07

07

“பாரத்” எனப்பெயர் மாற்றிக்கொள்ளும் இந்தியா.? – ஐ.நாவின் நிலைப்பாடு என்ன..?

இந்தியா தனது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டுள்ளது.

 

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் “இந்தியா” என்பது “பாரத்” என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் ”துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது.

அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்” என்றார்.

இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு ஆதரவானது – நீதியமைச்சர் விஜயதாச விசனம்!

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு ஆதரவானது என நீதியமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளார்.

 

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னாள் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விரைவில்!

இந்நாட்டின் பெண்களின் மேம்பாட்டுக்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை வைக்கவும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்துக்கு மேலதிகமாக பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் பாராளுமன்றத்துக்கு அமர்ப்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

நியூஸிலாந்துப் பாராளுமன்றத்திலுள்ள இலங்கை வம்சாவளியான வனூஷி வோல்டர்ஸ் உடன் zoom தொழிநுட்பத்தின் ஊடாக அண்மையில் (05) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சுப் பதவியை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க வகிப்பதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் மேம்பாட்டுக்காக செயற்படுவதில் ஜனாதிபதிக்கு பெரும் ஆர்வம் உள்ளதாகவும் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அரசியலில் பெண்களை ஊக்குவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பெண்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய பகல்நேர பராமரிப்பு மையங்களை அதிகரிப்பது தொடர்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், அது தொடர்பில் நியூசிலாந்து பின்பற்றும் முறை மிகவும் முக்கியமான முன்மாதிரியாக உள்ளதா இங்கு வலியுறுத்தப்பட்டது.

உலகில் ஏனைய பாராளுமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்திடும் பெண் உறுப்பினர்கள் போன்று, ஏனைய பாராளுமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளி பெண் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு தான் முயற்சி செய்வதாக வனூஷி வோல்டர்ஸ் இதன்போது குறிப்பிட்டார்.

ஒன்றியத்தின் உப தலைவர் ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஒன்றியத்தின் உறுப்பினர்களான சட்டத்தரணி பவித்ராதேவி வன்னியராச்சி, சட்டத்தரணி தலதா அத்துகோரல, கோகிலா குணவர்தன, முதிதா பிரஷாந்தி, மஞ்சுளா திசாநாயக்க, கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

நாட்டின் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட இலங்கைப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் (NDI) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சிங்களவர் ஒருவருக்காக தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.” – சரத் வீரசேகர

சிங்கள தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கு தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக நாடாளுமன்றில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சிங்களத் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் 9 பேரும் கர்ப்பிணித்தாய் ஒருவரும் தற்கொலை செய்துக்கொண்டார் என்பதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முட்டாள்களா நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று தான் என்னால் கேட்க முடியும்.

 

இந்த தாக்குதலுக்கு நல்லாட்சி பொறுப்பு கூற வேண்டும் என்ற உறுதியில்தான் அன்றும் இன்றும் இருக்கின்றோம்.

 

இந்த தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி சிறையில் சிரித்துக்கொண்டு இருப்பார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“முஸ்லிம் சமூகத்தைக் கருவறுக்வே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.” – நாடாளுமன்றத்தில் ரிஷாட் !

ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில்தான் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, செனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

செனல்-4 அதிர்வலைகள் குறித்து பாராளுமன்றத்தில் (05) உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

 

“மதங்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி ஆட்சியைப் பிடிக்கவும் மற்றும் அதிகாரத்தில் நிலைக்கவும் முயன்ற தீயசக்திகளை மக்கள் புறந்தள்ளியுள்ளனர். இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அடையாளங்காட்டுவது அவசியம். புலனாய்வுப் பிரிவினரால் இக்குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்தால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். எனவே, சர்வதேச விசாரணைகளூடாகவே ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

 

