21

21

“தமிழர் பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை” – அத்துரலியே ரத்ன தேரர்

தமிழர் பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மேய்ச்சல் தரை பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் அப்பிரதேசங்களில் மந்தை மேய்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினர் இந்த அடிப்படை பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துவதில்லை.

 

முறையான மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள், பசுக்கள் வனவள பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.

 

சட்ட விரோதமான முறையில் மாடறுப்புக்களும், கால்நடைகள் கொல்லப்படுவதும் சாதாரணமாகவே இடம்பெறுகின்றன.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது அத்தியாவசியமானது.

 

காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. காணி ஆணைக்குழு ஊடாக தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. தேவையற்ற விடயங்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் !

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களால் இன்று போதனா வைத்தியசாக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கம் காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தே இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலைக்குற்றச்சாட்டில் அமைச்சர் பிள்ளையான் விரைவில் கைது..?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்திற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்கு வழங்க வேண்டிய மரியாதை தொடர்பில் சுமந்தின் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு சட்டத்தரணியாக இந்த விடயங்களை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த சந்திரகாந்தன், இவ்வாறான இழிவான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க கூடாது எனவும் சபையில் வலியுறுத்தினார்.

சடுதியாக அதிகரித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – குறுகிய காலத்தில் 2000க்கும் அதிகமான முறைப்பாடுகள் !

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த வருடத்தில் 1337 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் கூறியுள்ளது.

 

இந்த வருடத்தில் பதிவான முறைப்பாடுகளின் அடிப்படையில், 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

“சனல் – 4 வீடியோவினை தொடர்ந்து 300 பேர் இறந்ததற்கே அறிக்கை விடுபவர்கள் இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேசுகிறார்கள் இல்லை.” – துரைராசா ரவிகரன் விசனம் !

“சனல் – 4 வீடியோவினை தொடர்ந்து 300 பேர் இறந்ததற்கே அறிக்கை விடுபவர்கள் இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேசுகிறார்கள் இல்லை.” என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இன்றைய தினம் உலக சமாதான தினமாகும். ஆனால் இலங்கையை பொறுத்தவரை சமாதானம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. அதேபோன்று ஐ.நாவின் ஆணையாளர் நாயகம் இலங்கையிலே போர்க்குற்றம் மீறப்பட்டுள்ளது, மனித உரிமை மீறப்பட்டுள்ளது, வறுமையில் இலங்கை 25%ஆக இருக்கின்றது, சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுடைய கதறல்கள், கூக்குரல்கள் வீதிகளில் நின்று போராடுகின்ற போராட்டங்கள் என அத்தனை போராட்டங்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடப்பட்டும் சர்வதேச நாடுகள் ஏன் இதுவரை தலையிடவில்லை. இப்படி ஒரு கொடுமையான அரசுக்கு கீழ் தான் நாம் வாழ்கின்றோம்.

 

வடக்கு கிழக்கு மக்களின் நிலங்களை எடுக்கின்றார்கள், சிறுக சிறுக மதங்களை அழிக்கின்றார்கள் பௌத்த மயமாக்குகின்றார்கள். கடலும் பறிபோய் கொண்டிருக்கின்றது. இப்படி எமது வாழ்வாதாரம் உட்பட நிலங்களையும் அபகரித்து எங்களை பூர்வீகமற்றவர்களாக்குகின்றார்கள் இந்நிலை மாற வேண்டும்.

 

சனல் 4 ஊடகத்தில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் காணொளி வெளியானதன் பிற்பாடு 300க்கு மேற்பட்ட மக்கள் இறந்ததற்காக எல்லோரும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதை நாம் மறுக்கவில்லை. கொலைகார கும்பல் தான் ஆட்சியில் இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வந்திருக்கின்றது. என்பதற்கு மறுப்பதற்கில்லை ஆனால் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்து பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமை இந்த அரசாங்கத்திற்கு ஏன் எங்கள் நிலமை அவர்களது பார்வையில் படவில்லை.

 

சர்வதேசம் நேரடியாக இதற்கு துணைநிற்க வேண்டும் அல்லது சர்வதேச ஆணையாளர் அறிக்கைகேற்ப கருணை காட்டி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச பொறிமுறைகுள் விசாரணைக்குட்படுத்தி நீதியினை பெற்றுதர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்த விசேட கலந்துரையாடல்!

