14

14

தமிழ் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹானுக்கு பிணை !

விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதேநேரம், குறித்த வழக்கினை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதினொரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் கைது !

குருணாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேகத்துக்குரிய ஆசிரியர் மீது பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபர் தனது பாடத்தை கற்பிக்கும்போது வகுப்பில் உள்ள மாணவிகளின் உடலை தொட்டு, அழுத்தி, அந்தரங்க உறுப்புகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

பாதிக்கப்பட்ட மாணவிகள் இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருணாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் !

இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது,

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும்.

 

076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ் அப் (Whatapp) மூலம் தகவல்கள் முறைப்பாடுகள் காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவாகரம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

 

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , காவல்துறையினர் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(13) குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

 

அதனை அடுத்து, துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை காவல்துறையினர் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு, அது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதிக்கு ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது !

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலாதி விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

லிபியா புயல் தாக்கம் – 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் !

லிபியாவில் புயல் தாக்கத்தை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என டெர்னா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 6000 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன.

 

இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

 

மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்னா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச்சென்றது.

 

அதேபோல், பலர் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

பலர் உறக்கத்தில் இருந்த போது சுனாமி போன்ற ஒரு பெரிய வெள்ளம் கடலை நோக்கி மக்களை அடித்துச்சென்றிருக்கிறது.

 

இதனால், கடலுக்குள் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

 

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரை முழுவதும் வீசிய புயல் காரணமாக கனமழை பெய்தது. செப்டம்பர் மாதம் முழுவதும் நாடு பொதுவாகப் பெறும் 1.5 மிமீ மழையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.

 

இந்த அசாதாரண வெள்ளம், நகரின் வழியாக ஓடும் டெர்னா ஆற்றின் இரண்டு முக்கிய அணைகளை உடைத்து, பல முக்கிய பாலங்களையும் சிதறடித்தது.

 

நகரம் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பு ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெள்ளம் கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு வந்ததாகவும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மீட்பு பணிகளுக்கு எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து லிபியாவிற்கு உதவிகள் வரத் தொடங்கியுள்ளன

 

ஆனால், லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.

மதுபான சாலையை அகற்றுமாறு கோரி யாழில் பாரிய போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடுப்பிட்டி சந்தியில் இன்று(14) காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

 

மேலும், போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“யாழில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுமி” – கொலை செய்த அம்மம்மா எழுதிய கடிதம் மீட்பு !

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

 

சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரான அவரை இன்று நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

 

சிறுமி திருகோணமலையில் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில், அம்மம்மா மற்றும் சிறுமி இருவரும், கடந்த 9ஆம் திகதி அந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.

 

உளச்சிக்கலுக்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்ததாகவும் விடுதியில் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன் பின்னர் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளிவராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

 

பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்தபோது சிறுமி உயிரிழந்த நிலையிலும் அம்மம்மா மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டனர்.

 

இதனையடுத்து சிறுமியின் அம்மம்மா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

 

சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்தது.

 

இதன்போது விடுதியில் கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில், தனக்கு கடுமையாக உளச்சிக்கல் உள்ளதாகவும் சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும். தான் இறந்த பின்னர் எனது பேத்தி தனிமையில் கஷ்டப்படுவார் என்பதால் இருவரும் சாக எண்ணினோம். எமது மரணத்திற்கு யாரும் பொறுப்பில்லை. எங்கள் சடலங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம் வைத்தியசாலை ஊடாகவே அடக்கும் செய்யவும் என அந்த கடிதத்தில் குறித்த பெண் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய அக்கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.