக்கு இந்தவழக்கு தொடர்பில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டவர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து, அங்கு ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது – என்றார்.

மேலும் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில், அகழ்வாய்வுகளுக்கான பாதுகாப்பு நிலையங்கள் மற்றும், மலசலகூடம் என்பன அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதுவிருந்தில் கைகலப்பு – கிளிநொச்சி இளைஞன் பலி !

யாழில் இடம்பெற்ற மதுவிருந்தில் ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன்போது கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கிளிநொச்சியில் இருந்து மூவர் வருகை தந்திருந்த நிலையில், குறித்த நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற மது விருந்தில் கலந்து கொண்டனர்.

அதன்போது எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கிளிநொச்சியில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இடையில் போதையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதன்போது , ஜெகதீஸ்குமாரை கட்டி வைத்தும் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.

அந்நிலையில் திடீர் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , இருவரை கைது செய்துள்ளனர்.

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது !

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் குறித்த மாணவி தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை அறைக்கு அழைத்துச் சென்று தேநீர் அருந்தி உபசரித்து வன்புணர்விற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபர் மாணவியின் மார்பகங்களையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் நாளுக்கு நாள் கேள்விக்கு உள்ளாகும் நிலையில் இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 5000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை சிறுவர் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.