முஸ்லிம் சமூகத்தைக் கருவறுத்து, அப்பாவிகளைச் சிறையிலடைத்து மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படவும் இந்தத் தாக்குதலையே இனவாதிகள் பயன்படுத்தினர். ஈஸ்டர் தாக்குதலை இயக்கிய சக்திகள் முஸ்லிம்களின் தலையில் பாரத்தையும் குற்றத்தையும் சுமத்தித் தப்பிக்கப் பார்த்தனர். ஆனால், சனல்-4 சகல விடயங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

 

இந்தத் தாக்குதலால் முஸ்லிம் சமூகமே ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கப்பட்டது. என்னைச் சிறையிலடைத்தனர், எனது சகோதரரை சிறையிலடைத்து வழக்குத் தொடுத்தனர். ரியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லையென நிரூபிக்கப்பட்டும் அவருக்கு எதிரான வழக்கு இன்னும் வாபஸ் பெறப்படவில்லை.

 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் உள்ளிட்ட முஸ்லிம்களின் முன்னோடிகளையும், பிரபலங்களையும் சிறையிலடைத்து சீரழித்தனர். ஜாமிய்யா நளீமிய்யா மாணவன் அஹ்னாப் என்பவர் கவிதை எழுதியமைக்காக மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இறுதியில், சர்வதேச பயங்கரவாதியென்ற முத்திரையும் அம்மாணவனுக்குச் சுமத்தப்பட்டது. குருநாகல் முதல் மினுவாங்கொடை வரையிலான முஸ்லிம்களின் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் சூறைாயடப்பட்டன. பௌசுல் அமீர் என்ற வர்த்தகர் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் முன்னால் அசிற் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் செய்து, இனவாதத்தை கொளுந்துவிட்டெரியச் செய்தது யார்? ஆட்சி, அதிகாரத்தைப் பிடிப்பதற்காக ஈஸ்டர் தாக்குதலைச் செய்வித்த சக்திகளே!

 

எனவே, இன்றும் மறைமுகமாக அதிகாரத்திலுள்ள இவர்களை புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்ய முடியாது. சர்வதேச விசாரணைகளூடாகவே இவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் – தாதிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயணத் தடை விதித்துள்ளது.

 

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கனூலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்தியசாலை, வடமாகாண ஆளுநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தினர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (07) யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்று தாதியருக்கு பயணத்தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

“என்னை ஜனாதிபதியாக்குவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது அருவருப்பானது.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

நேற்று அதிகாலை வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்தக் காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு நானே உத்தரவிட்டேன்.

2005 இலிருந்து ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதே சனல் 4 காணொளி.

ராஜபக்சர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இவையும் பொய்கள் ஆகும். என்னை ஜனாதிபதியாக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது.

 

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையிலலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம்!

கிளிநொச்சி – வேரவில் இந்து மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (07) காலை வேரவில் இந்து மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, கிளிநொச்சி – வேரவில் இந்து மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவிற்கான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரியே முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – நீதி கோரி போராட்டம் !

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.

 

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 80,000 பேர் வரை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதி !

ஒவ்வொரு ஆண்டும் 80,000 பேர் வரை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய தகவல் நிலையத்தின் தலைவர் டொக்டர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய விஷத் தடுப்பு வாரத்திற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்த நாட்டில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரண்டு சதவீதம் பேர் தவறுதலாக விஷம் குடிகின்றனர் . பெரும்பாலான சம்பவங்கள் கள் வீட்டில் நிகழ்கின்றன

மேலும், போதைப்பொருள் விஷமாவதன் காரணமாக அதிகளவானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் , இது முப்பத்தொரு வீதமாக உள்ளது என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

குருநாகல் மாவட்டம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் இருந்து அதிகமான சம்பவங்கள் பதிவாகின்றன . மேலும் விஷம் குடித்து உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு குழந்தைகள் என்றும், அளவுக்கு அதிகமாக மருந்துகளை கொடுப்பதாலும் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன என்றும் நிபுணர் மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.