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்தி அப்பகுதியிலிருந்து சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

அறுகம்பை பகுதியை அடிப்படையாக கொண்டு அம்பாறை மாட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலின் போது அறியப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

 

அதற்கமைய இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டதோடு, அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்தற்காக துறைசார் நிறுவனங்களின் தலையீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலாத்துறை திட்டமும் வெளியிடப்பட்டதோடு, மூன்று வருடங்களுக்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதியின் கருத்தறிவதற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

 

மேற்படிச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஒரு மாதத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்க, பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம மற்றும் துறைசார் நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.

“நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம்.” – நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஆற்றிய சிறப்புரையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.

 

“யாரையும் கைவிடாத உலகில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிதியளிப்பு” எனும் தொனிப்பொருளில், நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 2023 மாநாட்டுடன் இணைந்தாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பல நாடுகளின் அரச தலைவர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

“ஒரு பொதுவான கட்டமைப்பு அல்லது செயன்முறை இல்லாததன் விளைவாக நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் அவலநிலை குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணமாக கூறுவதாயின், இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த பின்பு அனைத்து வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களும் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிடலாம்.

 

இதன் காரணமாக பாரிய அரசியல் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தாலும், அமெரிக்க அரசிடமிருந்து கிடைத்த பசளை நன்கொடையால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

 

இவ்வாறாகப் பார்க்கும்போது, நிதிச் நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்க முறையான திட்டம் தேவை என்பதை வலியுறுத்தும் அதேநேரம், இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என்பதோடு, உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

 

இந்த ஆண்டு, எதிர்பார்க்கப்படும் உலகளாவிய மொத்த தேசிய உற்பத்தி 105 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் 91 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பொதுக் கடனாகும். எனவே, இந்த அனுமானங்களை மையப்படுத்தியே நாம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனால் தற்போது எம்மிடத்தில் உள்ள விடயங்களை கொண்டு பயனடைய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனாக பெற்றுக்கொள்ளும் இயலுமை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பயன்டுத்துவதே இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.

 

அதனையடுத்து, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வருடாந்தம் 500 பில்லியன் டொலர்களையும் வழங்குவதாகவும், குறுகிய காலக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட காலக் கடனாக மாற்றப்பட வேண்டும் எனவும் செயலாளர் நாயகத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த இலக்குகள் எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியிருப்பதால், செயலாளர் நாயகம் முன்வைத்த யோசனைகளை சாத்தியமாக்குவது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அதேசமயம், மேலும் இரண்டு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை விரிவுபடுத்துவது தொடர்பான உலக வங்கியின் முன்மொழிவு மிக முக்கியமான யோசனை யாகும். இதன்போது சேமிக்கப்படும் பணத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் இயலுமையும் கிட்டும்.

 

அடுத்த முக்கியமான யோசனையாக, வர்த்தக நிதி தொடர்பான உலக வணிக அமைப்பின் (WTO) முன்மொழிவை கருத முடியும். அதனால் ஏற்றுமதி விரிவுபடுத்தப்படும்.

 

கடன் வழங்குநர்களுக்கு நெருக்கடிகள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அந்தச் சலுகைகளை உடனடியாக வழங்காவிட்டால், இந்த முன்மொழிவுகள் பயனற்றதாகிவிடும். எங்களுக்கு பேச்சுமூலமான ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வார்த்தைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

 

தற்போதைய சவால்கள் மற்றும் அதற்கான பயனுள்ள தீர்வுகளை பற்றி பேசுவதற்கும் நிலையான அபிவிருத்திக்காக 2030 ஒழுங்கு பத்திரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் இவ்வாறான உயர்மட்ட கலந்துரையாடல்கள் சிறந்த களமாக அமையும்.” என்றும் தெரிவித்தார்.

 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – திருகோணமலையில் போராட்டம்!

சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் வடகிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு உடன் சர்வதேச விசாரனை வேண்டும், நீதிப்பொறிமுறையை உறுதிப்படுத்து போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

13 வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் – பௌத்த பிக்கு கைது !

13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வரும் பிக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

சந்தேகநபரான பிக்கு விகாரையில் வசிக்கும் சிறுவன் ஒருவரை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எஹெட்டுவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

இதன்படி, எஹெட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் தசுன்!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன.

 

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாரிய தோல்வியை சந்தித்தமையால் நிலையில் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து கேள்வியெழுப்பட்டுவந்தது.

 

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக இருக்க வேண்டும். தசுன் சானக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியவர் என்று  இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கா கருத்து தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.